1
உதிரும் இலைகளின்
நிறமாற்றத்தை ஏந்திக் கொண்ட மண்ணுக்குள் உருமாறியபடி
உருளத் தெடங்கியது சருகு
குத்திக்கிழிக்கும் கல்லோடும் மேனியெலாம் மூடும்
மண்ணோடும் கட்டிப்புரண்டு வெப்பச் சூட்டையும்
அழுத்தச்சுமையையும் உள்வாங்கி
ஒளிரக் காத்திருக்கிறது.
சருகென மாறிப்போன
உழவனின் முயற்சியில்
வைரங்களை விதைக்காத
வானமும் அதிகாரமும்
காத்திருக்கின்றன
வாழ்வை அறுவடை செய்ய.
2
இழுத்துச் சாத்திய கதவின் இடுக்கில்
எட்டிப் பார்க்கும்
தூறலின் அசைவை
நடனமென நினைத்தாவது
ரசிக்கப் பாருங்கள்
இழுத்தோடும் கார்களும்
இடிந்துவிழும் மாடிகளுமென
பேரிரைச்சலில் விரைந்தபின்
மழையை மரணமெனச்
சொல்லி விடுவீர்கள்.
3
உதிர்ந்து கிடக்கும் கற்றைப் பூக்களில்
ஒற்றைப்பூவையும் கையிலேந்தாது நடக்கப் பார்க்கிறேன்
ஒன்றையாவது ஏந்திக்கொள் என அதிகாலைக் காற்று சுமந்து வந்து காலடியில் தள்ள
வாசத்தை இழுத்தபடி நடக்கின்றன நடைபயிற்சிக் கால்கள்
எழுதியவர்:
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.