அயோத்தியில் ஜனவரி இருபத்தியிரண்டாம் நாள் நடைபெறவிருந்த நிகழ்விற்கு எதிராக சுரண்யா அய்யர் உண்ணாவிரதம்
ஜனநாயக உணர்வுகளைத் தக்க வைத்துக் கொள்வதற்கான போராட்டங்கள், யாத்திரைகள்
ஜெய்ஷாவின் ஆடுகளம் – இந்திய கிரிக்கெட் பாஜகவின் கட்டுப்பாட்டில் . . .
யார் இந்த லச்சித் போர்புகான்? கட்டுரை – அ.பாக்கியம்
நவம்பர் 24 அன்று, புகழ்பெற்ற அசாமிய தளபதி லச்சித் போர்புகான் 400 வயதை எட்டுகிறார்.
ஆண்டு முழுவதும், பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான அஸ்ஸாம் அரசு, அவரது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் கொண்டாட்டங்களை நடத்தியது.
பிப்ரவரியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கொடியசைத்து விழாவைத் தொடங்கி வைத்த நிலையில், நவம்பர் 23 முதல் 25 வரை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
அசாம் மாநில பாஜக அரசு தேசம் முழுவதும் உள்ள பத்திரிக்கைகளில் லச்சித் போர்புகானின் முழு பக்க விளம்பரத்தை கொடுத்துள்ளது.
லச்சித் போர்புகான் முகலாயர்களை வீழ்த்திய இந்து மன்னன் என்ற சாயத்தை பூசித்தான் இந்த விளம்பரத்தை கொடுத்து வருகிறார்கள்.
பாஜகவினர் மதத்தை பயன்படுத்தி தரம் தாழ்ந்த அரசியலுக்கு செல்வார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. தமிழகத்தின் திருவள்ளுவரையே காவி சாயத்துக்குள் கவிழ்த்தவர்கள்.
“சத்ரபதி சிவாஜிக்கு நாடு வழங்கிய அதே கண்ணியத்தைப் பெறாத” அஹோம் ஜெனரலுக்கு “சரியான மரியாதைக்குரிய இடத்தை” உறுதி செய்வதற்காகக் கொண்டாட்டங்கள் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார் .
1671 ஆம் ஆண்டு சராய்காட் போரில் முகலாயப் படைகளைத் தோற்கடித்த போர்புகன் என்ற வீரராகவே அசாமில் எப்போதும் போற்றப்படுகிறார்.
அசாமில் பிஜேபியின் எழுச்சிக்குப் பிறகு, அவரை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு போர்வீரராகக் காட்ட கட்சி ஆர்வமாக உள்ளது. சர்மா, “முஸ்லிம் படையெடுப்பாளர்களை” தடுப்பதற்காக போர்புகானை அடிக்கடி பாராட்டியுள்ளார் .
“இது 2016 மாநிலத் தேர்தலை ‘சராய்காட்டின் கடைசிப் போர்’ என்று பாஜக முத்திரை குத்தியது. இதில் காங்கிரஸை முகலாயர்களுடன் ஒப்பிட்டு சமன் செய்தது. அசாமியர்கள் காவி கட்சியுடன் நெருக்கமாக இருக்குமாறு பாஜக வலியுறுத்தியது.
2021 ஆம் ஆண்டு மாநிலத் தேர்தலுக்கு முன்பு, BJP இன்னும் வெளிப்படையான இந்துத்துவாவைத் தூண்டியது. மேலும் காங்கிரஸும் அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியும் சட்டவிரோத குடியேறிய முஸ்லீம்களை ஆதரிப்பதாக முதல்வர் சர்மா பிரச்சாரம் செய்தார்.
சமீபத்தில், அவர் முகலாயர்களை தோற்கடித்ததால் இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் போர்புகானை புறக்கணித்ததாக குற்றம் சாட்டினார்.
அஹோம் இராச்சியம்:
அஹோம் இராச்சியம் (1228–1826) அஸ்ஸாமில் உள்ள பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் வரலாற்றின் இடைக்காலத்தின் பிற்பகுதியில் இருந்தது. வடகிழக்கு இந்தியாவில் முகலாய விரிவாக்கத்தை வெற்றிகரமாக எதிர்த்து சண்டைபோட்டது.
சுமார் 600 ஆண்டுகள் அதன் இறையாண்மையை அது தக்கவைத்து ஆட்சிசெய்தது. மோங் மாவோவின் (இன்றைய யுன்னான் மாகாணம், சீனா) தை (TAI) இளவரசரான சுகபாவால் நிறுவப்பட்டது.
இது 16 ஆம் நூற்றாண்டில் சுஹுங்முங்கி ஆட்சியின் கீழ் விரிவடைந்து. முழு பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கின் அரசியல் மற்றும் சமூக வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த அரசு விரிவாக்கம் செய்யப்பட்டபோது பல இனங்களின் தன்மைகளை கொண்ட அரசாக மாறியது. மோமோரியா கிளர்ச்சியின் எழுச்சியுடன்(அதிகார போட்டி) இராச்சியம் பலவீனமடைந்தது.
பின்னர் அஸ்ஸாம் மீது பர்மாவின் தொடர்ச்சியான படையெடுப்பைத் தொடரந்து தொ அஹோம் அரசு வீழ்ச்சியடைந்தது. முதல் ஆங்கிலோ-பர்மியப் போருக்குப் பிறகு பர்மியர்களின் தோல்வி அடைந்தனர்.
1826 ல் யாண்டபோ உடன்படிக்கையின் மூலம், இராச்சியத்தின் கட்டுப்பாடு கிழக்கிந்திய கம்பெனியின் கைகளுக்குச் சென்றது. இதுதான் இந்த அஹோம் ராஜ்ஜியத்தின் கதை.
லச்சித் போர்புகன்:
லச்சித் போர்புகன் (24 நவம்பர் 1622 – 25 ஏப்ரல் 1672) தற்போதைய அஸ்ஸாமில் அமைந்திருந்த அஹோம் இராச்சியத்தில் தளபதி மற்றும் போர்புகன் ஆவார். போர்புகான என்றால் அமைச்சர் என்று பொருள்படும்.
லச்சித் டெக்கா பின்னர் லச்சித் போர்புகானாக மாறினார். அஹோம் ராஜ்ஜியத்தில் 5 போர்புகன்களில் ஒருவராக இந்த லச்சித் போர்புகான் இருந்தார். இந்த முறையை அஹோம் மன்னர் பிரதாப் சிங்கவால் உருவாக்கப்பட்டது.
அஹோம் ராஜ்ஜியத்தின் அதிகார வரம்புடன், இந்த பதவி நிர்வாக மற்றும் நீதித்துறை அதிகாரங்களை உள்ளடக்கியது. போர்புகானின் தலைமையகம் கலியாபோரிலும்1681 இல் இட்டாகுலி போருக்குப் பிறகு குவஹாத்தியில் உள்ள இடகுலியிலும் அமைந்திருந்தது.
அஹோம் தலைநகரில் இருந்து தொலைவில் இருந்ததால் சக்தி வாய்ந்ததாகவும் சுதந்திர சாயலை கொண்டதாகவும் இருந்துசெயல்பட்டது.கலியாபோரின் கிழக்கே உள்ள பகுதி லச்சித் போர்புகனால் ஆளப்பட்டது.
அஹோம்கள் 1615-1682 வரை ஜஹாங்கீரின் ஆட்சியில் இருந்து அவுரங்கசீப்பின் ஆட்சி வரை தொடர்ச்சியான மோதல்களில் ஈடுபட்டனர்.
ஆரம்பகால இராணுவ மோதல் ஜனவரி 1662 ல் நடைபெற்றது. முகலாயர்கள் ஒரு பகுதியில் வெற்றிபெற்று அசாமின் சில பகுதிகளையும், அஹோம் தலைநகரான கர்கானின் சில பகுதிகளையும் கைப்பற்றினர்.
இழந்த அஹோம் பிரதேசங்களை மீட்பதற்கான எதிர்த்தாக்குதல் அஹோம் மன்னர் ஸ்வர்கதேயோ சக்ரத்வாஜ சிங்காவின் தலைமையில் தொடங்கியது. அஹோம்கள் சில ஆரம்ப வெற்றிகளை பெற்றனர்.
அவுரங்கசீப் 1669 ல் ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த ஜெய்ப்பூரின் ராஜா ராம் சிங் தலைமையில் இழந்த பகுதியை மீண்டும் கைப்பற்றுவதற்காக அனுப்பினார். இறுதியில் 1671 ல் சராய்காட் என்ற இடத்தில போர் நடந்தது.
மொகலாயர்கள் தங்கள் பாரிய படைகளுடன் திறந்தவெளியில் போரிட வந்தனர். லச்சித் போர்புகன் கெரில்லா தந்திரங்களை பயன்படுத்தி யுத்தம் செய்தார். லச்சித் பெரிய முகலாய முகாம்களிலும், நிலையான நிலைகளிலும் சேதத்தை ஏற்படுத்தினார்.
சராய்காட் யுத்தத்தில் லச்சித் தலைமையிலான அகோம் படைகள் வெற்றி பெற்றது.
இதற்காக லச்சித் போர்புகன் அசாம் மக்களால் எப்போதும் போற்றப்படுகிறார்.
1930ம் ஆண்டிலிருந்து தளபதி லச்சித் பிறந்த நாள் விழா அசாம் மக்களால் கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்னால் அசாமில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசு கௌஹாத்தியிலுள்ள பிரமபுத்திரா பகுதியில் 35 அடி உயரமுள்ள லச்சித் சிலையை அமைத்தது. 1999 ஆம் ஆண்டு முதல் தேசிய பாதுகாப்பு அகடமி தேர்ச்சி பெற்ற வீரர்களுக்கு லச்சித் பெயரில் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.
1930ம் ஆண்டு கொண்டாடப்படுகிற விழாக்களில் லச்சித் ஒரு மதம்சார்ந்தவராக அடையாளப்படுத்தப்படவில்லை. சராய்காட் போரும் மதம் அடிப்படையில் பார்க்கப்படவில்லை. அவ்வாறு நடைபெறவும் இல்லை. மன்னராட்சி சாம்ராஜ்யங்களின் விரிவாக்கத்தை எதிர்த்த போராகவே அது இருந்தது.
லச்சித் போர்புகன் இந்து மதத்தைச்சேர்ந்தவர் அல்ல. தை(TAI ) மொழிபேசும் பழங்குடி மதத்தைசேர்ந்தவர். அஹோம் அரச பகுதிகள் இந்து மதம்சார்ந்த பகுதியும் இல்லை. மன்னர் சிப் சிங் [1714-1744] ஆட்சியின் போது மட்டுமே இந்து மதம் பிரதான மதமாக மாறியது.
லச்சித்தின் கீழ் இருந்த பல வீரர்கள் பழங்குடியின மதத்தைச் சேர்ந்தவர்கள்
அஹோம் ராணுவத்தில் முஸ்லிம்களும் முக்கியப் பதவிகளை வகித்தனர்.
உதாரணமாக, பாக் ஹசாரிகா என்றும் அழைக்கப்படும் கடற்படை ஜெனரல் பதவியை வகித்தவர் இஸ்மாயில் சித்திக் என்ற முஸ்லீம் ஆவார்.
லச்சித் போரிட்ட முகலாய தளபதி அம்பரைச் சேர்ந்த ராஜா ராம் சிங் கச்வாஹா [ஒரு ராஜபுத்திரர்] என்பதால் அதற்கு எந்த மதக் கோணமும் இல்லை. ஔரங்கசீப்பின் படையில், பல இந்து வீரர்கள் இருந்தனர்.
போர்புகானின் புராணக்கதை முதன்மையாக அவரது வீரம் மற்றும் கடமை உணர்வு பற்றி பாடப்பட்டது. போரின் போது அவர் போராடிய மிக உயர்ந்த கடமை உணர்வின் காரணமாக பாராட்டப்பட்டார் தவிர மதத்தின் சிறப்பால் அல்ல.
400வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வடகிழக்கின் வரலாற்றைப் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதற்கான ஒரு வழி என்ற அளவில் பாக்கப்பட வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
அஸ்ஸாமில் உள்ள வரலாற்றாசிரியர்கள் போர்புகானின் கதை வகுப்புவாதப்படுத்தப்பட்ட விதம் மற்றும் அஹோம் ராஜ்ஜியத்திற்கும் முகலாய சாம்ராஜ்யத்திற்கும் இடையிலான போரை இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான போராக மாற்றுகிற மத துவேஷ வேலை களை பாஜக செய்வதை கண்டிக்கின்றனர்.
அசாமில் பிஜேபியின் எழுச்சிக்குப் பிறகு, அவரை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு போர்வீரராகக் காட்ட கட்சி ஆர்வமாக உள்ளது. “முஸ்லிம் படையெடுப்பாளர்களை” தடுப்பதற்காக போர்புகானை அடிக்கடி பாஜக தலைவர்கள் பாராட்டியுள்ளார் .
வடகிழக்கு மாநிலத்தில் பாஜக மதவெறி அரசியலை நிலை நாட்டுவதற்கு பழங்குடி போர் வீரர்களை இந்து என்ற சாயத்தை பூசி இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்களாக மாற்றி கலவரத்தை உருவாக்கி வருகிறது.
இந்திய நாடு முழுவதும் சத்ரபதி சிவாஜி, ராணா பிரதாப் சிங் போன்ற மன்னர்களை இந்து மன்னர்களாக கட்டமைத்து இஸ்லாமியரை எதிர்த்து போராடியவர்கள் என்ற மத வெறி உணர்வை ஊட்டியது. தற்போது அந்தப் பட்டியலில் அசாம் வீரர் லச்சித் போர்புகானை சேர்ப்பதற்கான முயற்சிகளை எடுத்துள்ளது.
பாஜக நினைத்தபடி வரலாற்றை மாற்றி எழுதும் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.
– அ.பாக்கியம்
நுபுர் சர்மா மீது உச்சநீதிமன்றம் முன்வைத்த கடுமையான விமர்சனம் கட்டுரை பிருந்தா காரத் – தமிழில்: தா.சந்திரகுரு
முகமது நபிக்கு எதிரான பேச்சிற்காக நுபுர் சர்மா மீது உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகள் சற்றே தாமதமாக வந்திருந்தாலும் அவை வரவேற்க வேண்டியதாகவே இருக்கின்றன. நீதிமன்றம் ‘நாடு முழுவதும் உணர்வுகளைத் தூண்டிய விதத்தில்… நாட்டில் நடந்துள்ளவற்றிற்கு இந்தப் பெண்மணி மட்டுமே பொறுப்பு’ என்று வெளிப்படையாக முன்வைக்கப்பட்ட கடுமையான குற்றச்சாட்டுகளின் மூலம் தன்னுடைய கருத்தைத் தெரிவித்திருக்கிறது. நீதிமன்றத்தின் கருத்துகள் நுபுர் சர்மாவைக் கைது செய்வதற்கான தர்க்கரீதியான நடவடிக்கைகளுக்குக் குறைந்தபட்சம் இப்போதாவது வழிவகுத்துக் கொடுத்திடுமா?
பல்வேறு மாநிலங்களில் தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தையும் ஒன்றாக இணைக்கக் கோரி நுபுர் சர்மா தாக்கல் செய்த மனுவின் மீதுதான் உச்சநீதிமன்றம் அத்தகைய கருத்துக்களைத் தெரிவித்துள்ளது. அதன் விளைவாக தன்னுடைய மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. தேசியத் தொலைக்காட்சியில் பேசிய பேச்சுகளுக்குப் பிறகு பல முதல் தகவல் அறிக்கைகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருந்த நிலையிலும் அமித்ஷாவின் காவல்துறை முகமது ஜுபைரைக் கைது செய்து துன்புறுத்தியதே தவிர நுபுர் சர்மா மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கத் துணியவில்லை. தங்களுக்கு வேண்டியவர்களுக்குப் பாதுகாப்பை நீட்டிப்பதில் அதிகாரத்தில் இருப்பவர்களிடம் உள்ள துணிச்சலுக்கு எல்லையில்லை என்பதையே அது தெளிவாகக் காட்டியது.
தொலைக்காட்சியில் திருமதி.சர்மா பகிர்ந்து கொண்ட கருத்துகளின் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்ட முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டு, உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்ற தில்லி காவல்துறையின் துன்புறுத்தல் நடவடிக்கைகளுக்கு ஆளானது அனைவரும் அறிந்ததே. நுபுர் சர்மா வெளியிட்ட தகவலில் உள்ள உண்மை, வெறுப்புணர்வைத் தூண்டும் தன்மையைச் சரிபார்த்து அம்பலப்படுத்துகின்ற செயலில் ஈடுபட்ட ஜுபைரின் செயல்பாடு உண்மையில் சட்டரீதியான, தர்க்கரீதியான நடவடிக்கையே.
