noolarimugam : otraivaasam -theni sundar நூல் அறிமுகம் : ஒற்றை வாசம் - தேனி சுந்தர்noolarimugam : otraivaasam -theni sundar நூல் அறிமுகம் : ஒற்றை வாசம் - தேனி சுந்தர்

சில நேரங்களில் புத்தகங்கள் வருகிற பார்சல்களைப் பிரித்த கையோடு வாசிக்க உட்கார்ந்து விடுவதுண்டு. நாம் ஆர்டர் போட்டு வாங்குகிற நூல்களை விட அன்பின் நிமித்தமாக அனுப்பி வைக்கப் படுகிற நூல்களுக்கு கொஞ்சம் கூடுதல் முக்கியத்துவம் அளிப்பதுண்டு. அந்த வகையிலேயே தோழர் சீருடையான் அவர்களின் புதிய படைப்பான “ஒற்றை வாசம்” நாவல் வாசிப்பும் தொடங்கியது. அதிலும் நம்ம தேனியை மையப்படுத்திய படைப்புகள் என்றால் இயல்பாகவே கொஞ்சம் கூடுதலான ஈர்ப்பு வந்து விடுகிறது தானே..

இன்று போய், தேனியில் இறங்கி “காட்டுச் சாலை” எங்கு இருக்கிறது என்று கேட்டால் கிட்டத்தட்ட யாருக்கும் தெரியாது என்று தான் நினைக்கிறேன். அதையே “பாரஸ்ட் ரோடு” என்றால் சின்ன குழந்தை கூட சொல்லி விடும். அந்தச் சாலையில் அங்கங்கே சில குடிசைகள் முளைத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் நடக்கிற கதை. சௌமிய வருடம் என்கிற ஒரு குறிப்பில் இருந்து அறுபதுகளின் கடைசி என்று நாம் உறுதிபட சொல்ல முடிகிறது.

ஃபிளாஷ் பேக் கதை தான். வியட்நாம் வீடு படத்தில் வருகிற, “உன் கண்ணில் நீர் வழிந்தால் என் அன்பே, என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி.. வேர் என நீ இருந்தாய்.. அதில் நான் வீழ்ந்து விடாது இருந்தேன்” என்கிற பாடலில் வருகிற வரிகளுக்கு பொருத்தமாக, உடல்நலக் குறைவால் தன் வாழ்வின் கடைசி நிமிடங்களில் ஊசலாடி கொண்டிருக்கும் தன் “சோதியை” கட்டிலின் அருகே அமர்ந்து பண்டுதம் பார்த்துக் கொண்டிருக்கும் சுகந்தனின் நினைவுகள் மூலம் அரை நூற்றாண்டுக்கு முன்னர் நம்மைக் கொண்டு செல்கிறது நாவல்..

“வீட்டை கட்டிப்பாரு, கல்யாணத்தை முடிச்சுப் பாருன்னு சும்மாவா சொன்னாக” என்று சொல்லப் படுவதுண்டு. இந்நாவலில் சீருடையான் அவர்கள் ஒரு கல்யாணத்தை முடிச்சு அதுக்கப்புறம் ஒரு வீட்டையும் கட்டி முடித்திருக்கிறார்..

சுகந்தனுக்கும் சோதிக்கும் கல்யாணம் முடிஞ்சு அரை நூற்றாண்டுக்கு மேலாக மிக நன்றாக வாழ்ந்திருக்கிறார்கள் என்று முதல் சில வரிகளிலேயே நமக்குத் தெரிந்த போதிலும் பின்னோக்கி சுழலும் கதையின் ஓட்டத்தில் அவர்கள் எப்படி சேர்ந்தார்கள் என்பதையே நாவல் விரிவாக பேசுகிறது.. பொண்ணு பார்க்க போறது வரைக்கும் சொல்லிக்கிட்டே வந்தவர், திடீர்னு சாந்தியின் அண்ணன் சவுந்திர பாண்டியன் மூலமாக ஒரு முடிச்சை போட்டு விடுகிறார். அப்புறம் எப்படி கல்யாணம் நடந்தது, என்ன ஆயிற்று என்று அறிய நம்மை வேகப் படுத்துகிறார் சீருடையான்.. திருமண வேலைகளை துரிதப்படுத்தும் முயற்சியில் நம்மையும் சேர்த்து ஈடுபடுத்தி விடுகிறார்.

சாமானிய மக்களுக்கு வாழ்வில் பெரிதாக என்ன தேவை இருக்கிறது. அந்த வயித்துக்கு அஞ்சாறு கஞ்சியும் சாஞ்சுக்க கொஞ்சூண்டு இடமும் தான். இதுக்கு தேவையான பொருளாதார தேடலை தாண்டி உடல் தேவை தான் பிரதானமாக இருக்கிறது. ஆறு முதல் அறுபது வரை திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். “இந்தியாவுல ஏன் சனத் தொகை அதிகரிக்குது தெரியுமா? ஏழைகளுக்கு இருக்குற ஒரே பொழுதுபோக்கு இதான்..!”

வாழ்வின் பிரிக்க முடியாத ஒரு அங்கம் தான் பாலுணர்வும்.. அதுக்கு தான், ஒப்புதல் பெற்ற உடலுறவுக்கு தான் சமுதாயம் பயங்கரமான பில்டப் கொடுத்து திருமணம், குடும்பம் என்கிற ஏற்பாடுகளை செய்கிறது. உலகில் இரண்டு விஷயங்கள் தான் ஆதிகாலத்தில் இருந்து தொடர்ந்து நடப்பவை. ஒன்று, பொருள் உற்பத்தி, இரண்டாவது இன உற்பத்தி, இன விருத்தி.. மற்ற எல்லாமே இதை சுற்றிச் சுற்றி பின்னப்பட்டுள்ள கதைகள் தான், வலைகள் தான்.

இந்த கதையில் வருகிற சுகந்தன், சோதி ஆகட்டும், சுவாதி, சாந்தி ஆகட்டும்.. அவர்களின் தகப்பன்மார், அண்ணன்மார், திருவிழா கூட்டத்தில் திருவிளையாடல் செய்கிற எளந்தாரிகள், மாட்டு வண்டியில் இருந்து இறங்கி ஆலமரத்துப் பக்கம் ஒதுங்குகிற இளஞ்ஜோடி, அந்தப் புல்லுக் கட்டுக்காரி என்று என எல்லோருக்குள்ளும் பொங்குகிற அந்த உணர்வு யதார்த்தமானது தான். ஆனால் கதையில் வருகிற சிவந்தநாதன் சொல்வது போல “வீட்டை விட்டு வெளியே வாங்க, உலகம் எங்கயோ போய்க்கிட்டிருக்கு..!” என்று தான் சொல்ல வேண்டி இருக்கின்றது.

பெண் பார்க்க போவது, வருவது, திருமண சடங்குகள் சம்பிரதாயங்கள் போன்றவற்றில் இன்னும் கூட மாறாத நிலைகள் இருப்பதை தான் நாம் பார்க்க முடிகிறது. “பொன்னு கிடைச்சாலும் புதன் கிடைக்காது, ரெட்டிப்பு நாள், கருப்பு இருட்டும் கன்னிமார் கூந்தலும் ஒண்ணு சேரக் கூடாது” என வருகிற பல இடங்கள் மக்கள் மத்தியில் நிலவிய, நிலவுகிற நம்பிக்கைகள் குறித்து நமக்கு உணர்த்துகிறது.

சிவந்த நாதன் அங்கங்கே “மண்ணும் நீரும் சேர்ந்தா தானே உணவு கிடைக்கும்.. தங்கம்கிறது மஞ்சப் பிசாசு..!” என இயல்பாக பேசுகிற பேச்சே பொதுமக்கள் பார்வையில் எப்படி இருக்கிறது என்பதை கொஞ்சம் சிரிக்கும் படியாக தான் சொல்லி இருக்கிறார். அதே நேரத்தில் சிவந்த நாதன் போன்றவர்கள் பிரச்சினைகள் என்று வரும் போது, குடும்பமாக இருந்தாலும் பொதுப் பிரச்சினையாக இருந்தாலும் அவர்களின் அணுகுமுறை, சுகந்தனை மட்டுமல்ல நம்மையும் சிந்திக்க வைக்கிறது.

கதையில் சோதியின் அப்பாவைத் தவிர நமக்கு வேறு யாரும் கோபத்தைக் கிளப்பவில்லை. ஆமாம், அவரைத் தவிர பெரிதாக வில்லன்கள் என யாரும் இல்லை கதையில்.. !

அடுத்த வீட்டில் ஏதாவது நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் உள்ள வந்து கிடந்து, உருண்டு புரண்டு உதவுகிற அந்த தன்மை இன்று மாறி இருக்கிற சமூக சூழ்நிலைகளால் கொஞ்சம் வற்றிப் போய் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இருளாயி, அருணாச்சலம், பழனியாண்டி செட்டியார், பெரிய ராவுத்தர் உள்ளிட்ட பலர் நம்பிக்கை ஊட்டும் நல்ல பாத்திர படைப்புகள்..

எடசந்து, கீஸ்திரி மேஸ்திரி, தூரக் கெடுவு, சீமத் தண்ணி, சங்கிலி சரப்பிலி என கிராமத்து மக்களின் புழக்கத்தில் இருந்தே கூட அருகி வரும் வார்த்தைகள் பலவற்றை ரசித்தேன். சொலவடைகள் நிறைய எதிர்பார்த்தேன்.. அம்மாயி வருகிற, பேசுகிற இடங்கள் இதயத்திற்கு நெருக்கமாக உணர்ந்தேன்..

நாகராசு அண்ணனின் நக்கல் நையாண்டி, இரட்டை அர்த்த பேச்சுகள், குழந்தைகள் உடனான உரையாடல்கள் வருகிற இடங்கள், சுகந்தனின் சிறு பிராய பள்ளிக்கூடத்தில் பரிமளா, சகுந்தலா உடனான உரையாடல்கள் ஆகியவற்றை ரசிக்க முடிந்தது.

திருமண வயதில் இருக்கிற, திருமணத்துக்கு தயாராகிற ஒரு இளம் ஆண், பெண்களின் உணர்வுகளை, ஏக்கங்களை, மயக்கங்களை மிக ஆழமாக, உன்னிப்பாக பதிவு செய்திருக்கிறார்.. அது தான் நிறைய அத்தியாயங்களில் பேசப் படுகிறது. ரசிக்கும் படியாகவும் இருக்கிறது. இயலாத வீடுகளின் பெண்களது வலியை உணர்த்துவதாகவும் உள்ளது. ஆனாலும் உணர்வுகள் வாசகனுக்கு ஆழமாக கடத்தப் படுகிற வகையில் பல இடங்களில் இன்னும் அழுத்தமாக சொல்லப் பட்டிருக்க வேண்டுமோ என்றும் கடைசியில் இன்னொரு அத்தியாயம் இருந்திருக்கலாம் என்றும் எனக்குத் தோன்றியது..

சாமான்ய மக்களின் இயல்பான வாழ்க்கையை மிக நெருக்கமாக, மிக இயல்பாக பேசுகிற நாவல் இது என்பதில் மாற்றுக் கருத்துகள் இருக்க முடியாது..!

தேனி மண்ணில் பிறந்த புதியதொரு குழந்தையை பிறந்த அன்னைக்கே போய்ப் பார்த்து விட்டு வந்த சந்தோசம் மனதை முழுவதுமாக நிறைக்கிறது..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *