சில புத்தகங்கள் உலகின் சமூக-பொருளாதார-கலாச்சார அமைப்புகளையே மாற்றும்.  இதற்கு எடுத்துக்காட்டு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, மூலதனம் மற்றும் சோவியத் இலக்கியங்கள் முதலானவை.

சில புத்தகங்கள், சமுதாய அமைப்பையே மாற்றும். இதற்கு உதாரணம் பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள், அவர் குடியரசு இதழில் எழுதிய கட்டுரைகள் முதலானவைகளாகும்.

சில புத்தகங்கள் படிப்போரின் எதிர்காலத் திசைவழியையே மாற்றி யமைத்திடும். இதற்கு உதாரணம், நினைவுகள் அழிவதில்லை, வீரம் விளைந்தது, தாய் முதலானவற்றைக் குறிப்பிடலாம்.

சில புத்தகங்கள் தாங்கள் தாங்கள் பிறந்த சமூகத்தின் காரணமாக, தாங்கள் அனுபவித்த சமூகக் கொடுமைகளை, வெளிச்சத்திற்குக் கொண்டுவந்ததுடன் அதற்கெதிராகக் குரல் எழுப்பி, அடியோடு ஒழித்துக்கட்ட நடவடிக்கைகள் எடுக்க தன் சமூகத்தில் பிறந்தவர்களையும், தங்கள் சமூகத்தின் பழக்க-வழக்கங்கள் இழிவு என்று கருதியவர்களையும் இணைத்து இயக்கம் காண வைப்பதும் உண்டு. இதற்கு உதாரணங்களாக டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் நூல்களைக் குறிப்பிடலாம்.

இதே திசைவழியில் தோழர் மூவலூர் இராமாமிர்தத்தம்மாள் எழுதிய தாசிகள் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர் என்னும் நூலும் ஒன்று என்று சொன்னால் அது மிகையல்ல, உண்மை.

இளைய சமுதாயத்திற்கு வரலாறு மிகவும் முக்கியம். இந்திய சமூக அமைப்பில் வர்ணாசிரம (அ)தர்மத்தின் கொடுங்கோன்மை சென்ற தலைமையினர் மத்தியில் எந்த அளவிற்குக் கொடூரமாக இருந்தது என்பது இன்றைய இளம் சமுதாயத்தினருக்கு அவ்வளவாகத் தெரியாது. இதன் காரணமாகத்தான் ஒரு காலத்தில் கீழத் தஞ்சை மாவட்டத்தில் தங்கள் இழிவினை ஒழித்துக் கட்டுவதற்கு செங்கொடி இயக்கம் எந்த அளவிற்கு முன்கை எடுத்துப் போராடியது என்பதை வரலாற்றுரீதியாகத் தெரிந்துகொள்ளாத காரணத்தால்தான், தலித் இளைஞர்களில் பலர் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு எதிராகவே செயல்படுவதைப் பார்க்க முடிகிறது. அநேகமாக இவர்கள் பி.சீனிவாசராவ், பி.எஸ். தனுஷ்கோடி முதலானவர்களின் வரலாறுகளை அறிந்திருக்க மாட்டார்கள்.

14. மூவலூர் ராமாமிர்தம்- Dinamani

அதேபோன்றே, தமிழகத்தில் ஒரு சாதியில் பிறந்த பெண்கள் மிகவும் இழிவான முறையில் வர்ணாச்ரம (அ)தர்மம் வலியுறுத்தி வந்ததையும் அதனை தந்தை பெரியார் தலைமையில், அந்த சாதியில் பிறந்த பெண்ணான மூவலூர் ராமாமிர்தத்தம்மாள், தன் இனப் பெண்களைத் திரட்டி, அக்கொடுமைக்கு எதிராகப் போராடிய வரலாறும் அந்த இனத்தில் பிறந்த பலருக்கே இன்றைக்குத் தெரியுமா என்பது சந்தேகமே. தமிழகத்தில்தான் தேவதாசி முறை முற்றிலுமாக ஒழித்துக்கட்டப்பட்டிருக்கிறது. நம் அண்டை மாநிலமான கர்நாடகாவில் இப்போதும் வெளிப்படையாகவும், ஆந்திராவில் இலைமறை காய்மறையாகவும் இருந்து வருவதாகவே அறிகிறோம்.

வர்ணாச்ரம (அ)தர்மம் மத்தியில் கோலோச்சிக்கொண்டிருக்கிற இத்தருணத்தில் நம் முன்னோர்கள் நடத்திய சமூக சீர்திருத்த இயக்கங்கள் குறித்த நூல்களை இன்றைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டும். அத்தகைய நூல்களில் ஒன்றுதான் மூவலூர் இராமாமிர்தத்தம்மாள் எழுதிய “தாசிகள் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர்” என்னும் நூலாகும்.

இந்நூல் அவர்களால் 1930களில் எழுதிப்பட்டு வெளியாகியிருக்கிறது. இதனை வெளிக்கொணர்வதற்காக அவர் எவ்வளவு கடினமானமுறையில் உழைத்திருக்கிறார் என்பதை இந்நூலின் முன்னுரையில் அவரும், அவருக்கு உதவியாக இருந்த பெரியோர்களும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இந்நூல் குறித்து நான் சொல்வதைவிட இதனை வெளிக்கொரண காரணமாக இருந்த மூவலூர் இராமாமிர்தத்தம்மாள் தன்னுடைய என்னுரையில் கூறியுள்ளவற்றில் ஒருசிலவற்றைக் குறிப்பிட்டுவிட்டு, ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதற்கிணங்க கதையிலிருந்து ஒரு சிறு பகுதியை மட்டும் இங்கே பதிவிடலாம் என விரும்புகிறேன்.

மூவலூர் இராமமிர்தத்தம்மாள், என்னுரையில் கூறியிருப்பதன் சாராம்சம் வருமாறு:

“தேவதாசி, தேவடியாள்! ஆஹா, என்ன திவ்வியமான திருப்பெயர்கள். தெய்வத்திற்குப் பக்தி சிரத்தையுடன் திருத்தொண்டு புரிபவளே, தேவதாசி. தேவடியாள், இந்தப் பெயர் காதில்பட்ட மாத்திரத்தில் நாம் என்ன நினைக்கிறோம்? குடிகெடுக்கும் விபசாரி என்ற நினைவைத் தவிர தெய்வத் திருத்தொண்டு புரியும் பக்த சிரோமணி என்ற நினைவு கனவிலும் வருவதில்லை.

14. மூவலூர் ராமாமிர்தம்- Dinamani

தேவதாசி வேறு, மற்ற விலைமகளும் பரத்தையும் வேறு என்று வாதிடுகின்றவர்களும் இங்கே இருக்கிறார்கள்.    ஆனால் பண்டைக் காலந்தொட்டே, கோவில் குருக்கள்மாரும், அரசர்களும், செல்வர்களும் மற்றவர்களும் தெய்வத்தின் பேரால், கலையின் பேரால், போகத்தின் பேரால், குறிப்பிட்ட ஒரு பெண் சமூகத்தை வியபிசாரத்திற்கு உபயோகிக்க ஆக்கம் அளித்து வந்தார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்பது எனது கெட்டியான அபிப்பிராயம். எனவே அந்த வியபிசாரக் கூட்டத்தில் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பித்துக் கொண்டு வாதித்துப் பெருமை பேசிக்கொண்டிருப்பது வீண் வேலையாகும்.

தேச தாசி முறையை ஒழிக்க வேண்டும், தெய்வங்களின் பேரால் பொட்டுக்கட்டும் அநாகரிக வழக்கத்தை ஒழித்துவிட வேண்டும் என்று டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் போன்ற சீர்திருத்தவாதிகள் சொன்னால் இப்பொழுதும் முட்டுக்கட்டை போடுகின்றவர்கள் யார் என்பதைக் கவனியுங்கள். வைதீகர் கூச்சல் ஒருபுறம் இருக்கட்டும், பெரிய பெரிய சட்ட நிபுணர்களான அரசியல் தலைவர்கள் – சமூகச் சீர்திருத்தத் தலைவர்கள் என்பவர்களே குறுக்கு விழுகிறார்கள். கும்பகோண சாஸ்திரிகளைக் காட்டிலும் சத்தியமூர்த்தி சாஸ்திரிகள் “தேவதாசிகள் இருக்க வேண்டும், தேவதாசி முறையை ஒழிப்பது தெய்வ விரோதம், சட்டவிரோதம்” என்று கூச்சல் போட்டுப் பிரச்சாரம் செய்யத் தொடங்குகின்றார்கள். கிருஷ்ணய்யர்களோ “தேவதாசி முறையை ஒழிப்பது நமது புராண நாட்டியக்கலை – இசைக்கலைப் பொக்கிசங்களை ஒழிப்பதாகும்,” என்று கூச்சல் கிளப்புகிறார்கள். சாஸ்திரிகளோ, “தேவதாசி முறையை ஒழித்தால் சாஸ்திரம் போச்சு, நாத்திகம் ஆச்சு,” என்று தலைகளில் அடித்துக்கொள்கிறார்கள்.

இனி, தாசிகள் வீடுகளே மோட்சம் என்று கருதிக்கொண்டிருக்கும் ஜமீன்தார்கள், பிரபுக்கள் முதலியவர்களைப் பற்றிச் சொல்லவேண்டியதே இல்லை. தேவதாசி முறையை ஒழிப்பதற்கு எதிரிடையாகத் தங்களுடைய அதிகாரமும் செல்வமும் எவ்வளவு தூரம் பாயுமோ அவ்வளவு தூரம் உபயோகிக்கத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நமது நாட்டில் பெண்கள் தெய்வங்களாகப போற்றப்படுகிறார்கள் என்பது ஏமாற்றுப் பேச்சு. இந்நாட்டுப் பெண்கள் எல்லாத் துறையிலும் அழுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்குத் தெய்வங்களின் பேராலும் சாஸ்திரங்களின் பேராலும் ஒரு பெண் சமூகத்தை வியபிசாரத்திற்குத் தயாராக்கிக் கொண்ட பாதகம் செய்திருப்பதொன்றே போதிய சான்றாகும்.

Image

அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் தலைவர்ககளாய் விளங்கிய தோழர்கள் ஈ.வெ. ராமசாமியார், திரு.வி.கலியாணசுந்தர முதலியார், டாக்டர் வரதராஜுலு நாயுடு போன்ற பிரமுகர்கள் தேவதாசி முறையை ஒழிப்பதில் ஒருவாறு அநுதாபங் காட்டினர். இந்தச் சமூகத்திலேயே பிறந்து படாத பாடெல்லாம் பட்டுத்தேர்ந்த எனக்கு எவ்வழியிலேனும் இவ்விபசாரக் கூட்டத்தைத் தலையெடுக்கவிடாமல் ஒழித்துவிட வேண்டும் என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்த எனக்கு அந்தச் சந்தர்ப்பம் பெருந்துணையாக வந்து வாய்த்தது.

பொட்டறுப்புச் சங்கங்கள் கண்டு பிரச்சாரம் செய்யத் தொடங்கினேன். தேவதாசி சமூகத்திலேயே பலமான எதிர்ப்புக் கிளம்பியதோடு நான் மேலே குறிப்பிட்ட பெரிய தலைவர்கள் – சாஸ்திரிகள் – ஜமீன்தார்கள் – பிரபுக்கள் மாமாக்களின் எதிர்ப்புகளும் விரோதங்களும் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் கிளம்பத் தலைப்பட்டன. எனக்கும் என்னுடைய தோழர்களுக்கும் ஏற்பட்டன.

தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர் என்னும் பெயரில் உள்ள இந்நாவல் புழுங்கிய மனதில் தோன்றிய எனது உணர்ச்சியின் பயனாக எழுந்ததொன்றாகும்.”

அடுத்து, அன்றைய சமூகம் தேவதாசிகள் சமூகம் எப்படி இருந்தது என்பதை கதையின் தொடக்கத்திலேயே மிகவும் சிறப்பாக வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறார். அது என்ன என்று கூறி என் உரையை முடித்துக்கொள்கிறேன்.

“மைசூர் வித்வானுக்கு ரூபாய் 5000 கொடுத்துச் சங்கீதம் பயின்று பிரபலமடைந்திருக்கும் கமலாபுரம் போக சிந்தாமணியின் புத்திரிகளான காந்தா கானவதி சகோதரிகள் சங்கீதக் கச்சேரிகளுக்கு ஏக கிராக்கியாய் இருக்கிறது. பக்கத்து வீட்டுத் தாசிகளெல்லாம் பொறாமையால் புழுங்கி வேதனையடையும்படி காந்தா கானவதி வீட்டிற்குக் காரிலும் வண்டியிலும் கோச்சிலுமாகப் பல பிரபுக்கள் வருவதும், போவதும் சங்கீதம் கேட்பதுமாய் இருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது ஒரு நாள் தந்திச் சேவகன் ஒரு தந்தியைக் கொண்டுவந்து கொடுத்தான்.

போகசிந்தாமணி உடனே கருணாகரனைக் கூப்பிட்டு, “இந்தத் தந்தியை எடுத்துக்கொண்டு ஓட்டமாய் ஓடிப்போய் வக்கீல் சுந்தரம் ஐயரிடத்தில் காட்டி விவரம் தெரிந்து கொண்டுவா. அவரையும் தங்கச்சிகள் வரச்சொன்னதாகச் சொல்லிவிட்டு வா,” என்று கட்டளையிட்டாள். அக்கட்டளையைச் சிரமேல் தாங்கிய கருணாகரன் தந்தியை எடுத்துக்கொண்டு வக்கீல் வீட்டுக்கு ஓடினான். வீட்டைச் சமீபித்தவுடன் மரியாதையாய் அங்கவஸ்திரத்தைக் கட்கத்தில் இடுக்கிக்கொண்டு அடக்க ஒடுக்கமாகச் சென்றான்.

Indian prostitution “devadasi” | Awaaz Nation

ஏதோ அன்றைக்கு வேண்டிய கேஸ் கட்டைப் படித்துக் கொண்டிருந்த வக்கீல் ஐயர் இவனைப் பார்த்ததும் அப்படியே நிறுத்திவிட்டு எழுந்து கருணாகரன் அருகே வந்து “வா அப்பா! கருணாகரா! என்ன விசேஷம்?” என்று கேட்டார். கருணாகரன், தன் தாயார் தந்தியைக் கொடுத்து விவரத்தைத் தெரிந்துவரச் சொல்லியதையும் அவரைக் கையோடு அழைத்துவரச் சொன்ன விவரத்தையும் தெரிவித்தான்.”

இதுதான் நாவலின் முதல் பக்கம் உள்ளவை. இந்த முதல் பக்கத்திலேயே மூவலூர் இராமாமிர்தத்தம்மாள் அன்றைய தினம் தேவதாசி குடும்பத்தில் ஒரே தாய் வயிற்றில் பிறந்த பெண்களின் நிலையையும், ஆண்களின் நிலையையும் தோலுரித்துக்காட்டியிருப்பார்.

சமூகத்தை மாற்ற நினைக்கும் ஒவ்வொருவரும், நம் கடந்தகால சமூகம் எப்படி இருந்தது என்கிற வரலாறை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் நம் மூதாதையர்கள் எப்படி எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு, போராடி ஓரளவுக்காவது சமூகத்தல் மாற்றத்தைக் கொண்டுவந்தார்கள்,இதனைத் தக்க வைத்துக்கொண்டு மேலும் முன்னேற வேண்டியது அவசியம் என்பதை உணர்வோம். இல்லையேல், இப்போது ஆட்சிபுரிவோம் சமூகத்தை 150 ஆண்டுகளுக்குப் பின்னேயிருந்ததுபோல் மாற்றுவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நம்மை அறியாமலேயே நாம் துணை போய்விடுவோம்.

எனவே, இதுபோன்று வரலாறுகளைக் கோடிட்டுக் காட்டும் நாவல்களை அவசியம் மீள்வாசிப்புச் செய்திடுவோம்.

என் கைவசம் உள்ள நாவல் தமிழ்க் குடிஅரசு பதிப்பகம், 14/12, மியான் முதல் தெரு, சேப்பாக்கம், சென்னை-600 005 என்பவர்களால் 2009இல் வெளியிடப்பட்டது. அப்போது அதன் விலை ரூ.150/-.

One thought on “நூல் அறிமுகம்: எழுத்தாளர் மூவலூர் இராமாமிர்தத்தம்மாளின் தாசிகள் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர் – ச.வீரமணி ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *