உரைச் சித்திரக் கவிதை 23: பெயர் எனும் அமுதக் கடல் – ஆசு

உரைச் சித்திரக் கவிதை 23: பெயர் எனும் அமுதக் கடல் – ஆசு



பெயரில் தான் அவன் வாழ்கிறான். பெயரளவிலும் வாழ்கிறான். ஒருவனின்
பெயர் அவனை பொருள் பொதிந்ததாய்
ஆக்கிவிடுகிறது.

அவன் ஏன்? சில வேளை பெயரற்றும் இருக்க வேண்டியதாகிறது. அந்நேரத்தில்
அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் சற்றே
இடைஞ்சல் செய்வதாய் இருக்கலாம்.

காரணம் தெரியாத விழிப்பில், அறியாமல் பறந்து அக்கரையை கடக்கும்
பறவைகளின் சிறகுக்கு தான். சிறகின்
வலி அறிவது போல. வலிமையில் எல்லாமும் இறகாகின்றன.

அந்த மரம் எவ்வித பெயரையும் கொண்டதில்லை. பெயர் எல்லாம் ஒரு மனிதனால் அறியப்படுகிறது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. தன்னைத்தானே அறிவதும் தனக்கான
பெயரில் இல்லை.

ஆனால்,
பெயர் தான் அமுதம்,காற்றினில் கரைந்து உருகும் இசையாக, உங்கள் பெயரில், ஒரு வாழ்வு திரண்டு தித்திக்கிறது. யார் யாரோ தூற்றியதெல்லாம், சுத்திகரித்து குருதி ஓட்டமாக எண்ணங்களில் திளைப்பே பெயர்.

ஒரு கவிஞனின் ஆன்மாவாக அவன் பெயர் ஞாலம் முழுமைக்கு சிறகடித்து கொண்டேயிருக்கிறது. அவன் எழுதியவை எல்லாம் தாள்களில் உயிர்ப் பெற்று பறக்கின்றன.

அமுதமென நிறைந்த கடல் பெயர்களால்
நிரம்பியவை. அதில் கருத்தின் நீட்சியும்
பேரன்பின் திரட்சியும், பிரபஞ்சத்தின்
ஆகச் சிறப்பின் மகுடமே பெயர்.

பெயர் எனும் மகுடமே வாழ்வு முழுமைக்கும் ஒருவனை அரசாட்சி செய்கிறது.

அதனால், பெயரினால் எல்லாமும் ஆகுக.

ஆசு


Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *