புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள் மீதான அப்பட்டமான குரூரமான இந்திய சமூகத்தின் அக்கறையின்மையை இந்த ஊரடங்கு வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது
“இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை அத்தியாவசிய தேவைக்கன்றி வெளியில் நடமாடுவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது” – மே 17 இந்தியா டுடே இதழ் குறிப்பிட்ட இந்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையில் இடம் பெற்றுள்ள வரியாகும்.
இந்த சுற்றறிக்கை இரு மாநிலங்களுக்கிடையே பிரயாணிகளின் வாகனங்கள் மற்றும் பேருந்துகள் செல்லவும் (அதுவும் இரு மாநிலங்களுக்கு ஒப்புக் கொள்ளும் வேளையில்) என இந்த சுற்றறிக்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆறுதல் தந்தது என்னவோ உண்மை தான். ஆனால் தேசிய நெடுஞ்சாலைகளை நடந்தே கடக்கும் ஆயிரக்கணக்கான இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் குறித்து ஏதும் இந்த சுற்றறிக்கை சொல்லவில்லை.
இந்த ஊரடங்கு கோடக்காலத்தின் 47 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் தகிக்கும் தார்சாலையில் காலை 7 மணி தொடங்கி மாலை 7 மணிக்குள்ளாக இத்தொழிலாளர்களை நடக்க சபித்தது.
ஊரடங்கின் காரணமாக வேலையும் அதன் பலனாக வருமானமும் தடைபட, தெலுங்கானாவின் மிளகாய் பயிர்த்தொழிலில் ஈடுபட்டிருந்த 12 வயதே ஆன ஜம்லோ என்னும் ஆதிவாசி பெண், தனது சொந்த ஊரான சத்தீஸ்கர் நோக்கி நடக்கத் தொடங்கினாள். ஒரு மாதத்திற்கு முன்பாக இது நடந்தது. அக்குழந்தை 3 நாட்களில் 140 கிலோமீட்டர் நடந்து பின் அயர்ச்சியாலும், நா வறண்டு போனதாலும், தசைகள் சோர்வானதாலும் தனது வீடு அடைய 60 கிலோமீட்டர் இருக்கும் முன்பாக இறந்து போனாள். இந்த ஊரடங்கு ஆணைகள் எத்தனை ஜம்லோக்களை உருவாக்கியுள்ளன என்பதை எவர் அறிவார்?
முதலில், தேசத்தின் 1.3 பில்லியன் மக்களுக்கு நான்கு மணி நேரமே கொடுத்து முடங்க சொன்ன பிரதமரது மார்ச் 24 அறிவிப்பு பீதியை கிளப்பியது. எங்கும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளை நோக்கிய நீண்ட பயணத்தை துவங்கினார்கள். அடுத்து, நகர கெட்டோக்களில் மீண்டும் இத்தொழிலாளர்களை அடித்து முடக்க முடியாத காவல்துறை மாநில எல்லைகளில் அவர்களை வழிமறித்தது. கிருமிநாசினி இத்தொழிலாளர்கள் மேல் வீசப்பட்டது. எவருக்கு நிவாரணம் என்றறியப்படாத நிவாரண முகாம்களில் பல தொழிலாளர்கள் வைக்கப்பட்டனர்.
மும்பை நாசிக் தேசிய நெடுஞ்சாலை சாதாரண காலங்களை காட்டிலும் இந்த ஊரடங்கு காலத்தில் அதிக பிசியாக இருந்தது. மக்கள் எல்லா பக்கமும் நகர்ந்தார்கள். மகராஷ்டிரா பான்வெல் என்னும் இடத்திலிருந்து 1200 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் மத்திய பிரதேசத்தின் ரேவாவை அடைந்தார் சில வருடங்களுக்கு முன் ஒரு விபத்தில் தன் ஒரு காலை இழந்த பிம்லேஷ் ஜெய்ஸ்வால். அதுவும் அவர் தனியாக அவரது மொபெட்டில் செல்லவில்லை, தன் மனைவியோடும் தன்னுடைய மூன்று வயது குழந்தையோடுமே சென்றார். “நான்கு மணி நேரத்தில் ஒரு நாட்டை எப்படி யாரால் முடக்க முடியும் ” என்பது அவரது கேள்வி. என்ன சார் பிம்லேஷ், இதற்கான பதில் தாங்கள் அறியாததா?.
இதற்கிடையில் “ஹாய், நாங்கள் உங்களுக்காக ரயில்கள் எங்கும் ஏற்பாடு செய்ய உள்ளோம், அதில் நீங்கள் உங்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுவீர்கள்” என சொன்னோம். அதே மாதிரி செய்தோம், அந்த பசியுடன் நிர்க்கதியான மக்களிடம் முழு ரயில் கட்டணமும் கேட்டோம். பிறகு கட்டிட காண்டாகடர்கள் மற்றும் இதரர்கள் கேட்டுக்கொண்டதிற்கிணங்க தப்பி செல்லும் இந்த தொழிலாளர்கள் தப்பி செல்லா வண்ணம் ரயில்களை ரத்து செய்தோம். இதுவும் இன்ன பிற சிக்கல்களும் சேர்ந்து பெரிதான ரயில் சேவை விடும் செயலை தள்ளிப்போட்டது. உச்சநீதிமன்றத்தில் மே 28 அன்று இந்தியாவின் 9.1மில்லியன் தொழிலாளர்கள் மே மாதம் 1ஆம் தேதி முதல் இயக்கப்பட்ட இந்த ஷ்ராமிக் ரயில்களில் வீடுகளுக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டது. அதோடு, இந்தத் தொழிலாளர்களுக்கான கட்டணங்களை ஒன்று அவர்கள் புறப்படும் மாநிலமோ அல்லது சென்று சேரும் மாநிலமோ ஏற்றுக் கொண்டது எனவும் இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் அவர்களால் உச்சநீதிமன்றத்தில் சொல்லப்பட்டது. கவனிக்க, மத்திய அரசிடமிருந்து இக்கட்டணங்களாக ஒன்றும் செலவிடப்படவில்லை.
என்ன நடக்கிறது என்பதை ஒரு நிமிடம் ஆம் ஒரு நிமிடம் மட்டுமே ஒதுக்கினாலே காணக் கிடைக்கிறது. இன்னமும் ரயில்களில் செல்ல பதிவு செய்து காத்திருப்போர் எத்தனை இலட்சங்கள் என்பது நமக்கு தெரியாது. எத்தனை இலட்சம் பேர் இன்னமும் தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்தபடி உள்ளனர் என்பது தெரியாது. அவர்கள் வீடுகளுக்கு செல்ல எத்தனை தூரம் தவிக்கிறார்கள் என்பதும் தெரியாது. ஆனால், இந்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதை விரும்பாத எப்படியாவது இவர்களை தடுக்க, கட்டுப்படுத்த எத்தனிக்கும் மிகவும் சக்திவாய்ந்த லாபிகள் எத்தனை என்பதை நாம் அறிவோம். பல மாநிலங்கள் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக மாற்றியுள்ளது. இவ்வாறு அதிகரித்திட்ட போதும் கூடுதல் வேலை நேரத்திற்கான ஊதியத்தை கூட அறிவித்திராத பாஜக ஆளும் 3 மாநிலங்களும் உள்ளது. ஒரு 3 வருடங்களுக்கு என பல தொழிலாளர் சட்டங்களை நிறுத்தி வைக்கவும் செய்திருக்கின்றன சில மாநிலங்கள்.
ஏப்ரல் 12 வரையில் இந்தியாவெங்கும் இருக்கும் நிவாரண முகாம்களில் சுமார் 1.4 மில்லியன் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்தது. இது மார்ச் 31 அன்று இருந்த மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதே சமயம் உணவு முகாம்களில் சமூக சமையல் கூடங்களில் தன்னார்வலர்கள் மூலமாக உணவு பெற்றவர்கள் மட்டும் 13 மில்லியன் என சொல்கிறது ஒரு கணக்கு. இது மார்ச் 31 அன்றைவிட ஐந்து மடங்கு அதிகம். முழுமையான சேதங்களை அளவிடுகையில் இது ஒரு சிறிய பகுதியே என தெரிகிறது. இன்றும், சாதாரண மக்கள், தனி மனிதர்கள், சமூகங்கள், அக்கம்பக்கத்தார், சமூகபோராளி குழுக்கள், தன்னார்வலர் குழுக்கள், சேவை செய்யும் நிறுவனங்கள் என்பவையே மத்திய அரசைக் காட்டிலும் அதிக பண செலவில் இந்த புலம்பெயர் தொழிலாளர்களை கவனித்து வருகிறது எனலாம். இவர்களின் அக்கறை மிக உண்மையானது.
பிரதமர் மார்ச்19 மற்றும் மே 12 ஆகிய தேதிகளுக்கு இடையே தொலைக்காட்சியில் தேசத்தின் மக்களிடையே உரையாற்றினார். அவர் தட்டுகளை கைகளை தட்டுமாறும், விளக்குகளை ஏற்றுமாறும், பூக்கள் தூவியும் கோவிட்-19 பணியில் முதல்நிலையில் ஈடுபட்டு இருப்போரை கௌரவிக்க சொன்னார். ஐந்தாவது உரையில் மட்டுமே அவர் தொழிலாளர்கள் என்ற பதத்தை சொன்னார். அதிலும் ஒரு முறை மட்டுமே, “புலம் பெயர் தொழிலாளர்கள்” எனச் சொன்னார்.
இந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் வருவார்களா?
அநேகமாக பலர் வேறு வாய்ப்பில்லாத காரணத்தால் காலப்போக்கில் திரும்புவார்கள். வளர்ச்சி பாதை என நாம் இந்த மூன்று தசாப்தங்களில் தேர்ந்தெடுத்த பாதையால் பல இலட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரங்களை உறிஞ்சி விட்டோம். அதன் வழியே 3,15,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு விவசாய சிக்கல்களை உற்பத்தி செய்துவிட்டோம்.
எல்லா வகையிலும் இது புலம்பெயர்தல் திரும்பும் தன்மையாகும். ஆனால் அதைவிட முக்கியமாக எழுப்பப்பட வேண்டிய கேள்வி இவர்கள் தங்கள் கிராமங்களை விட்டு நீங்கியது எதனால் என்பதுவே ஆகும்.
1993 வாக்கில் வாரத்திற்கு ஒன்று என இருந்த தெலுங்கானா மஹபூப்நகர் மும்பை பேருந்து மே 2003தொடக்கத்தில் வாரத்திற்கு 34 என அதிகரித்து மாத கடைசியில் 45 என ஏற்றம் கண்டது. முழுக்க முழுக்க கூட்டத்தால் நிரம்பி வழிந்து சென்றன நான் ஏறிய அப்பேருந்துகள். முற்றாக விவசாய பொருளாதாரம் நசிவடைந்ததால் வேறு வேலை தேடி பயணம் சென்றனர் என்னுடைய சக பயணிகள். அதில் ஒரு நிலக்கிழாருக்கு 15 ஏக்கர் நிலம் ஒரு காலத்தில் இருந்து இப்போது அவரும் வேலை தேடி மும்பை செல்கிறார் அப்பேருந்தில். அவருடன் பயணம் செய்தவர் அவர் நிலத்தில் அடிமையாக இருந்தவர். அந்த நொடியில் எனக்குப் புரிந்தது நாம் ஒரே பயணத்தில் இருக்கிறோம் என்பது.
இது இந்தியா நாடெங்கும் நடக்கிறது. நாம் வளர்ச்சி குறியீடுகளில் லயித்திருக்கையில், எனக்கு எட்வார்ட் அப்பே {Edward Abbey} அவர்களின் புகழ்பெற்ற வரிகளே நினைவுக்கு வருகிறது: வளர்ச்சிக்காக வளர்ச்சி என்பது கேன்சர் செல்களின் தத்துவம். {Growth for the sake of growth is the ideolog of the cancer cell}. கிராமப்புற பிரச்சனைகள் நெருக்கடிகள் குறித்தெல்லாம் மக்களின் கவனத்தை கோருபவர்களை பகடி செய்து கொண்டே நாம் குதூகல நிலையில் இருந்தோம்.
விவசாய நெருக்கடி என்பது வெறும் விவசாயத் தொழிலில் மட்டுமே அல்ல என்பதே பல செய்தி ஆசிரியர்களுக்கு புரியாமல் போனது (அவர்களைவிட அவர்கள் கீழ் வேலை பார்க்கும் இளைஞர்கள் புரிந்து கொண்ட போதும்}. விளைச்சலில் ஈடுபடாத விவசாயத்தை ஒட்டிய வேலைகளில் ஈடுபடும் இலட்சக்கணக்கான நெசவாளர்கள், குயவர்கள், தச்சர்கள், உள்ளூர் மீனவர்கள் மற்றும் இன்ன பிறர் என இலட்சக்கணக்கான குடும்பங்கள் விவசாயத் தொழிலோடு இணைந்த ஒன்றானதால், விவசாய நெருக்கடி என்பது கிராமப்புறங்கள் முழுமைக்கும் பீடித்தது.
30 வருடங்களுக்கு நாம் அழித்த வாழ்வாதாரங்களை நோக்கி மக்கள் இன்று திரும்ப முயல்கிறார்கள்.
2011இல் வெளியிடப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011க்கு முன்பான 10 வருடங்களில் இதுவரை இந்நாடு சந்தித்திராத அளவிலான புலம் பெயர்தல் நடந்துள்ளது என சொன்ன பொழுதில் ஊடகங்கள் அதில் சிறிய கவனத்தை செலுத்தின. 1921ஆம் ஆண்டிற்குப் பிறகு, கிராமப்புற இந்தியாவின் மக்கள் தொகையினை விட நகர்ப்புற இந்தியாவின் மக்கள் தொகை கூடியதை நாம் கண்டோம். 1991ஆம் ஆண்டினைக் காட்டிலும் இப்போது இந்தியாவில் 15 மில்லியன் விவசாயிகள் (முக்கியமாக விளைச்சலில் ஈடுபடுவோர்) குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சராசரியாக 1991ஆம் ஆண்டு தொடங்கி நாளொன்றில் 2000 விவசாயிகள் குறைந்து வருகின்றனர். அதாவது 2000 விவசாயிகள் என்ற நிலையிலிருந்து விவசாய கூலிகளாக, வேறு தொழில் செய்பவர்களாக மாறியுள்ளனர்.
எளிதாக சொல்வதானால் துயரநிலையில் புலம்பெயர்தல் என்பதே பெரிதான அளவில் நடக்கிறது என்பது மட்டுமல்ல, அது கூடியும் வருகிறது. பெரிய நகரங்களை நோக்கி விவசாயிகள் பலர் போவதில்லை, மாறாக அவர்கள் விவசாய கூலிகளாக மாறுகின்றனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்த விவசாய கூலிகளின் எண்ணிக்கை கூடியுள்ளதைக் காட்டுகிறது. இவர்களில் பலர் புலம்பெயர் தொழிலாளர்களாக மாறுகின்றனர். விவசாயத்தின் மீதான இந்த புதிய நெருக்கடியின் விளைவு என்ன என்பது நமக்குத் தெரியும்.
எப்படி இருந்தாலும் யார் தான் இவர்கள்?
எல்லோரும் ஒன்றும் பெரிய நகரங்களை நோக்கி சிறிய கிராமங்களை விட்டு வருவதில்லை. ஆம், பலரும் கிராமப்புறங்களை விட்டு நகர்ப்புறங்களை நோக்கி வரத்தான் செய்கிறார்கள். ஆனாலும், கிராமப்புறங்களை நோக்கி கிராமப்புற மக்கள் நகரும் ஒரு பெரும் புலம்பெயர்தல் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் பலரும் ராபி பருவ அறுவடைக்காக இதர மாநிலங்களில், மாவட்டங்களில் உள்ள கிராமங்களை நோக்கி சென்றிருப்பார்கள். ஆனால் இவ்வருடம் அவர்களால் இது இயலவில்லை. அவர்கள் மிக கவலையில் இருக்கிறார்கள்.
நகரப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களை நோக்கியும் புலம்பெயர்தல் பெரும் எண்ணிக்கையில் நடக்கிறது. இதோடு ஒப்பிடுகையில் குறைந்த எண்ணிக்கையில் நகர்ப்புறங்களில் இருந்து கிராமப்புறங்களுக்கு புலம்பெயர்தலும் நடக்கத்தான் செய்கிறது.
புலம்பெயர் தொழிலாளர்களில் குறிப்பாக “நாடோடி புலம்பெயர் தொழிலாளர்கள்” குறித்தும் நாம் கவனம் கொள்ள வேண்டும். ஒரு குறித்த இலக்கு ஏதும் இல்லாமல் சேரும் இடம் குறித்த பார்வையின்றி எங்கு வேலை கிடைக்கிறதோ அங்கு செல்லும் புலம்பெயர்தல் தன்மையை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கணக்கில் கொள்வதில்லை. இவர்கள் சில மாதங்களில் ராய்பூரின் ரிக்ஷா ஓட்டியும், ஒரு 40 நாட்கள் மும்பையின் ஒரு கட்டுமான இடத்திலும், சில பொழுது அவர்கள் வீடுகளுக்கு அருகே உள்ள மாவட்டங்களில் ஏதேனும் வேலை செய்யும் இந்த நாடோடி புலம்பெயர் தொழிலாளர்கள் பலர்.
மாநிலங்களின் எல்லைகளை கடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை 54 மில்லியன் என இருக்கலாம் என்கிறது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு. ஆனால் இந்த மதிப்பீடு என்பது மிகப் பெரிதான அளவில் குறைந்தபட்ச மதிப்பீடாகவே தெரிகிறது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இந்த புலம்பெயர்தலை ஒரு “அ” என்னும் இடத்தில் இருந்து “ஆ” என்னும் இடத்தில் ஒரு ஆறு மாதங்கள் தங்கி இருத்தலையே கவனத்தில் கொள்கிறது. ஆனால் அவ்வாறாக இல்லாமல் வருடக்கணக்கில் இடத்திற்கு இடம் நகர்ந்து புலம்பெயர்ந்து தன் சொந்த ஊர் அடைவதற்கான அந்த பயணம் என்பது எங்கும் பதிவாகவில்லை, கவனத்திலும் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அல்லது தேசிய மாதிரி சர்வே இரண்டும் இந்த தற்காலிக புலம்பெயர்தலை கணக்கில் கொள்வதில்லை.
மார்ச் 26 அன்று தான் ஊடகங்களின் பார்வைக்கு இந்தப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வந்தனர். இந்த புலம்பெயர்தல் செய்தலில் பணம் ஏதாவது வராத நிலையில் ஊடகங்களுக்கு என்ன அக்கறை இருக்க முடியும்? ஆகவே, அவர்களால் நீண்ட கால, தற்காலிக, நாடோடி புலம்பெயர்தல் என்பவைக்குள்ளான வித்தியாசங்கள் கூட அறிய முடிவதில்லை.
ஒன்றுக்கும் மேற்பட்ட நல்ல மனிதர்கள் பலர் என்னிடம் இந்த புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை மிக மோசமாக இருக்கிறது என்றும் அவர்களுக்கு உதவி கிடைக்க வேண்டும் என்றும் மிகவும் வறிய சூழலில் இந்த மக்கள் மிகக் கடுமையாக உழைக்கிறார்கள் என்றும் இத்தொழிலாளர்கள் தொழிற்சாலையில் வேலைபார்த்து சங்கங்களில் சேர்ந்து தொல்லை கொடுப்பவர்கள் போல் இல்லை, இவர்களுக்கு நம் அனுதாபம் தேவை என்றும் சொன்னார்கள்.
ஆம், உண்மையில் நிச்சயமாக இவர்களுக்கு கருணை காட்ட வேண்டிய தேவை இருக்கிறது. அதே சமயம் அது நமக்கு வசதியானதும் கூட. ஆனால் இந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நமது கருணையோ, பச்சாதாபமோ அல்லது கவலையோ தேவைப்படுவதில்லை. அவர்களுக்கு மிகவும் தேவைப்படுவது நீதியே. அவர்களின் உரிமைகள் உண்மையாகவும், மதிக்கப்படுவதாகவும் கறாராக அமல்படுத்துவதாகவும் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் தேவை. தொழிற்சாலை தொழிலாளர்கள் ஒரு சிலர் கொஞ்சமாவது உரிமை பெற்றிருக்கிறார்கள் என்றால், அவர்கள் திரட்டப்பட்டிருப்பதும் அதன் முலம் பெற்றிருக்கும் கூட்டுப்பேர உரிமை என்பதையும் சங்கங்கள் சாதித்தன என்பதே உண்மை. புலம்பெயர் தொழிலாளர்களின் மீதான உங்கள் பச்சாதாபம் கருணை உண்மையெனில் நீங்கள் நீதியின் பொருட்டும் உரிமைகள் பொருட்டும் போராடும் ஒவ்வொரு தொழிலாளர் போராட்டங்களையும் ஆதரிப்பதில் தான் அது வெளிப்படும்.
புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் இதர பணியாட்களுக்குமிடையே உள்ள வித்தியாசம் என்பது உண்மையிலேயே விசித்திரமானது. பெங்களூரூவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் தனது வேலையை விட்டு பெரிதான வருமானம் மற்றும் பிற நலன்களுக்காக டெல்லிக்கு செல்கிறார் என கொண்டால், அவர் புலம்பெயர்தல் செய்திருக்கிறார் ஆனால் அவர் தொழிலாளர் அல்ல. நாம் பச்சாதாபம் பார்க்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் இவருக்குமான வேறுபாடு என்பது சாதி, வர்க்கம், சமூக மூலதனம் மற்றும் அவரின் இணைப்பு சக்திகள் ஆகியவற்றின்பால் படும். முந்தைய தலைமுறைகளின் புலம்பெயர்தல் நடத்திய நாம் நினைக்கும் உரிமை கேட்கும் அந்த தொழிலாளர்களே நம்மிடம் அவர்கள் வெட்கமே இல்லாமல் உரிமைகளை கோருகிறார்கள்.
மும்பையின் ஆலைத் தொழிலாளர்கள் முந்தைய நாட்களில் கோன்கன் மற்றும் மகாராஷ்டிராவின் பிற பிரதேசங்களில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களே. பின்னர் நாட்டின் பலப் பகுதிகளில் இருந்தும் மும்பையின் ஆலைகள் தொழிலாளர்களை ஈர்த்தன. எக்கானமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லியில் டாக்டர். ரவி டுக்கல் அவர்களின் மிக முக்கியமான ஒரு கட்டுரையில் இந்த தொழிலாளர்கள் பிளேக் நோய் தாக்கிய 1897-97 சமயத்தில் மும்பையை விட்டு வெளியேறினர் என குறிப்பிடுகிறார். கிட்டத்தட்ட 10000 பேர் ஆறு மாதங்களுக்காகவே இறந்து போயினர். 1914 வாக்கில் இந்தியாவில் பிளேக் நோய் காவு கொண்ட உயர்களின் எண்ணிக்கை சுமார் 8 மில்லியன் ஆகும்.
டாக்டர் டுக்கல் மேலும் மும்பை நகர மக்கள் தொகையான 8,50,000 என்பதில் 80000 என்பதாக இந்த ஆலை தொழிலார்களே இருந்தனர் என சொல்கிறார். சுத்திகரிப்பு பணிகள், தனிமனித விலக்கல், நோய் தொற்றுக்குள்ளான குடும்ப உறுப்பினர்களை மிக மோசமான சூழலில் தனிமைப்படுத்துதல் இவற்றோடு வாழிடங்கள் சிதைத்தல் என்பவையான பிளேக் நோய் தடுப்பு நடவடிக்கைகளால் தொல்லையுற்ற இந்த மும்பையின் ஆலைத் தொழிலாளர்கள் 1897ஆம் ஆண்டு பல வேலைநிறுத்தங்களை செய்தனர். பிளேக் நோய் தாக்குதல் பரவத் தொடங்கிய முதல் 4 மாதங்களில் மும்பை நகரத்தை விட்டு ஆலைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட சுமார் 4 இலட்சம் மக்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பினார்கள். மும்பையின் பொருளாதாரம் இதனால் மிகுந்த நெருக்கடிக்குள்ளாது.
சரி, இவர்கள் திரும்பிவர எப்படி சம்மதிக்க வைக்கப்பட்டனர்?! நௌரோஸ்ஜி வாடியா ஒப்பந்தம் என சொல்லப்பட்ட உரிமையாளர்கள் ஊழியர்களுக்கு இடையே நல்ல குடியிருப்பு, மேம்பட்ட பணி மற்றும் வாழிட சூழல் உறுதி படிவங்களில் ஒப்பந்தமாக கையெழுத்திட்டு பல மில் உரிமையாளர்கள் இத்தொழிலாளர்களை மும்பை நோக்கி திரும்பி வரச் செய்தனர். இந்த திரும்புதல் பிளேக் நோய் மிகவும் தீவிரமான நிலையிலும் முதலாம் உலகப் போரின் போதே அழிந்த நிலையிலும் நடந்தது.
மும்பை முன்னேற்ற டிரஸ்ட் என்ற பாராளுமன்ற சட்டத்தின் மூலம் பிரிட்டிஷ் அரசும் இதில் தலையிட்டது. முனிசிபல் கார்ப்பரேஷன் மற்றும் அரசு இந்த டிரஸ்டுக்கு மும்பையில் இருந்த காலி இடங்களை எழுதிக் கொடுத்தது. இது அங்கே தெருவிளக்கு வசதி செய்யவும், அந்த வாழ்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்வதற்காக ஒப்படைக்கபட்டது. ஆனாலும், இதன் மூலம் பெரிதான முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படாது மேலும் மேலும் வாழிடங்கள் சிதைக்கப்படுவது நிகழ்ந்தாலும், முன்னேற்றம் செய்யப்பட வேண்டும் என்ற சிந்தனை ஒன்று இருந்ததே ஆறுதலானது. இருப்பினும், இன்றைய காலத்தைப் போலவே அந்த காலத்திலும் இந்த முன்னேற்றம் என்பது தொழிலாளர்கள் நலனுக்காக அல்லாமல் நகரத்தின் “பார்வையை” {image} மேம்படுத்தவே இருந்தது. இதில் ஏழைகள் மற்றும் ஒடுக்கபட்ட மக்களின் வாழ்வியல் சூழலை உயர்த்தும் எந்த சிந்தனைக்கும் கவனத்திற்கும் இடமில்லை.
பிளேக் நோய் மற்றும் அதன் நினைவுகள் நீங்கத் தொடங்குகையில் இந்த ஏழைகள் மீதான கருணை என்பதும் நம்மிடையே காணாமல் போனது. இதேதான் நாளையும் நிகழுமோ?! நமக்காகவே உருவாக்கப்பட்டதான உருவகத்தில் உள்ள சேவைகள் (taken for granted services) திடீரென குலைந்த நிலையில் தான் இந்த புலம்பெயர் தொழிலாளர்களின் மிக மோசமான வாழ்வியல் சூழல் நம் பார்வைக்கு வருகிறது. வசதிகள் திரும்புகையில் கருணைகள் நீராவியாய் கரைந்து போவது ஒரு பழக்கமாக இருக்கிறது.
1994ஆம் வருடத்தில் சூரத் நகரத்தில் பிளேக் நோய் 54 பேர்களைக் கொன்றது. ஒவ்வொரு ஆண்டும் சீதபேதி நோயால் இந்தியாவில் 1.5 மில்லியன் குழந்தைகள் மரணிப்பதும், காசநோயால் ஒரு ஆண்டில் 4,50,000 மரணங்கள் நடைபெற்ற அந்த காலத்திலும் சூரத் நகரில் நடைபெற்ற இந்த 54 மரணங்களே அதிக ஊடக வெளிச்சத்தைப் பெற்றது. அதே ஆண்டு பிளேக் நோயை விட 30,000 மடங்கு அதிகமான மரணங்களை நிகழ்த்த கூடிய குணமடையக் கூடியதும், தடுக்கப்படக் கூடியதுமான சீதபேதி மற்றும் காசநோய் ஆகிய இரு நோய்கள் போதிய ஊடக வெளிச்சத்திற்கு வாராது போனது விந்தையானது.
பிளேக் நோய் மறைந்த உடன் நாம் ஏழைகளை மிக அடிப்படையாக கொல்லும் நோய்களை குறித்த பார்வையும் விட்டொழித்தோம். அதோடு அந்த நோய் தொற்று உருவாகும் அத்தொழிலாளர்களின் மோசமான வாழிடங்களையும் நாம் புறம்தள்ள கற்றுக் கொண்டோம்.
கோவிட்-19 முன்பான இதே காலத்தில், நமது உள்ளடக்கிய வளர்ச்சி என்பதாக நகரத்தில் ஏற்கெனவே இருக்கின்ற 3 -5% சதவீத மக்களுக்கு பயன்படும் ஸ்மார்ட் சிட்டிகளே முன்னிறுத்தப்படுகிறது. எஞ்சிய சிலரின் வாழ்வு நரகத்திற்கு சமமாக விட்டுவிடப்படுகிறது.
கிராமங்களில் இருந்து நகரத்திற்கு வந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கூடுதல் ஊதியம் கிடைத்த போதும் அவர்களின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் ஆபத்தான நோய்களை உருவாக்கும் அசிங்கமான வாழிடங்களே கிடைக்கிறது.
இதற்கெல்லாம் நாம் ஏதேனும் செய்ய இயலுமா? அதற்கு நாம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவோம் என்ற கருத்தாக்கத்தை புதைப்போம். 30 வருடத்திய இந்த சந்தைப் பொருளாதாரத்தின் மூட நம்பிக்கைகளை விட்டொழித்து இந்திய அரசியல் சாசனம் வலியுறுத்தக் கூடிய அனைவருக்கும் அரசியல் சமுக பொருளாதார நீதி அனைத்து குடிகளுக்கும் கிடைத்திடும் ஒரு அரசை உருவாக்குவோம், அதற்கென உழைப்போம்.
– பி.சாய்நாத். இவர் மூன்று தசாப்தங்களாக கிராமப்புற இந்தியாவை சுற்றி வந்தவர். People’s Archive of Rural India இணையத்தின் ஸ்தாபகராகவும் இவர் இருக்கிறார். Everybody Loves a Good Drought என்னும் நூலின் ஆசிரியர். 2007இல் ரோமன் மாக்சேசே விருதாளர்.
நன்றி: இந்தியாடுடே.