ஹைக்கூ கவிதைகள்
– – – – – – – – – – – – – – – – – – – 
(01)
சலனமற்ற குளம்
நகர்ந்து கொண்டிருக்கிறது
மேகத்தின் பிம்பம்
(02)
பூட்டப்பட்ட  வீடுகள்
வீதிகளில் நடமாடுகிறது
யுத்தத்தின் மிச்சம்.
(03)
சோப்பு குமிழிகள்
உடைந்து போகின்றன
சூரிய பிம்பங்கள்.
(04)
மண் வாசம்
போகாது நின்றது
மழைத் தூரல்.  .
(05)
முதல் மழையை வரவேற்க
பூத்து காத்திருக்கின்றன
புன்னை மரங்கள்.
(06)
குடிசைக்குள் புகுந்து
சிம்னி விளக்கை அணைக்கிறது
முதுவேனில் காற்று.
(07)
சாமத்துக் கோழியின்
கூவலில் விழித்துக்கொள்கிறான்.
கசாப்புக் கடைகாரன்.
(08)
அயர்ந்து உறங்கும்
வழிப்போக்கன் மேல் விழுகிறது.
ஆலம் பழம்.
(09)
மூக்கைத்தொடும் தூரத்தில்
எங்கோ மலர்ந்திருக்கிறது.
தாழம்பூ.
(10)
முற்றியது கொய்யா.
இரு தினங்களாய் காணவில்லை.
அடிக்கடி வரும் அணில்கள்.
               – அன்பழகன்ஜி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *