அநாதி மொழியர்
அவர்களுக்கு
கடவுளின் சாயல்
இல்லை…..
அவர்கள் சாயலில்
கடவுள்கள்
அவர்கள் கடவுளுக்கு
நிகரான பிம்பங்கள்
கடவுளர் கையேந்தும்
கருணைமிகு கையர்கள்
அன்புசூழ் மெய்யர்கள்
அவர்கள்….
அவர்கள் கல்லை
கனியென்பர்
மண்ணை
சமைத்து உண்பர்
அடுப்பிருக்கும் விறகிருக்கும்
நெருப்பில்லா…
சமையலில் விதவிதமாய்
உணவிருக்கும்
அவர்கள்
கூடாரத்தில் குடியிருப்பர்
அதை கோபுரம்
என்றே மகிழ்ந்திருப்பர்
ஒப்பனை வார்த்தைகள்
தெரியாது அதை
அவர்கள்
சொப்பனம் கூட ஏற்காது
ஓடிக் களைப்பதும்
ஓணான் பிடிப்பதும்
பாடித்திரிவதும்
கூடித் தின்பதுமே
அவர்கள் அடையாளம்
நிலாச்சோறும்
ரிமோர்ட் காரும்
கார்ட்டூன் கதையும்
கடலலை பேச்சுமே
அவர்கள் விருப்பம்
மன்னிக்கவும் மறக்கவும்
மறந்து ஏற்கவும்
மனதாரச் சிரிக்கவும்
கடவுளுக்குக் கற்றுத்தரும்
அவர்கள்…..
மாற்றுமொழி அறியா
மண் மொழியாளர்கள்
சிவபஞ்சவன்
ராஜபாளையம்