” உண்மையான கருத்துக்களை மறைத்து,    நேரெதிர் செயல்கள் ஆற்றும் ஒரு அறிவு ஜீவி கிளிம் சாம்ஜி  . நடுத்தர வர்க்கத்தின் அச்சு அசலான தாமரை இலைத் தண்ணீர்.   வரலாற்றை தனக்கே உரிய வகையில் எடுத்துக் கொள்வதோடு,   வரலாற்றின் தேர்வுசெய்யப்பட்ட ஒரு பகுதி முகத்தில் மாத்திரமே விழிக்க விரும்புகிறவன்.  புழுக்கம் மிகுந்த இவ்வமைப்பை கேள்விக்குட்படுத்தாமல், அதற்குள்ளிருந்து உருவாகும் வெக்கை மனநிலைகள் குறித்துப் பேசாமல், ஒளித்து  மறைத்துத் திரியும் இலக்கிய நுண்ணரசியல் குறித்து இந்நாவலில்   வெளிப்படுத்துகிறார் மார்க்சிம் கார்க்கி

“வாழ்க்கை குறித்த முழுமையான எதிர்நிலை நோக்கு தமிழ் நவீனத்துவத்தின் முதிர்ச்சி நிலை” என்று கூற்று சமகாலத்தில்   முன்னெடுக்கப்படுகிறது. இந்நோக்கு  காரணமாய் கிளிம் சாம்ஜியின் நகல்களின் நடமாட்டம் எழுத்துலகில்  கூடுதலாகியிருக்கிறது.காற்றோட்டமான ஒரு அமைப்பை உண்டுபண்ணும் எழுத்து முயற்சி இன்றி,    கிளிம் சாம்ஜி போல   அவரவர் பாடல் அவரவர்   பாடுகிறார்கள்.     கிளிம்மின்  வாழ்வுச் செயல்பாடுகளை முன்னிறுத்தி, இதுவரை தமிழில் திறக்காத கதவுகள், சாளரங்களைத் திறந்து காட்டும் முதல்பதிவைச் செய்கிறார்   ஈழத் தமிழ் எழுத்தாளர் ஜோதிகுமார்  . ’ தீர்த்தக்கரை’ – இலக்கிய இதழாசிரியர், ஆய்வாளர். ஒவ்வொரு படைப்பாளியும் தன்னை உணரவும், அவ்வழியில் தன்னெழுத்தை மதிப்பீடு செய்யவும் தமிழின் சில எழுத்துக்காரர்களை ஒப்பிட்டுச் செய்யப்படும் இப்பதிவு அதிக பக்கங்களுடையதாயினும் தவிர்க்கவியலா வாசிப்புக்கு  உரியதாகும்.குறிப்பாக இறுதியாய் வருகிற நான்காம் பகுதி அவசியம்  வாசிப்புக்கு உட்படவேண்டியாகும்..  

தோழமையுடன்  ,பா.செயப்பிரகாசம் . ( [email protected])

Russian writer Maxim Gorky still courting controversy on his 150th ...

“கிளிம்மின் 40 வருட கால வாழ்வு” என்னும் பிரமாண்ட நாவல் பற்றி  மாக்சிம் கார்க்கி ”  இது எனது வாழ்நாளின் உச்ச சவால் (ULTIMATE TEST)   ; என் மொத்த வாழ்வின் சாரம்”  எனக் குறிப்பிடுவார்.  

கிளிம் நாவலின் மூன்றாம் தொகுதி வாசிப்பு தவிர்க்க முடியாமல், எமது இன்றைய தமிழ் இலக்கிய உலகை ஒரு தரம் ஒப்பிட்டுப் பார்க்க வைக்கிறது.
1.   தமிழ் இலக்கிய உலகு இன்று எதை நோக்கி நகர்கின்றது?. 

  1. ஜெயமோகன் போன்றோர் யாருடைய ,எதன் கதைசொல்லிகள்? 

  – என்பது போன்ற அடிப்படை வினாக்களை  கிளப்புவதாக உள்ளது. இக்கேள்விகளே  இக்கட்டுரையின் நான்காம் அத்தியாயத்தில் அலசப்படுகின்றன.  முதல் மூன்று அத்தியாயங்களை வாசிக்க நேரங்களை ஒதுக்க முடியாதிருப்பின், எமது தமிழ் இலக்கிய உலகைப் பரிசீலனைக்கு உட்படுத்தும்     நான்காம் அத்தியாயத்தினை  அவசியம் வாசிக்க முற்பட வேண்டும் . 

மேற்படி அத்தியாயங்கள் குறித்த விமரிசன நோக்கிலான  கருத்துரைகள்  எமக்கு  வளமூட்டுபவை. 

தோழமையுடன் – ஜோதிகுமார்.  

 [email protected]

 

Das Leben des Klim Samgin by Maxim Gorky

 

 

 ’கிளிம் சாம்ஜியின்  வாழ்வு ‘  புதினம் 

மூன்றாம் தொகுதி – ஒரு அறிமுகம்.

  மாக்சிம் கார்க்கியின் இறுதியானதும் ,  அவர் எழுதிய நாவல்களில் மிகப்பெரியதுமான நாவல் “கிளிம்மின் 40 வருட கால வாழ்வு”.  
கார்க்கி இந்நவீனத்தை எழுத  மொத்தமாய் 11 வருட காலம் எடுத்துக் கொள்கிறார். ஆயினும் இதற்கான தயாரிப்பு 20-30 வருடங்களாகவே கார்க்கியின் உள்ளத்தில் இடம் பெற்றுப் பதியமாகி இருந்திருக்கிறது. நான்கு பகுதிகளைக் கொண்ட இந்நாவல்  2000 பக்கங்களாய் விரிகின்றது. கிட்டத்தட்ட 800 பாத்திரங்கள்!

1880- கள் முதல் 1918 வரையிலான ஒரு 40 வருட கால ருசிய வாழ்வைப் படம் பிடிக்க முனையும் இந்நாவல், அக்கால கட்டத்தில் பெரிதும் உவந்து பேசப்பட்ட   70 வித்தியாசமான தத்துவ ஞானிகளையும் அரசியல் விற்பன்னர்களையும் தன் பார்வை வீச்சுக்குள்   கொணர்ந்துள்ளது.

டால்ஸ்டாயின் பெயர் மாத்திரம் நாவலில் கிட்டத்தட்ட  நூறு இடங்களில் பேசப்படுகிறது.  .இதே அளவில் தாஸ்தாவஸ்கி, அலனொய்ட் போன்றோரின் முகங்களும் பரிசீலனைக்குள்ளாகின்றன.


            1928 -இல், முதல் இரண்டு பாகங்கள் முடிவுற்று வெளிவந்த நிலையில் கார்க்கியின் பெயர் இந்நாவலுக்காக நோபல் பரிசுக்கான பட்டியலில் இடம் பிடிக்கின்றது.
கார்க்கி தனது நாவலின் நான்காம் பகுதியை – கிட்டத்தட்ட 300 பக்கங்கள் நிறைவு செய்த வேளையில் மறைந்து விடுகிறார்.மிகுதியை, அவர் விரிவாக எழுதி வைத்த  குறிப்புகளைக் கொண்டு ஒரு எழுத்தாளர் குழாம் நிறைவு செய்கின்றது. 
இந்நாவலின்  மூன்றாம் தொகுதியின் அறிமுகம் நமது சமகால தமிழ் இலக்கியப் பரப்புடன் ஒப்பு நோக்கி வரையப்பட்டுள்ளது.

பகுதி 1

’கிளிம்’ வாழ்க்கையின் மூன்றாம் தொகுதி, அவனது 30 – களைப் பதிவு செய்வதாய் அமைந்துள்ளது.

1905-ஞாயிறு படுகொலைகளை அடுத்து ருசியாவில் இடம்பெறும் புரட்சி அலைகளின் இறுதிவீச்சும் வீழ்ச்சியும் இக்காலப் பகுதியிலேயே நடந்தேறுகிறது.இப் படுகொலைகள் ருசிய வரலாற்றில் ஒரு திருப்பு முனை என்று கூறப்படுகின்றது. ஓர் அரசு இயந்திரத்தின் உண்மைப் பண்பை, மிகக் கறாராக மக்களுக்கு அம்பலப்படுத்திய ஓர் நிகழ்வாக இது வரலாற்றில் பதிவானது. அரச யந்திரத்தின் உண்மைப் பண்புகளை இப்படியாகப் படம் பிடித்துக் காட்டும் படுகொலைகள் வரலாற்றில் சகசமானது தான். 

இந்தியாவின் ஜாலியன் வாலாபாக் படுகொலைகளாகட்டும், 1971-1989-2009 – இன் இலங்கைப்  படுகொலைகளாகட்டும், அரச யந்திரத்தின் உண்மை முகத்தை  தோலுரித்துக் காட்டுகின்றன. ஆனால் ரசியாவில் நடந்ததைப் போல் இங்கே இப்படுகொலைகளும், இப்படுகொலைகளுக்கு இட்டுச் சென்ற அரசியலும், சரியான விமர்சனக் கற்கைகளுக்கூடு மக்களைச்  சென்றடைந்ததாகத் தெரியவில்லை. உண்மையைச் சொன்னால், ‘தவறுகளை’ப் புதைத்து,  மீள மறைத்துவிடும் அரசியலலே இங்கு காணக் கிட்டுகின்றது. காலப்போக்கில் மக்கள் மீளவும்  தொடர்ந்து அத்தகைய கனவுலகில் சஞ்சரிக்கச் செய்யவும்,  மக்கள் தங்கள் அரசியல் இருண்மையில் ஆழ்ந்து போகவும் இதுவே காரணியாகிறது.  

M. Gorki: Artamonow i synowie; 9 stycznia; Klim Samgin t. 1-3 ...

  இப்படுகொலைகளை அடுத்து, 1905 இல், மாஸ்கோ வீதிகளில், பாதுகாப்பு அரண்கள் எழுப்பப்படுகின்றன.  கிட்டத்தட்ட யாழ் கோட்டையில் இருந்து ஊருக்குள் நுழையும் சிங்களப் படையினரைத் தடுப்பதற்காக எழுப்பப்பட்டவற்றை போலத்தான்.

இப்பாதுகாப்பு அரண்களில் ஒன்று ’கிளிம்’ வாழும் வீட்டை ஒட்டியும் எழுப்பப்படுகின்றது – மக்களைக் காக்கும் பொருட்டு. 

மக்கள் இப்பாதுகாப்பு அரண்களை,‘எமது’ பாதுகாப்பு அரண்கள் என்று கொண்டாடத் துணிகையில், ஒரு இடதுசாரி புத்திஜீவியாகவும், ஒரு ‘இயக்கத் தோழனாகவும்’ வலம்வரும் கிளிம்மின் மனநிலையோ வேறுபட்டதாய் இருக்கின்றது.

“இப்படியாய் வீதியை மறைத்து, தடைகளை தாம் நினைத்தபடி எழுப்பினால், சுடாமல் என்னதான் செய்வார்களாம்…” 

       -என்பது அவனது அக்கணத்து அந்தரங்க மனநிலையாக இருக்கின்றது. இதேபோன்று மக்கள் குறித்தும் ‘புரட்சி’ குறித்தும் அவன் கொள்ளும் மனநிலையினையும், பிறர் அறியா வண்ணம் – முக்கியமாக – தான் பழகக்கூடிய, தனது வட்டத்து நண்பர்கள், தோழர்கள், தனது இடதுசாரித் தொடர்புகளில் உள்ள எவரும் அறியா வண்ணம் அந்தரங்கமாய் அவனுள்ளே பேணிப் பாதுகாத்துக் கொள்கின்றான்.  

புரட்சி  குறித்து நினைத்துக் கொள்வான்: “யாருக்காகவாம் இந்த ஐசெக்குகள் பலிகொடுக்கப் படுகின்றார்கள்” மேலும் சொல்வான்  “எந்த ஒரு புரட்சிக்காகவும், எக்காலத்திலும் நான் ஓர் ஐசெக்காக ஆகப்போவதில்லை”  .

பைபிளில் வரும்   ஐசெக்கினது தந்தையின் கனவில் தோன்றும் இறைவன், ’ஐசெக்கை எனக்குப் பலிகொடு’ என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவனது தந்தை ஐசெக்கை கட்டிப் பலி கொடுக்க அழைத்துச் செல்வான்.(நமது சிறுத் தொண்டர் நாயனார், சிவனடியாரான இறைவனுக்குத் தன் மகனை வெட்டிக் கறி சமைத்துப் போட்டாற் போல).

சுருங்கக் கூறினால், புரட்சி  குறித்த கிளிம்மின் கற்பிதம் இப்படியாகவே இருக்கின்றது.   அதாவது இத்தொழிலாளர்கள் யாருக்காகவோ – எந்த ஒரு அப்பனுக்காகவோ பலி கொடுக்கப்படுகையில், தான் யாருக்காகவும் அல்லது எந்த ஒரு இறைவனுக்காகவும் ஒரு ஐசெக்காகப்   பலியாகப் போவதில்லை  என்பதே அவனது திண்ணமான முடிபாகின்றது.

   இந்த எண்ண ஓட்டங்களை, தனக்குள்ளேயே அடக்கி இப்படியாய் பாதுகாத்து வரும் கிளிம், வெளியில் சகஜமாக, ஓர் மார்க்ஸிஸ்ட் தோழனாய், அல்லது அவர்களது நம்பிக்கைக்குரிய நண்பனாய், ஓர் இடதுசாரி வட்டத்துக்குள் தொடர்ந்து வலம் வருகின்றான்.

இதேபோன்று ‘வர்க்க ஒற்றுமை’, ‘வர்க்க சகோதரத்துவம்’, ‘மக்கள் மேல் காதல்’போன்ற கருத்துநிலைகள் யாவும் அவனைப் பொறுத்தவரை வெற்று கோசங்கள், பிதற்றல்கள், தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ளும்  கற்பனை முடிவுகள் என முடிவு செய்கின்றான். 

KLİM SAMGİN'İN HAYATI (KIRK YIL) 1. CİLT GENÇLİK YILLARI, MAKSİM ...

ஓர் ஐந்நூறு பேர் சேர்ந்து மாஸ்கோ நகரைப் பிடிப்பதாவது – ஆட்சி செய்வதாவது! இவ்வகையில் புரட்சி என்பது வெறும் கட்டுகதை என்றளவிலேயே அவன் மனம் முடிவு செய்து விடுகிறது. (பாரிஸ் கம்யூனை அவன் கற்றிருந்தாலும்). இப்படியாக தான் வாழும்   சுவாத்தியத்திலிருந்து,  வாழ்க்கையிலிருந்து, புறச்சூழலிருந்து அந்நியமாகிற   கிளிம் ஓர் குறித்த திசை நோக்கி நகரத் தொடங்குகிறான் – தன் சிறுபிராயத்து வாழ்வைப் போலவே.

இதே போன்று பெண்கள் தொடர்பிலும் வாழ்வில் அவன் கொள்ளக்கூடிய ஒரு வகை அந்நியத் தன்மை, வாசகனைப் பெரிதும் உறுத்துகிற ஒன்றுதான்.  

      ‘படுக்கையறையை தவிர்ந்த ஏனைய நேரங்களில் பெண் என்பவள், ஒரு தொந்தரவே’ என்பது அவனது முடிந்த முடிபு.   ‘படுக்கை அறையில் கூட அவளது பொருத்தப்பாடு அல்லது ஏற்புடைமை, ஒரு குறித்த நேரம் வரையிலேயே தாக்குப் பிடிக்க கூடியது’என்றும் முடிவு செய்து கொள்கிறான். 

அவன் கூறிக் கொள்வான்: “புலமைகொண்ட  , கண்டிப்பான மனிதர்கள், பொதுவில் புத்திஜீவிகள் எனப்படுவோர், பாலியல் தொழிலாளரையே விரும்புவது என்பது ஏற்கத்தக்கதுதான்” .

தனது 30-களுக்கு வந்து சேருகையில் மேற்படி முடிவுகளை எடுத்துவிடும் கிளிம் தன்னை ஆகர்சிக்கும் ‘ வரலாறு’ தொடர்பிலும், ஓர் தாமரை இலைத் தண்ணீராகவே இருக்கிறான்; வரலாற்றை “தனக்கே உரிய” வகையில் எடுத்துக் கொள்வதோடு சரி. அதாவது வரலாற்றின் தேர்வு செய்யப்பட்ட ‘ஒரு பகுதி முகத்தில்’ மாத்திரம் விழிக்கவே அவன் மனம் விருப்பம் கொள்கிறது. ஜெயமோகன், மரபுகளினதும் தொன்மங்களினதும், ஒரு முகத்தில் மாத்திரம் விளிக்க முயற்சிப்பது   போல்.

ஒரு பாத்திரம் அவனிடம் முறையிடும்; ”நீ வரலாற்றைக் கூட, ஈரமற்றதாய்ப்   பார்க்கின்றாய் – உலர்ந்த சருகைத் தொடுவது போல…” என. 

இதில் ஒலிக்கும் உண்மைகளை ஓரளவில் உள்வாங்கும் கிளிம், ’ வாழ்வில் தன்னை முழுவதுமாய் ஈர்க்கும் எந்த ஒரு புள்ளியையும் இதுவரை இந்தப் பிரபஞ்சத்தில் கண்டிலேன்’ என்று தனக்குள் அபிப்பிராயம் கொள்வது, தர்க்க ரீதியாகவே நாவலில் வந்து அமைந்து விடுகிறது.

வாழ்க்கைச் சூழலானது,எங்கெங்கும், தனக்கு விரோதமாய் விரிக்கப்பட்டிருக்கும் ஒரு வலையாகவே இருக்கின்றது என்று ’கிளிம்’ கணிக்கின்றான். 

ஒரு பெண்ணாயிருக்கட்டும் ; ஒரு புரட்சியாளனாயிருக்கட்டும்; அல்லது ஒரு சக மனிதனாய்  இருக்கட்டும்; அவர்களிடமெல்லாம் தன்னை மறைத்து, தன் அந்தரங்க எண்ண ஓட்டங்களை மறைத்து,அவற்றை ஒரு புத்தக உலகால் மூடிவிடக் கூடிய ஒரு புத்திஜீவி  தோற்றத்தினுள் மறைந்து கொள்வதென்பது அவனுக்கு பிடித்தமானதாகின்றது.

இது பதிலுக்கு –  புற உலகில் எப்படி ஓர் விரோதச் சூழலை அவனைச் சுற்றி உருவாக்குகின்றதோ, அதே அளவில் தவிர்க்க முடியாதவாறு அவனது அக உலகிலும், அவனை   அக முரண்பாடுகளில் சிக்க வைக்கின்றது. 

இப்படியாய் ஒன்றுக்கொன்று முரண்படும் இந்த மோதல்களிலிருந்து – ஓர் அகப்  புறச் சூழலில் இருந்து – தன்னை தப்புவித்து, ஓர் போக்கிடத்தை ஏற்படுத்தி,   இவை யாதொன்றும் தீண்டாத வண்ணம் தன்னை உயரத் தூக்கிப்பிடித்து, தன்னை அந்நியப்படுத்தி விடக் கூடிய ஓர் தத்துவத்தை, ஓர் சித்தாந்தத்தை காண கிளிம்மின் உள்ளம் பரிதவிக்கின்றது. அத்தகைய தேடலை மைய நோக்காக கொண்டு முன்னகர்வதாக   இம்மூன்றாம் தொகுதி கார்க்கியால் கட்டமைக்கப்பட்டுள்ளது.  

இத்தகைய ஒரு பின்னணியில், அவன் தன் வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள், விவாதிக்கும் தத்துவங்கள், சம்பவங்கள் – போன்ற நூற்றுக்கணக்கானவை இந்நாவலில்  வருகின்றன.   அவனில், அவன் வளர்ச்சிப் போக்கில் ஏற்படக்கூடிய அக-புற மாற்றங்கள், இம்மியும் பிசகாதவாறு தர்க்க ரீதியாக உயிரோட்டத்துடன்,இந்நாவலில் பெரும் காட்சிப்படுத்தல்களுக்கு உள்ளாகின்றன.

மார்க்சியம் தொடர்பில்  அவனது மாற்றங்களும் வேடங்களும் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு, மாறிமாறி முன்னிறுத்தப்பட, இது ஒரு வித நகைப்பை  வாசகனில் ஏற்படுத்துகின்றன. 

உதாரணமாக ஒரு கணத்தில்,  ஒரு சிலருடன் கதையாடும் போது தான் ஒரு மாரக்சியவாதி எனப் பிரஸ்தாபிக்கும் அவன், பிறிதொரு சந்தர்ப்பத்தில் பிறிதொருவர் மத்தியில் சந்தர்ப்பத்திற்கேற்ப ‘இல்லை’ என்று கூறிவிட்டு,வெறுமனே ஒரு புத்திஜீவியின் பாவத்துடன் நகர்வது நாவலில் சகசமாய்க் காணக் கிடைக்கின்றது.

ஒரு சந்தர்ப்பத்தில் அவனில் ஆகர்சிக்கப்படும் ஒரு மத்திய தர வர்க்கப் பெண், ”நீ ஒரு மார்க்ஸிஸ்ட் தானா “ என ஆர்வமுடன் வினவும் போது, ஆம் என்றோ அல்லது இல்லை என்றோ நேரடியாகப் பதில் கூறாமல், முகத்தை சிந்தனை பாவத்துடன் தூக்கிப் பிடித்தவாறு, ” தான் மார்க்சியத்தின் பொருளாதார பக்கத்தை ஏற்பவன்” என்று   பட்டும் படாமலும் கூறி, ஒதுங்கிக் கொள்வது அவன் பண்பாகிறது.   வரலாற்றில் தேர்வு செய்யப்பட்ட ‘ஒரு பகுதி முகத்தில்’ மாத்திரம் விழிக்கவே அவன் மனம் விருப்பம் கொள்கிறது என முன்னர் அவன் கூறியதை நினைவூட்டுகிறது, சுருக்கமாக கூறினால், சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு, ஒரு பூனையைப் போல்,தன் அரசியல் அந்தரங்கங்களை மறைப்பதும், அதில் ஒரு பகுதியை மாத்திரம் சிலசமயங்களில் வெளிவிடுவதும், அல்லது முற்றிலுமாய் அமிழ்த்தி விடுவதும் அவனது கை வந்த கலை.  இதுவே தொடர்ச்சியாய் அவனது பண்பாகின்றது.  

ஸ்டாலின் உடன் கார்க்கி

  நாவலின் மூன்றாம் தொகுதி, தன் இறுதிக் கட்டத்தை எட்டிப் பிடிக்கும் தருவாயில், கிளிம் தனது இத்தகைய நிலைப்பாடுகளிலிருந்து   வெளிப்படையாக வெளிவருவதும்,   மேற்படி நிலைப்பாடுகள் தொடர்பில் அவன் உறுதியாக செயல்படத் துவங்குவதும் அவதானிக்கத்தக்கது. இவ்வளர்ச்சிக்கான அக-புற காரணங்களும் நாவலில் கட்டமைக்கப் பட்டுள்ளன. 

உதாரணமாக மாஸ்கோவை விட்டு, நிரந்தரமாய் அகன்று, ஒரு மாகாண நகரில், பொருளாதார ரீதியாகவும் நகரின் முக்கிய வழக்கறிஞருள் ஒருவன் என்ற ரீதியிலும், ஓரளவிற்கு ஸ்திரமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் கிளிம்மை, ஓர் இக்கட்டான சூழலில் இரண்டு இயக்கத் தோழர்கள், ஒரு அவசர தேவை நிமித்தம் அணுகும் போது “ இயக்கமா எந்த இயக்கம் ? ” என்று கேள்வி எழுப்பி,   தான் இயக்கம் சார்ந்தவனில்லை என்பதாக சாதித்து, அவர்களை அவன் மெதுவாக கத்தரித்து அனுப்பி விடும் அளவுக்கு, அவனது ‘நிரந்தரம்’   வளர்ச்சி பெற்று விடுகின்றது.  இவ்வளவுக்கும் அவனை முதன் முதலாக அத்தொலை தூர மாகாண நகருக்கு, தமது பிரத்தியேக வழக்கறிஞனாய், ஒரு குறித்த நபரை சந்திக்கும் பொருட்டு அனுப்பிவைத்தது  இயக்கமே ஆகும்.

  இக்குறித்த நபர்களுக்கு ஊடாகவே, கிளிம் தன் வாழ்வை அந்நகரில் இருத்தி, மெது மெதுவாக தன்னை அங்கே ஸ்தாபித்துக் கொள்ளவும் செய்கிறான்.  இருந்தும் நேரமும் காலமும் கனியும் போது, அவனது நிலைப்பாடு, மேலே கூறியபடி தீர்மானகரமாய், ஓர் அக-புறச் சூழலுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றி அமைத்து கொள்வதாய் அமைந்து விடுகின்றது.

என்னயிருந்தும் , எந்த ஒரு மூலச்சிறப்புள்ள அல்லது ஒரு அசலான எந்த ஒரு சிந்தனையையோ, அல்லது கருத்தாக்கத்தையோ அவனது அகம் உருவாக்க முடியாதிருக்கும் நிலை குறித்து, கிளிம் அவ்வப்போது சற்றுக் கலக்கம் அடையவே செய்கின்றான்.

நூற்றுக்கணக்கான நூல்களைக் கற்றிருந்தாலும், ஆயிரக்கணக்கான கருத்துப் பிம்பங்களை தனக்குள் பதிவு செய்து கொண்டிருந்தாலும் – அவை குறித்து தன்னளவில் தருக்க ரீதியாக சிந்தித்து ‘தன்னளவில்’ ஒருசில முடிவுகளை அவன் எய்தியிருந்தாலும், எந்த ஓர் புதிய சிந்தனையை நோக்கியோ அன்றி மூலச்சிறப்புள்ள சாரத்தை நோக்கியோ நகர்வதில் திறனற்றவனாய் இருக்கின்றான்.   இம்மலட்டுத்தனம், தன்னையறியாமல் தன்னிடம் எப்படிக் குடியேறியது என்பது அவனுக்கு எரிச்சலூட்டுவதாகவும் மனதைக் குடைவதாகவும் ஆகின்றது.

கிளிம்மின் இப்படியான தேடல்கள் அனைத்தும்   ஒரு வகை வெறுமையை அல்லது மலட்டுத் தனத்தை நோக்கிப் படிப்படியாக நகர்வதை,ஓர் ஆழமான தத்துவ-உளவியல் பார்வையுடன் நூல் அணுக முற்பட்டுள்ளது.  இத்தகைய ஓர் விடயப் பொருளை வேறு யாரேனும் இதுவரை ஒரு நாவலில் கையிலெடுத்துள்ளார்களா என்பதும் கேள்விக்கு உரிய ஒன்றாக இருக்கின்றது.(மனித மலட்டுத்தனத்தின் உருவாக்கம்  குறித்து!)

கிளிம்மின் படைப்பபாற்றல்கள் இப்படியாய்த் தேய்ந்திருப்பதை அல்லது பொதுவில், உலர்ந்த நிலையில் இருப்பதை, நாவல் நெடுகிலும் காணக் கூடியதாக உள்ளது. ஆனால் இந்நிலை குறித்த நியாயப்பாடுகளைக் கூட அவனது சிந்தை உருவாக்கி கொள்கின்றது என்பதனைப் பார்ப்பது, ரசனைக்குரியதாகவே இருக்கின்றது. 

உதாரணமாக, கிளிம்மின் ‘புரட்சிகர’ மாஸ்கோ வாழ்வின் போது, ஒரு சமூக மேம்பாட்டையும், ஏதோ ஒரு மத நம்பிக்கையின் அடிப்படையிலான  சாத்வீகப் போராட்டத்தையும் முன்னெடுக்கும் ஒரு வயோதிப பிரச்சாரகர் (டால்ஸ்டாய் பற்றாளர் போன்ற) ஒருவர்,    தெருநாயைப் போல் நடுத்தெருவில் படையினரால் சுட்டுத் தள்ளப்பட்டு துடிதுடித்துக் கொண்டிருக்கும் போது, அவர்களுடன் வரும் ஊர்ப்படை வீரன் ,” இந்த நாயும் மக்களைத் தூண்டி விட்ட நாய்   தான்’ என்று ஆத்திரத்துடன் கூறி துப்பாக்கிச் சனியனால் இரண்டு மூன்று முறை    வயோதிகரை ஆழக் குத்திக்குத்தி இழுத்தெடுப்பதை கிளிம் ஒரு மாதா கோவிலின் மறைவில் ஒளிந்திருந்து பார்க்கிறான். ராணுவம் சென்றபின்,இறங்கி வந்து தனக்கு நன்கு தெரிந்த, நன்கு பழக்கமான   – தனக்கு ஒரு காலத்தில் அரசியல் வகுப்புகளை நடாத்திய அம்முதியவர் , இப்படி நடுத் தெருவில் இரத்தம் ஆறாய் ஓட துடிதுடித்துக் கொண்டிருப்பதை பார்த்தவாறே,   அவசர அவசரமாகத் தாண்டிக் கடக்கிறான். அத்தருவாயில் நினைத்துக் கொள்கிறான்: “அப்பப்பா, ஒரு மனித உடம்பில் வழிந்தோட இவ்வளவு ரத்தம்  உள்ளதா…”   

      அவ்வளவே  அவன் காட்டக்கூடிய சலனம்!   

போதாதற்கு, ”புத்திஜீவிகளின் உயரிய அடையாளமே, உணர்வெழுச்சிகளை அண்ட விடாது தடுத்து விலக்கி வைத்திருப்பதுதான்…” என்று  தனக்குத்தான் நியாயம் கூறிக்கொள்ளவும் செய்கிறான். இருந்தும் இப்படியான   கிளிம்மின் மனநிலை, அடுத்து வரும் கணங்களிலேயே சடுதியாய் மாறுவதை, நூல் படம் பிடிக்கிறது.          

Life of Klim Samgin (Zhizn Klima Samgina), The - Internet Movie ...

நகரில் இப்படி கண்மூடித்தனமாக ஆத்திரத்தோடு, படுகொலைகளைக் கட்டவிழ்க்கும் ராணுவம் ஒரு வழியாக தனது படுகொலைகளை முடித்துகொண்டு வெளியேறி முகாம்களுக்கு திரும்பியபின்,மாதா கோயிலின் மறைவிடத்திலிருந்து வெளிவரும் கிளிம், அவசர அவசரமாக இவ்விடயங்கள் தொடர்பில் விவாதித்து கொண்டிருக்கும் ஓர் அரசியல் கூட்டத்தை சென்றடைந்து விடுகின்றான்.

கூட்டத்தை அடைந்ததும் அடையாததுமாக, தான் கண்டு வந்த திகில் காட்சி பற்றி எப்படியாவது கூட்டத்தின் முன் ஒரு அறிவிப்பொன்றை  செய்தேயாக வேண்டும் என்ற துடிதுடிப்பு அவனில்   கொப்பளிக்கின்றது. கூட்டத்தில் பின்னால் இருந்து தட்டுத் தடுமாறிக் கூவுகிறான். அல்லது கூவ எத்தனிக்கிறான். இப்போது அவனது நா வறள்கிறது… குரல் வரவில்லை. உளறலுடன் மேனி எல்லாம் நடு நடுங்க உடல் தாங்க முடியாத உணர்வெழுச்சியுடன் மயக்கம் சூழ தரையில் சரிகின்றான். இந்தச் சித்திரம் உண்மையானதுதானா – அதிலும் இப்படி  ஒரு கண்டிப்பான புத்திஜீவியாக கட்டி எழுப்பபட்ட தோற்றத்தை கொண்ட நன்கு கற்ற ஒருவனுக்கு ,இந்தப் போலியான பாவனை அவசியமா என்ற கேள்வி வாசக மனதில் தோன்றுவது இயல்பானதே. ஆனால் ஒரு வகையில், இச்சித்தரிப்பு காந்தியின் சில தருணங்களையும் நமக்கு ஞாபகப்படுத்துவது போலவும் அமைந்து விடுவது தவிர்க்க முடியாததாய்   இருக்கின்றது.

இந்தியாவில் தன் முதல் வழக்கில் போதிய அலங்காரங்களுடன் வழக்காட எழும் காந்திக்கு தலை சுற்றுகின்றது. வியர்க்கின்றது. நா குழறுகிறது, தட்டுத் தடுமாறி நாற்காலியில் அமர்ந்து கொள்கிறார். 

மண்டெலா ஒரு முறை தன்னிடம் கூறியதாக அப்துல் கலாம் கூறுவார்: “நீங்கள் ஒரு காந்தியை எங்களிடம் அனுப்பி வைத்தீர்கள்… நாங்கள் ஒரு மகாத்மாவை உங்களிடம் திருப்பி அனுப்பி வைத்தோம்” . இவ்வார்த்தைகள்   சிந்திக்கத் தக்கவை என்பதில் சந்தேகமில்லை.

வழக்காட எழுந்து நா குழற நாற்காலியில் அமர்ந்து கொள்ளும்  இந்தியக் காந்தி வேறு ; தன் தென்னாப்பிரிக்க அனுபவத்துடன் அரசியல் ஒன்று கூடுகைகளில் முன்னின்ற காந்தி வேறு – என்பதையே மண்டேலாவின் வார்த்தைகள் இங்கே  வெளிப்படுத்த முனைவது. அதாவது மக்கள் திரள்களில் இருந்து அந்நியம் கொள்வதும், ஒன்று சேர்வதும் வெவ்வேறு வகையான விளைவுகளை ஏற்படுத்தும் விடயங்களாகின்றன. 

பம்பாய் காந்தியைப் போல் தன்னை முதன்மைபடுத்தி நாக்குழறும்  கிளிம்மின் அகப்பார்வைக்கு நேரெதிரான உருவமாக நாவலில், இக்கால கட்டங்களில் இருத்தப்படுபவள் அன்ஃபிமெவினா (ANFIMEWINA)  எனும் பெண்மணியாவாள். 

கிளிம் வீட்டை ஒட்டிக் எழுப்பப் படும் பாதுகாப்பு அரணின் பிரசன்னத்தோடு, நாவலில், முன்நிலைக்கு நகர்பவள்   இந்த அன்ஃபிமெவினா.  பெரும் மனித நேயத்தையும், சக மனிதருக்கான துயரையும் ஒருங்கே தன் இதயத்துள் சதா தேக்கித் திரியும் இவள்,ஒரு வகையில் கார்க்கியின் பாட்டியை ஒத்தவளாயும்(சுயசரிதை), அவரது மற்றுமொரு நாவலான, ‘தாயின்’ பாவெலின் அன்னையை நினைவூட்டுபவளாகவும் தோற்றம் காட்டுகிறாள்.

பாதுகாப்பு அரணை பகல் இரவாகக் காக்கும் இளைஞர்களுக்கும் கிழவர்களுக்கும் இயக்கத் தோழர்களுக்கும் அவ்வப்போது சுடச் சுடத் தேநீர் தருவதும்,அவர்களுக்குப் பசிக்கும் வேளைகளில் தன்னால் முடிந்த அளவில் உணவு அளிக்கவும், உறையும் பனிக் குளிரில் அவர்களது உடலை அடுப்படியில் சூடாக்கிக் கொள்ளவும், தன் சமையலறையை தாராளமாகப் பயன்படுத்துபவளாய் இருக்கிறாள்.  ஒரு கட்டத்தில் இவள்,இப் பாதுகாப்பு அரணை, “நமது பாதுகாப்பு அரண்” என்று  கூற முற்படுவதை  காணும் கிளிம்மின் மனம் துணுக்குறுகிறது.

வீட்டில் உள்ள பொருட்கள் படிப்படியாக பாதுகாப்பு அரண் நோக்கி செல்லத் தலைப்படுகின்றன. இவற்றை வேண்டா வெறுப்புடன் பல்லைக் கடித்தபடி சகிக்கிறான் கிளிம்.  ஒரு கட்டத்தில் முழு மாஸ்கோ நகரும் ஒடுங்கி நிசப்தமாகி, உணவே அற்ற ஒரு ஸ்தம்பித நிலையை எட்டிய போது, கிளிம் வீட்டில் சாப்பிட ஏதேனும் இருக்குதா என்று இவளிடம் மெல்லக் கேட்க ,இல்லையே என்று துயருடன்  கையை விரிப்பவள்,   சிறிது நேரத்தில்  சில்லறைகளைத் தேடிப் பொறுக்கிக் எடுத்துக் கொண்டு, ”ம்…இதைக் கொண்டு சில முட்டைகளை வாங்கலாம்… பொறு, இரண்டு வினாடிகள்…. பொறு…ஒரு ஆம்லெட் போட்டுத் தருகிறேன்”   என்று தனது பட்டினியையும் மறைத்து மலர்ந்த முகம் காட்டுகிறாள்.  

ஒரு சந்தர்ப்பத்தில், தூக்கில் தொங்கும் தன் கணவனை, தனி ஆளாக, (அனைவரும் அகன்ற நிலையில்) இறக்கி, முதுகில் அவனது பிணத்தைச் சுமந்து கீழே கிடத்துகின்றாள்.  கடைசியில் கொள்ளை நோய்  தொற்றி, சட்டடியாய்ப் படுத்து, உணர்வற்று, செயலற்று   அறையில் துன்புற்று இறக்கும் அவளின் உடலை, வீட்டின் ஒரு ஒதுக்குப்புற அறையில் கிடத்துகிறார்கள். அவளை புதைக்கவும் வழி அற்ற நிலையில் எலிகள் அவளது கன்னங்களைத் தின்று தீர்க்கின்றன. இவ்வளவையும் கிளிம், ஓர் ‘புறவய’ பார்வையாளனாக மாத்திரம் பார்த்து நிற்கின்றான்;   எந்த ஒரு வகையிலும் உதவ முற்படாமல் நிற்கிறான். கணவனின் பிணத்தை அவள் சிரமப்பட்டு கீழிறக்கும் தருவாயில் கூட ‘தனியாக தூக்கி விடுவாயா…!” என்று அவன் கேட்பது மாத்திரமே அவன் செய்தது.ஒரு ஆணுடைய பிணத்தை அப்பெண் தன்னந்தனியளாய் கீழிறக்குகிற போதும், கொள்ளைநோய் தாக்கி சாகிறபோதும் ஒரு அப்பட்டமான ’ ஓரம்போகியாராக ’ நடந்து கொள்கிறான். 

One thought on “மார்க்சிம் கார்க்கியின் நாவல் – ” கிளிம் சாம்ஜியின் வாழ்வு ” –  மூன்றாம் தொகுதி : தமிழ் இலக்கிய உலகை  முன்னிறுத்தி….”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *