நூல்: “கொண்டைக்குருவி”
ஆசிரியர்: பாவண்ணன்
(Rhymes for children)
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன்,
Pages : 64 /
Rs.60/
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com
“இசைமொழிப் பாடல்கள்”
“குழந்தை எழுத்தாளன் தானும் ஒரு குழந்தையாகி விடுகிறான்” என்று சொல்வார் குழந்தை இலக்கிய முன்னோடி ‘வாண்டு மாமா’. இச்சொல்லை தன் அகச் சுடராகக் கொண்டு பயணிப்பவர் “பாவண்ணன்”. அண்டரண்டப் பட்சியின் சிறகுகள் கொண்ட, சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் இவர்.
குழந்தைகளின் இசைமொழி இத்தொகுப்பில் பாடல்களாக வடிவம் கொண்டு மலர்ந்துள்ளது. இயற்கையோடு கலந்த உலகை அழகிய சித்திரங்களாகத் தீட்டியுள்ளார் நூலாசிரியர். ஓசை நயத்துடன், பன்முக உலகை வெளிப்படுத்தும் சிறார் இலக்கிய ஆளுமையாக பாவண்ணன் அவர்களை இத்தொகுப்பு வழி பார்க்க முடிகிறது.
குழந்தைகளின் படைப்பூக்க ஆளுமை அவர்களின் குழந்தை நாட்களில்தான் கடலென அவர்களுக்குள் கட்டமைக்கப்படுகிறது. இப்படைப்பூக்க நிலத்தில் பயிர் விதைகளை பாடல்களாக விதைத்துப் போகிறார் பாவண்ணன் அவர்கள். குழந்தைகளின் செல்ல விலங்குகளும், பறவைகளும் இத்தொகுப்பில் உயிரோட்டத்துடன் துள்ளி விளையாடுவதைப் பார்க்க முடிகிறது. பால் மனம் கொண்ட மெல்லிய இதயத்தில் இருந்து உதிர்ந்த வண்ண சிறகுகளாக தொகுப்பில் உள்ள பாடல்கள் காட்சியளிக்கின்றன.
ஐரோப்பிய இலக்கியங்களின் சிகரமாக ஸ்காண்டிநேவிய இலக்கியத்தை சொல்வது போல, சிறார் இலக்கியத்தின் சிகரம் என்று குழந்தைப் பாடல்களை சொல்ல வேண்டும். குழந்தைகளுடன் உரையாடும் தன்மை கொண்டவைகளாக அமைய வேண்டும் இப்பாடல்கள்.
இலைகள் துளிர்க்கும் அழகும், பூத்த பூக்களின் நறுமணமுமாக இருக்க வேண்டும் குழந்தைப் பாடல்கள். அத்தகைய குழந்தைப் பாடல்களாக அமைந்துள்ளன இந்த நூலில் உள்ள பாடல்கள். ஒரு தாயின் அன்புடனும், ஆசிரியரின் கனிவுடனும், நண்பர்களின் நேசத்துடனும் குழந்தைகளை அணைத்து வருடிக் கொடுக்கின்றன இப்பாடல்கள்.
கவிமணி, பாரதி, பாரதிதாசன், அழ.வள்ளியப்பா என நீளும் குழந்தைக் கவிஞர்களின் வரிசையில் சமகால ஓசைநயம்மிக்க கவிஞராக மலர்ந்து நிற்கிறார் பாவண்ணன் அவர்கள். இந்த நூலில் உள்ள பாடல்களின் ஓசை இன்பம் குழந்தைகளை துள்ளச் செய்யும் என்று உறுதியாகச் சொல்லலாம்.
“தடதட வண்டி
தம்பி ஓட்டும் வண்டி
காற்றைப் போல பறக்கும் வண்டி
கல்லிலும் மண்லும் ஓடும் வண்டி
……”
(வண்டி)
“அச்சாலக்கடி அச்சாலக்கடி
குண்டு மாம்பழம்
கண்டமங்கலம் தாத்தா கொடுத்த
குண்டு மாம்பழம்
….”
(மாம்பழம்)
“வெள்ளையான பூனைகுட்டி
வீட்டைச் சுற்றும் பூனைக்குட்டி
குள்ளமான பூனைகுட்டி
குறும்புகாரப் பூனைகுட்டி
……
(பூனைக்குட்டி)
“தத்தக்கா புத்தக்கா கன்றுக்குட்டி
தாவ நினைக்கும் கன்றுக்குட்டி
……
(கன்றுக்குட்டிக்கு முத்தம்)
“ஓலைவெடி ஓலைவெடி
தாத்தா செய்த ஓலைவெடி
பனையோலையை நறுக்கி
பக்குவமாய்ச் செய்த வெடி
…..”
(ஓலைவெடி)
இப்படியான ஓசை நயமிக்க வரிகள் கொண்ட இத்தொகுப்பில் உள்ள பாடல்வரிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
பாரதி, பாரதிதாசன், கவிமணி, அழ.வள்ளியப்பா, மயிலை சிவமுத்து ஆகியோர்களைத் தொடர்ந்து பாவண்ணனின் பாடல்களும் சிறுவர் பாட நூல்களில் இடம்பெற பூரண தகுதியைக் கொண்டுள்ளன.
மழலை பாடல்களின் சமகால சிகரம் என்று “கொண்டைக்குருவி” தொகுப்பைச் சொல்லலாம். மழலையர் பள்ளிகளில் ஒலிக்க வேண்டிய பாடல்கள் இவை என்றும் உறுதிபட சொல்லலாம்.
***
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.