நூற்பாலை ஒன்றில் எளிய தொழிலாளியாக வாழ்வைத் தொடங்கி தேவி வார இதழில் சிலகாலம் பணி புரிந்திருக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேருர் அருகே காட்டுப்பாக்கம் சொந்த ஊர். புதுக்கவிதையின் தேர்ந்த சொல்லாடலும், எளிமையான அதே நேரத்தில், சிறிதானகேலியும் மறைந்த இவரின் கவிதைகள் சொல்ல வேண்டியதை முகத்திலறைந்தாற் போன்ற காட்டத்தில் சொல்லி விடுகிறது.
பெண்களின் நிலையையும் அவர்கள் சமூகத்தில் எப்படி உருவாக்கப்படுகிறார்கள் அவர்களின் வாழ்க்கை வரையறைகள் எவ்வாறெல்லாம் நிர்ணயிக்கப் படுகிறது என்பதை பல கவிதைகள் மூலமாகசொல்கிறார். குடிகாரன், திருடன், அரிசியல் வாதி, நிலம், இயற்கை,
சூழலியல் என எதையும் விட்டு வைக்காமல் கவிதைக்குள் அடைத்து விடுகிறார்.
இவரது கவிதைகள் ஜெயபாஸ்கரன் கவிதைகள் என்று நான்கு நூல்களையும் ஒரே தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார்கள்.
“பழகாத டிரைவரையும்
பார்க்காத பிரேக்கையும்
நம்பிதான்
நாள்தோறும் தொடர்கிறது
நமது பஸ் பயணம்.”
“பயண அனுபவங்களின் அவஸ்தைகளை
பாய்ந்து உட்புகுந்து அதிகாரம் பீய்ச்சுகிற
பரிசோதகர்களிடம் கொடுத்து விடுகிறேன்
பயணச் சீட்டை
யாரிடம் கொடுப்பது பயண வேதனைகளை”
ஆண் இறந்தால் அவன் நினைவாகவே பெண் காலத்தை கழிக்க வேண்டும். மனைவி இறந்தால் அவளின் தங்கை அவ்விடத்தை நிரப்பிவிட வேண்டும்.
“எனக்கு பிறகு என் நினைவுகளோடு
வாழ வைக்கிறார்கள் உன்னை
உனக்குப் பிறகு உன் தங்கையோடு
வாழ வைக்கிறார்கள் என்னை”
இது சற்றே காட்டமாகவே ஒலிக்கிறது.
” மயிலே மயிலே நீ
எந்த மயிரானுக்கும்
இறகை போடாதே”
கைப் பையை களவு கொடுத்து விட்டு புலம்புவது ..
ஒருவகையில் ஆற்றாமையாகவும் இருந்தாலும்
களவு குடுத்தது மகிழ்வு என்கிறார்.
இனி அவன் எந்த பையை திருடினாலும் என் பையாக இருக்குமோ என அஞ்சுவான். ஏனென்றால் கவிஞரின் பையில் அவனுக்கானது ஏதுமிருக்காது. மௌன அஞ்சலி இது எனக்குமே தோன்றும். அஞ்சலிக்காக எழுந்து நிற்கும் அந்த ஒரு நிமிடம் என்ன நினைப்பது என்பதிலேயே முடிந்து விடுகிறது.
” அந்த ஒரு நிமிடத்தில்
எதை நினைப்பது என்பதுதான்
எல்லா அஞ்சலியிலும்
என் கவலையாக இருக்கிறது”
செருப்பைத் திருடி சென்றவனின் உணர்வுகளை பேசுகிறார் .
“என் செருப்புகளால்
என்னை உணர்வானெனில்
கவிதை தொகுதிக்கு
அணிந்துரை வாங்க
ஆள் தேடி
அலைய நேர்ந்திருக்கும்
அவனுக்கு”
பொன்னாடையென போர்த்துகிறார்களே அதன் பயன் எதுவுமில்லை என்பதை அத்தனை அழகாக பதிவு செய்கிறார்.
தலை துவட்டினால் முடி வீணாகிறது
கீழே போட்டு படுக்கவும் முடியலை போர்த்திகிட்டா கேலியா பார்க்குறாங்க மேசைமேல விரிக்கலாம்னா
மேசையே இல்லை
“என்ன தான் செய்வது
ஏகோபித்த
கரவொலிக்கிடையே
எனக்கு போர்த்தப் பட்ட
பொன்னாடையை”
பொருளாதார இடைவெளியை..
” எனக்கான கடைகளில் நீ நுழைவதில்லை
உன் கிரடிட் கார்டு நுழையும் கடைகளில்
நான் நுழைய முடிவதில்லை”
பெண்களை இதைவிட வேறு எப்படி சொல்வது. என்னதான் முன்னேற்றமடைந்து விட்டதாக காட்டிக் கொண்டாலும் இந்த மாய வலையில் இருந்து விடுபடவே முடிவதில்லை தானே.
“சமையலறலயில்
என் கண்களை. கட்டி விட்டாலும்
எந்த பொருளிலும் விரல்படாமல்
கேட்ட பொருளை
கேட்ட மாத்திரத்தில்
எடுத்து தருவேன்
என்று சவால் விடவும் செய்கிறாள்
அங்கிருந்து
அவளிடம்
சொல்லிக் கொள்வதில்லை நான்
நீ மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக
அங்கேயிருக்கிறாய் என்று.”
மனைவியானேன் மகளே, மனைவியான நான் இரண்டு கவிதைகளும் அப்பட்டமாக பெண்களின் நிலையை படம் பிடித்து காட்டுகிறது. நகரத்தில் வாழும் மருமகள் பெருமையுடன் மாமனாருக்கு சொல்கிறாள். அரை கிரவுண்டு இடம் வாங்கியதை அவரோ
“பதினாறு ஊர்களை
ஒருவனே வாங்கி விட்டதாக
கண்ணீரோடு கடிதாசி
எழுதினார் தன் மருமகளுக்கு”
தைபிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்பிக்கை. ஆனால்
” இப்போதெல்லாம்
தவறாமல் பிறக்கிறது
தை மட்டும்”
பெண்கள் ஆண்களுக்காக மனைவி அன்னை தாதி துணைவியென பல அவதாரம் எடுத்தாலும் அவர்களின் கண்களுக்கு எப்பொழுதும் அவள் மனுசியாக தெரிவதேயில்லை.
” கடைசி வரை
உங்கள் கண்களுக்கு
மனுசியாக தெரியாமலே
மரித்து போகிறோம்”
விளைநிலங்கள் வீடுகளாகி வருகிறது நிலங்கள் கண்ணீர் விடுகிறது. விளைநிலத்தை விற்று வைப்பு நிதியில் வைத்தாலே விளைச்சலை விட நிம்மதி என்றாகிறது.
பனைவணக்கம் பாடல் மிகச் சிறப்பு.
“அழகாய் படரும் மயில்தோகை-அட
அதுபோல் விரியும் உன்ஓலை
ஆயிரம் இலக்கியம் அளித்த கொடை-உலக
அறிவின் மகுடம் உனது தலை”
எத்தனை காலங்கள் வந்தாலும் என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் மனிதர்களிள் தங்களின் பழமை வாதத்தையும் சுய நலங்களையும் மாற்றிக் கொள்வது சற்றே கடினமானதாகவே இருக்கிறது. சமூக நோக்கத்துடன் எழுதும் இவரின் வரிகளால். ஏதும் மாற்றம் நிகழ்ந்து விடும் என்று கூறி விட முடியாது தான் ஆனால் இவரின் எழுத்துக்கள் படிப்பவர்களுக்கு ஒரு நிமிர்வை தரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
நூலின் தகவல்கள்
புத்தகம் : “ஜெயபாஸ்கரன் கவிதைகள்”
ஆசிரியர் : ஜெயபாஸ்கரன்
பக்கம் : 608
விலை : ரூ.900
வெளியீடு : வழுதி வெளியீட்டகம்
தொடர்புக்கு : ph. 9444956924
முதல் பதிப்பு : 2022
எழுதியவர்
வே.சுகந்தி
வாணியம்பாடி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.