தொடர் 7: ஜானி ரொடாரியின் இத்தாலிய தொலைப்பேசிக் கதைகள் (பளிங்கினால் ஆன சிறுவன்) – தமிழில்: ஆயிஷா. இரா. நடராசன்
பளிங்கினால் ஆன சிறுவன்
அது ஒரு விநோதமான நாடு. அதன் தலைநகரம் அதைவிட விநோதமானது. இரண்டுக்குமே பெயர் கிடையாது. பெயரே இல்லாத நாடு. அதற்கு பெயரே இல்லாத ஒரு தலைநகரம்.
சிலர் அதை நாடு என்று வெறுமனே அழைப்பார்கள். சிலர் தலைநகரை நகரம் என்றும் ஊர் என்றும் அழைப்பது உண்டு ஆனால் அவர்கள் மிகக்கொடுமையான வாழ்க்கை வாழ்ந்தார்கள். அங்கே வாழவே வெறுத்தார்கள்.
ஏனெனில் ஒரு கொடூர ராஜா அந்த நாட்டை ஆண்டுவந்தான். மிக மோசமாக அவர்களை அவன் வேலை வாங்கினான். குட்டிக்குழந்தைகள் முதல் மிகமிக வயதான தொண்டுக் கிழவர்கள் வரை எப்போதும் வேலை வேலைதான். கூலி எப்போதாவது ரொம்ப பற்றாமல், தான் நினைத்ததை கொடுப்பான். இந்த வரி அந்த கணக்கு என்று கொடுப்பதையும் பிடுங்கிக் கொள்வான்.
குழந்தைகள் யாருக்கும் கல்வி கற்க அவன் பள்ளிக்கூடம் ஏதும் கட்டவில்லை. அவர்கள் விளையாடுவதற்கு நேரமும் கிடையாது, இடமும் கிடையாது. அவர்களும் அரண்மனையை கழுவி விடுவது முதல் ராஜாவுக்கு கால்பிடித்து விடுவது வரை எல்லா வேலையும் பார்த்தார்கள்.
யாராவது அந்த கொடுமை ராஜாவை எதிர்த்து பேசினாலோ கேள்வி கேட்டாலோ அவ்வளவுதான். அவர்கள் அதன்பிறகு யாருமே பார்த்து கிடையாது. அவர்கள் சிறையில் அடைத்து சித்திரவதை செய்யப்படுவார்கள். சிலர் ஓரிரு நாட்களில் மூளை – குழம்பி பைத்தியமாகி சுற்றித்திரிவார்கள் இருளில் என்ன நடக்கிறது. சிறையில் என்ன செய்தார்கள் என்பதை யாருமே அறியமுடியாது.
இப்படி அந்த கொடூர ராஜாவை எதிர்த்து மக்களை காப்பாற்ற முயன்ற எத்தனையோ பேர் இறந்ததும் போயிருக்கிறார்கள். ஏழை ஜனங்களை வஞ்சிப்பது எந்த விசாரனையும் இன்றி மரணதண்டனை வழங்குவது அவமானப்படுத்துவது பட்டினியாலேயே கொல்வது என்று தன் கோரதாண்டவத்தை கொடுமை ராஜா நிகழ்த்தி வந்தான்.
அப்போது அந்த ராஜாவுக்கு எதிராக ஒரு சின்னப்பையன் கிளார்ந்து எழுந்தான். முதலில் அப்படி ஒருவன் இருப்பதை யாருமே கவனிக்கவில்லை ஆனால் குழந்தைகளுக்கு அவனை அடையாளம் தெரிந்துவிட்டது. அவனது பெயர் கியாகோமா. அவனை சிறார்கள் யாவரும் பளிங்கு கியாகோமா என்றுதான் அழைத்தார்கள். குழந்தைகள் ரகசியமாக விளையாட அவன் பல உத்திகளை சொல்லிக்கொடுத்தான்.
கியாகோமாவின் முகம் பந்துபோல வட்டமானது. கண்கள் கோலிக்குண்டுகள் போல இருக்கும். மூக்கு பரம்பரம் மாதிரி வடிவம் உள்ளது. அவனது உடல் பளிங்கினால் ஆனது. சமையல் கட்டில் வேலை, கட்டிட வேலை, அரண்மனை வேலை எங்கே எந்த வேலையில் இருந்தாலும் குழந்தைகள் விளையாடத் தொடங்கினார்கள். யார் வேலையை முடிப்பது எனும் விளையாட்டு, சொடுக்கு விளையாட்டு, தலையாட்டும் விளையாட்டு இப்படி விதவிதமாய் விளையாட்டு யாராவது சிரிக்கும் சத்தமோ மகிழ்ச்சியாக உரையாடுவதோ, கத்துவதோ உற்சாக கூச்சலிடுவதோ காதில் விழுந்தால் கொடுமை ராஜா கொதித்து விடுவான். அவனால் அதை சகிக்க முடியாது. நின்றால் விளையாட்டு உட்கார்ந்தால் விளையாட்டு.
அதிலும் குழந்தைகள் விளையாடுகிறார்கள் என்று கேள்விப்பட்டதும் ராஜா கொதித்தான். பளிங்கு சிறுவனை பிடித்துவர ஆட்களை அனுப்பினான். பட்டப்பகல் நேரத்தில் பளிங்கு சிறுவனை அவர்களால் காண முடியவில்லை. பளிங்கு கண்ணாடி மாதிரி அல்லவா இருக்கும். இரவில் வருவோம் என்று சென்றார்கள்.
பகலிலாவது பரவாயில்லை. இரவில் பளிங்கு சிறுவன் இருப்பதை கண்டு பிடிக்கவே முடியவில்லை.
பல குழந்தைகளை பிடித்து ராஜா பல சித்திரவதை செய்தான். எனவே தானாகவே சென்று பளிங்கு சிறுவன் ராஜாவை சந்தித்தான். கோபத்தில் ராஜாவுக்கு கையும் காலும் ஓடவில்லை. சிறையில் அடைத்தான் சிறை இருட்டாக இருந்தது. ஆனால் அடைக்கப்பட்டது பளிங்க கியாகோமா அல்லவா. சிறையே ஒளிர்ந்தது. அவனை மனவளம் குன்றியவனாகவும் மாற்ற முடியவில்லை. காரணம் அவன் ஒளிவு மறைவே இல்லாத ஒளி ஊடுருவும் உள்ளமும் உடலும் பெற்றிருந்தான்.
விரைவில் சிறைச்சாலை ஒளிர…. அந்த வெளிச்சம் அரண்மனையையும் இரவிலும் பகல்போல ஒளிரச்செய்தது, ஊரே ஒளிரத்தொடங்கியது. ராஜாவால் அவனை மறைத்துவைக்க முடியவில்லை.
ஒரே வெளிச்சமாக இருந்ததால் எவ்வளவு தடினமான திரை சீலைகட்டினாலும் ராஜாவுக்கு தூக்கமே வரவில்லை. ஒருவர் எத்தனை நாள்தான் தூங்காமல்விருப்பது. ஒருமாதம் இரண்டுமாதம்….. ஏதோதோ செய்தான்…. மருந்து மருந்தாய் குடித்தான்….. ஊஹீம்…. ராஜாவுக்கு அந்த வெளிச்சத்தில் தூக்கமே வரவில்லை. ஒளிர்ந்தது ‘உண்மை’ ஆயிற்றே.
பிறகு ஒருநாள் ராஜாவுக்கு பைத்தியம் பிடித்தது…. சட்டையை கிழித்துக்கொண்டான்.. தலைமுடியை பிய்த்துக்கொண்டான்… கடகடவென்று சிரித்தான்… விட்டதை பார்த்து அழுதான்..
அப்புறம் ஒருநாள் இரவு அரண்மனையை விட்டே அவன் ஓடிப்போய்விட்டான். ஓ.. ஊரே மகிழ்ச்சித் தாண்டவம் ஆடியது. எல்லாரும் அதை மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். நாடே அதை உற்சாகத்தோடு வரவேற்றது. பெரியவர்கள் ஒன்றுகூடி அடுத்த ராஜாவை ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்க முடிவு செய்தார்கள்.
ஏனெனில் பளிங்கு கியாகோமா மற்ற சிறார்களோடு உலகையே மறந்து ஒய்யாரமாக விளையாடிக் கொண்டிருந்தான்.
முந்தைய தொடரை வாசிக்க:
தொடர் 6: ஜானி ரொடாரியின் இத்தாலிய தொலைப்பேசிக் கதைகள் (சின்ன வெங்காயம்) – தமிழில்: ஆயிஷா. இரா. நடராசன்
சின்ன வெங்காயம்
இன்று காய்கறிகள் எல்லாம் சுதந்திரமாக உள்ளன. ஆனால் ஒரு காலத்தில் காய்களும் கனிகளும் எலுமிச்சை மகாராஜாவின் அடிமையாக இருந்தன.
எலுமிச்சை மகாராஜா சரியான சிடுமூஞ்சி அதற்கு மஞ்சள் ராஜா என்றும் ஒரு பெயர் இருந்தது. தலையில் பச்சை தொப்பியும் அதில் ஒரு சிறிய மணியும் கட்டி இருந்தது. அது எந்த வேலையையும் செய்யாது எப்போதும் யாரிடமாவது சண்டை இழுக்க துடிக்கும். சும்மா தும்மினால் கூட சிரச்சேதம் , நாடு கடத்தல், கடுங்காவல் சிறை தண்டனை. சாக்கடையில் வீசி அழுக வைத்து கொன்று விடுவது இப்படி பல கொடுமைகள்.
அந்த நாட்டில்தான் வெங்காயம் வாழ்ந்தது. அதற்கு சின்ன வெங்காயம் என்று பெயர். அதன் அப்பாதான் பெரிய வெங்காயம் அவர்கள் ராஜாவின் கோட்டை இருந்த ஒரு நகரத்தில்தான் வாழ்ந்து வந்தார்கள். நேற்று முன்தினம் மிகப்பெரியத் துயர சம்பவம் நடந்துவிட்டது.
மகாராஜா எலுமிச்சை நகர்வலம் வரப்போவதாக அறிவித்தார்கள். கோட்டையின் மிடுக்குத் தளபதியான தக்காளி அந்த நகரத்தின் அதிகாரத்தை தன்கையில் வைத்திருந்தது. அதை பார்த்து பயப்படாதவர்களே கிடையாது. தக்காளியின் கண்களில் விஷமத்தனம் அதிகம். அதன் பார்வை செக்க சிவந்த அதிகார பார்வையாக இருந்தது.
கோட்டையில் எலுமிச்சை மகாராஜாவின் சித்திகளான செர்ரி கோமாட்டிகள் வாழ்ந்தார்கள். இருவரும் விதவைகள். கொடுமைக்கார கோமகள்கள் அவர்கள். அவர்கள் வாழ்ந்த கோட்டையின் அடித்தளத்தில்தான் எல்லாவித கொடுமைகளும் நடந்த சிறைச்சாலை இருந்தது.
நேற்று முன்தினம் எலுமிச்சை மகாராஜாவின் நகர் வலத்தின்போது எல்லாரையும் போல நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. பெரிய வெங்காயம். அதாவது சின்ன வெங்காயத்தின் அப்பா. அப்போது கூட்டத்தில் யாரோ தள்ளிவிட பெரிய வெங்காயம் மன்னரின் வழித்தடத்தில் போய் விழுந்துவிட்டது. ஆனால் உடனே சுதாரித்து எழுந்து வந்தது. உடம்பில் அதற்கு காயம் இருந்ததையும் பொருட்படுத்தாமல் தக்காளி உடனே அதை தனது காவல் கூட்டத்தோடு போய் கைது செய்து கோட்டையின் சிறையில் தள்ளியது.
பாவம் சின்ன வெங்காயம் அப்பாவைத் தேடி அது சிறைக்கு சென்று சந்திக்க அனுமதி கேட்டது. தன் மகனை சந்தித்த பெரிய வெங்காயம் மிகவும் வருந்தியது. தன் குட்டிப் பையனான சின்ன வெங்காயத்திற்கு சில உண்மைகளை அது புரியவைத்தது.
சிறைச்சாலை என்பது கொலையாளிகளும் மக்களை கொள்ளை அடிப்பவர்களும் இருக்கவேண்டிய இடம். ஆனால் அவர்கள் எல்லோரும் வெளியே இருந்தார்கள். அப்பாவிகளும் அக்கிரமத்தை தட்டிக் கேட்டவர்களும் சிறையில் இருந்தார்கள்.
நேரே சுரக்காய் தாத்தாவிடம் சென்றது சின்ன வெங்காயம். சுரக்காய் தாத்தா ஊரிலேயே வயதானவர் தனக்காக ஒரு வீடுகட்டிக்கொள்ள எத்தனையோ வருடங்களாக முயன்று வருபவர். சின்ன வெங்காயம் அங்கே சென்றபோது ஏக தடபுடலாக இருந்தது. சுரக்காய் தாத்தாவை இரண்டு தக்காளி காவலர்கள் பிடித்துக்கொண்டிருந்தார்கள். எதிரில் தளபதி தக்காளி தாம்தூம் என்று குதித்துக் கொண்டிருந்தது.
‘வீடுகட்டுவதற்கு உனக்கு எந்த தகுதியும் கிடையாது ….’ என்றது தக்காளி.
கட்டுமான கழிகள் செங்கல் என்று எடுத்து வீதியில் வீசினார்கள்.’ ’இனி வீடு நீ கட்டுவதை பார்த்தால் சிறையில்தான் உனக்கு முடிவு’ மிரட்டியது தக்காளி.
பிறகு சுரக்காய் தாத்தாவை பிடித்து கீழே தள்ளிவிட முயன்றது.. ‘என்ன முறைக்கிறாயா?’
ஆனால் அந்த நொடியில் சின்னவெங்காயம் தளபதி தக்காளிக்கும் சுரக்காய் தாத்தாவுக்கும் நடுவில் சென்று நின்றது.
‘ஒரு தாத்தாவிடம் உன் வீரத்தை காட்டுகிறாயே உனக்கு வெட்கமாக இல்லையா’ எங்கிருந்து தான் சின்ன வெங்காயத்திற்கு அப்படி ஒரு வீரம் வந்ததோ….
தக்காளி அதற்கு பதில் சொல்வதற்குள் அந்த வழியாக ஒரு மீஞ்சூறு எலி வந்தது.
எலியை பார்த்ததும் தளபதி தக்காளி தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓட்டம் பிடித்தது.
இதை பார்த்த தாத்தா சுரைக்காய் அசந்துபோனது. தக்காளி, சின்ன வெங்காயத்தை பார்த்து பயந்து ஓடியதாக அது நினைத்தது.
சற்று தொலைவுக்கு ஓடியபிறகு நின்று தக்காளி சின்ன வெங்காயத்தை பார்த்தது. ‘ உன் தராதரம் தெரிஞ்சு பேசு…. நீயெல்லாம் மண்ணுக்கு அடியில் பிறந்தவன்’….
மண்ணுக்கு அடியில் விளையும் வெங்காயம், கேரட், முள்ளங்கி எல்லாம் கீழ் பிறவிகள் என்றுதான் தக்காளி சொல்லியது. அந்த நாட்டில் அதுதான் பிரச்சினை கீழ்பிறவிகளை பின்னுக்கு தள்ளி செடியின் மரத்தின் மேலே வளரும் தக்காளி, எலுமிச்சை, ஆரஞ்சு செர்ரி எல்லாம் உயர்பிறவி என்று ஆதிக்கம் செலுத்தி இவர்களை அடிமையாக வைத்திருந்தன.
‘சுரக்காய் தாத்தா விடம் ஏன் வம்பு செய்கிறாய்… அவர் பூமிக்கு அடியிலா விளைகிறார்’ சின்ன வெங்காயம் விடவில்லை. இப்படி தளபதி தக்காளியைப் பார்த்து யாருமே எதிர்கேள்வி கேட்டது இல்லை.
‘வாயை மூடு… உனக்குப் புரியாது முட்டாள். சுரக்காய் பூசனி எல்லாம் மண்மீது வளரும்.. ஆனால் மேலே செடியில் வளருவது இல்ல..அவர்கள் இருபக்கமும் சேர்த்தி கிடையாது’ தக்காளி கீரிச்சிட்டது.
சின்ன வெங்காயத்தின் கவனம் இப்போது அங்கு வந்த எலியின் பக்கம் திரும்பியது. அந்த எலி நொண்டி நொண்டி வந்தது.
‘என்ன நண்பரே அடிபட்டு விட்டதா’ என்றது சின்ன வெங்காயம் அதன் குரலில் உண்மையான அக்கறையும் பரிவும் இருந்ததால் அந்த எலி நின்று ஆது யார் என்று பார்த்தது. பிறகு பின்காலை தூக்கியது. ‘நல்லா இடிச்சுகிட்டேன்’ என்றது. வலியில் அது அழுகிறது என்பதை சின்ன வெங்காயம் புரிந்துகொண்டது.
‘ என்னை எடுத்து லேசாக தரையில் தேய்த்து அடிபட்ட இடத்தில் தடவி விடுங்கள்…. சரியாகிவிடும்’ என்றது சின்ன வெங்காயம்.
‘உ … உனக்கு வலிக்காதா ’ என்றது எலி ‘பரவாயில்லை… நண்பனுக்காக ’ என்று சின்ன வெங்காயம் பதிலளித்தது.
என்ன அதிசயம். அது சொன்னதுபோலவே அதை எடுத்து தரையில் லேசாக தேய்த்து தன் காயத்தில் வைக்க கொஞ்சநேரத்தில் வலி போய்விட்டது.
தனக்காக தரையில் தேய்மானம் அனுபவித்த சின்ன வெங்காயத்தின் மீது எலிக்கு அன்பும் பரிவும் ஏற்பட்டன. ‘ எப்போது வேண்டுமானாலும் நீ என்னை அழைக்கலாம்.’ என்று சொல்லி பிரிந்தது.
சின்ன வெங்காயம், தன்னைப்போன்ற மண்ணுக்கு அடியில் விளையும் முள்ளங்கி, கேரட் உருளை என பலரையும் ஒன்று திரட்டியது. மேலும் அவர்களோடு இஞ்சி, மஞ்சள் என சிலரும் சேர்ந்தனர். முட்டைகோஸ், காலிஃபிளவர் என மண்மேல் படர்ந்து விளையும் சில காய்கறிகளும் தர்பூசனியும்கூட இப்போது சின்ன வெங்காயத்தின் கூட்டத்தில் சேர்ந்திருந்தன. இப்படி அவர்கள் ஒன்றிணைந்தது யாருக்கும் தெரியாது.
மறுபடி எலுமிச்சை மகாராஜா நகர் வலம் வரும்நாள் வந்தது. இம்முறை கோட்டையில் வசித்த கோமாட்டிகளும்கூட ராஜாவோடு வந்தார்கள் தளபதி தக்காளி முதல் மந்திரியான ஸ்டிராபெரி, திராட்சை என்று ஏகக்கூட்டம்.
எல்லாரும் நகர்வலத்தில் இருந்தபோது சின்ன வெங்காயமும் அதன் கூட்டத்தை சேர்ந்த மண்ணின் அடியில் தோன்றியவர்களும் அவர்களது தோழர்களும் கோட்டையை பிடித்தார்கள். மேலே ஏறி ஒரு வெள்ளைக்கொடியை சின்ன வெங்காயம் பறக்கவிட்டது. அந்த கொடியில் ‘அனைவரும் சமம்’ என்று எழுதப்பட்டிருந்தது.
கோட்டை பிடிக்கப்பட்டதை அறிந்த தக்காளி தன் படையோடு விரைந்தது.
சண்டை வேண்டாம் என்று பேச்சுவார்த்தைக்கு அழைத்தது சின்ன வெங்காயம்.
ஆனால் பேச்சுவார்த்தைக்கு வந்த தக்காளி சின்ன வெங்யகாயத்தின்மீது பாய்ந்து தலைமுடியை பிடித்து பியித்து இழுத்தது. இதனால் அதன் தோல் உறிந்தது.
சின்னவெங்காயத்தை பிய்த்தால் என்ன ஆகும் என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே.
தக்காளி கண்ணில் எரிச்சல். அந்த எதிரிபடையே கண்ணை கசக்கத்தொடங்கியது.
இதுதான் சந்தர்ப்பம் என்று தன் நண்பன் எலியை அழைத்தது சின்ன வெங்காயம்.
எலி தனது நண்பர்களோடு வந்தது. முதலில் மண்ணில் வலை-பொந்து தோண்டி சிறையில் இருந்த பெரிய வெங்காயத்தையும் பிறரையும் மீட்டது.
பிறகு முழு கோட்டையையும் பொந்துகள் வலைகள் தோண்டி தரைமட்டமாக்கியது எலிக்கூட்டம்.
‘ கோட்டையும் வேண்டாம்… அதிகாரமும் வேண்டாம் எல்லாரும் சமம்’ என்று அறிவித்தது சின்ன வெங்காயம்.
அதிலிருந்து எல்லா காய் கனிகளும் சுதந்திரமாக தங்கள் தங்கள் வேலையை செய்து வருகின்றன.
முந்தைய தொடரை வாசிக்க:
தொடர் 5: ஜானி ரொடாரியின் இத்தாலிய தொலைப்பேசிக் கதைகள் (டிங் டாங்…. யுத்தம்) – தமிழில்: ஆயிஷா. இரா. நடராசன்
டிங் டாங்…. யுத்தம்
நீங்கள் இரண்டு நாடுகள் போர் புரிவதை பார்த்திருக்கிறீர்களா. நாடுகள் என்றால் உண்மையில் நாடுகள் போர் புரியாது . மனிதர்கள் தான் போர் புரிவார்கள். மனிதர்கள் தான் இறந்தும் போவார்கள்.
அந்த நாடு, இந்த நாடு, இரண்டு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர். பயங்கர உக்கிரமாக நடந்தது. அந்த நாடு இந்த நாடு.
இரண்டு நாடுகளுமே பீரங்கிகளை பயன்படுத்தியது. பல ஆயிரம் பீரங்கிகள். ஒன்றின் மீது ஒன்று குண்டுமழை பொழிந்தது.. டுமீல்… டுமீல்….
மக்கள், ராணுவ வீரர்கள் , அதிகாரிகள் என்று இரண்டு பக்கமும் இறந்து கொண்டே இருந்தார்கள் டமார், டமார்..
பலபல வருடங்கள் யுத்தம் தொடர்ந்தது. எத்தனை வருடமோ கணக்கில்லை எத்தனைபேர் இருபக்கமும் இறந்தார்களோ சரியாக யாருக்குமே சொல்லத் தெரியவில்லை.
இதுபோல் நாடுகளுக்கு நடுவே நடக்கும் சண்டைகள் நமது சண்டை மாதிரி கிடையாது. நாம் காலையில் ‘க்கா’ விடுவோம். மதியம் கூட தாண்டாது ‘பழம் விட்டு விடுவோம் அல்லவா. அது மாதிரி அல்ல.
அந்த நாடோ, இந்த நாடோ, யார் வீட்டிலோ யாரோ ஒருவர் யுத்தத்தில் சாகாத நாள் இல்லை. இருபது வருடம்… ஏன் முப்பது வருடம் தாண்டியும் யுத்தம் தொடர்ந்தது உண்மையில் அந்த நாட்டுக்கம் இந்த நாட்டுக்கும் நடுவே யுத்தம் என்பது ஏன் தொடங்கியது என்பதே இப்போது யாருக்கும் நியாபகம் வரவில்லை.
ரொம்ப பெரியவர்கள் தொடங்கிய யுத்தம் அவர்கள் யாரும் இப்போது உயிருடன் இல்லை.
பெரியவர்கள் கலந்துகொண்ட யுத்தம் அவர்களும் யாரும் பாக்கி இருக்கவில்லை.
ஓரளவு பெரியவர்கள் பிற்காலத்தில் இணைந்துகொண்ட யுத்தம் அவர்களில் ஓரிருவரே மிஞ்சி இருந்தனர்… அது மட்டுமல்ல…
அந்த நாடு இந்தநாடு இரண்டிலுமே இருந்த வெண்கலம் பித்தளை எல்லாம் பீரங்கிகள் துப்பாக்கி செய்து தீர்ந்து போனது.
அந்த நாடு இந்த நாடு இரண்டிலுமே தோண்டித்தோண்டி எடுத்த இரும்பும் குண்டுகள் செய்து செய்து முற்றிலும் தீர்ந்து போனது.
இப்போது வேறுயாரும் கிடைக்காததால் குழந்தைகளில் பெரியவர்கள் யுத்த முனைக்கு போக நேர்ந்தது.
ஓரளவு பெரியவர்களில் மிஞ்சி இருந்த ‘மெகா ஜெனரல் குண்டுமா மழை பீரங்கித் தலை இடிமுழக்கி’ என்பவன் ‘அந்த’ நாட்டின் படை தளபதியாக இருந்தான்.
அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. நாட்டில் இரும்பு வெண்கலம் மிச்சமிருந்த இடங்கள் திடீரென்று அவனுக்கு நியாபகம் வந்தது.
கோவில் முதல் பள்ளிக்கூடம் வரை மாட்டப்பட்டிருந்த ஒலிக்கும் டிங்டாங் மணி யாவற்றையும் கழட்டி பீரங்கி செய்ய உத்திரவிட்டான். நாடே பரபரத்தது.
மொத்தம் நாற்பத்தி ஒன்பதாயிரம் மணிகளை கழட்டி ஒரு பிரமாண்ட பீரங்கி செய்தார்கள் 1000 உலைகளில் காய்ச்சி பத்தாயிரம் பட்டறைகளில் தயாரானது அந்த மிகப்பெரிய பீரங்கி.
அது வானத்தை நோக்கி மிகமிக பிரமாண்டமாக நின்றது. அதை அசைக்கவே முடியவில்லை. இத்தனை மகா மகா பீரங்கியை யாருமே பார்த்ததும் கிடையாது.
‘ஒரே குண்டு.. எதிரி நாடே அழிந்துவிடும்… நாம் ஜெயித்து விடலாம்’ மெகா ஜெனரல் குண்டு மழை பீரங்கித்தலை இடி முழக்கி கர்ச்சித்தான்.
ஆனால் அந்த பீரங்கியை போர் முனைக்கு எப்படி எடுத்துப்போவது? அதற்காக ஒரு படையே பொறுப்பு ஏற்றது.
30000 பளுதூக்கும் இயந்திரங்கள் ஒரு லட்சம் திடகாத்திர பைல்வான்கள் 97 ரயில்களில் அதை தூக்க முடியாமல் தூக்க ஏற்றி யுத்தமுனைக்கு கொண்டுபோய் சேர்த்தார்கள்.
இப்படி நம் ‘அந்த’ நாட்டுப்படை அந்த பிரமாண்ட பீரங்கியில் குண்டுவீசத் தயார் ஆனது.
எதிரில் இருந்த ‘இந்த’ நாடடுப்படை சளைத்ததா என்ன?
‘இந்த‘ நாட்டுப்படை தளபதியின் பெயர் என்ன தெரியுமா.
மெகாமெகா ஜெனரல் துப்பாக்கியானாதிபதி எரிமலைத் தலை மின்னல் கலக்கி.
இதுதான் அவன் பெயர். அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா…. ‘இந்த’ நாட்டில் கிடைத்த தொழிற்சாலை சங்கு சயரன் முதல் வண்டி வாகன ஹாரன் வரை எதையும்விட்டு வைக்கவில்லை ஒரு காலத்தில் குழந்தைகளை குழந்தைகளாக நடத்தியபோது வீட்டில் வைத்திருந்த கிளுகிளுப்பை தகர ஊதல்….. என்று நாடெங்கும் துழாவி எடுத்து அதைவிட உயரமான அதைவிட மிக மிகப் பெரிய பீரங்கியை செய்தார்கள் முப்பதாயிரம் உலைகளில் காய்ச்சி இருபதாயிரம் பட்டறைகளில் இட்டு அது தயாரானது.
‘ஹா… ஹா…. ஹா….’ மெகா மெகா ஜெனரல் துப்பாக்கியானாதிபதி எரிமலைத் தலை மின்னல் கலக்கி ஒய்யாரமாக சிரித்தான்.
‘ஒரே குண்டு …. எதிரி ஒருத்தரும் உயிரோடு மிஞ்சவே முடியாது’?
50000 பளுதூக்கும் இயந்திரங்கள் பலலட்சம் திடகாத்திர பைல்வான்கள் 107 ரயில்களில் ஏற்றிட அதே யுத்த முனைக்கு ‘இந்த’ நாடும் தன் மெகா மெகா பீரங்கிளை கொண்டுவந்து நிறுத்தியது.
வானமும் தெரியவில்லை சூரிய ஒளியும் வரவில்லை… தரையில் படவில்லை.இரண்டு பீரங்கிகளும் இரண்டு மலைபோல அங்கே நின்றன.
கடுமையான சூரிய வெப்பத்தில் – சுட்டெறிக்கும் கோடையில் அந்த பிரமாண்ட பீரங்கிகளின் நிழல் இருபக்கமும் இருந்த படைகளுக்கு வெப்பம் தணித்தது.
முதலில் ‘அந்த‘ நாட்டு தளபதி…. மெகா ஜெனரல் குண்டுமழை பீரங்கித்தலை இடி முழுக்கி தன் இடிக்குரலில் ஆணையிட்டான்.
‘குண்டு பாயட்டும்…. பயர்….?
பல நூறுபேர் சேர்ந்து ‘அந்த ’ நாட்டு மெகா பீரங்கியை இயக்கினார்கள்.
சற்று நேரத்திற்கு எதுவுமே நிகழவில்லை.
எதிரிப்படை நடுங்கியது.
ஆனால் பூமியே அதிரும் படி ‘அந்த‘ நாட்டு மெகா சைஸ் பீரங்கி
‘டிங்…. டிங்…. டிங்…. டிங்…. என்று பள்ளிக்கூடம் முடிவதற்கு மணி அடிக்குமே அப்படி.. பிரமாண்டமாக மணி ஒலித்து முழங்கியது.
‘இந்த’ நாட்டு தளபதி மெகா மெகா ஜெனரல் துப்பாக்கியானாதிபதி எரிமலைத் தலை மின்னல் கலக்கி
பீரங்கி முன் நின்றான்.
‘குண்டுகள் எதிரியை துளைக்கட்டும்… பயர்….’ என்று அலறினான்.
சற்று நேரத்திற்கு எதுவுமே நிகழவில்லை.
ஆனால் பூமியே அதிரும் படி ‘ இந்த’ நாட்டு மெகா பீரங்கி
‘ப் பீ…. ப்பீ…. ப்பீயீ..யீ… ஈ…ஈ…. ? என்று காதுகள் துளைக்க ஊதித் தள்ளியது.
அடுத்தது ‘அந்த’ நாட்டு பீரங்கி இந்த முறை அது.
‘டாங்…. டாங்…. டாங்… டா ஆ ஆ ஆங்’ என்று அதிர்ந்தது.
உடனே ‘இந்த’ நாட்டு பீரங்கி
‘பீங்… பாங்… பீங். பாங் …பீபீபீங்.. பாபாபாங்’ என்று சயரன் ஒலித்தது.
இருபக்கத்து படை வீரர்கள் எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
அவர்கள் பெரும்பாலோர் குழந்தைகள் அல்லவா. விரைவில் ‘ ஏ’ என்று கூச்சலிட்டப்படி ஒருவரை ஒருவர் அனைத்துக்கொண்டு ஆடிப்பாடத்தொடங்கினார்கள். ‘யுத்தம் முடிஞ்சிடிச்சு… கொண்டாடுங்கள் ’… யாரோ கத்தினார்கள்.
இரு தளபதிகளும் தப்பித்தால் போதும் என்று அவரவர் வாகனங்களில் ஏரி அவசரமாக அங்கிருந்து ஓடிப்போனார்கள்
இப்படியாக யுத்தம் முடிந்துவிட்டது.
தொடர் 4: ஜானி ரொடாரியின் இத்தாலிய தொலைப்பேசிக் கதைகள் (கைத்தடி ரேஸ்) – தமிழில்: ஆயிஷா. இரா. நடராசன்
கைத்தடி ரேஸ்
அந்த சிறுவனின் பெயர் கிளாடியோ. அவனுக்கு உங்கள் வயதே இருக்கும். ஆனால் பெரும்பாலும் தனியாகத்தான் விளையாடுவான். கையில் கிடைக்கும் எல்லா பொருட்களும் அவனது நண்பர்கள் ஆகிவிடும். சில சமயம் வெறும் கைகளே அவனோடு விளையாடும்.
கொஞ்சம் சூரியஒளி…. அப்புறம் அவனது கை. அதுவே மான், நாய், பருந்து, வாத்து என நிழல் விளையாட்டு மிக அற்புதமாக இருக்கும்.
ஆனால் இப்போது அவனிடம் ஒரு விளையாட்டு பொருள் உண்டு. கைத்தடி அது மேலே வளைந்து கொக்கி வடிவில் இருந்த மூங்கில் தடி. அதை அவனும் ஆரம்பத்தில் சாதாரணமாகத்தான் நினைத்தான்.
இன்று காலையில்தான் அது அவன் கைக்குக் கிடைத்தது. எப்படி தெரியுமா.
அவன் வீட்டு வாசலில் ஒரு புன்னை மரம் உண்டு அதனடியில் நிழலாக இருக்கும் அங்கே அணில்கள் உண்டு. அவன் அவற்றின் ஓட்டங்களை கண்டு அவற்றை விரட்டி விளையாடினான்.
அப்போது வீதிவழியே ஒரு தாத்தா நடந்து போனார். கிளாடியோ அவரைப் பார்த்ததே கிடையாது. அவர் உயரமாக இருந்தார். பனித்தொப்பி அணிந்து இருந்தார். தோல் ஷீ அணிந்திருந்தார். அவர் கையில் தான் அந்த கைத்தடி இருந்தது. சிவப்புநிற கைத்தடி.
அவரை பார்த்து அவன் வணக்கம் என்றான். அவனிடம் அந்த நல்லப் பழக்கம் இருந்தது. வயதானவர்களைப் பார்த்தால் வணக்கம் தெரிவிப்பது.
தாத்தா பதிலுக்கு ‘வணக்கம்… தம்பி இன்றையநாள் உனக்கு சிறப்பாக அமையட்டும்’ என்று கூறி அந்த கைத்தடியை அவனிடம் கொடுத்தார்.
‘இந்தா… விளையாடிக் கொண்டிரு… நான் திரும்பி வரும் வரை விளையாடு’ என்று கூறினார்.
பிறகு அவர் நடந்து சென்றுவிட்டார்.
கிளாடியோ தன் கையில் இருந்த கைத்தடியை நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
முதலில் இப்படியும் அப்படியும் சுழற்றினான். வளைந்த மேல் முனையை கையில் பிடித்து அதை முழுவட்டமாக காற்றில் சுழல வைத்தபோது… பறக்கும் உணர்வு ஏற்பட்டது.. அந்தக் கைத்தடி ஒரு மாயக் கைத்தடியாக கிளாடியோவின் விளையாட்டு உலகில் மாற்றம் அடைந்தது இப்படித்தான்.
கைத்தடியை வளைந்த முனை முன்னே இருப்பது போல் பிடித்து அதன்மேல் உட்காருவது போல இருகால்களுக்கு நடுவே விட்டான்…என்ன அதிசயம் அது குதிரையாக மாறியது.
அவனை சுமந்து அது அந்தக்குதிரை கடக் கடக்…. கடக் கடக் என்று வட்டப்பாதையில் ஆரம்பத்தில் மித வேகத்திலும் பிறகு… அதிவேக குதிரையாகி மின்னல் வேகத்தையும் எட்டியது.. எத்தனையோ தொலைவு அவன் வந்துவிட்டிருந்தான்.
அவனது கால்கள் தரையை உணர்ந்தபோது ரொம்ப சாதுவாக பழையபடி கைத்தடியாகி இருந்தது.
இருமுறை காற்றில் முன்புபோல சுழற்றினான். பிறகு அதேபோல கால்களுக்கு நடுவே வைத்து பிடித்தான். என்ன அதிசயம். அது அவனது சைக்கிளாகி இருந்தது. கிளிங்… கிளிங்… அவன் மணி ஒலித்தபடியே அந்த சிவப்புநிற அழகு சைக்கிளில் ஒய்யாரமாக வலம் வந்தான் கடைவீதி வரை சென்றான். பிறகு பள்ளிகேட் வரை போனான். அப்புறம் ஊரின் எல்லைவரை சென்று தொட்டுத்திரும்பினான். கிளி…. கிளிங்.. கிளி..கிளிங் சத்தம் அடுத்த பலமணிநேரங்கள் ஒலித்துக்கொண்டே இருந்தது.
கால்கள் தரையை உணர்ந்தபோது அது பழையபடி கைத்தடியாக மாறியது. இப்போது மூன்று முறை அதை காற்றில் வட்டமிட சுழற்றினான்.
இந்தமுறை அவனது கால்களுக்கு நடுவே அவன்பிடித்து அமர்ந்தபோது அவனுக்கு ஒரு ரேஸ்கார் கிடைத்தது. நீள்வட்டப்பாதையில் மற்ற ரேஸ்கார்களை முந்தியபடியே விர்… ரூம்… என்று கிளாடியோவின் சிவப்புநிற ரேஸ்கார் சென்றது.
விர்…. ரூம்…. விர் ரூம்… அவ்வளவுதான் அது முடிவுக்கோட்டை தொட்டு முதலிடம் பிடித்தது….. அரங்கமே எழுந்து நின்று பலத்த கரவொலி மூலம் ஆரவாரமிட்டு வாழ்த்தியது…. கிளாடியோ முகம் சிவக்க தலைதாழ்த்தி கோப்பையை ஏற்றான்.
அடுத்தமுறை அதே கைத்தடி என்னவாக மாறியது தெரியுமா… விண்வெளி ராக்கெட்டாக மாறியது. விர் ரூட்…. அவன் நொடியில் விண்வெளியில் இருந்தான். சூரியக் குடும்பத்தின் எல்லா கோள்களின் வழியாகவும் அவனது விண்வெளி ஊர்தி பயணித்தது.
சிவப்புக்கோளான செவ்வாய் கிரஹம். பிரமாண்ட கோளான வியாழன் கிரஹம், பளபளத்து மின்னும் வெள்ளி கிரஹம் பிறகு அந்த விண்வெளி ஊர்தி சனிக்கோளின் வளையம் வழியே வழுக்கியபடி ஓடியது.
கிளாடியோ வகுப்பில் கற்றதை எல்லாம் நேரில் அனுபவித்துக் களித்தான்.
கால் தரையை உணர்ந்த போது. அவன் எதிரே அந்த தாத்தா நின்று கொண்டிருந்தார்.
கைத்தடியை திரும்பப் பெற்றுக் கொள்ள வந்து விட்டார் என்று நினைத்தான் கிளாடியோ.
அவனுக்கு எரிச்சலும் ஏமாற்றமும் ஏற்பட்டது.
கைத்தடியை இறுகப் பற்றிக்கொண்டான்.
‘தரமுடியாது…’ என்பதுபோல அதை மார்போடு அணைத்தான்.
‘உனக்கு அதை பிடித்திருக்கிறதா’ அவர் கேட்டார்.
‘ரொம்ப… பிடித்திருக்கிறது’ பதட்டத்தோடு சொன்னான் கிளாடியோ.
‘நீயே … அதை வைத்துக்கொள்ளலாம்… எனக்கு அது இனிதேவை இல்லை’ என்றார் அந்த பனித்தொப்பி தாத்தா..
அவன் ஆச்சரியத்தோடு பார்த்து நிற்க அவர் நடந்து போய்விட்டார். தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக அவன் உணர்ந்தான்.
ஆனால் எவர் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார் என்பதை அவன் உணரவில்லை.
உலகிலேயே சந்தோஷமான முதியவர்கள் யார் தெரியுமா.. குழந்தைகளுக்கு ஏதாவது ஒன்றை பரிசாக அளித்து அவர்களின் முக மலர்ச்சியை கண்டு ரசிப்பவர்கள்தான்.
ஆறாத ஆறு குழந்தைகள் கதை – இரா. கலையரசி
“கசகச னு ஒரே வியர்வையாக இருக்கு. வெயில்காலம் ஆரம்பிச்சிருச்சுல அதான்”.பேசியபடி தண்ணீரில் மூக்கை அலசிப் பார்த்தது மித்து.
நெடி தாங்க. முடியாமல் அப்படியே பின்னுக்கு ஓடியது.’இது என்ன?இப்டி ஒரு வாடை,.ஆத்து தண்ணீர் கெட்டு போயிருச்சோ?’
“படிச்ச மனுசன் பாடு தான் பாட்டா பாடுது ஊருதான்”.
தத்துவ தாத்தா ஆந்தை பாடியவாறே அங்க வந்தார். “என்ன எல்லாரும் ஆத்தோரமா நின்னுட்டீங்க?”னு கேட்க “வாங்க வாங்க, தண்ணீர் குடிக்க அலக விட்டேன்.உயிரே போயிருச்சு” என்று மித்து அழுகாத குறையா பேசுச்சு.
“எல்லாம் கழிவுதான்..அங்க இருக்கிற சாயப்பட்டறையில இருந்து வருது…ஆறே செத்த மாதிரி ஆகிருச்சு”.
“வட்ட வட்டமா நுரை நுரையா வருதே? நம்ம இப்டி தான் சாவோம் போல” சொல்லிட்டுப் பறந்தது மித்தி.
“ஓடுற தண்ணியில ஒரு குடம் விசம் குடிக்க நெனச்சா ஆகிடும் நாசம்”.
பஞ்ச் பேசிப் பறந்துட்டாரு ஆந்தையாரு.
என்ன குழந்தைகளா? ஆறு குளங்கள் மாசடையறத பத்தி என்ன நினைக்கறீங்க?