ஹிரிஷிகேஷ் முகர்ஜி தயாரித்த திரைப்படத்தை மேற்கோள் காட்டி ஜுபைர் 2018ஆம் ஆண்டு வெளியிட்டிருந்த ட்வீட்டைச் சுட்டிக்காட்டி வழக்குப் பதிவு செய்த காவல்துறை இப்போது அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கும் பழிவாங்கல் நடவடிக்கையை மறைக்க முயன்றிருக்கிறது. ஜுபைரின் ட்வீட்டிற்குப் பிறகு இந்த நான்கு ஆண்டுகளில் யாருடைய ‘மத உணர்வுகளும்’ புண்படுத்தப்பட்டிருக்கவில்லை, எந்தத் தரப்பிலிருந்தும் எந்தவொரு குறையும் அந்த ட்வீட் குறித்து இதுவரையிலும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை என்ற நிலையில், இப்போது அந்தப் பழைய ட்வீட் குறித்து அண்மையில் உருவாக்கப்பட்டிருக்கும் சமூக ஊடக கணக்குகள் புகார் அளித்ததன் பேரிலேயே தில்லி காவல்துறை நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
கமது ஜுபைர் என்ற பெயரில் கொலை மிரட்டல்கள் உட்பட ட்ரோலிங் தனக்கு செய்யப்பட்டது என்று நுபுர் சர்மா OpIndia என்ற வலதுசாரி செய்தி இணையதளத்திற்கு அளித்த நேர்காணலில் குற்றம் சாட்டியிருந்தார். சைபர் கிரைம் பிரிவுதான் அவருக்கு வந்ததாகக் கூறப்படுகின்ற கொலை மிரட்டல்களுக்கான ஆதாரங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எவரொருவராலும் வன்முறை அச்சுறுத்தல்களை ஏற்றுக் கொள்ளவே முடியாது. அத்தகிஅய அச்சுறுத்தல்களைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும். தேசிய தொலைக்காட்சியில் தான் பேசிய பேச்சிற்காக பின்னர் மன்னிப்பு கோரிய நுபுர் சர்மாவின் பேச்சையே முகமது ஜுபைர் பகிர்ந்து கொண்டிருந்தார் எனும் போது ஜுபைர் மீது எவ்வாறு குற்றம் சுமத்த முடியும்? நுபுர் சர்மாவின் அந்த மன்னிப்பு அரை மனதுடன் இருப்பதாகவும், அவர் ஒட்டுமொத்த நாட்டிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இப்போது உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. நுபுர் சர்மாவின் பேச்சு அடங்கிய வீடியோ முழுவதையும் பார்த்ததாகக் கூறிய உச்சநீதிமன்றம், அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொனியே மிகவும் மோசமாக இருந்தது என்று கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளது. அப்படியென்றால் இப்போது நீதிபதிகள் மீதும் கொலை மிரட்டல்களை ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டப்படுமா? நீதிமன்ற அமர்விற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுமா?
ஜுபைர் பெயரைக் குறிப்பிட்டு குற்றம் சாட்டுவதற்கான தளத்தை நுபுர் சர்மாவுக்கு வழங்கிய அதே இணையதளம் வெளிப்படையாக நீதிமன்றத்தின் கருத்துக்களுக்கு எதிரான மிகவும் ஆபத்தான, வேண்டுமென்றே திசை திருப்பும் கருத்துகளையும் வெளியிட்டுள்ளது. அத்தகைய கருத்துக்களை வெளியிட்டிருக்கும் அந்த இணையதளத்தின் தலையங்கத்தில் ‘உச்சநீதிமன்றம் இஸ்லாத்தின் பெயரால் மதவெறியர்கள் செய்த வன்முறை, கொலைகளுக்கு ஒரு பெண்ணைக் குறை கூறுவதுடன் மட்டும் நின்று விடவில்லை’ (உண்மையில் வன்முறை, கொலை, மதவெறியர்கள் அல்லது இஸ்லாம் என்று எந்தவொரு இடத்திலும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருக்கவில்லை). இஸ்லாமியர்களைத் தூண்டுகின்ற வகையில் பேசியது சர்மாவின் தவறு என்று தெளிவுபடுத்தியுள்ள நீதிபதி சூர்யகாந்தின் கருத்தை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இறையைப் பழித்து அவதூறாகப் பேசுவதாக தாங்கள் கருதுகின்றவர்களின் தலைகளை வெட்டப் போவதாக வெளிப்படையாக அறிவித்த இஸ்லாமியர்களின் தவறு அல்ல (நீதிமன்றத்தில் பேசப்படாத வார்த்தைகள்) என்பதாகவே உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தலையங்கத்தில் இறுதியாக ‘நுபுர் சர்மாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சமூக ஊடகப் பதிவைப் பகிர்ந்து கொண்டதற்காக உதய்ப்பூரில் ஹிந்து ஒருவர் கொல்லப்பட்டதைச் சர்மாவின் தவறு என்று அறிவித்திருக்கும் உச்சநீதிமன்றம் இஸ்லாமியர்கள் அறிவித்துள்ள வன்முறைக்கு நுபுர் சர்மா பலியாகிவிட்டால், உண்மையில் அவர் அதற்குத் தகுதியானவர் என்றும் சொல்லக்கூடும்’ என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற கருத்துகள் மக்களை வகுப்புவாத அடிப்படையில் தூண்டி விடுவதற்காக முன்வைக்கப்படுகின்ற பொய்களாகும். நீதிமன்றத்தின் கருத்துகளை வேண்டுமென்றே வகுப்புவாதப்படுத்துகின்ற இத்தகைய ‘செய்தி’ இணையதளங்கள் மீது கண்டிப்பாக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். வகுப்புவாத எதிர்வினையை நேரடியாகத் தூண்டி விடுவதாக இருக்கிற இதுபோன்ற கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பிற்கும் மேலான குற்றமாகும். ஒரு தவறான கதை எவ்வாறு கட்டமைக்கப்பட்டு, ஊதிப் பெருக்கப்படுகிறது என்பதை விளக்குவதற்காகவே OpIndia வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு இங்கே இந்த அளவிற்கு இடம் கொடுக்கப்படுகிறது. இத்தகைய அமைப்புகள் பாஜக ஆளுகின்ற அரசாங்கங்கள் தருகின்ற மிகத் தாராளமான விளம்பரங்கள் மூலமாகவே அரசியல் ஆதரவையும், நிதியையும் பெற்று அனுபவித்து வருகின்றன.
தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொள்ள நுபுர் சர்மாவை அனுமதித்து நீதிமன்றம் வழங்கிய இறுதி உத்தரவில், வழக்கு விசாரணையின் போது நீதிமன்றம் தெரிவித்த அந்தக் கருத்துகளுக்கான இடம் கிடைக்கவில்லை. ஆயினும் வெறுப்புணர்வு கொண்ட பேச்சுகளுக்கும் அதன் விளைவுகளுக்கும் இடையிலான நேரடித் தொடர்பு குறித்த கருத்துகள் நுபுர் சர்மா வழக்கிற்கு அப்பால் மற்றொரு வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்தக் கட்டுரையின் எழுத்தாளர் பாஜக அரசு, அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் வெறுப்புணர்வு கொண்ட பேச்சுகளுக்கு எதிராகத் தொடரப்பட்டதாக அந்த வழக்கு இருந்தது. வழக்கைத் தொடர்வதற்குத் தேவையான அனுமதியை அரசு வழங்க மறுத்ததன் காரணமாக அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதன் அடிப்படையில் தில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் வெறுப்புணர்வு கொண்ட பேச்சுகளுக்கும், அதனைத் தொடர்ந்து நிகழ்கின்ற வன்முறைகளுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து ‘புறக்கணிப்பு, ஒதுக்கி வைத்தல், நாடு கடத்தல், இனப்படுகொலை என்று இருந்து வருகின்ற பாகுபாடுகள் வழியாக இலக்கு வைக்கப்பட்ட சமூகத்தின் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்களின் தொடக்கப் புள்ளியாக இவ்வாறான வெறுப்புணர்வு கொண்ட பேச்சுகள் இருக்கின்றன’ என்று மிகத் தெளிவாகக் கூறப்பட்டிருந்தது. வெறுப்புணர்வைக் கொண்டிருக்கும் பேச்சுகளே அதன் தொடர்ச்சியாக உருவாகின்ற விளைவுகளின் தொடக்கப் புள்ளியாக இருக்கின்றன என்று நீதிமன்றம் குறிப்பிட்டது இங்கே நன்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.
இன்றைய நிலைமையில் ஆட்சியில் இருப்பவர்களின் அரசியல் திட்டத்தின் ஒரு பகுதியாக வெறுப்புணர்வைக் கொண்டிருக்கும் பேச்சுகள் ஊடக நிறுவனங்களின் ஆதரவுடன் ‘இயல்பாக்கப்பட்டு’ சமூகங்களுக்கிடையிலான சமூக உறவுகள் சிதைக்கப்பட்டுள்ளன என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை. இந்த ‘இயல்பாக்கல்’ வெறுப்பு அடிப்படையிலான ஆத்திரமூட்டும் கருத்துகளைக் கண்டிப்பதற்கு அல்லது அமைதி, நல்லிணக்கத்திற்கான முறையீடுகளை மேற்கொள்வதற்கு மறுத்து வருகின்ற உயர்மட்டத் தலைவர்களால் வேண்டுமென்றே கடைப்பிடிக்கப்படுகின்ற பொறுப்பற்ற மௌனத்தை உள்ளடக்கி இருக்கிறது.
சர்வதேசப் பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகின்ற முஸ்லீம் தீவிரவாதிகளின் பயங்கரவாதச் செயலால் விளைந்த கன்னையாலாலின் காட்டுமிராண்டித்தனமான, கொடூரமான கொலை, அதனைத் தொடர்ந்து வெளியான மனிதாபிமானமற்ற வீடியோ போன்றவை அரசியல் தளத்தில் பரவலாகக் கண்டனத்திற்குள்ளாகின. ராஜஸ்தான் மாநில அரசு கொலையாளிகளை அதிரடியாகக் கைது செய்தது. நுபுர் சர்மாவின் புகைப்படங்களை ஏந்திக் கொண்டு அவருக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பியவாறு உதய்ப்பூரின் தெருக்களில் அணிவகுத்துச் சென்ற குழுக்கள் அந்தச் சமயத்தில் எழுந்த பரவலான சீற்றத்தைத் தங்களுக்கென்று பயன்படுத்திக் கொள்ள முயன்றன. இவ்வாறான செயல்களுக்கு பாஜக தலைவர்கள் எவராவது கண்டனம் தெரிவித்தனரா? அத்தகைய கொந்தளிப்பான சூழ்நிலையில் பிரதமர் அமைதி, நல்லிணக்கத்திற்கான வேண்டுகோளை விடுக்க வேண்டுமென்று ராஜஸ்தான் முதல்வர் பகிரங்கமான வேண்டுகோளை முன்வைத்தார். ஆனாலும் அவரது கோரிக்கைக்கு பலத்த மௌனமே எதிர்வினையாகி நின்றது. பிரதமர் ஒரு வார்த்தை கூட பேச முன்வரவில்லை.
சங்பரிவாரத்தை முன்னிறுத்துபவர்கள் வெறுக்கத்தக்க பேச்சுகளை பேசுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், உயர்மட்ட அரசியல் தலைவர்களும், அரசில் உள்ள தலைவர்களும் மௌனம் மட்டுமே காத்து வருகின்றனர். மக்களின் மனதையும். இதயத்தையும் துருவமயமாக்குகின்ற கொடூரமான முயற்சியில் அதிகாரத்தில் இருப்பவர்களின் வார்த்தைகள் மட்டுமல்லாது, செயல்களும் இணைந்து சமூகங்களுக்கிடையில் வெறுப்பு, சந்தேகம் கலந்த சூழலை உருவாக்கியிருக்கின்றன. நுபுர் சர்மா உள்ளிட்டு தொடர்புடைய செய்தி சேனல்கள், தில்லி காவல்துறை ஆகியவற்றின் மீது கடுமையான விமர்சனங்களை மிகச் சரியாகவே உச்சநீதிமன்றம் முன்வைத்திருக்கின்ற போதிலும், அதுபோன்ற வெறுப்புணர்வுக் கருத்துகளை வெளியிடக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு உதவுகின்ற அதிகாரத்தில் இருப்பவர்களே அதற்கான பொறுப்பை முழுமையாக ஏற்றுக் கொள்ளுமாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஓர் அடிப்படைவாதம் மற்றொரு அடிப்படைவாதத்தைப் பலப்படுத்துகிறது என்பது மிகவும் சரியான உண்மையாகும். நம்மால் அதன் மோசமான விளைவுகளை இந்தியா முழுவதிலும் காண முடிகிறது. அரசியலமைப்பு அளித்திருக்கும் உத்தரவாதங்களை நச்சுத்தன்மை மிக்க பெரும்பான்மை வகுப்புவாதத்தின் புல்டோசர் வீழ்த்திக் கொண்டிருக்கும் வேளையில் தடுமாறிக் கொண்டிருக்கும் சமூகத்திற்குள் இஸ்லாமியவாதிகளும், அவர்களது வெறித்தனமான குழுக்களும் நுழைகின்றன. இந்த இருளை விரட்டியடிப்பதன் மூலம் தான் எதிர்கொண்டுள்ள இத்தகைய கொடுங்கனவிலிருந்து இந்தியா விழித்தெழ வேண்டும். நீதிமன்றங்களுக்கு இதில் மிகவும் முக்கியமான பங்கு இருக்கின்றது. நீதிமன்றங்களின் கூர்மையான கருத்துகள் – அவை மிக அரிதானவையாக இருந்தாலும் – நுபுர் சர்மாவின் வழக்கில் கூறப்பட்டதைப் போன்ற வழிகளைத் தெளிவுபடுத்துவதற்கு சில சமயங்களில் உதவுகின்றன. நுபுர் சர்மாவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும் கருத்துகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அவருடைய ஆதரவாளர்கள் தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்துள்ளனர். ஒருவேளை அது நடக்கும் என்றால் இந்தியாவிற்கு மிகவும் சோகமான நாளாகவே அந்த நாள் அமையும். உண்மையை ஒருபோதும் யாராலும் அகற்றி விட முடியாது.
https://www.ndtv.com/opinion/opinion-the-supreme-courts-scathing-criticism-of-nupur-sharma-3120698
நன்றி: என்டிடிவி இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு
நான் மண்டியிட்டிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பே சிலரிடம் இருக்கிறது – நீதிபதி அகில் குரேஷி | தமிழில்: தா.சந்திரகுரு
நாட்டின் மிக மூத்த தலைமை நீதிபதியாக இருந்த போதிலும் உச்சநீதிமன்ற நீதிபதி பதவி மறுக்கப்பட்ட ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான அகில் குரேஷி சாதாரண குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் சுதந்திரமான நீதித்துறையின் பங்கு குறித்து கடந்த சனிக்கிழமையன்று (மார்ச் 05) தனக்கு நடத்தப்பட்ட வழியனுப்பு விழாவில் ஆற்றிய உரையில் வலியுறுத்தினார். மாற்றுக் கருத்துகளைக் கொண்டிருப்பவர்களைக் குறிவைத்து தேசத்துரோகச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் அவர் தன்னுடைய உரையில் சுட்டிக்காட்டினார்.
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு நீதிபதி குரேஷி உச்சநீதிமன்ற நீதிபதியாவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நீதிபதி ரோஹிண்டன் நாரிமன் மற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்திற்கும் ஒப்புதல் அளிக்க மறுத்த போது கொலிஜியத்தில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. அதற்கு முன்னதாக மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக குரேஷியை நியமிக்கவும் அரசு மறுத்திருந்தது.
தண்டனைக்குரிய நடவடிக்கைகளாக பலராலும் பரவலாகக் காணப்பட்ட அவரது பணியிடமாற்றங்கள் பற்றிய குறிப்புகளும் நீதிபதி குரேஷியின் உரையில் மிகவும் கண்ணியமாக இடம் பெற்றிருந்தன.
’சமீபத்தில் இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ஒருவர் தனது சுயசரிதையை எழுதியிருக்கிறார். அதைப் படிக்கவில்லை என்றாலும் ஊடகங்களில் வெளியான செய்திகளைப் பார்த்து சில கருத்துகளை அவர் வெளியிட்டிருப்பதை நான் அறிந்து கொண்டேன். மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நியமனத்திற்காக என்னைப் பரிந்துரைத்திருந்ததை மாற்றி திரிபுரா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிப்பது குறித்து நீதித்துறைக் கருத்துகளின் அடிப்படையில் அரசாங்கம் என்னைப் பற்றி சில எதிர்மறையான கருத்துக்களைக் கொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். குடிமக்களின் அடிப்படை உரிமைகளை, மனித உரிமைகளைப் பாதுகாப்பதே முதன்மைக் கடமையாகக் கொண்டிருக்கின்ற அரசியலமைப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக அவரது கருத்துகளை என்னுடைய சுதந்திரமான செயல்பாட்டிற்கான சான்றிதழாகவே நான் கருதுகிறேன்’ என்று முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயின் சுயசரிதையைப் பற்றி குறிப்பிட்டு நீதிபதி குரேஷி பேசினார்.
முன்னாள் தலைமை நீதிபதி கோகோய் தலைமையிலான கொலிஜியம் திரிபுரா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி குரேஷியை நியமிப்பது என்ற தன்னுடைய ஆரம்பப் பரிந்துரையை மாற்றிக் கொண்டது. கொலிஜியம் எடுத்த அந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி குரேஷி ‘மத்திய அரசுக்குப் பிடிக்காத நீதித்துறை சார்ந்த தன்னுடைய கருத்துக்கள் குறித்த ‘நீதித்துறையின் கருத்து’ பற்றி ‘அதிகாரப்பூர்வமாக’ தனக்குத் தெரிவிக்கப்படவில்லை என்பதே தன்னைப் பொறுத்தவரை ‘மிகவும் முக்கியத்துவம்’ வாய்ந்ததாக இருந்தது’ என்று கூறினார்.
‘அகில்’ தொடங்கி ‘நீதிபதி குரேஷி’ வரையிலான தனது பயணம் குறித்து பேசிய போது இந்திராகாந்தியின் நெருக்கடி நிலை காலத்தின் போது பள்ளி மாணவனாக இருந்த தான் கண்ட சம்பவத்தை அவர் பின்வருமாறு விவரித்தார்:
‘குஜராத் உயர்நீதிமன்ற வளாகத்தில் ஏராளமானோர் கூடியிருந்தனர். காவல்துறையின் பலத்த பாதுகாப்பு அங்கே போடப்பட்டிருந்தது. காவல்துறையினர் அங்கிருந்த கூட்டத்தின் மீது தடியடி நடத்தி விரட்டியடித்து ஒருவரைக் கைது செய்து வேனில் ஏற்றிய போது அந்தப் பகுதியில் மிகுந்த பரபரப்பு காணப்பட்டது. இன்னும் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் அந்த நிகழ்வுகளை மூச்சுத் திணறப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த நிகழ்வு 1974ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது விலைவாசி உயர்வு, அரசாங்கத்தில் நடைபெறுகின்ற ஊழல் ஆகியவற்றிற்கு எதிராக நவநிர்மாண் இயக்கம் சார்பில் நடைபெற்ற மாணவர்களின் போராட்டம் உச்சக்கட்டத்தில் இருந்தது. செயல்பாட்டாளர்களுக்கு எதிராக உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் (மிசா) கீழ் தடுப்புக்காவல் உத்தரவுகளை நிறைவேற்றுவதன் மூலம் நிர்வாகம் பதிலடி கொடுத்தது. தங்களிடம் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்தவர்களை அமைதிப்படுத்துவதற்கு தேசத்துரோகச் சட்டத்தைப் பயன்படுத்தலாம் என்பதை அன்றைய ஆட்சியாளர்கள் கண்டறியாமலே இருந்தனர்.
செயல்பாட்டாளர்கள் தலைமறைவாகினர். அவர்களில் ஒருவரான ஸ்ரீகிரிஷ்பாய் படேல் வெளியில் வந்து தடுப்புக்காவல் உத்தரவுகளை எதிர்த்து ஆட்கொணர்வு (ஹேபியஸ் கார்பஸ்) மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். விரைவிலேயே அவர் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து அகற்றப்படுவதற்கு முன்பாக காவல்துறையின் வேனுக்குள் இருந்தவறு சுருக்கமான உரை ஒன்றை அவர் நிகழ்த்தினார். அரசு இயந்திரத்தின் ஆதரவுடன் நடைபெறுகின்ற சர்வாதிகார ஆட்சியின் வலிமைக்கு சவால் விடுவதாக அவரது பேச்சு அமைந்திருந்தது. ஊழல் நிறைந்த அரசியல் வர்க்கத்தின் அட்டூழியங்களுக்கு அடிபணிய வேண்டாம் என்று மக்களைத் தூண்டுகின்ற வகையில் இருந்த அவரது வார்த்தைகள் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. அவை மிகவும் சுவாரசியமான நாட்களாக இருந்தன. நேர்மையான தீர்ப்பிற்காக சமூகம் நடத்துகின்ற போராட்டத்தைப் பார்த்த அதே வேளையில் அந்த செயல்முறைகளுக்கு உதவுகின்ற வகையில் நீதிமன்றங்களிடம் இருந்த மகத்தான அதிகாரத்தையும் நான் கண்டேன். அந்த தருணமே சட்டத்தின் மீதான எனது ஆர்வத்தை தூண்டி விட்டது’
2010ஆம் ஆண்டு குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது, சொராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் அப்போதைய மாநில உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித்ஷாவை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட போது நீதிபதி குரேஷி முதன்முதலாக அனைவரது கவனத்திற்கும் வந்தார். பின்னர் லோக்ஆயுக்தா நியமன வழக்கில் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசுக்கு எதிராக அவர் தீர்ப்பளித்தார். 2002ஆம் ஆண்டு வகுப்புவாத கலவரத்தின் போது நடைபெற்ற நரோடா பாட்டியா படுகொலை தொடர்பான வழக்கில் குஜராத் முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி செய்த மேல்முறையீட்டில் அவரைத் திரும்பப் பெற வேண்டும் என்று மாநில அரசு கோரியிருந்தது.
அரசுக்கு எதிராக நீதிபதி குரேஷி வழங்கிய பாதகமான தீர்ப்புகள் கறை எதுவுமற்ற அவரது நீதித்துறை வாழ்க்கை மீது அதிகம் பாதிப்புகளை ஏற்படுத்தின. 2018ஆம் ஆண்டில் குஜராத் உயர்நீதிமன்றத்தின் தற்காலிகத் தலைமை நீதிபதி பதவியை ஏற்கவிருந்த சமயத்தில் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் இருந்த அதைவிடக் குறைவான பதவிக்கு நீதிபதி குரேஷி மாற்றப்பட்டார். குஜராத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அந்த இடமாற்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 2018ஆம் ஆண்டு ஒருமனதாகத் தீர்மானம் ஒன்ற நிறைவேற்றியது என்று லைவ் லா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
நீதிபதி குரேஷியை மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்த்துவதற்கான பரிந்துரையை 2019 மே மாதம் கொலிஜியம் வழங்கிய போது, தன்னுடைய ஆட்சேபணையைத் தெரிவித்த ஒன்றிய அரசு கொலிஜியம் செய்திருந்த மற்ற மூன்று பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கத் தவறவில்லை. அரசின் அழுத்தத்திற்கு அடிபணிந்த கொலிஜியம் இறுதியில் குரேஷியை திரிபுரா உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக அனுப்புவது என்று தன்னுடைய பரிந்துரையை மாற்றிக் கொண்டது.
பிரியாவிடை பேச்சு
‘இந்தியாவில் இதுவரை நாற்பத்தியெட்டு தலைமை நீதிபதிகள் இருந்துள்ளனர். ஆனால் குடிமக்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான தைரியம், தியாகம் குறித்து பேசுகின்ற வேளையில், நாம் எப்போதும் இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்திருக்க வேண்டிய ஒருவரையே நினைவுகூருகிறோம். ஜபல்பூர் மாவட்ட கூடுதல் நீதிபதி வழக்கில் தன்னுடைய தனித்த எதிர்ப்புக் குரலுக்காக நீதிபதி எச்.ஆர்.கன்னா எப்போதும் நினைவு கூரப்படுகிறார்’ என்று நீதிபதி குரேஷி கூறினார். இந்திராகாந்தி அரசாங்கத்தால் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு மறுக்கப்பட்ட நீதிபதி எச்.ஆர்.கன்னாவைப் பற்றியே அவர் குறிப்பிட்டுப் பேசினார்.
‘குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுவே நீதிமன்றங்கள் இருப்பதற்கான ஒரே காரணமாகும். எந்தவொரு நேரடி அவமதிப்புகளைக் காட்டிலும், குடிமக்களின் ஜனநாயக விழுமியங்கள், உரிமைகள் மீது கள்ளத்தனமாக நடத்தப்படுகின்ற அத்துமீறல்களே நம்மைக் கவலையடையச் செய்ய வேண்டும்’ என்று அவர் கூறினார்.
மேலும் அவர் உயர்நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைகளை நிராகரித்து வருவதாக உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் போக்கு அதிகரித்து வருவது குறித்து உயர்நீதிமன்றங்களில் எழும் கவலைகள் குறித்தும் பேசினார். ‘உயர்நீதிமன்றங்களால் பரிந்துரைக்கப்படுகின்ற வழக்கறிஞர்கள் பட்டியல் உச்சநீதிமன்றத்தால் மோசமாக சீரமைக்கப்படுவதைப் பார்ப்பது ஆச்சரியம் அளிப்பதாக இருக்கிறது. உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றிற்கு இடையே உள்ள கருத்து வேறுபாட்டிற்கான காரணம் எதுவாக இருந்தாலும் அது சரி செய்யப்பட வேண்டும். இல்லையேல் மிகச் சிறந்த வழக்கறிஞர்களை நீதிமன்ற அமர்வில் சேர வற்புறுத்துவது மிகவும் கடினமாகி விடும்’ என்று அன்றைய தினம் நீதிபதி குரேஷி ஆற்றிய உணர்ச்சிபூர்வமான பிரியாவிடை பேச்சு அவரது சட்டத்துறை சகாக்களின் பாராட்டைப் பெறுவதாக அமைந்திருந்தது.
‘அதில் எனக்கு ஏதாவது வருத்தம் உண்டா என்று கேட்டால் அவ்வாறு எதுவும் இல்லை என்றே கூறுவேன். நான் எடுத்த ஒவ்வொரு முடிவுகளும் என்னுடைய சட்டப்பூர்வ புரிதலின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன. நான் தவறு செய்திருக்கலாம். பல சந்தர்ப்பங்களில் நான் தவறிழைத்திருப்பதாக நிரூபித்திருக்கிறார்கள். ஆனால் ஒருமுறை கூட என்னிடமுள்ள சட்டப்பூர்வமான நம்பிக்கைக்கு மாறான முடிவுகளை நான் எடுத்ததே இல்லை. தீர்ப்புகள் ஏற்படுத்தப் போகின்ற பின்விளைவுகளின் அடிப்படையில் எந்தவொரு முடிவையும் எடுத்ததில்லை என்ற பெருமையுடன் நான் விடைபெறுகின்றேன். என்னுடைய தனிப்பட்ட முன்னேற்றத்திற்காக அவர்களிடம் நான் மண்டியிட்டிருக்க வேண்டும் என்ற நம்பிக்கை சிலரிடம் இருக்கிறது. ஆனால் முன்னேற்றம் என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள் என்பதைப் பொறுத்ததாகவே அது இருக்கிறது. நான் எங்கே சென்றாலும் வழக்கறிஞர்கள், சக ஊழியர்களிடமிருந்து எனக்குக் கிடைத்த ஆதரவு, அன்பு, பாசம் போன்றவையே கண்ணுக்குப் புலனாகின்ற எந்தவொரு முன்னேற்றத்தைக் காட்டிலும் சிறந்தவையாக உள்ளன. இதை வேறு எந்தவொரு முன்னேற்றத்திற்காகவும் நிச்சயம் நான் மாற்றிக் கொள்ளவே மாட்டேன். வேறு எதையும் பெறுவதற்காக இவற்றை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்’ என்றார்.
குரேஷி மேலும் ‘நீங்கள் அனைவரும் என் மீது வைத்திருக்கும் பாசம் மற்றும் முன்னேற்றம் என்று சொல்லப்படுவதற்கு இடையே ஒன்றை நான் தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்ற நிலைமை வந்தால் மிகவும் மகிழ்ச்சியுடன் உங்கள் பாசத்தையே நான் தேர்ந்தெடுத்துக் கொள்வேன்… வாழ்க்கை பின்னோக்கிச் சுழன்று பழையவற்றை மீண்டும் பார்க்க அனுமதிக்கும் என்றால் – அதே குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எனக்கு அதே நீதிபதி பதவி மீண்டும் வழங்கப்படுமானால், மீண்டும் மீண்டும் அதையே நான் ஏற்றுக்கொள்வேன்’ என்று கூறினார்.
நீதிபதி குரேஷியின் புகழ்பெற்ற நீதித்துறை வாழ்க்கை குஜராத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்ட 2004ஆம் ஆண்டில் தொடங்கியது. பின்னர் இறுதியாக 2021 அக்டோபரில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்படுவதற்கு முன்பாக கிட்டத்தட்ட இருபதாண்டுகள் தன்னுடைய நீதித்துறை வாழ்க்கையில் அவர் பல்வேறு பொறுப்புகளில் இருந்தார்.
https://thewire.in/law/i-leave-with-my-pride-intact-rajasthan-chief-justice-kureshi-who-ruled-against-modi-and-shah
நன்றி: வயர் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு
வரலாற்று பாடப்புத்தகங்களை மாற்றி எழுத பாஜக அரசு மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் – வரலாற்றிற்கு இழைக்கப்படுகின்ற அவமானம் – ஆர்.மகாலட்சுமி | தமிழில்: தா.சந்திரகுரு
அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரலாறு தொடர்பான பள்ளிப் பாடப்புத்தகங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய ‘சீர்திருத்தங்கள்’ குறித்த நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையானது ஏற்கனவே நன்கு நிறுவப்பட்டுள்ள அறிவுப்புலத்தின் மீதான தாக்குதல்களை மட்டுமல்லாது, வரலாற்றை மாற்றி எழுதுவது என்று அரசிடம் இருந்து வருகின்ற சந்தேகத்திற்கிடமான திட்டங்களுக்கு இணங்கிப் போகின்ற வகையிலான சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களையும் பரிந்துரைப்பதாக உள்ளது.
நவீன, முற்போக்கான சமுதாயத்தைப் பொறுத்தவரை வரலாற்றில் யார், எதை விட்டுச் சென்றிருக்கிறார்கள், எப்படிப்பட்ட வரலாற்று உணர்வு மக்களிடம் புகுத்தப்பட வேண்டும் என்பது குறித்து நிதானித்து சிந்திக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் அவசியம் தேவைப்படுகின்றன. சலுகை பெற்ற ஒரு சிலர் பெரும்பான்மையான மக்கள் மீது மேலாதிக்கம் செய்வது, தலித்துகள், பழங்குடியினர், பெண்களை ஒடுக்குகின்ற வகையில் வரலாறு, பாரம்பரியம், கடந்தகால நடைமுறைகளைப் பயன்படுத்துவது, போலி நாட்டுப்பற்றுடன் பெரும்பான்மை ஹிந்து அடையாளத்தை பிணைத்துக் கொள்வது, சமூக உறவுகளின் மீது வர்க்கம், சாதி, பழங்குடி, மதம், பாலினம் போன்ற அடையாளங்கள் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தி வருவது என்று இருந்து வருகின்ற இந்தியச் சூழலில் அவ்வாறான சிந்தனைகள் குறிப்பாகத் தேவைப்படுவதாகவே இருக்கின்றன.
ஆனாலும் வரலாற்றை சமூகத்துவவாதக் கோரிக்கைகள் அல்லது அவற்றின் தேவைகளுடன் கொண்டு சென்று இணைக்க முடியாது. மற்ற துறைகளைச் சார்ந்தவர்களுக்கு இருப்பதைப் போலவே வழிகாட்டக் கூடிய வழிமுறைக் கருவிகளும், பகுப்பாய்விற்கான கட்டமைப்புகளும் வரலாற்றாசிரியர்களுக்கும் இருப்பதால் அத்தகைய நிபுணத்துவத்தைக் கொண்டிராதவர்களால் வரலாறு எது என்பதை நிச்சயமாகத் தீர்மானித்து விட முடியாது. எனவே வரலாறு குறித்ததாக இருக்கின்ற எந்தவொரு பள்ளி, கல்லூரி அல்லது பல்கலைக்கழகப் பாடத்திட்டமும் வரலாற்றாசிரியர்களுக்கு மத்தியில் இருந்து வருகின்ற ஒழுங்குமுறை வரையறைகளை, பரந்த பொதுவான புரிதலை நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இவ்வாறான சூழலில் கல்விக்கான நாடாளுமன்ற நிலைக்குழு சமர்ப்பித்துள்ள ‘பாடப்புத்தகங்களின் உள்ளடக்கம் மற்றும் வடிவமைப்பில் சீர்திருத்தங்கள் குறித்த வரைவறிக்கை’யில் உள்ள பரிந்துரைகள் மீது நாம் அதிக அளவிலே கவனத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. நாற்பத்தியாறு பக்கங்களுடன் உள்ள அந்த வரைவறிக்கையில் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம் (NCERT), புனேவில் உள்ள மகாராஷ்டிரா மாநில பாடநூல் தயாரிப்பு மற்றும் பாடத்திட்ட ஆராய்ச்சி பணியகம் மற்றும் மகாராஷ்டிரா மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம் (SCERT) போன்ற மாநில அளவிலான நிறுவனங்கள், ஏழு தனியார் நிறுவனங்கள், நான்கு பாட நிபுணர்கள் என்று அனைவராலும் வழங்கப்பட்டிருக்கும் பதிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கனவே முன்மொழியப்பட்டிருந்த சீர்திருத்தங்கள் தொடர்பாக மின்னஞ்சல் மூலமாக வரைவறிக்கை தயாரிப்புக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த இந்திய வரலாற்று காங்கிரஸின் (IHC) கருத்தும் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
அரசு நிறுவனங்களால் பள்ளி மாணவர்களுக்கென்று தயாரிக்கப்படுகின்ற பாடப்புத்தகங்களை ‘அரசியலமைப்பு விழுமியங்களை ஊக்குவிப்பது, தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவது’ என்ற வகையில் இருக்குமாறு சீர்திருத்தம், மறுவடிவமைப்பு செய்வதே அந்தக் குழுவின் பரிந்துரைகளின் நோக்கம் என்று வரைவறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. படங்கள், கிராபிக்ஸ், QR குறியீடுகள். பிற ஒலி-ஒளி சார்ந்த பொருட்களின் மேம்படுத்தப்பட்ட பயன்பாடு ஆகியவற்றுடன் விளையாட்டுகள், நாடகங்கள், பட்டறைகள் ஆகியவற்றுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், அருங்காட்சியகங்களுக்குச் செல்வது போன்ற புதுமையான கல்வியியல் பயன்பாடுகளை உள்ளடக்குகின்ற வகையில் பாடப்புத்தக வடிவமைப்பில் மாற்றங்களை அந்தக் குழு முன்வைத்துள்ளது.
வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சி
வரைவறிக்கையின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் விவாதத்தைக் கிளப்பியுள்ள ஒரே பாடநூலாக வரலாற்றுப் பாடநூல் மட்டுமே இருப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது. அதுவொன்றும் தற்செயலானது அல்ல என்பதால் அதுகுறித்து வரலாற்றாசிரியர்கள் அதிக கவனம் செலுத்துவது முக்கியமாகிறது.
வரலாற்றைத் திரித்து காவிமயப்படுத்துகின்ற பாஜக அரசின் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் 2017 ஆகஸ்ட் 12 அன்று மும்பையில் நடத்திய ஆர்ப்பாட்டம்
‘தேசிய வரலாறு, உள்ளூர் மற்றும் பிராந்திய வரலாறு, ‘போற்றப்படாத ஹீரோக்கள்’, வரலாற்றில் பெண்கள் போன்ற சில விஷயங்கள் மீண்டும் மீண்டும் வரைவறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. தேசம் என்பது நவீனக் கருத்தாக இருப்பதாலும், கடந்த காலத்தை மிகவும் எளிமையான முறையில் முன்வைக்க முடியாது என்பதாலும் அறிக்கையில் உள்ள ‘தேசிய வரலாறு’ என்ற வார்த்தைப் பயன்பாடு வரலாற்றாசிரியர்களின் முன்னால் இருக்கின்ற முதல் எச்சரிக்கையாகவே அமைந்துள்ளது.
இந்திய வரலாற்று காங்கிரஸின் பொதுத்தலைவராக இருந்த சி.எஸ்.ஸ்ரீனிவாச்சாரி ‘ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், பொதுவான அறிஞர்கள் என்று இவர்கள் அனைவருக்கும் மேலாக, பாடப்புத்தகங்களை எழுதுபவர்கள் தங்களைக் கவனமாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வரலாறு என்பது ஒரு பிரச்சாரமோ அல்லது முரட்டுத்தனமான, மோசமான விளம்பரமோ கிடையாது’ என்று 1941ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த அமைப்பின் ஐந்தாவது அமர்வில் எச்சரித்திருந்தார்.
வழக்கமான, குறுகிய வரம்புகளுக்கு அப்பாற்பட்ட விரிவான, துணை தேசிய, தேசிய, சர்வதேசியச் சூழல்களை அறிந்து கொண்டு ‘உண்மையான வரலாறு’ குறித்து அப்போதே அவர் வெளிப்படுத்தியிருந்த அந்தக் கருத்துகள் வியக்கத்தக்க வகையில் சமகாலத்திற்கேற்றவையாகவே இருக்கின்றன. வரலாற்றை எழுதுவது குறித்து கவனமாக இருக்க வேண்டியது குறித்துப் பேசிய அந்த ஞானியின் அறிவுரையை எண்பது ஆண்டுகளுக்குப் பிறகும் நாம் இப்போது நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய நிலைமையில் இருப்பது உண்மையில் வருத்தத்தை உண்டு பண்ணுவதாகவே உள்ளது.
இந்தியாவிற்கான பங்கைக் கொண்டு உலக வரலாற்றைப் புரிந்து கொள்வதற்காக அல்லது இந்திய நாட்டின் ‘கிழக்கைப் பார்’ என்ற கொள்கைக்கு ஏற்றவாறு தென்கிழக்கு ஆசியாவுடனான இந்தியாவின் தொடர்புகளை பள்ளிகளில் (அல்லது ஏதேனும் ஒரு நிலையில்) பொதுவரலாற்றுக் கல்வியாக சேர்ப்பதற்கான பரிந்துரைகளை – அவை எதேச்சையானவையாக, எளிமையானவையாக இருப்பதால் – தற்போதைய கொள்கை முன்னெடுப்புகள் தீர்மானிக்க முடியாது. இந்தியாவின் தொடர்புகள், பரிமாற்றங்கள், இடப்பெயர்வுகளைப் புரிந்து கொள்வதற்கு கிழக்கு, மேற்கு ஆசியா மற்றும் உலகின் பிற பகுதிகளுடன் இந்தியா கொண்டிருந்த தொடர்புகள் நிச்சயமாக ஆய்வுக்குள்ளாக்கப்பட வேண்டும். அத்தகைய புரிதல் எதுவுமில்லாமல் நவீன காலத்தில் வணிகவியம், காலனித்துவ விரிவாக்கம் ஆகியவற்றின் எழுச்சியை உண்மையில் புரிந்து கொள்ள முடியாது.
இந்திய வரலாற்றைப் பற்றிய சரியான புரிதலானது உலக வரலாறு குறித்த ஆய்வுகளைச் சார்ந்தே இருக்கும் என்ற வாதத்தை முன்வைத்து உலக வரலாற்று ஆய்வைத் தழுவிக் கொள்ள வேண்டும் என்று சி.எஸ்.ஸ்ரீனிவாச்சாரி விடுத்த அந்த வேண்டுகோளை முன்கூட்டியே எதிர்பார்த்ததாகவே 1939ஆம் ஆண்டு இந்திய வரலாற்று காங்கிரஸில் ஆர்.சி.மஜும்தார் ஆற்றிய தலைமையுரை அமைந்திருந்தது. ஆனால் புதுவகை ஊடகங்களால் உலகமே சுருங்கிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் பள்ளிக்கூட அளவிலே உலக வரலாறு குறித்து கற்பிக்கின்ற முறைகளை நாம் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பது முற்றிலும் முரண்பாடு கொண்ட செயலாகவே இருக்கிறது.
இந்தியாவின் வரலாறு வளமானதாக, பரந்துபட்டதாக உள்ளது. குறிப்பிட்ட நிகழ்வுகள் அல்லது காலகட்டங்கள் குறித்த முக்கியமான முன்னோக்குகளை உள்ளூர் அல்லது பிராந்திய வரலாறுகளால் நிச்சயமாக வழங்க முடியும். பிராந்தியம் குறித்த மாறாத, குறுகிய சமகாலப் புரிதல் என்று மஜும்தார் மற்றும் பிறரால் நிராகரிக்கப்பட்ட ‘மாகாணக் கண்ணோட்டம்’ என்பதிலிருந்து விலகிய வரலாற்றாசிரியர்கள் மாறிக் கொண்டே இருக்கின்ற அரசியல், மொழியியல், கலாச்சார செயல்முறைகளின் காரணமாக பிராந்தியங்களின் பரிணாம வளர்ச்சி குறித்த நுணுக்கமான விழிப்புணர்வு இருக்க வேண்டுமென்ற வாதத்தை முன்வைத்தனர். பள்ளிப் பாடப்புத்தகங்களின் மூலம் பிராந்திய உருவாக்கம், அடையாளம் ஆகியவற்றின் சிக்கலான தன்மையைக் கடத்துவது நமது கடமையாகும். இந்த வரைவறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ளவாறு பிராந்திய பங்களிப்பை மட்டுமே கொண்டு ‘தேசிய வரலாறு, கௌரவம், ஒருமைப்பாடு’ ஆகியவற்றை முன்வைக்க முற்படுகின்ற செயல் வரலாற்றாசிரியர்களுக்கு – உண்மையில் வரலாற்றிற்கே தேவையற்ற, தகுதியற்ற செயலாகவே இருக்கும்.
பெண்களும் ‘புகழ்ந்து போற்றப்படாத ஹீரோக்களும்’
பெரும்பாலான வரலாற்று ஆதாரங்கள் குறிப்பாக நவீன காலத்திற்கு முந்தைய காலகட்டங்களில் ஆண்களால் எழுதப்பட்டவையாக பெரும்பாலும் ஆண்களைப் போற்றுகின்ற வகையிலே உருவாக்கப்பட்டவையாக இருப்பதால், பாடங்களில் பெண்களின் வரலாற்றுப் பங்களிப்புகளைச் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரை முக்கியமானதாகவே இருக்கின்றது. வேதங்கள், ஜாதகங்கள், உபநிடதங்கள், கல்வெட்டுகள், கலை குறித்த நூல்களை ஆய்வு செய்துள்ள ஏ.எஸ்.அல்டேகரின் ‘ஹிந்து நாகரிகத்தில் பெண்களின் நிலை’ போன்ற நூல்கள் இந்திய வரலாற்றாசிரியர்கள் அதை மறந்திருக்கவில்லை என்பதைக் காட்டுகின்றன.
தாங்கள் வாழ்ந்த சூழலைப் பற்றிய புரிதல் இல்லாமல் மிகமிகக் குறைவான எண்ணிக்கையிலேயே ‘தகுதியான பெண்கள்’ இருந்ததால் அவர்களைக் கணக்கிடுவதில் தடைகள் இருந்தன என்பதாக அடுத்த தலைமுறை அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். மேலும் திருமணம், குடும்பம், வீடு, உறவுகள் போன்ற சமூக நிறுவனங்களுக்குள் பெண்கள் வைக்கப்பட்டிருந்த விதம் குறித்த ஆழமான புரிதல், பாலினப் பாகுபாடுகளைக் கட்டுடைத்தல் போன்றவை நமக்கு வெவ்வேறு வடிவங்களில் பண்டைய காலங்களிலிருந்து இருந்து வந்திருக்கும் ஆணாதிக்கம், பாலினப் பாகுபாடு ஆகியவற்றின் வரலாற்று அடிப்படையை உணர்த்திக் காட்டுகின்றன.
தற்போது பயன்பாட்டில் இருந்து வருகின்ற பள்ளிப் பாடநூல்கள் பிருஹதாரண்யக உபநிடதத்தில் உள்ள ‘பிரம்மவாதினி’ (பெண் சந்நியாசி) கார்கி வாச்சக்னவி, சாதவாஹனர் காலத்து கெளதமி பாலாஸ்ரீ, தமிழ் வைணவத் துறவி ஆண்டாள், காகதீய ஆட்சியாளர் ருத்ரம்மாதேவி, சுதந்திரப் போராட்ட வீராங்கனை ராணி சன்னம்மா மற்றும் பலரைப் பற்றி குறிப்பிடவே செய்கின்றன. அவை பொதுவாக சமூகத்தில் பெண்களுக்கு இருந்து வருகின்ற கட்டமைப்பு வரம்புகளை மாணவர்கள் விமர்சன ரீதியாகப் பார்ப்பதற்கும் ஊக்குவிக்கின்றன.
வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் ‘புகழ்ந்து போற்றப்படாத ஹீரோக்கள்’ சேர்க்கப்பட வேண்டும் என்றுள்ள வரைவறிக்கையின் பரிந்துரை மிகவும் விசித்திரமானதாகவே உள்ளது. லட்சிய வரலாற்றாசிரியர் என்பவர் ‘தனது நாயகர்களின் கதையை இயல்பான முறையில் வெளிக் கொண்டு வருவதற்குப் பதிலாக, அவர்களைச் சுற்றி கதையைக் கட்டுகின்ற போக்கைக் காட்டக்கூடாது’ என்று கூறிய சி.எஸ்.ஸ்ரீனிவாச்சாரியின் பரிந்துரையைப் பின்பற்றுவதற்குப் பதிலாக நாம் நன்கு நிறுவப்பட்டிருக்கும் நடைமுறையிலிருந்து விலகிச் செல்வதாகவே தோன்றுகிறது.
வாரணாசி பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் ‘குப்த்வன்ஷக் வீர்: ஸ்கந்தகுப்த விக்ரமாதித்யா’ என்ற தலைப்பில் 2019 அக்டோபர் 17 அன்று நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஸ்கந்தகுப்தாவை தலைசிறந்த அரசர் என்று போற்றியதுடன், வரலாறு அவருக்கு உரிய தகுதியை வழங்கிடவில்லை என்பதால் நமது வரலாற்றை தேசியவாதக் கண்ணோட்டத்தில் எழுதுவதை உறுதி செய்யும் வகையிலே அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார்.
மிக முக்கியமாக தற்போதுள்ள பாடப்புத்தகங்களில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள சில நபர்களுக்கு எதிரான அவதூறுகள் தெளிவுபடுத்தப்பட வேண்டும். இந்த ஆட்சி மங்கள் பாண்டே, ராணி லக்ஷ்மிபாய், பண்டித ரமாபாய், பிர்சா முண்டா, தாதாபாய் நௌரோஜி, பாலகங்காதர திலகர், மகாத்மா காந்தி, பெரியார் ஈ.வெ.ராமசாமி, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ், ஜவஹர்லால் நேரு, அல்லூரி சீதாராம ராஜு போன்றவர்களை விட்டுவிட வேண்டும் என்று முன்மொழிகிறதா என்ன??
காலனித்துவ அழுத்தங்கள், நவ ஏகாதிபத்திய கருத்துகள் இருந்த போதிலும், இருபதாம் நூற்றாண்டு இந்தியச் சூழலில் இருந்த வரலாற்றுப் புலமைத்துவம் நமக்கு கண்ணியமான, சுயாதீமான வரலாற்றுப் பாதையைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளது. 1970கள் மற்றும் 1980களில் எழுதப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களும், 2006ஆம் ஆண்டு முதல் வெளிவந்துள்ள சமீபத்திய பாடப்புத்தகங்களும், பிராந்திய வேறுபாடுகள் அல்லது பெண்கள் மற்றும் பல்வேறு வரலாற்று நபர்களின் வரலாற்றுப் பங்கு குறித்த பிரச்சனைகளில் எளிதில் பாதிப்பை ஏற்படுத்துபவயாக உள்ளன. அணுகுமுறை மற்றும் விளக்கங்களில் வேறுபாடுகள் இருந்தாலும், பொதுவான கல்விக் கருத்துக்களுடன் இணக்கமான தகவல்கள் மற்றும் விளக்கங்களை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
தற்போது இருக்கின்ற பள்ளி வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் உள்ள குறைபாடுகள் குறித்ததாக வரைவறிக்கையில் இடம் பெற்றிருக்கும் குறிப்புகள் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டிருப்பவையாகத் தோன்றவில்லை. இப்போதுள்ள பாடப்புத்தகங்கள் தகவல்களின் தொகுப்புகளை, உள்ளூர் மற்றும் பிராந்திய வரலாறுகளை, ஆண்கள், பெண்கள் என்று வரலாற்று நபர்களைத் தேர்வு செய்து கொண்டுள்ளவையாக உள்ளன என்றாலும் அவை நிச்சயமாக தன்னிச்சையான அல்லது வரலாற்று அடிப்படை எதுவுமில்லாத கருத்தாக்கங்களிலிருந்து வெளிவந்தவையாக இருக்கவில்லை. அதேபோன்று பாடப்புத்தகங்களில் உள்ள தகவல்களை அதிகரிப்பதன் மூலம் ஏற்படுகின்ற கற்பித்தல் தாக்கங்களைக் கவனத்தில் கொள்வதும் மிகவும் முக்கியமானதாகிறது.
வரலாற்று ஆதாரங்கள் மற்றும் தொல்பொருள் ஆதாரங்களைக் கொண்டு கடுமையான ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் கடந்த காலத்தைப் பற்றி நம்மிடம் இருந்து வருகின்ற புரிதல்களைக் கேள்விக்குள்ளாக்குவது, மறுபார்வை கொள்வது, மறுபரிசீலனை செய்வது போன்ற செயல்பாடுகள் அவசியமான தேவையாகவே உள்ளன. ஆனால் அதே நேரத்தில் வரலாறு மற்றும் வரலாற்று தன்னுணர்வைக் கட்டமைக்கவும், மேம்படுத்தவும் நிகழ்காலச் சிந்தனைகளைப் பயன்படுத்திக் கொள்வதில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பதுவும் முக்கியமானதாகிறது. ‘தேசிய வரலாறு’ பற்றிய கருத்துகள் அல்லது இந்திய வரலாற்றின் பண்டைய மற்றும் இடைக்காலங்களை முறையே பூர்வீக/ஹிந்து, வெளிநாடு/முஸ்லீம் என்பது போன்ற கருத்துகளை ஒருங்கிணைப்பது அதனை எடுத்துக்காட்டுவதாகவே உள்ளது.
கடந்த நூற்றாண்டாகத் திறம்பட்டவர்களின் முயற்சிகள் மற்றும் சுய-உணர்வுப்பூர்வமான விவாதங்கள் மூலம் இந்தியாவின் கடந்த கால வரலாற்றுப் புலமை அதிநவீனத்தின் உயர் மட்டத்தை எட்டியுள்ளது. அவ்வாறான சூழலில் வரலாற்றாசிரியர்களின் திறமையைக் குறைத்து மதிப்பிட முயலும் பிற்போக்கான போக்குகளை எதிர்த்து நிற்பது அவசியமாகிறது.
கற்பித்தல் பரிசீலனைகளை மனதில் வைத்துக் கொண்டு முறையியல் ரீதியாக கடுமையானதாக, முதன்மை ஆய்வுகளின் அடிப்படையிலான வரலாற்றுப் புலமையைப் பள்ளிப் பாடப்புத்தகங்கள் பிரதிபலிக்க வேண்டும். ‘சீர்திருத்தப்பட்ட’ புதிய பாடப்புத்தகங்களை நுழைப்பதற்காக தற்போதுள்ள பள்ளி வரலாற்றுப் பாடப்புத்தகங்களை நீக்கும் வகையிலே ‘உண்மை என்பதாகத் தோற்றமளிக்கின்ற’ தகவல்களைப் பயன்படுத்திக் கொள்வது சரியாகாது. தற்போது சொல்லப்பட்டு வருவதைக் காட்டிலும் வரலாறும், வரலாற்றை எழுதுவதும் உண்மையில் மிகத் தீவிரமான செயல்பாடுகளாகும். இதுவே வரலாற்றைக் கட்டமைக்கிறது என்று கட்டளையிட்டுக் கூறுவதன் மூலமாக தேசியப் பெருமையை நிலைநாட்டி விட முடியாது. அதுமட்டுமல்ல… வரலாற்றை வெட்டி-ஒட்டுகின்ற வகையிலான செயல்பாடாக நிச்சயம் குறுக்கி விடவும் முடியாது.
https://frontline.thehindu.com/cover-story/bjp-attempt-to-rewrite-textbooks-a-disservice-to-history/article38189091.ece
நன்றி: ஃப்ரண்ட்லைன்
தமிழில்: தா.சந்திரகுரு
இது என் வீடு என்னை யாராலும் இங்கிருந்து வெளியேற்ற முடியாது: நசிருதீன் ஷா உடன் நேர்காணல் – கரண் தாப்பர் | தமிழில்: தா சந்திரகுரு
நடிகர் நசீருதீன் ஷாவுடன் கரண் தாப்பர் நடத்திய நேர்காணல் தி வயர் யூடியூப் சேனலில் 2021 டிசம்பர் 28 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டது. வகுப்புவாத துருவமுனைப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ள நாட்டில் இப்போது ஒரு முஸ்லீமாக இருப்பதன் பொருள் பற்றி நடிகர் நசீருதீன் ஷா அந்த முப்பத்தைந்து நிமிட உரையாடலில் விரிவாகப் பேசினார். இந்திய முஸ்லீம்களை இனப்படுகொலை செய்வதற்கான அழைப்புகள் எந்தவொரு விளைவுகளுமில்லாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் சூழலில் முஸ்லீம்கள் உணர்ந்துள்ள காயங்களுக்கு சாளரத்தைத் திறந்து வைப்பதாக அந்த உரையாடல் இருந்தது. அவர்களுடைய உரையாடலின் முழுமையான எழுத்தாக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முழு நேர்காணலை இங்கே காணலாம்.
கரண் தாப்பர்: ஹரித்துவாரில் பத்து நாட்களுக்கு முன்பு நடந்த தர்ம சன்சத் கூட்டத்தில் முஸ்லீம்களை இனப்படுகொலை செய்வது, இனச் சுத்திகரிப்பு செய்வது என்று ரத்தவெறி கொண்ட குரல் எழுப்பப்பட்டது. ரோஹிங்கியாக்களுக்கு மியான்மரில் என்ன நடந்ததோ அதை இங்கே முஸ்லீலிம்களுக்கு நாம் செய்ய வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் ஹிந்துக்களுக்கு கூறப்பட்டது. இந்திய குடிமக்கள் தங்களுடைய சக குடிமக்கள் மீதே இதுபோன்று திரும்புவார்கள் என்று என் வாழ்நாளில் ஒருபோதும் நான் நினைத்ததில்லை. ஆனால் அதுதான் இப்போது நடந்தேறியிருக்கிறது. எனவே நான் இன்றைக்கு உங்களிடம் ‘நரேந்திர மோடியின் இந்தியாவில் ஒரு முஸ்லீமாக இருப்பதை எவ்வாறு உணர்கிறீர்கள்?’ என்று ஓர் எளிய, வெளிப்படையான கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்…
இன்றைக்கு எனது விருந்தினர் இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர். அவரது வாழ்க்கையில் ஒரேயொரு அடையாளம் மட்டுமே அவரிடம் இருந்து வந்திருக்கிறது. மதம் என்பது முக்கியமில்லை என்று தன்னை இந்தியர் என்று அவர் நினைத்தது சரிதான். இருப்பினும் இன்றைக்கு அவரது சொந்த நாட்டு மக்களில் பலரும் அவர் மீது மத அடையாளத்தைத் திணிக்கிறார்கள். இப்போது அனைவராலும் நன்கு அறியப்பட்ட, மிகவும் மதிக்கப்படுகின்ற நடிகர் நசிருதீன் ஷா என்னுடன் இணைகிறார்.
நசீருதீன் ஷா! ஹரித்துவாரில் பத்து நாட்களுக்கு முன்பு நடந்த அந்த தர்ம சன்சத் கூட்டத்தில், இன அழிப்புக்காக முஸ்லீம்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று ரத்தவெறி கொண்ட அழைப்பு விடுக்கப்பட்டது, மேலும் மியான்மரில் ரோஹிங்கியாக்களுக்கு செய்யப்பட்டதை இங்கே ஹிந்துக்களுக்குச் செய்ய வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். உங்கள் சொந்த நாட்டு மக்கள், சக குடிமக்கள், உங்கள் சமூகத்தைப் படுகொலை செய்யுமாறு அழைப்பு விடுத்தது குறித்து உங்களிடம் என்ன மாதிரியான உணர்வு இருந்தது?
நசிருதீன் ஷா: என்னிடம் ஏற்பட்ட முதல் எதிர்வினை கோபம். இங்கே நடந்து கொண்டிருப்பது முஸ்லீம்களிடம் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்துகிற கூட்டு முயற்சியாகும். அவுரங்கசீப் மற்றும் முகலாய ஆக்கிரமிப்பாளர்களை துணைக்கழைத்து தலைமையில் இருப்பவர்களிலிருந்து தொடங்கி பலரும் பேசுவதன் மூலம் பிரிவினைவாதமானது ஆளும் கட்சியின் கொள்கையாக மாறி விட்டதாகவே தோன்றுகிறது.
அவர்களுக்கு (வலதுசாரி ஆர்வலர்கள்) என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்து கொள்வதற்கு நான் ஆர்வமாக இருந்தேன். ஆனால் அவர்களுக்கு எதுவும் நடக்கவில்லை என்பதில் எனக்கு எந்தவொரு ஆச்சரியமுமில்லை. ஏனெனில் இங்கே விவசாயிகளை மோதிக் கொன்ற அமைச்சருக்கு எதுவும் நடக்கவில்லை. அவர் பதவி நீக்கம் செய்யப்படவில்லை, தண்டிக்கப்படவில்லை, அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, அமைச்சர் பதவியை விட்டு விலகுமாறு அவர் கேட்டுக் கொள்ளப்படவில்லை. அந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் நான் அதிக விவரங்களுக்குள் செல்லவில்லை. ஆனாலும் இப்போது இங்கே எங்களை (சிறுபான்மை சமூகத்தினர்) பயமுறுத்துவதற்கான முயற்சி நிச்சயமாக இருக்கிறது. ஆனாலும் ‘நாம் பயந்து விடக் கூடாது’ என்பதை ஒரு பலகையில் எழுதி நான் எப்போதும் கைகளில் ஏந்திக் கொண்டிருக்கிறேன்.
வேடிக்கையாகச் சொல்வதென்றால் பயப்படுவது என்பது – ‘நீங்கள் இந்தியாவில் இருக்கப் பயப்படுகிறீர்கள்’ என்று எப்போதும் என் மீது சுமத்தப்பட்டு வருகின்ற குற்றச்சாட்டு. அது ஏன் சொல்லப்பட்டதென்றால், சில மாதங்களுக்கு முன்பு எனது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி நான் கவலைப்படுவதைப் பற்றி பேசியிருந்தேன். ‘என் வாழ்க்கை முடிந்துவிட்டது. என் வாழ்க்கையில் இன்னும் எனக்கு பத்து ஆண்டுகளே எஞ்சியிருக்கின்றன. அதனால் நான் அதைக் காண்பதற்கு உயிருடன் இருக்க மாட்டேன். ஆனால் என்னுடைய குழந்தைகளின் நிலை என்னவாகும் என்பது குறித்து எனக்கு கவலையாக இருக்கிறது. காவல்துறை ஆய்வாளரின் மரணத்தைக் காட்டிலும் ‘பசுவின் மரணம்’ இப்போது முக்கியத்துவம் பெறுவது மிகவும் சோகமானது’ என்று நான் அப்போது கூறியிருந்தேன்.
சில காரணங்களால் அந்த அறிக்கை என்னை கேலி, வெறுப்பு மற்றும் தவறான அச்சுறுத்தல்களின் தொடர் இலக்காக ஆக்கியது. அதனால் நான் முற்றிலும் குழம்பிப் போனேன். ஏனென்றால் நான் ஆத்திரமூட்டுகின்ற வகையில் எதையும் பேசியிருக்கவில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்பு நான் நடித்திருந்த ஒரு திரைப்படம், எ வெட்னஸ்டே அந்த நேரத்தில் இழுத்துக் கொண்டு வரப்பட்டது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் நடித்த ‘சர்ஃபரோஷ்’ படமும் அப்போது இழுக்கப்பட்டது.
சர்ஃபரோஷ் திரைப்படத்தில் உளவுத்துறை ஏஜெண்டாக வரும் நான் பாகிஸ்தான் கஜல் பாடகராக நடித்திருந்தேன். எ வெட்னெஸ்டே திரைப்படத்தில் கொல்லவில்லையெனில் அவர்கள் தப்பித்து விடுவார்கள் என்று அஞ்சி நான்கு பயங்கரவாதிகளை தனியொரு ஆளாகக் கொல்ல முடிவு செய்கின்ற பாத்திரத்தில் நான் நடித்திருந்தேன். என்னைப் பற்றி பதிவு செய்யப்பட்டிருந்த வீடியோவில் லாகூருக்கு ஒருமுறை சென்றிருந்த போது நான் பேசியதுடன் அந்த இரண்டு படங்களும் அருகருகே இணைத்துக் காட்டப்பட்டன. லாகூருக்கு சென்றிருந்த சமயத்தில் என்னிடம் லாகூருக்கு வந்திருப்பதை நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. ‘வீட்டில் இருப்பதைப் போலவே உணர்கிறேன்’ என்று சொன்னேன். அது அவர்களைக் கோபமடையச் செய்திருக்கும் என்று தோன்றுகிறது. ‘வீட்டில் இருப்பது போல உணர்ந்தால் நீங்கள் அங்கேயே சென்று விடுங்கள்’ என்று கூற ஆரம்பித்தார்கள்.
அவ்வாறு ஏன் அவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று எனக்குப் புரியவே இல்லை. ஒருவரின் வீட்டிற்கு செல்லும் நீங்கள், அங்கே உங்களுக்கு மிகவும் வசதியாக இருந்தால், அவர்கள் உங்களை நன்றாக நடத்தினால் ‘என் வீட்டைப் போலவே இருக்கிறது’ என்று சொல்ல மாட்டீர்களா? அவர்களுக்கு அந்தப் பேச்சு எ வெட்னெஸ்டே திரைப்படத்தில் கரப்பான் பூச்சிகள் போன்றவற்றிடமிருந்து வீட்டைச் சுத்தம் செய்வது பற்றி நான் பேசிய பேச்சுக்கு முரண்பட்டதாக இருந்திருக்கிறது. ‘இவர் மிகப் பெரிய துரோகி. ஒருபுறம் அவரது திரைப்பட பிம்பம் இவ்வாறு சொல்கிறது – ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர் சொல்வது இதுதான்’ என்று அவர்களால் காட்டப்பட்டது.
நான் இங்கே நன்கு வரவேற்கப்பட்டிருக்கிறேன், மிகவும் வசதியாக உணர்கிறேன் என்றுதான் நான் நிஜ வாழ்க்கையில் சொல்லியிருந்தேன். நமது பிரதமரும், பாகிஸ்தான் பிரதமரும் பள்ளி மாணவிகள் போல கைகளைப் பிடித்துக் கொண்டு லாகூர் விமான நிலையத்தின் தரைப்பாலத்தில் அதே சமயத்தில் நடந்து கொண்டிருந்தனர்.
கரண் தாப்பர்: முற்றிலும் உண்மை. நான் இப்போது தெரிந்தே தர்ம சன்சத் கூட்டத்தில் இருந்த இரண்டு நபர்கள் பேசியவற்றை மேற்கோள் காட்டப் போகிறேன், ஏனென்றால் அங்கு பேசப்பட்ட சில விஷயங்கள் எந்த அளவிற்கு அதிர்ச்சியூட்டுபவையாக, ரத்தவெறி கொண்டவையாக, பயங்கரமானவையாக இருந்தன என்பதை பார்வையாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
‘மியான்மரைப் போல இங்குள்ள காவல்துறையினர், அரசியல்வாதிகள், ராணுவம் மற்றும் ஒவ்வொரு ஹிந்துவும் ஆயுதம் ஏந்தி இந்த சுத்திகரிப்பு இயக்கத்தை நடத்த வேண்டும். அதைத் தவிர வேறு தீர்வு எதுவுமில்லை’ என்று சுவாமி பிரபோதானந்தா அங்கே பேசினார். பின்னர் பூஜா ஷகுன் பாண்டே ‘அவர்களில் இருபது லட்சம் பேரைக் கொல்வதற்கு நம்மில் நூறு பேர் தயாராக இருந்தால் போதும், இந்தியாவை ஹிந்து நாடாக மாற்றுவதில் நாம் வெற்றி பெற்று விடுவோம்’ என்று பேசினார். உங்கள் வாழ்நாளில் நீங்கள் எப்போதாவது முஸ்லீம்களைப் பற்றி அவர்களுடைய சொந்த ஹிந்து சகோதர சகோதரிகளே இவ்வாறாகப் பேசுவார்கள் என்று நினைத்திருப்பீர்களா? சக குடிமக்களே இப்போது உங்கள் மீது தாக்குதலை நடத்தப் போவதாகச் சொல்கிறார்கள்.
நசிருதீன் ஷா: இது போன்ற விஷயங்களைக் கேட்கும் போது மன உளைச்சலே ஏற்படுகிறது. மேலும் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பது அவர்களுக்குத் தெரியுமா என்பது உண்மையில் எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. அவர்கள் இப்போது அழைத்துக் கொண்டிருப்பது முழு அளவிலான உள்நாட்டுப் போருக்கே ஆகும்… நம்மிடையே இருந்து வருகின்ற இருபது கோடிப் பேர் இதை எங்கள் தாய்நாடு என்றும் நாங்கள் இந்த இடத்திற்குச் சொந்தக்காரர்கள் என்றும் கூறி திரும்ப எதிர்த்துப் போராடும் போது அவர்கள் அனைவரையும் அவ்வளவு எளிதில் அழித்து விட முடியாது.
நாங்கள் இங்கேதான் பிறந்தோம், எங்கள் தலைமுறைகள் இங்கேயே வாழ்ந்து மடிந்திருக்கின்றன. அத்தகைய இயக்கம் ஏதேனும் தொடங்குமானால், அது மிகப் பெரிய எதிர்ப்பையும், கோபத்தையும் நிச்சயம் சந்திக்கும் என்றே நான் உறுதியாக நம்புகிறேன். இப்போது அதுபோன்று பேசுபவர்களுக்கு எதிராக எதுவும் செய்யப்படுவதிவில்லை. ஆனால் அதேசமயத்தில் ஒரு கவிஞர், நகைச்சுவை நடிகர் தான் சொல்லப் போகின்ற நகைச்சுவைக்காக கைது செய்யப்படுகிறார். ஆனால் யதி நரசிங்கானந்த் இதுபோன்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்… வெறுக்கத்தக்க வகையில் பேசுகின்ற இந்த யதி நரசிங்கானந்த் சொல்வது… முற்றிலும் அருவருப்பானவையாக, அபத்தமானவையாகவே இருக்கின்றன. அச்சுறுத்தல்கள் இல்லையென்றால் அந்த பேச்சுகள் உண்மையில் வேடிக்கையானவையாகவே இருக்கும்.
கரண் தாப்பர்: தாங்கள் ஓர் உள்நாட்டுப் போருக்குச் சாத்தியமான சூழ்நிலையை உருவாக்கி வருகிறோம் என்பதை அவர்கள் உணரவில்லை என்று நீங்கள் மிக முக்கியமான ஒன்றை சொன்னீர்கள். இருபது கோடி முஸ்லீம்களைத் தாக்கி கொல்லப் போவதாக தர்ம சன்சத் மிரட்டுவதாலேயே நாட்டில் உள்ள முஸ்லீம்கள் அனைவரும் கீழே விழுந்து அவர்களிடம் சரணடைந்து விடப் போவதில்லை. அவ்வாறு பேசுபவர்கள் நமது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கே அச்சுறுத்தலை விடுத்துள்ளனர்.
நசிருதீன் ஷா: ஆம், நீங்கள் சொன்னதைப் போல் அவர்கள் தங்களால் இயன்றவரையிலும் இங்கே இருக்கின்ற சக குடிமக்களை மிரட்டி வருகிறார்கள். முகலாயர்கள் செய்த ‘அட்டூழியங்கள்’ என்று சொல்லப்படுபவை மீது தொடர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருப்பது உண்மையில் ஆச்சரியமளிப்பதாகவே இருக்கிறது. அவர்கள் முகலாயர்கள் இந்த நாட்டிற்குப் பங்காற்றியவர்கள் என்பதை மறந்து விடுகிறார்கள்; நீடித்து நிற்கின்ற நினைவுச்சின்னங்கள், வரலாறு, கலாச்சாரம், நடனம் மற்றும் இசை மரபுகள், ஓவியம், கவிதை மற்றும் இலக்கியம் ஆகியவற்றை நமக்கு விட்டுச் சென்றவர்கள் முகலாயர்கள் என்பதை மறந்து விடுகிறர்கள். தைமூர், கஜினி முகமது அல்லது நாதர் ஷா பற்றி யாருமே பேசுவதில்லை. ஏனென்றால் அந்த வரலாறு குறித்த அறிவு கொண்டவர்களாக அவர்கள் இல்லை. அவர்களைப் பொறுத்தவரை முகலாயர்கள் இங்கே வந்த கொள்ளையர்கள், கொள்ளையடித்து விட்டுச் சென்றவர்கள் எனப்து மட்டுமே… இந்த இடத்தை தங்கள் தாயகமாக்கிக் கொள்வதற்காக முகலாயர்கள் இங்கே வந்தனர். விரும்பினால் நீங்கள் அவர்களை அகதிகள் என்று வேண்டுமானால் அழைத்துக் கொள்ளலாம், மிகவும் வசதியுடன் இருந்த அகதிகள். ஆனால் முகலாயர்கள் மீது இப்போது தேவையில்லாமல் குற்றம் சாட்டப்படுகிறது. ‘அட்டூழியங்கள்’ என்று அவர்களால் விவரிக்கப்படுகின்ற செயல்களுக்கு இந்தியாவில் உள்ள ஒவ்வொரு முஸ்லீமும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டுமென்று சொல்வது உண்மையில் கேலிக்குரியதாகவே இருக்கிறது.
கரண் தாப்பர்: நசீருதீன் ஷா, உங்களுக்குத் தெரிந்திருக்கும். மக்களை கலங்கச் செய்திருப்பது தரம் சன்சத்தில் பேசிய பேச்சுகள் மட்டும் அல்ல… அதற்கான எதிர்வினையும்தான். காவல்துறையினர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமலே நாட்கள் பல கடந்து சென்று விட்டன. இன்று வரையிலும் யாரும் கைது செய்யப்படவில்லை. இறுதியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டபோது, அது வெறுமனே ‘மத விரோதத்தைத் தூண்டுகின்ற’ என்ற மிகக் குறைவான குற்றத்திற்கானதாக மட்டுமே இருந்தது.
உத்தரகாண்ட் காவல்துறை தலைமை இயக்குனர் மிக முக்கியமான ஊபா சட்டம் (சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்) பயன்படுத்தப்படவில்லை என்றும் அது பயன்படுத்தப்படாமலேகூட போகலாம் என்றும் தி ஹிந்து பத்திரிகையிடம் உறுதி செய்துள்ளார். கடந்த ஆண்டு கோவிட்-19 பரவியதாக தப்லிகி ஜமாஅத் மீது குற்றம் சாட்டப்பட்ட வேளையில் சிலர் மீது கொலைக் குற்றமே சுமத்தப்பட்டது. பாகிஸ்தானின் கிரிக்கெட் வெற்றியைக் கொண்டாடிய காஷ்மீர் மாணவர்கள் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. காவல்துறை மிக நியாயமாக, நேர்மையாக இருக்கிறது என்று நீங்கள், முஸ்லீம்கள் நம்புகிறீர்களா? இந்த கொடூரமான குற்றவாளிகளை சட்டத்தின் முன்பாக கொண்டு வந்து காவல்துறை நிறுத்தும் என்று முஸ்லீம்கள் நம்புகிறார்களா?
நசிருதீன் ஷா: அது காவல்துறைக்கு யார் உத்தரவு பிறப்பிக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருக்கிறது. நீதித்துறையின் இந்த வகையான பாகுபாடு மிக மேலே இருந்து தொடங்குகிறது. எல்லா வழிகளிலும் அது அங்கிருந்தே பரவுகிறது. உயர்மட்டத்தில் இருப்பவர்களே முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர். எனவே உத்தரவின் பேரிலேயே காவல்துறை செயல்படலாம். மக்களை அடிப்பதில் காவல்துறையினரிடம் மகிழ்ச்சி அல்லது ஏதாவது ஒரு உணர்வு இருக்கிறதா என்பது இங்கே முக்கியமாக இருக்கிறது. பொதுமுடக்கத்தின் போது நாம் பார்த்த காட்சிகளிலிருந்து காவல்துறையினர் அவ்வாறு செய்து வருவதை நம்மால் வெளிப்படையாகக் காண முடிந்திருக்கிறது. காவல்துறையில் முஸ்லீம்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக அல்லது கொஞ்சம் அதிகமாகவே இருந்தாலும், கூட்டத்தின் மீது லத்தி கொண்டு அடிக்க உத்தரவைப் பெற்றுக் கொண்ட முஸ்லீம் காவலர் ஒருவர் மிகவும் மகிழ்ச்சியுடன் அதற்கு கீழ்படிவார் என்றால் என்ன செய்வது? இந்த விஷயத்தில் அவருக்கான தேர்வு என்று எதுவும் இருக்கவில்லை.
கரண் தாப்பர்: காவல்துறை எவ்வாறு நடந்து கொள்கிறது, எப்படி எதிர்வினையாற்றுகிறது, நேர்மையாக அல்லது நியாயமாக அவர்கள் நடந்து கொள்வார்களா, சட்டத்தின் முன்பு குற்றவாளிகளைக் கொண்டு வந்து நிறுத்துவார்களா என்பது மேலிட உத்தரவுகளைப் பொறுத்தது என்று மிக முக்கியமான விஷயத்தைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். அரசியல் எதிர்வினை எவ்வாறு இருக்கிறது என்று பார்ப்போம். கண்டிக்கின்ற வகையில் ஒரு வார்த்தையைக்கூட வெளியிடாத உத்தரகாண்ட் அரசு, ஒன்றிய அரசு, பிரதமர் ஆகியோரின் மௌனம் காதைச் செவிடாக்குகிறது. அது எதுவும் நடக்கவில்லை அல்லது நடப்பவற்றை பொருட்படுத்தவில்லை என்று அவர் கூறுவதைப் போலவே உள்ளது.
நசிருதீன் ஷா: அவர் கவலைப்படவில்லை. உண்மையில் அவர் கவலைப்படுவதே இல்லை. தான் வருந்தத் தேவையில்லை என்று கருதுகின்ற விஷயத்திற்காக தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்துபவராக அவர் இருப்பதால் அவரை ஒரு பாசாங்குக்காரர் என்றுகூட உங்களால் குற்றம் சாட்ட முடியாது. அவர் ஒருபோதும் அகமதாபாத் படுகொலைகளுக்காக மன்னிப்பு கேட்டதில்லை, அதுமட்டுமல்ல… அவர் வேறு எதற்குமே மன்னிப்பு கேட்டதாக இருக்கவில்லை. விவசாயிகள் விஷயத்தில் அரை மனதுடன் அவர் கேட்டிருந்த மன்னிப்பும்கூட வஞ்சகம் நிறைந்த மன்னிப்பாகவே இருந்தது.
மோசமாகப் பேசியவர்களில் யாரையும் தண்டிக்கும் வகையில் ஒரு வார்த்தைகூட அவரிடமிருந்து வரவில்லை. உண்மையில் அந்த நபர்களை ட்விட்டரில் பின்தொடர்பவராகவே அவர் இருக்கிறார். அதை அவர் ஏன் செய்கிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். அதில் ஒருவித மகிழ்ச்சியை அவர் பெறுகிறார்.
கரண் தாப்பர்: இந்த நாட்டின் தலைவராக இருக்கின்ற பிரதமர் மௌனம் சாதிப்பது தார்மீக ரீதியாக மட்டுமே சிக்கலானதாக இருக்கவில்லை. அவருடைய மறைமுகமான ஆதரவு இனப்படுகொலைக்கு அழைப்பு விடுப்பவர்களுக்கு இருக்கிறது என்பதைக் காட்டுகின்ற தெளிவான அறிகுறியாகவே அவரது மௌனம் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? அவர்களை ஒரு விதத்தில் அவர் ஊக்குவித்தே வருகிறார். அவர்களை நீங்கள் சொல்வதைப் போல அவர் தண்டிக்கவில்லை, அவர்களைக் கண்டிக்கவில்லை. உங்கள் சமூகத்தைப் படுகொலை செய்ய நினைக்கும் அவர்களுக்கு மேல்மட்டத்தில் இருந்து மௌன ஆதரவு இருப்பது உங்களுக்கு கவலை அளிப்பதாக இருக்கிறதா?
நசிருதீன் ஷா: அதுவொன்றும் முழுக்க ஆச்சரியமளிப்பதாக இருக்கவில்லை என்றாலும். கவலைக்குரியதாகவே இருக்கிறது. ஆனாலும் அது ஏறக்குறைய நாம் எதிர்பார்த்ததுதான். இப்படி நடந்து விடுமோ என்று நான் பயந்து கொண்டிருந்தேன். ஆனாலும் அனைவரின் மோசமான எதிர்பார்ப்புகளையும் தாண்டி மிகவும் மோசமாக விஷயங்களாக அவை எவ்வாறு மாறின என்பதை நான் சொல்ல வேண்டும். இவ்வாறு ஆத்திரமூட்டப்பட்டாலும் மௌனம் காக்கின்ற தலைவர், எல்லோரிடமும் அக்கறை காட்டுபவராக தன்னைக் கூறிக் கொள்பவர், மக்களுடைய வளர்ச்சிக்காகப் பாடுபடுவதாகச் சொல்லிக் கொள்பவர், எந்தவொரு மதத்துக்கும் எதிராக தனக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்று சொல்லிக் கொள்பவர் நம்மிடையே இருந்து வருகிறார் என்பதுதான் இப்போதுள்ள பிரச்சனை. அவர் கணக்கிலடங்கா கேமராக்களின் துணையுடன் தனது சொந்த மத நம்பிக்கைகளை அணிவகுத்துச் சென்று காட்டுபவராக இருக்கிறார். அதே நேரத்தில் அவர் முஸ்லீம்களைப் பற்றி குறிப்பிட்டவர்களின் ஆதரவைப் பெறும் வகையில் பேசுவதற்கான நேரத்தையும் கண்டுபிடித்து வைத்துக் கொள்கிறார். அது நிச்சயமாக கவலைக்குரியதாகவே இருக்கிறது. ஆனாலும் இதுகுறித்து என்ன செய்ய முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.
கரண் தாப்பர்: முஸ்லீம்களுக்கு எதிராக நடந்துள்ள சமீபத்திய சீற்றமாக ஹரித்துவாரில் நடந்திருப்பது வேதனையளிப்பதாக உள்ளது. 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்து கடந்த ஏழு ஆண்டுகளாக முஸ்லீம்கள் மிது லவ் ஜிகாத் என்று பலமுறை குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றது. பசுக் கொலைக்கு அவர்கள் ஆளாகியுள்ளனர். காவலர்கள் மற்றும் கும்பல்களால் தாக்கப்பட்டுள்ளனர். யோகி ஆதித்யநாத் போன்ற பாஜக மூத்த தலைவர்கள் பகிரங்கமாக அவர்களை மீண்டும் மீண்டும் பரிகாசம் செய்து வருகிறார்கள். தங்கள் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்கள் என்ற நிலைக்கு முஸ்லீம்கள் தள்ளப்பட்டிருக்கிறார்களா?
நசிருதீன் ஷா: இரண்டாம் தரக் குடிமக்களாகத் தாழ்த்துவதற்கான செயல்பாடுகளிலேயே அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எல்லாத் துறைகளிலும் அது நடந்து வருகிறது. ‘திரைப்படங்கள் சமூகத்தைப் பிரதிபலிக்கின்றன அல்லது சமூகம் திரைப்படங்களைப் பிரதிபலிக்கிறது’ என்று கூறியது உண்மைதான். திரைப்பட உலகில் நடப்பது நிச்சயமாக நாட்டில் பிரதிபலிக்கிறது.
மலேர்கோட்லா மாவட்டத்தில் உள்ள ஜித்வால் கலான் கிராமத்தில் மசூதி கட்டுவதற்காக முஸ்லீம் குடும்பங்களுக்கு தனது பூர்வீக நிலத்தை வழங்கிய விவசாயி ஜக்மெல் சிங் (நடுவே வெள்ளைத் தலைப்பாகை அணிந்துள்ளவர்)
அது முஸ்லீம்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கிப் பரப்புகின்ற முயற்சியாகவே இருக்கிறது. முஸ்லீம்கள் அதற்கு ஒருபோதும் அடிபணிந்து விடக்கூடாது என்பதையே நான் எப்போதும் கடைப்பிடித்து வருகிறேன். நெருக்கடி என்று வந்தால் அதை எதிர்த்து நின்று போராடுவோம் என்பதால் ஒரு விஷயம் நம்மைப் பயமுறுத்துகிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது. நம்மிடம் ‘ஹிந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்றாக வாழ முடியாது’, ‘இருவரின் கலாச்சாரங்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை’ என்று வெளிப்படையாகக் கூறுகின்ற மூத்த தலைவர் அரசியலமைப்பிற்கு முரணாகவே நடந்து கொள்கிறார் இல்லையா? அவர் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவே நடந்து கொள்கிறார் இல்லையா? அவர் அதைப் பற்றி எதுவும் நினைத்தவராகத் தெரியவில்லை. அவர் தொடர்ந்து ‘தகனம் செய்யும் மயானம் – கல்லறை’ (சம்ஸ்தான் – கப்ரிஸ்தான்), ‘மசூதி – கோவில்’ போன்ற வேறுபாடுகள் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார். முக்கிய பெரும்பான்மை என்று தாங்கள் உணர்கின்ற ஹிந்துப் பெரும்பான்மையினரை ஒருங்கிணைப்பதற்காக அவர்களைப் பிரித்தாண்டு ஆட்சியதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் மிகச் சிறந்த வழியை பாஜக கண்டுபிடித்து வைத்திருக்கிறது. அவர்கள் யாருக்கும் பிடி கொடுப்பதில்லை. முஸ்லீம்கள் ஓரங்கட்டப்பட்டு தேவையற்றவர்களாக ஆக்கப்படுகிறார்கள். அவர்களைத் தேவையற்றவர்கள் என்று நிரூபிக்கும் வகையிலான செயல்முறைகள் படிப்படியாகத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.
கரண் தாப்பர்: நீங்கள் மிக முக்கியமான ஒன்றைச் சொன்னீர்கள். ஆனால் அதை மெதுவாகச் சொன்னீர்கள். அவ்வாறு நீங்கள் அதைச் சொன்னதாலேயே அது மிகவும் சக்தி வாய்ந்ததாகிறது. நெருக்கடி வந்தால் எதிர்த்துப் போராடுவோம் என்று சொன்னீர்கள். அதுதான் அவர் உங்களுக்கு விட்டுச் செல்கின்ற கடைசி வழி இல்லையா? உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், உங்கள் நிலையைத் தற்காத்துக் கொள்ளவும் நீங்கள் ரகசியமாகப் போராட வேண்டும்.
நசிருதீன் ஷா: ஆம். அப்படி ஒரு நிலைமை வந்தால் நாங்கள் அவ்வாறே செய்வோம். எங்கள் வீடுகளையும், தாயகத்தையும், குடும்பங்களையும், குழந்தைகளையும் நாங்கள் பாதுகாத்து வந்திருக்கிறோம். எங்களுடைய நம்பிக்கைகளைப் பற்றி நான் பேசவில்லை; நம்பிக்கைகள் மிக எளிதாக அச்சுறுத்தலுக்குள்ளாகின்றன. அதாவது அவ்வப்போது ‘இஸ்லாம் ஆபத்தில் உள்ளது’ என்று கூறபப்டுவதை நான் கேட்டு வந்திருக்கிறேன். இப்போது ஹிந்து மதம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக நாம் கேள்விப்பட்டுக் கொண்டிருப்பதை நீங்கள் எவ்வளவு அபத்தமானவராக இருக்க வேண்டும் தெரியுமா? எங்களை விட பத்துக்கு ஒன்று என்ற அளவிலே அதிக எண்ணிக்கையில் இருந்து கொண்டு ‘என்றாவது ஒரு நாள் ஹிந்துக்களைக் காட்டிலும் முஸ்லீம்கள் அதிகமாக இருக்கப் போகிறார்கள்’ என்று இன்னும் பிரச்சாரம் செய்து வரப்படுகிறது. ஹிந்துக்களின் எண்ணிக்கையை என்றாவது ஒரு நாள் முஸ்லீம்கள் மிஞ்சுவதற்கு எந்த விகிதத்தில் நாங்கள் சந்ததியை உருவாக்க வேண்டும் தெரியுமா? நாங்கள் ஏன் அதை விரும்ப வேண்டும்? இருக்கின்ற இடத்தில் நாங்கள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம்; எங்களால் முடிந்ததை நாட்டிற்காகச் செய்திருக்கிறோம். நிம்மதியுடன் வாழத் தகுதியானவர்கள் என்றே எங்களை நாங்கள் முழுமையாக உணர்கிறோம்.
கரண் தாப்பர்: இன்னும் ஒருபடி மேலே செல்ல விரும்புகிறேன்… இன்றைக்கு அந்தக் கும்பல் குர்கானில் முஸ்லீம்களை தொழுகை நடத்த விடுவதில்லை. உத்தரப்பிரதேசத்து கிராமங்கள், சிறு நகரங்களில் காய்கறிகள் மற்றும் வளையல்களை முஸ்லீம்கள் விற்பதை அந்தக் கும்பல் அனுமதிப்பதில்லை. குஜராத் நகரங்களில் முஸ்லீம்கள் அசைவ உணவுக் கடைகளை நடத்துவதற்கு அந்தக் கும்பல் அனுமதிக்காது. குஜராத்தில் உள்ள ‘தொந்தரவுக்குள்ளான பகுதிகள் சட்டம்’ ஹிந்துக்களுக்கானது என்று கருதப்படும் பகுதிகளில் முஸ்லீம்கள் சொத்துக்களை வாங்குவதை அனுமதிக்காது. நீங்கள் வாழ்ந்து வருகின்ற நாடு மிகக் கூர்மையாக துருவப்படுத்தப்படுவதை, ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான பிளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நீங்கள் காண்கிறீர்களா?
நசிருதீன் ஷா: அது அதிகரிப்பதற்கு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அதற்கு ஊக்கமளிக்கப்படுகிறது. வெவ்வேறு விஷயங்களைப் போதிக்கின்ற இரண்டு வெவ்வேறு மதத்தினரிடையே உள்ள வெறுப்பு இயல்பானது என்றால், சீக்கியர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வெறுப்பும் குரோதமும் அதிகமாக இருக்க வேண்டும் அல்லவா? சீக்கியர்களும், முஸ்லீம்களும் தேசப் பிரிவினையின் போது எதிரிகளாக இருந்தவர்கள், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டவர்கள், இருதரப்பிலும் சிந்திய ரத்தத்தைக் கண்டவர்கள். ஆனால் இன்றைக்கு தொழுகை நடத்த விரும்பும் முஸ்லீம்களுக்காக சீக்கியர்கள் தங்களுடைய குருத்வாராக்களை திறந்து வைத்திருக்கும் நேரத்தில் ஹிந்து அடிப்படைவாதிகள் கூட்டம் வந்து முஸ்லீம்களின் தொழுகையைச் சீர்குலைக்க முயல்கிறது. சீக்கியர்கள் மட்டுமே இப்படியானதொரு நற்காரியத்தைச் செய்யும் அளவிற்கு உன்னதமானவர்களாக இருக்கிறார்கள். இந்த வகையான நற்செயலை முஸ்லீம்கள் பிரதிபலிப்பார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது.
கரண் தாப்பர்: இந்திய முஸ்லீம்களைப் போன்றவராக நீங்கள் இல்லை என்பது எனக்குத் தெரியும் என்றாலும் நான் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். அது இரண்டு ஆண்டுகளாக உங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் கேள்வி. நரேந்திர மோடியின் இந்தியாவில் ஒரு முஸ்லீமாக இருப்பதை நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்?
நசிருதீன் ஷா: மிகவும் கோபமாக, வெறுப்பாக உணர்கிறேன். அன்புத் தலைவரை கேள்வி எதுவும் கேட்காமல் வணங்கி வருபவர்கள் அவரைப் பற்றி நகைச்சுவையாகப் பேசுவதைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதால் அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறேன். நான் பாதுகாப்பற்றவனாக உணரவில்லை. ஏனென்றால் இது எனது வீடு என்று எனக்கு நன்கு தெரியும். என்னை யாரும் இங்கிருந்து வெளியேற்ற முடியாது. எனக்கான இடத்தைக் கொண்டிருப்பதற்குத் தேவையான வகையில் எனது பணிகளை நான் செய்திருக்கிறேன். ஆனாலும் ஆளுங்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களிடமுள்ள வெளிப்படையான உணர்வுரீதியான வெறுப்பே என்னை அதிகம் கோபப்படுத்துகிறது. அது என்னை அதிகம் தொந்தரவு செய்கிறது. எதிர்காலத்தில் அது அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கப் போகிறது என்பதை அறிந்தே இருக்கிறேன்.
கரண் தாப்பர்: இதை இப்படிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்: நீங்கள் பாரபங்கியில் பிறந்தவர். அஜ்மீர் மற்றும் நைனிடாலில் படித்தவர். இந்தியாவின் தலை சிறந்த நடிகர்களில் ஒருவராக இருக்கிறீர்கள். உங்கள் சகோதரர் ராணுவத்தின் துணைத்தலைவர் பதவி வரை உயர்ந்தவர். ‘பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்’ என்று திரும்பத் திரும்பச் சொல்லப்படுகின்ற போது உங்கள் இருவருக்குள்ளும் என்ன மாதிரியான உணர்வு எழுகிறது?
நசிருதீன் ஷா: அதைக் கேட்டு நாங்கள் சிரித்துக் கொள்வோம். ‘பாகிஸ்தானுக்குப் போ’ என்று சொல்பவர்களைப் பார்த்து ‘கைலாசத்திற்கு போ’ என்று சொல்ல நினைக்கிறேன். உண்மையில் அது மிகவும் அபத்தமானது… ‘உருது பாகிஸ்தானிய மொழி’ அல்லது அந்த வார்த்தை… தீபாவளி விளம்பரத்தில் வந்த அந்த வார்த்தை என்ன… ‘ரிவாஸ்’ – ‘ரோஷ்னி கா ரிவாஸ்’ அல்லது அதுபோன்று ஏதாவது… அவையெல்லாம் எவ்வளவு அபத்தமானவை? ஹிந்தி, உருது, மராத்தி, குஜராத்தி மொழிகளில் எத்தனை பார்சி வார்த்தைகள் உள்ளன தெரியுமா? அரேபிய மொழி வார்த்தைகள் எத்தனை உள்ளன என்று தெரியுமா? முஸ்லீம்களின் மொழி உருது என்று தவறாகக் கருதப்படுகிறது. அது முஸ்லீம்களின் மொழி அல்ல, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசத்தின் மொழி என்று பலமுறை ஜாவேத் அக்தர் கூறியிருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக பாகிஸ்தான் உருதை முஸ்லீம் மொழி என்பதாக முத்திரை குத்தி விட்டது.
கரண் தாப்பர்: நரேந்திர மோடியின் இந்தியாவில் வாழ்ந்து வருகின்ற முஸ்லீம் என்ற முறையில் கோபம், வெறுப்பை நீங்கள் உணர்கிறீர்களா?
நசிருதீன் ஷா: சரிதான்.
கரண் தாப்பர்: அவ்வாறு உணர்வது மகிழ்ச்சி தருகின்ற வழியாக யாருக்கும் இருக்கப் போவதில்லை.
நசிருதீன் ஷா: இல்லை. அது அப்படி இருக்காது. நமது பிரதமர் நகைப்புக்குரிய அறிவியல் அறிக்கைகளை வெளியிடுவதைப் பார்க்கும் போது, நிறைய நேரம் உண்மையை அவர் மூடிமறைப்பதைப் பார்க்கும் போது, உண்மைகளை அவர் சிதைப்பதைப் பார்க்கும் போது, எதிரிகள் மீது குற்றம் சாட்டுகின்ற போது அவர் என்ன செய்கிறார் என்பதைப் பார்க்கும் போது, இந்த அளவிற்கு அரசியல் உரையாடல்கள் தரம் தாழ்ந்தவையாக ஒருபோதும் என் நினைவில் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது.
கரண் தாப்பர்: உங்களிடம் நான் பேச விரும்புவது முஸ்லீம்களுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி மட்டும் அல்ல என்பதால் இந்த கட்டத்தில் நமது விவாதத்தைச் சற்று விரிவுபடுத்திக் கொள்ளலாம். ஒட்டுமொத்த இந்தியாவிலும் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி உங்களிடம் பேச விரும்புகிறேன். உங்கள் மனைவி ஹிந்து. உங்கள் குழந்தைகள் நவீன, மதச்சார்பற்ற, முன்னோக்குப் பார்வையுடன் வளர்க்கப்பட்டுள்ளனர். இந்தியா இந்த மாதிரியான நாடாக மாறியதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
நசிருதீன் ஷா: அதைச் சொல்வது மிகவும் கடினம். அதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும் என்றாலும் நமது மத அடையாளங்களை முன்னிறுத்திச் செல்லாமல் இருப்பது முக்கியம் என்பதை உறுதியாக அறிந்திருக்கிறேன். நான் மதம் முக்கியத்துவம் பெறாத நாள் என்று ஒரு நாள் வரும் – நிச்சயமாக அது ஒரு கற்பனாவாத விருப்பமாக இருந்தாலும் – என்றே நம்புகிறேன். நாங்கள் திருமணம் செய்து கொள்ளவிருந்த போது, எங்கள் குடும்பத்தில் இருந்த பெரியவர் ஒருவரைக் கலந்தாலோசித்தோம். அவர் அப்போது எங்களிடம் ‘அரசியல் பிரச்சனை எதுவும் இருக்காது. ஆனால் வீட்டில் ஹிந்து மதம் இருக்குமா அல்லது முஸ்லீம் நெறிமுறை இருக்குமா, மது அனுமதிக்கப்படுமா, இறைச்சி சாப்பிடலாமா, ஹோலி கொண்டாடப்படுமா… என்பது போன்ற சமூகப் பிரச்சனைகள் நிச்சயமாக இருக்கும்’ என்று கூறினார்.
அரசியல் பிரச்சனை இருக்காது என்ற அவரது கூற்று முற்றிலும் தவறாகிப் போனது. எந்தவொரு சமூகப் பிரச்சனையும் எங்களுக்கு இருக்கவில்லை. எங்களுடைய நண்பர்கள் பலரும் மதங்களை மறுத்தே திருமணம் செய்து கொண்டுள்ளனர். சொல்லப் போனால் என்னுடைய பிள்ளைகள் ஒரே மதத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியை முதன்முதலாகச் சந்தித்த போது ஆச்சரியப்பட்டுப் போனார்கள். எங்கள் நண்பர்களில் பலரும் ஹிந்து-முஸ்லீம், முஸ்லீம்-கிறிஸ்துவர், ஹிந்து-கிறிஸ்துவர், யூதர்-சீக்கியர் அல்லது அது போன்று திருமணம் செய்து கொண்டவர்களே. அவர்களை அவ்வாறு வைத்திருப்பதற்கான நம்பிக்கையுடன் இருந்த நாடு. இது அப்படிப்பட்ட நாடாக இருந்தது என்று பிள்ளைகளிடம் சொன்னோம். எனக்கும் அதுபோன்ற நாடாக இருந்தது என்றே சொல்லப்பட்டிருந்தது.
பாகிஸ்தானுக்கு செல்வதற்கு எனது தந்தை மறுத்தார். அப்போது அவரது சகோதரர்கள், என் அம்மாவின் சகோதரர்கள் மற்றும் எனது குடும்பத்தைச் சேர்ந்த பலரும் இங்கிருந்து வெளியேறினர் என்ற போதிலும் என் தந்தை இங்கிருந்து செல்வதற்கு மறுத்து விட்டார். நமக்கு அங்கே எவ்வளவு எதிர்காலம் இருக்குமோ அதே அளவு இங்கேயும் இருக்கும் என்று நன்கு உணர்ந்தவராக அவர் இருந்தார். இன்றைய இந்தியாவில் இப்போது நான் குழந்தையாக இருந்திருப்பேன் என்றால் என்ன மாதிரியான எதிர்காலம் எனக்காகக் காத்திருக்கிறது என்று சொல்ல எனக்கு நிச்சயம் தெரிந்திருக்காது.
கரண் தாப்பர்: இன்றைய இந்தியா உங்களை வெளியேற்றியிருக்கலாம். உண்மையில் அது வெளியேற வேண்டுமென்று உங்களை விரும்பச் செய்திருக்கலாம்.
நசிருதீன் ஷா: அவ்வாறு செய்திருக்கலாம் என்றாலும் அவ்வாறு செய்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். ‘ஓடி ஒளிந்து கொள்’ என்பது என் வழி அல்ல. நான் அதைச் செய்யப் போவதில்லை. எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் அதுபற்றி எனக்கு கவலையில்லை. இங்கே எவ்வளவு அச்சுறுத்தல்கள் இருந்தாலும் அது பற்றி எனக்குக் கவலையில்லை. இங்கிருந்து கொண்டே நான் அதைச் சமாளிப்பேன். அதுபோன்று இருக்குமாறு என் குழந்தைகளுக்கும் கற்பிப்பேன்.
கரண் தாப்பர்: நசீர்! அனைவரும் சேர்ந்து ஈத், கிறிஸ்துமஸை ஒன்றாகக் கொண்டாடிய அறுபது, எழுபதுகளில் வளர்ந்தவர்கள் நீங்களும் நானும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். மூன்று நாட்களுக்கு முன்பு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. ஆனால் அசாமில் கிறிஸ்தவ கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஹிந்துக்கள் மீது பஜரங் தளம் வன்முறையில் ஈடுபட்டது. குர்கான் மற்றும் பட்டோடியில் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்தவர்களால் பள்ளியில் சிறுவர்களுக்காக நடந்து கொண்டிருந்த அபிநய நாடக நிகழ்ச்சி சீர்குலைந்தது. அம்பாலாவில் தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டன. கர்நாடகாவில் கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டன. ஹிந்துக்கள் சகிப்புத்தன்மையற்றவர்களாக மாறி வருகிறார்களா என்ற கேல்விக்கு இல்லை என்று பதில் இங்கே இருக்குமானால் இதுபோன்ற சகிப்பின்மை எங்கே இருந்து வருகிறது?
நசிருதீன் ஷா: நான் சொன்னதைப் போல இது முற்றிலும் உருவாக்கப்பட்ட வெறுப்பு. அடுத்தவர் கொண்டுள்ள நம்பிக்கைகளை சகித்துக் கொள்ளாத தன்மை. மத நம்பிக்கை என்பது மிகவும் ஆபத்தான விஷயம். அது உங்களைத் தீவிர வன்முறைக்கு இட்டுச் செல்லக் கூடியது. தேவாலயங்கள், மசூதிகள் சேதப்படுத்தப்படுவதைப் போல யாராவது ஒருவர் கோவிலைச் சேதப்படுத்த முயன்றால் என்ன நடக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். அவ்வாறு சேதப்படுத்துபவர் மீது நடவடிக்கை எடுப்பதில் நீதி ஒருபோதும் தாமதிக்காது. ஆனால் மற்ற வழிபாட்டுத் தலங்களை சேதப்படுத்துபவர்களுக்கு அதுபோன்று எதுவும் நடக்காது. ‘உங்கள் கடவுளை விட என்னுடைய கடவுள் பெரியவர்’, ‘நீங்கள் நம்புவதை வணங்குவதற்கான உரிமை உங்களுக்குக் கிடையாது’ என்று சொல்வது உண்மையில் மிகவும் அபத்தமானது. நிலைமை அபத்தமான நிலையை எட்டிக் கொண்டிருக்கிறது.
கரண் தாப்பர்: அன்னை தெரசாவின் மிஷனரி ஆஃப் சேரிட்டிக்கு வெளிநாட்டில் இருந்து நிதி பெற அனுமதி இல்லை என்று சொல்லப்பட்டதை நேற்று பார்த்தோம். அது கிறிஸ்துமஸ் தினத்தன்று அறிவிக்கப்பட்டது. அதை தற்செயல் நிகழ்வு என்று நினைக்கிறீர்களா? தேதி, நேரம் போன்றவை திட்டமிட்டு தந்திரமாக நிகழ்த்தப்பட்டது என்று நினைக்கிறீர்களா? கிறிஸ்தவர்களுக்கான மோசமான செய்தியை கொண்டு சென்று சேர்ப்பதற்கான மற்றொரு வழியாகவே அது இருந்தது.
நசிருதீன் ஷா: அது நிச்சயமாக வேண்டுமென்றே செய்யப்பட்டதுதான். வேண்டுமென்றே செய்யப்படாமல் உள்ளதாக நிச்சயம் இருக்க முடியாது. கிரீன்பீஸ், அம்னெஸ்டி இந்தியா அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு வருகின்ற நிதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சமூகத்தின் நலனுக்காக உழைக்கின்ற பலருக்கும் எல்லா வகையிலும் தடை ஏற்படுத்தப்படுகிறது. அது ஏன் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. முற்போக்காகத் தெரியும் அனைத்தும் அரசுக்கு எதிரானவையாகவே தோன்றுகின்றன. அமைதியான தேவாலய பிரார்த்தனையைச் சீர்குலைக்கும் வன்முறைக் கும்பல் அங்கேயே அமர்ந்து பஜனை பாடத் தொடங்குகிறது என்ற இன்றைய உண்மை நினைத்துப் பார்க்கவே முடியாததாக உள்ளது. இதற்கு முன்பாக இதுபோன்று ஒருபோதும் நடந்ததே இல்லை. இந்தச் செயல்கள் வெளிப்படையாக மேலிருந்து ஒப்புதலைப் பெற்றே நடைபெறுகின்றன.
கரண் தாப்பர்: பெரும்பாலும் இதுபோன்ற செயல்கள் நிறுத்தப்படும் அல்லது கண்டிக்கப்படும். செயலில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள். ஆனால் இப்போது அப்படி எதுவுமே நடக்கவில்லை.
நசிருதீன் ஷா: அப்படி எதுவும் நடக்கவில்லை, நடப்பதற்கான வாய்ப்பில்லை. அது இன்னும் மோசமாகக் கூடிய வாய்ப்பே இருந்து வருகிறது.
கரண் தாப்பர்: யாருமே நினைத்துப் பார்க்க முடியாத அளவிலே நமது நாடு மாறிக் கொண்டிருப்பது மதத்தின் அடிப்படையில் மட்டுமல்ல. விமர்சகர்கள் மற்றும் கருத்து வேறுபாடு கொண்டவர்களுக்கு இப்போது என்ன நேர்கிறது என்பதைப் பாருங்கள். அவர்கள் மீது தேசத்துரோகக் குற்றம் சாட்டப்படுகிறது. பாராளுமன்றத்தைப் பாருங்கள். அது செயல்படாதது மட்டுமல்ல, பொருத்தமற்றதாகவும் ஆகிவிட்டது. ஊடகங்களைப் பாருங்கள் — பெரும்பாலானவை உறுமுகின்ற காவல் நாய்களாக இருப்பதைக் காட்டிலும் அரசின் மடியில் கிடக்கின்ற நாய்களாக இருக்கவே விரும்புகின்றன. நீதித்துறையும் கூட அரசாங்கத்தை சங்கடப்படுத்தக்கூடிய வழக்குகளை வேண்டுமென்றே, தெரிந்தே ஒத்தி வைக்கிறது. நம்முடைய இளமைக் காலத்தில் நம்மை மிகவும் பெருமைப்படுத்திய ஜனநாயகத்தின் மீது இந்தியாவிற்கு இருந்த உறுதி, அரசியலமைப்பு விழுமியங்களுக்கான நமது அர்ப்பணிப்பு போன்றவையெல்லாம் தோல்வியடையும் நிலையில் இருக்கின்றனவா?
நசிருதீன் ஷா: நிச்சயமாக அது சில பிரிவுகளில் அவ்வாறுதான் இருக்கின்றது. நீதித்துறை மிகப்பெரிய அழுத்தங்களின் கீழ் செயல்பட்டு வருவதால் அவை குறித்து அவ்வாறு தீர்மானிப்பது மிகவும் அவசரப்படுவதாக இருக்கும் என்றே நினைக்கிறேன். இப்போதெல்லாம் உச்சநீதிமன்றம் தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு வருவது மிகவும் நம்பிக்கைக்குரிய அறிகுறியாக இருக்கிறது.
அழிவும், இருளும் நம்மைச் சூழ்ந்துள்ள போதிலும் நம்பிக்கைக்குரிய அறிகுறிகளும் இருப்பதாகவே நான் கூறுவேன். ஜனநாயகத்திலிருந்து நாம் விலகிச் செல்கிறோம் என்று சொல்வது முன்கூட்டியதாகவே இருக்கலாம். சில சமயங்களில் நாம் ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984இல் வாழ்கிறோம் என்று தோன்றுகிறது. செய்தித்தாளைத் திறக்கும் போதெல்லாம் கள்ளச் சிரிப்புடன் அந்த ‘பிக் பிரதர்’ உங்களை வரவேற்பார். அங்கே ‘இரண்டு நிமிட வெறுப்பு’ அன்றாடம் கொண்டாடப்படுகிறது. ஃபேஸ்புக் மற்றும் அனைத்து சமூக ஊடக விஷயங்களிலும் அது நடந்து கொண்டிருக்கிறது. உண்மையாகச் சொல்வதென்றால் அது இரண்டு நிமிட வெறுப்பு அல்ல – இருபத்திநான்கு மணிநேர வெறுப்பு. அங்கே ‘பிக் பிரதரை நான் நேசிக்கிறேன்’ என்ற கீதம் தொடர்ந்து இசைக்கப்படுகிறது. குடிமக்கள் அனைவருக்கும் ‘நான் பிக் பிரதரை நேசிக்கிறேன்’ என்று சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்படுகிறது. அது போல சில சமயங்களில் உணர்கிறேன் என்றாலும் அதைச் சொல்வது மிகவும் முன்கூட்டியதாகவும் தெரிகிறது. ஜனநாயகம் என்பது இந்தியாவைப் பொறுத்தவரை சமீபத்திய நிகழ்வாகவே இருக்கிறது. எழுபது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா அரசமுறை கொண்டதாக இருந்தது. அதற்கு முன்பு மொகலாயர் காலத்திற்குப் பிறகு ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்ட மகாராஜாக்களின் கூட்டமாக இருந்தது. இந்த நாட்டில் ஜனநாயகம் தன்னுடைய வெற்றியைக் கண்டடைந்திருக்கிறது என்றும் நடந்து செல்கின்ற எந்தவொரு நபரும் தவறாக எடுத்து வைக்கின்ற காலடிகளில் அதுவும் ஒன்றாக இருக்கிறது என்றும் நான் நினைக்கிறேன்
கரண் தாப்பர்: முற்றிலும் சரி. அரசியல் நிர்ணய சபையில் ஆற்றிய உரையில் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் ஜனநாயகத்தை மிகவும் மாறுபட்ட பரப்பில் இருக்கும் மேல் மண் என்பதாகக் குறிப்பிட்டார். நான் முடிப்பதற்கு முன்பாக நீங்கள் பிக் பிரதர் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஒரு கணம் அதைப் பற்றி பேச விரும்புகிறேன். இப்போது வெளிப்படுகின்ற ஆளுமை வழிபாட்டில் ஓர் ஒளிவட்டம் உள்ளது. பிரதமரைக் கண்டு அவரது சொந்தக் கட்சியே பயப்படுகிறது. அவரை விமர்சித்தால் உங்கள் மீது ட்ரோல்களின் பட்டாளமே வந்து இறங்குகிறது. தன்னை மூன்றாவது நபராக மட்டுமே அவர் குறிப்பிட்டுக் கொள்வதை நான் கவனித்திருக்கிறேன்.
நசிருதீன் ஷா: ஆமாம். அது முரணாக இருக்கிறது. உங்களுடைய வார்த்தைகள் மீதே மிகப் பெரிய மதிப்பீட்டைக் கொண்டிருப்பது, முகஸ்துதியால் எளிதில் பாதிக்கப்படுவது, தவறாக பல விஷயங்களையும் பேசுவது, தனக்குக் கல்வி இல்லை என்று வெளிப்படையாகப் பெருமை பேசுவது – பிரதமர் ஆவதற்கு முன்பு அவர் இதைச் செய்திருந்தார். அது வீடியோவில் உள்ளது. அவர் அதில் ‘நான் எதுவும் படிக்கவில்லை’ என்று கூறியிருக்கிறார். அந்த நேரத்தில் அது அவைவரையும் வசீகரமான பேச்சாகக் கருதப்பட்டது. ஆனால் அவர் சொன்ன, செய்திருக்கும் விஷயங்களைக் கொண்டு பார்க்கும் போது இப்போது அது நம்மையெல்லாம் அச்சுறுத்துவதாக இருக்கிறது. எல்லா இடங்களிலும் தானே மையமாக இருக்க வேண்டும் என்ற அவரது ஆசை, ‘M’ என்ற எழுத்தில் தொடங்கும் மற்றொரு வார்த்தைக்கு மிக அருகே உள்ளது. அதை நான் சொல்லமாட்டேன். ஆனாலும் அவர் ஒரு ராஜாவாக, கடவுள் போன்ற அந்தஸ்துக்கு உயர்த்தப்படுகிறார். நம்மில் எவருக்குமே அது நல்ல விஷயமாக இருக்க முடியாது.
கரண் தாப்பர்: இந்த நேர்காணலை இன்னும் ஒரே ஒரு கேள்வியுடன் முடிக்கிறேன்: இந்தியா எப்படியெல்லாம் மாறி வருகிறது என்பது பற்றி சிந்திக்கும் போது, உங்களிடம் தோன்றுகின்ற உணர்வுகளை நீங்கள் எவ்வாறு விவரிப்பீர்கள்? வருத்தப்படுகிறீர்களா? ஏமாற்றமடைந்து, மனச்சோர்வடைந்திருக்கிறீர்களா அல்லது விரக்தி உணர்வைப் பெறும் அளவிற்குச் சென்றிருக்கிறீர்களா?
நசிருதீன் ஷா: விரக்தி உணர்வை நான் நிராகரிக்கின்றேன். ஏனென்றால் அது எதற்கும் வழிவகுத்துத் தரப் போவதில்லை. சோகமாக, கோபமாக உணர்கிறேன்; இவை தானாகச் சரியாகி விடும் என்று நம்புகின்ற அளவிற்கு நம்பிக்கையுடையவன் நான் இல்லை என்றாலும் ‘அகாதிஸ்ட்’ என்று அழைக்கப்படுகின்ற வகையில் இருப்பவனாக – காலம் வட்டங்களில் நகர்வதாக இருப்பதால், விஷயங்கள் சரியாக இல்லை என்றாலும் இறுதியாக பழைய நிலைக்குத் திரும்பி விடும் என்று நம்புகின்றவனாக இருக்கிறேன். எந்தவொரு கொடுங்கோலரும் இறுதியில் கவலைப்படும் நிலைக்கே வந்து சேர்ந்திருக்கின்றனர். அந்தச் சுழற்சி இந்தியாவிலும் விரைவிலேயே முழுவதுமாக வரும். அதைப் பார்க்க நான் இல்லாமல் போயிருக்கலாம். தாலி கட்டுவது போன்ற மூடநம்பிக்கைகளை நம்புகின்ற தலைவர்களுடன் நாம் இன்னும் சில வருடங்கள் சேர்ந்து வாழ வேண்டியிருக்கலாம். ஆனாலும் ராட்டினம் முழுவதுமாகச் சுழன்று பழைய நிலைக்கு வரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
கரண் தாப்பர்: ஒருவேளை அது ஆறுதல்படுத்திக் கொள்ளும் வகையில் இருக்கலாம். பேச்சுவழக்கில் சொல்வது போல் ‘இதுவும் கடந்து போகலாம்’. ஆனால் இருக்கின்ற ஒரே பிரச்சனை என்னவென்றால், இப்போதைய நிலைமை எவ்வளவு காலம் நீடிக்கும், எப்போது முடியும் என்று நமக்குத் தெரியாது. நசிருதீன் ஷா, இந்த நேர்காணலுக்கு மிக்க நன்றி. கவனமாக இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். புத்தாண்டு வாழ்த்துகள்.
நசிருதீன் ஷா: புத்தாண்டு வாழ்த்துகள், கரண். வாழ்த்துகள்.
https://thewire.in/communalism/full-text-naseeruddin-shah-karan-thapar-interview
நன்றி: வயர் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு








