அந்த அறையில்
எந்தப் பொருளும் எனதல்ல…
அறைக் கதவின் கண்ணாடி
இத்தனை நாள் என்
முகத்தை மட்டுமே பிரதிபலித்தது
இத்தனை நாட்களாக…
அங்கிருந்த புத்தகங்களை
நான் வாசித்து இருக்கவில்லை…
ஆனால் புத்தகங்கள் நிச்சயம்
என்னை வாசித்து இருக்கும்…
என் இயலாமை, என் கோபம்,
என் ரகசிய பேச்சுக்கள்..
போலியில்லா முகம், என் மகிழ்வு
இப்படி அத்தனையையும் அறிந்தது
அந்த நான்கு சுவர்களும், புத்தகங்களும்…
எதேச்சையாய் ஒடிந்த பேனா
முட்களை நினைவு கூர்கிறது…
ஒல்லியான தேகம் கொண்ட
எழுத்துகள்…
முதன்முதலில் வாசித்த
புத்தகத்தின் வாசம் தேடி
பல புத்தகங்களைப் புரட்டுகிறேன்…
என் மேசையில்
கன்னம் பட்டுக்
கண்ணீர் வடித்த நாட்கள் பல…
தோழனின் தோள் தராத
கரிசனம் அந்த இரும்பு மேசைக்கு…
காலை உந்தி ஊஞ்சல்
ஆடுவதில் என் மனநிலையை
அறிந்து கொள்ளும் என் நாற்காலி…
உடைந்த பொருட்களிலும்
நாம் ஒதுக்கி வைத்த
பல நினைவலைகள்…நிறைந்திருக்கின்றன….
நானும் உன் வாசல் வரை
வந்து கடந்து செல்லப் போகிறேன்
இன்னும் சில நாட்களில்
நினைவுகளை மட்டும்
நெஞ்சோடு வைத்து…
-சுதா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.