ராகுல் காந்தி: காலை வணக்கம் ராஜீவ், எப்படி இருக்கிறீர்கள்

ராஜீவ் பஜாஜ்: காலை வணக்கம் ராகுல், நன்றாக இருக்கிறேன். உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்

ராகுல் காந்தி: உங்களைப் பொறுத்தவரை, கோவிட் சூழ்நிலையில் விஷயங்கள் எவ்வாறு இருக்கின்றன. அவை எவ்வாறு தோன்றுகின்றன? 

ராஜீவ் பஜாஜ்: நாம் அனைவரும் நிச்சயமற்ற இந்த காலத்தில், நிச்சயமான சிலவற்றைக் காண்பதற்கு முயற்சிப்பதாக நினைக்கிறேன். அனைவருக்கும் இது புதிய அனுபவமாகவே இருக்கிறது. கசப்பான இனிமையான அனுபவமாக உள்ளது. அதை இவ்வாறே கூறலாம். வீட்டிலேயே தங்கியிருப்பது குறித்து, அதைத் தாங்கிக் கொள்ளக்கூடிய நம்மில் சிலருக்கு வருத்தம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் நம்மைச் சுற்றியிருக்கின்ற தொழில்கள் மற்றும் மக்களிடம் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் காணும் போது, அது நிச்சயமாக இனிமையான அனுபவம் என்பதைவிட கசப்பான அனுபவம் என்றே சொல்ல முடியும். வணிகத்தைப் பொறுத்தவரை, மருத்துவ வார்த்தைகளில் கூறுவதாக இருந்தால் ஒருவரின் சொந்த உணர்ச்சிகளின் அடிப்படையில் அதை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து நமக்கு புதிய கற்றல் அனுபவத்தை ஒவ்வொரு நாளும் அது கொண்டு வருகிறது. 

ராகுல் காந்தி: இது மிகவும் நம்ப முடியாததாக இருக்கிறது. உலகம் முழுவதும் இவ்வாறு முடக்கப்படும் என்று யாரேனும் கற்பனை செய்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. உலகப் போரின்போது கூட, உலகம் இவ்வாறு முடக்கப்பட்டதாக நான் நினைக்கவில்லை. அப்போது கூட இடங்கள் திறந்தே இருந்தன. இப்போது நிகழ்ந்திருப்பது, தனித்துவமான, பேரழிவை ஏற்படுத்துகின்ற நிகழ்வாக உள்ளது. 

ராஜீவ் பஜாஜ்: காவசாகியுடன் எங்களுக்கு இருக்கும் தொடர்பு காரணமாக, ஜப்பானில் தொடங்கி எனக்கு நண்பர்களும், குடும்பத்தினரும் இருப்பதால் என்னால் இதைச் சொல்ல முடியும். சிங்கப்பூரில் எனக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். ஐரோப்பாவில் பல இடங்களில் எனக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவில் நியூயார்க், மிச்சிகன், டிசி.யில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இருக்கின்றனர். உலகம் இதுபோன்று முடக்கப்பட்டதில்லை என்று நீங்கள் கூறும்போது, (இடையூறு…) இந்தியா மிகக் கடுமையான முறையிலே முடக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற பொதுமுடக்கத்தை, வேறு எங்கிருந்தும் நான் கேள்விப்படவில்லை. எப்போது வேண்டுமென்றாலும் வீட்டிலிருந்து வெளியேறவும், நடந்து செல்லவும், தங்களுக்குத் தேவையானவற்றை வாங்கச் செல்லவும், யாரையாவது சென்று பார்த்து வணக்கம் சொல்லவும் என்று உலகெங்கிலும் உள்ள எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருமே சுதந்திரமாக இருக்கிறார்கள். எனவே இந்த பொதுமுடக்கத்தின் சமூக மற்றும் உணர்ச்சி அம்சங்களைப் பொறுத்தவரை, அவர்கள் மிகச் சிறந்த இடத்தில் இருப்பதாகவே தெரிகிறது.

India's 'Draconian' lockdown flattened the wrong curve, the GDP ...

ராகுல் காந்தி: மேலும் பொதுமுடக்கம் திடீரென்று அறிவிக்கப்பட்டது. நீங்கள் கூறிய அந்த கசப்பான இனிமையான அனுபவம் எனக்கு அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. பாருங்கள், வசதி படைத்தவர்களுக்கு இந்த வகையான சூழ்நிலையை எளிதாகச் சமாளிக்க முடியும். அவர்களுக்கென்று வீடு இருக்கிறது. அவர்களுக்கென்று வசதியான சுற்றுச்சூழல் இருக்கிறது. ஆனால் ஏழை மக்களின் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. புலம்பெயர்ந்தோர் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உண்மையில் நம்பிக்கையை இழந்து விட்டார்கள். அவர்களில் பலரும் ’நம்பிக்கையற்றுப் போய் விட்டது, எந்தவொரு நம்பிக்கையும் எங்களிடம் எஞ்சியிருக்கவில்லை’ என்று கூறுகின்றனர். அது மிகவும் வருத்தமளிப்பது, நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது என்றே நான் நினைக்கிறேன்.

ராஜீவ் பஜாஜ்: ஆரம்பத்தில் இருந்தே நான் இவ்வாறுதான் நினைத்து வருகிறேன். இந்த பிரச்சனை எந்த அடிப்படையில் பார்க்கப்பட வேண்டும் என்பதே என்னுடைய பார்வையாக இருக்கிறது. ஆசிய நாடாக இருந்தபோதிலும், கிழக்கே என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டாம் என்று நாம் முயற்சித்ததை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து, அமெரிக்காவையே நாம் பார்த்தோம். உண்மையில் உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தி, வெப்பநிலை, மக்கள்தொகை குறித்த புள்ளிவிவரங்கள், ரத்தம் உறையும் நிலைக்கு எளிதாக இலக்காகும் தன்மை போன்றவற்றின் அடிப்படையில், அந்த நாடுகள் எதுவும், எந்த வகையிலும் நமக்கான சரியான வரையறைகள் இல்லை. நாம் ஒருபோதும் அந்த நாடுகளைப் பார்த்திருக்கக் கூடாது என்று இவையனைத்தையும் குறித்து அறிவியலாளர்களும், மருத்துவர்களும் பேசியிருக்கிறார்கள். இருக்கின்ற மருத்துவ உள்கட்டமைப்பைக் கொண்டு, மருத்துவ கண்ணோட்டத்தின் அடிப்படையில், இதை எவ்வாறு அணுகலாம் என்று பார்த்தால், இதுபோன்றதொரு நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்குப் போதுமான மருத்துவ உள்கட்டமைப்பு எங்குமே இருக்க முடியாது என்பதை நாம் அனைவருமே நன்கு அறிந்திருக்கிறோம். ஆனால் அந்தக் கணக்கை நமக்கு விளக்க யாரும் தயாராக இருக்கவில்லை. அதிக எண்ணிக்கையில் நாம் இருக்கிறோம். 5% அல்லது எதுவாக இருந்தாலும், இதில் பலர் பாதிக்கப்படக் கூடியவர்களாக இருப்பார்கள்.  அது இவ்வாறே தோற்றமளிக்கிறது. இப்படித்தான் நம்மை நாம் தயார்படுத்திக் கொண்டிருக்கிறோம் அல்லது ஒருவேளை நம்மை நாமே தயார் செய்து கொள்ளாமல் இருக்கிறோம். இவ்வாறு சொல்வது அரசியல் ரீதியாகப் பொருத்தமான விஷயம் அல்ல. ஆனால் நாராயணமூர்த்தி எப்போதும் சொல்வதைப் போல, சந்தேகம் இருக்குமென்றால், அதை வெளிப்படுத்தி விட வேண்டும். உண்மைகள், தர்க்கம் மற்றும் நிதர்சனமான உண்மைகளை  நாம் சரியாக வெளிப்படுத்தவில்லை என்றே நான் நினைக்கிறேன். அதனால் இந்த தொற்றுநோயை, தொற்றக்கூடிய புற்றுநோய் போன்றதாக அல்லது அது போல ஏதோவொன்றுக்கு சமமானதாக மக்கள் நினைக்கும் அளவிற்கு மக்கள் மத்தியில் மகத்தான பயம் ஏற்பட்டு விட்டது. இப்போது அரசாங்கத்திடமிருந்து வரும் புதிய கதை, மக்களின் மனதை மாற்றி அவர்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காக, வைரஸுடன்தான் இனி வாழ வேண்டும் என்ற சிந்தனையுடன் அவர்கள் வாழ்வதற்கான ஆறுதலை அளிக்கும் வகையில் இருப்பதாகவே தெரிகிறது. இது நீண்ட காலம் எடுத்துக் கொள்ளப் போவதாகவே இருக்கும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நான் இவ்வாறுதான் உணர்கிறேன்.

ராகுல் காந்தி: சில வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களிடம் நான் பேசிக் கொண்டிருந்தேன். பொதுமுடக்கத்தின் ஆரம்ப நாட்களில், அவர்களில் ஒருவர் என்னிடம் சொன்னது மற்றும் என் மனதில் ஏற்கனவே இருந்தது. அவர் சொன்னது, பொதுமுடக்கத்தைப் பயன்படுத்துகின்ற இந்த தருணத்தை நீங்கள் பாருங்கள், நீங்கள் நோயின் தன்மையை மாற்றுகிறீர்கள். அதிக அளவில் இறப்பை ஏற்படுத்தாத இந்த நோயை, மக்களின் மனதில் கொடூரமான சாவை ஏற்படுத்துகின்ற நோய் என்று நீங்கள் மாற்றியிருக்கிறீர்கள். அவ்வாறு செய்த பிறகு, அதை மாற்றுவதற்கு  குறிப்பிடத்தக்க காலம் ஆகும். அதற்கு அதிக முயற்சிகள் தேவைப்படும். பொதுமுடக்கத்தை ஆன் – ஆஃப் செய்யும் சுவிட்சாகப் பார்க்க வேண்டாம் என்றும் அவர் கூறினார். இது உண்மையில் ஆன் ஆஃப் சுவிட்சாக இருக்கப் போவதில்லை. பொதுமுடக்கத்திற்குள் நீங்கள் சென்ற பிறகு, அதை மீண்டும் ஆஃப் செய்வது எளிதான காரியமல்ல. அது மிகவும் சிக்கலானதாகவே இருக்கும். நாம் மேற்கு நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற உங்கள் கருத்து எனக்குப் பிடித்திருக்கிறது. கிழக்கைப் பார்க்காமல், நாம் ஏன் மேற்கு நோக்கி பார்க்கிறோம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.

ராஜீவ் பஜாஜ்: சிலர் சொல்வதைப் போல், இந்த நோய் இந்தியாவில் காசநோய், நிமோனியா அல்லது வயிற்றுப்போக்கு போன்று 100,000 குழந்தைகளை கொன்றுவிடுகிற வகையில் இல்லாமல், இதுபோன்ற ஒன்று முதல் முறையாக வந்திருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். வளர்ந்த நாடுகளைக் கடுமையாகத் தாக்கிய நோய் இப்போது இங்கே வந்திருக்கிறது. பணக்காரர்களும் புகழ்பெற்றவர்களும் பாதிக்கப்படும்போது, ​​அது எப்போதும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடிக்கிறது. இந்த பிரச்சனையின் ஆரம்ப நாட்களில் ஒருவர் சொன்னது போல், ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு நாளும் 8000 குழந்தைகள் பட்டினியால் இறக்கின்றனர். ஒரு கட்டத்திற்கு அப்பால் சிவில் சமூகத்தில் யார் அக்கறை காட்டுகிறார்கள்? இந்த காரணியைக்கூட நாம் அறிந்திருக்கவில்லை. வளர்ந்த நாடுகளில் வசதி படைத்தவர்கள் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருந்ததாலும், ‘அவர்களுக்கே இப்படி  நடக்கும் என்றால், நமக்கு என்ன நடக்கும்’ என்று சிலர் ஊகித்ததாலுமே இந்த உணர்வு முதன்மையாக ஏற்பட்டது என்று நான் நினைக்கிறேன். இந்த வகையான உணர்வுதான் இருக்கிறது. நான் அடிக்கடி மக்களிடம் சொல்லியிருக்கிறேன், ஒரு சாதாரண மனிதனாக என் மனதில், ஆரம்பத்தில் இருந்தே என்னிடம் சில தேர்வுகள் இருந்து வந்தன.  

இடதுபுறம் ஒரு முனையில், மிகக் கடினமான பொதுமுடக்கத்தைத் தேர்வு செய்வது. அது காற்று புகாத, ஊடுருவ இயலாத பொதுமுடக்கத்தைக் குறிக்கும். எனக்குத் தெரிந்த வரையிலும், இதுபோன்று உலகில் எங்குமே நடக்கவில்லை. அதாவது உங்கள் வீட்டிற்குள்ளே உங்களை முடக்கி வைப்பது, நீங்கள் யாரையும் பார்க்க கூடாது என்று சொல்வது. 

இன்னொரு முனையில், எப்போதும் போல வணிகத்தைத் தொடர்ந்து நடத்துவது. நோயை முழுவதுமாகப் புறக்கணித்து விட்டு எப்போதும் போல் தொடர்வது. என்ன நடந்தாலும் நடந்து விட்டுப் போகட்டும், நான் தூங்கப் போகிறேன் என்று சொல்வதைப் போல. இதை யாருமே சொல்லவில்லை. 

இந்த இரண்டு முனைகளுக்கு ஊடாக பாதை ஒன்றைக் கண்டுபிடிக்க அனைவரும் முயற்சி செய்கிறார்கள். இந்தியா மேற்கு நோக்கி போகாமல், துரதிர்ஷ்டவசமாக, கரடு முரடான மேற்கு நோக்கி சென்றிருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். ஊடுருவ இயலாத பொதுமுடக்கத்தின் பக்கத்திலேயே நாம் பெரும்பாலும் இருந்தோம் என்று நினைக்கிறேன். பல ஓட்டைகளுடன் இருந்த இந்த கடினமான பொதுமுடக்கத்தைச் செயல்படுத்தவே நாம் முயற்சித்தோம். 

இந்த இரண்டு வகைகளை விட மோசமான நிலையையே நாம் இப்போது எட்டியிருக்கிறோம் என்றே நான் கருதுகிறேன். ஒருபுறம் இந்த ஓட்டைகளுடன் கூடிய பொதுமுடக்கம் வைரஸ் இன்னும் இருப்பதை உறுதி செய்திருக்கிறது, மேலும் நீங்கள் சொன்னதைப் போல, பொதுமுடக்கத்தை முடிக்கின்ற போது, அந்த வைரஸ் தாக்குவதற்காக காத்துக் கொண்டிருக்கிறது. ஆக இறுதியில் உங்களால் அந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லை.

நிச்சயமாக நீங்கள் பொருளாதாரத்தை அழித்து விட்டீர்கள். தவறான வளைகோட்டை நீங்கள் தட்டையாக்கி இருக்கிறீர்கள். நீங்கள் தட்டையாக்கி இருப்பது தொற்று வளைகோட்டை அல்ல, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளைகோட்டைத் தட்டையாக்கி இருக்கிறீர்கள். 

இருவகைகளயும் விட மோசமானவற்றையே நாம் செய்து முடித்திருக்கிறோம்.. என்ன செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று என் பார்வையில் சொல்வதென்றால், வலதுபக்கம் சென்றிருக்க வேண்டும். அதைத்தான் ஜப்பான், சுவீடனில் இருந்து நாம் கேள்விப்படுகின்றோம் கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி எனக் கூறப்படுவதைப் பற்றி கேள்விப்படும் மக்கள், கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி என்பது பாதிக்கப்படக் கூடியவர்களை இறக்க அனுமதிப்பது என்றே நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அது அவ்வாறாக இருக்கவில்லை. அதனால் சுத்திகரிப்பு, முகக்கவசங்கள், இடைவெளி அடிப்படையிலான விவரங்களை அவர்கள் தவற விடுகிறார்கள். இந்த நடைமுறைகளையே ஸ்வீடன், ஜப்பான் போன்ற நாடுகள் பின்பற்றுகின்றன. ஆனால் அவர்கள் நீங்கள் சொன்னதைப் போல. பயனற்ற பகுதிகளுக்குள் செல்ல முயற்சிக்கவில்லை. ஒப்பீட்டளவில் தீங்கற்ற, சமாளிக்கக்கூடிய ஒன்றை அபாயகரமானதாகவும், கட்டுப்பாட்டுக்குள் அடங்காததாகவும் தோன்றச் செய்து விட்டோம். துரதிர்ஷ்டவசமாக நம்மிடம் மிகக்கடினமான பொதுமுடக்கம் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். அதாவது இந்த இரண்டு வகைகளையும்விட மோசமானதை நமக்கு அளித்திருக்கும் பொதுமுடக்கத்தை நாம் கொண்டிருக்கிறோம்.  

Coronavirus lockdown draconian; India flattened the wrong curve of ...

ராகுல் காந்தி: நமது நிலைமையைப் பார்த்தால், அது முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. நம்மிடம் புலம் பெயர்ந்தவர்கள், அன்றாடக் கூலிகள் இருக்கின்றனர் என்றாலும் சில காரணங்களால் நாம் மேற்கு நோக்கியே பார்க்கிறோம். என்னிடம் இருக்கின்ற சுவாரஸ்யமான கேள்வி என்னவென்றால், நாம் ஏன் நமக்கான சொந்த தீர்வுகளுக்காக உள்நாட்டிற்குள் பார்க்கவில்லை. மேற்கு அல்லது கிழக்கைப் பார்ப்பதற்குப் பதிலாக நாம் ஏன் அவ்வாறு பார்க்கவில்லை. நம்பிக்கை மிகுந்த நாடு என்று நாம் ஏன் சொல்லவில்லை. எங்களை நாங்களே பார்த்துக் கொள்கிறோம், இந்திய தீர்வோடு நாங்கள் வெளியே வருவோம் என்று ஏன் நாம் சொல்லவில்லை. உங்கள் மோட்டார் சைக்கிள்களில் செய்துள்ளதைப் போல. அது ஏன் இயல்பான தூண்டுதலாக இருக்கவில்லை? .

ராஜீவ் பஜாஜ்: மீண்டுமொரு முறை, மார்ச் மாத நடுப்பகுதிக்குச் செல்லுகின்ற திறன் உங்களிடம் இருந்தால், பிரதமர் ஜனதா ஊரடங்கு உத்தரவை அறிவித்த பின்னர் முதலாவது பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நிலைமைக்கு உங்களால் செல்ல முடிந்தால், கடந்த மூன்று மாதங்களில் நடந்திருப்பவை குறித்து, நீங்கள் அதை எவ்வாறு வடிவமைத்திருப்பீர்கள் என்று உங்கள் மனதில் இருப்பதைச் சொல்லுங்களேன். 

ராகுல் காந்தி: பின்னால் சொல்வது 20/20 போல, நான் அதை எவ்வாறு வடிவமைத்திருப்பேன் என்று உங்களுக்குச் சொல்வது எனக்கு மிகவும் எளிதானது. காங்கிரஸ் கட்சிக்குள் நடந்த எங்கள் கலந்துரையாடல் என்னவென்றால், நோய்க்கான எதிர்வினை பரவலாக்கப்பட வேண்டும். மத்திய அரசு ஆதரவு அமைப்பாக, செயற்பாட்டாளராக  செயல்பட வேண்டும். மத்திய அரசு மட்டுமே செய்ய வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, விமான போக்குவரத்து, ரயில்வே போன்றவை. அது அதைச் செய்ய வேண்டும். பின்னர் மாவட்டங்களுக்கு, முதல்வர்களிடம் அந்தப் போரை நகர்த்துவது, அவர்களை அனுமதித்து போராட உதவுவது. 

இப்போது பொதுமுடக்கத்திற்குப் பிறகு என்ன நடந்திருக்கிறது என்று பார்த்தால். இதை ஒரு தோல்வியடைந்த பொதுமுடக்கம் என்றே நான் கூறுவேன். பொதுமுடக்கத்தை முடிவிற்கு கொண்டு வந்த பின்னர் நோய் அதிகரித்து வரும் ஒரே பொதுமுடக்கம் உலகிலேயே இங்கேதான் நடந்திருக்கிறது. எப்படியும் பழைய நிலைக்கு திரும்பிச் சென்றிருப்பதையே உங்களால் காண முடியும். மத்திய அரசு பின்வாங்கியுள்ளது, நாங்கள் இப்போது அதை மாநிலங்களிடம்  விட்டு விடப் போகிறோம் என்று கூறியுள்ளனர். ஆக சரியான எதிர்வினை அதன் போக்கில் தானாக நடந்திருக்கிறது.

ராஜீவ் பஜாஜ்: ஒரு சாதாரண குடிமகன் என்ற வகையில், இது கடமையை மற்றவரிடம் தள்ளி விடுவதாக தெரிகிறதே தவிர, தங்களிடம் இருக்கின்ற உத்தியைக் கடத்துவதாக இருக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன்.  

ராகுல் காந்தி: நல்லது, அப்படி இருக்கலாம். ஆனால் பொதுமுடக்கத்தின் விளைவாக, இந்தியா இரண்டு மாதத்திற்கு இடைநிறுத்த பொத்தானை அமுக்கி வைத்திருக்கிறது. இப்போது மீண்டும் திரும்பிச் சென்று, ஆரம்ப கட்டத்தில் நாம் செயலாற்றியிருக்க வேண்டிய விதத்தில் இந்தியா இப்போது எதிர்வினையாற்றுகிறது. இப்போது நாடு கையகப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறுபட்ட உத்திகள் வெளி வருவதை உங்களால் காண முடியும். பஞ்சாபில் ஒரு உத்தி, சத்தீஸ்கரில் வேறொரு உத்தி, மகாராஷ்டிராவில் வேறு உத்தி என்று இருப்பதை நீங்கள் காணலாம். சிலர் மற்றவர்களை விட சிறப்பாகச் செய்கிறார்கள். தாக்குதல்கள் திடீரெனக் குறைகின்ற இடத்தில் ஏற்கனவே எதிர்பார்த்த எதிர்வினை கிடைக்கிறது. நிலைமையைச் சமாளிக்கும் திறன் மேம்படுகிறது. இது ஒரு அம்சமாக இருக்கிறது. 

அதன் இரண்டாவது அம்சம், அது முற்றிலும் அடிப்படையான அம்சம் என்று நான் நினைக்கிறேன். ஜெர்மானியர்கள் என்ன செய்தார்களோ, அதை சில அமெரிக்கர்களும் செய்திருக்கிறார்கள். கொரியர்கள் என்ன செய்தார்கள், ஜப்பானியர்கள் என்ன செய்தார்கள். பொருளாதாரத்தைக் காப்பாற்றுவதற்காக பணத்தை பெருமளவில், மிகப் பெருமளவில் கொடுத்தார்கள். நான் பெரிய வணிகம் செய்கின்ற ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் அதை பெரிய வணிகம், சிறு வணிகம். தொழிலாளர்கள், தொழிலாளர்கள் அல்லாதவர்கள் என்று அல்ல என்று கருதக் கூடாது. நமது பொருளாதாரத்தை மிகப் பெரிய வளமாகப் பார்க்க வேண்டும். எந்த வகையாலும் நமது பொருளாதாரத்தை நாம் பாதுகாக்க வேண்டும். இப்போது யாரை ஆதரிக்க வேண்டுமோ, அவர்கள் இப்போது ஆதரிக்கப்பட வேண்டும். இது அந்த உத்தியின் இரண்டாவது அங்கமாக இருக்கிறது. 

Live Update Rahul Gandhi interactions with industrialist Rajiv ...

சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை ஆதரிக்க வேண்டும் என்று சிலர் வாதங்களை முன்வைக்கின்றனர். நிச்சயமாக, 100% செய்ய வேண்டும். ஆனால் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கும், திரு.பஜாஜுக்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கின்றது. பெரிய வணிகங்கள் இல்லாமல் சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் செயல்பட முடியாது. அதனால் ஒரு முழுமையான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். எனது சிறிய அனுபவத்தில் நான் கற்றுக்கொண்டுள்ள ஒன்று என் பார்வையில் முக்கியமானதாக இருக்கிறது. இந்தியாவில் இப்போது நீங்கள் ஏதாவது செய்ய விரும்பினால், இரக்கத்துடன் இருங்கள். இரக்கம் காட்டி, கவனித்துக் கேட்பீர்கள் என்றால், நாடு தானாகவே, தனக்கு என்ன வேண்டுமென்று உங்களுக்குத் தெரிவிக்கும். 

இப்போதே மக்கள் சிலர், வலியால் கதறுகிறார்கள் குறிப்பாக கைத்தொழிலாளர்கள், அன்றாடக் கூலிகள், விவசாயிகளும், சிறு மற்றும் நடுத்தர வணிகங்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஏன் பெரிய வணிகர்களும்கூட வலி தாங்காமல் கதறுகிறார்கள். ஏனென்றால் அவர்களால் தங்களுடைய எதிர்காலத்தைக் கணிக்க முடியவில்லை. எனவே அதன் ஒரு பெரிய கூறாக, நாம் நம்பிக்கையை உருவாக்க வேண்டும். நம்பிக்கையை உருவாக்குவதற்கான தலைமை, ’நாங்கள் இங்கே உங்களுடன் இருக்கிறோம்’ என்று மக்களிடம் சொல்ல வேண்டும். நாடு மிக மோசமான நிலைமையில் இருக்கிறது. அனைவரையும் பாதித்துள்ள வைரஸ் உள்ளது, இப்போது நாம் அனைவருக்குமே ஆதரவளிக்க வேண்டும். இந்த சூழ்நிலையிலிருந்து அனைவரையும் ஒன்றாக நாம் வெளியே அழைத்துச் செல்ல வேண்டும். அதற்கு பச்சாதாபம் தேவைப்படுகிறது, அது கட்டப்பட வேண்டும்,’ஆம், அது நடக்கும். ஆனால் நாம் தொடர்ந்து செல்லலாம், படகு அதைக் கடந்து போகும்’ என்ற அந்த உணர்வு இந்திய குடிமக்களிடம், பெரிய வணிகர், நடுத்தர வணிகர், விவசாயி அல்லது தொழிலாளி என்று இவர்களிடம் வர வேண்டும். எனது முக்கிய பிரச்சினை என்னவென்றால், உங்களிடம் மேலிருந்து கீழ் என்ற நிலைமை இருக்கும்போது, ​​அதில் பச்சாதாபம் இருப்பதில்லை. அதனாலேயே மக்களின் போராட்ட மனப்பான்மையைத் தகர்க்கிறீர்கள். இதுவே எனது நீண்ட பதிலாக இருக்கும். இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது.

ராஜீவ் பஜாஜ்: நீங்கள் சொன்னதில் பெரும்பாலான பகுதிகளுடன் நான் உடன்படுகிறேன். அதனுடன் இன்னும்  சிலவற்றைச் சேர்த்து கூற விரும்புகிறேன். 

புனே போலீஸ் கமிஷனர் டாக்டர் வெங்கடேஷுடன் நான் பேசிக் கொண்டிருந்தேன். அவர் மிக அருமையான மனிதர். நான் அவரிடம் டாக்டர் சாஹிப், என்னிடம் உள்ள அதிருப்தி என்னவாக இருக்கிறதென்றால், புனேவில் வாழ்ந்த 50 ஆண்டுகளாக, சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்புகளைப் பொறுத்தவரை, இந்தியாவே உலகின் தலைநகரமாக இருப்பதை நான் உணர்கிறேன். காரணங்கள் எதுவாக இருந்தாலும், அதுதான் இறுதி முடிவு. 30-40-50 பேர் வரை ஹெல்மெட் இல்லாமல் சவாரி செய்தாலும், காவல்துறையினர் அவர்களை எதுவும் செய்ததை நான் இதுவரை பார்த்ததில்லை. 99.9% நேரம் அவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள். அப்படியிருக்கும் போது, முகக் கவசம் அணியவில்லை என்று, யாராவது ஒருவர் காலை நடைப்பயணத்திற்காக வெளியே வரும் போது, அவர்களைத் தடி கொண்டு தாக்குவதோடு, அவர்களை அவமானப்படுத்தும் வகையில் சாலையின் நடுவில் உடற்பயிற்சிகளைச் செய்ய வைக்கிறீர்கள். நான் ஒரு தேசத் துரோகி, நான் ஒரு துரோகி என்று நீங்கள் அவரது கையில் ஒரு போர்டைக் கொடுக்கிறீர்கள். நமது சொந்த மக்களையே நாம் வேறு வகையில் நடத்துகிறோம். இரக்கம் பற்றி நீங்கள் பேசினீர்கள். நேரில் பார்த்தவற்றைப் பற்றியே இங்கே நான் பேசுகிறேன். வெறுமனே புதிய காற்றைச் சுவாசிப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறிய மூத்த குடிமக்கள் தடியால் தாக்கப்படுவதை நான் பார்த்திருக்கிறேன்.

கல்லூரியில் இருந்தே எனது மிக நெருங்கிய நண்பராக இருக்கின்ற, மிச்சிகன், டெட்ராய்டில் வசிக்கும் சஞ்சய், சில வருடங்களுக்கு முன்பு நீங்கள் அவரைச் சந்தித்திருக்கிறீர்கள். அவருக்கு ஒரு சிறிய நிறுவனம் உள்ளது. அவரிடம் 8 பேர் வேலைக்கு உள்ளனர். அவருக்கு முழு இழப்பீடும், பல உதவிகளும் கிடைத்திருக்கின்றன.  இல்லையென்றால், அவரைப் போன்றவர்கள் நிறைய சிக்கலில் சிக்கியிருப்பார்கள்.

ஜப்பான், அமெரிக்காவில் இருப்பவர்கள் ஒரு நபருக்கு 1000 டாலர்கள் உதவியாகப் பெறுகிறார்கள், தூண்டுதலாக அல்ல என்று நாம் கேள்விப்படுகிறோம்.. நாம் இங்கே தூண்டுதல் பற்றி கூட பேசவில்லை. பெரிய வணிகங்கள், சிறு வணிகங்கள் மற்றும் தனிநபர்கள் என்று அனைவருக்குமான உதவியளிப்பதைப் பற்றியே நாம் பேசுகிறோம். இந்த எண்ணிக்கை எவ்வளவு நம்பகமானது என்பதை நான் அறிவேன். உலகில் பல இடங்களில், அரசாங்கம் வழங்கியவற்றில் மூன்றில் இரண்டு பங்கு, நிறுவனங்கள் மற்றும் மக்களுக்கே நேரடி நன்மைகளாகச் சென்றிருக்கிறது என்று என்னிடம் சொன்னார்கள். ஆனால் இந்தியாவில் இது 10% மட்டுமே. நேரடியாக மக்களின் கைகளில் பணத்தைக் கொடுப்பது என்று நாம் ஏன் முடிவெடுக்கவில்லை என்பது குறித்து உங்களால் நன்றாக  கருத்துத் தெரிவிக்க முடியும் என்று கருதுகிறேன். 

ராகுல் காந்தி: எனக்கும் முன்னாள் பிரதமர், நிதியமைச்சர் உட்பட இந்திய தேசிய காங்கிரஸில் உள்ள எங்கள் அனைவருக்கும் இது வெளிப்படையாக அதிர்ச்சியையே ஏற்படுத்தியிருக்கிறது. இதை கண்டுபிடிக்க நானாகவே முயற்சித்தேன். சில நாட்களுக்கு முன்பு, அரசாங்கத்தில் இருக்கின்ற சிலரிடம் நான் பேசிப் பார்த்தேன். தூண்டுதலை நீங்கள் ஏன் கொடுக்கவில்லை என்று எனக்குப் புரியவில்லை என்று சொன்னேன். ஏனெனில் தர்க்கரீதியாக முழுமையான அர்த்தத்தை அதுதான் தருகிறது. அரசியலை மறந்துவிட்டு, அதன் தர்க்கத்தை என்னிடம் சொல்லுங்கள் என்று நான் சொன்னேன். அதன் தர்க்கத்தைப் புரிந்து கொள்ள நான் விரும்புகிறேன். எனக்கு அந்த தர்க்கம் புரியவில்லை. எனக்கு கிடைத்த பதில், இவ்வாறு இருந்து.  

1- சீனாவிற்கு அடுத்து, இந்தியாவிற்கு மிகப் பெரிய வாய்ப்பு உள்ளது

2- இப்போது நமது தொழிலாளர்களுக்கு பணத்தைக் கொடுத்தால், அது தவறாகி விடும். அவர்கள் கெட்டுப்போவார்கள், தங்கள் கிராமங்களிலிருந்து திரும்பி வர மாட்டார்கள்.

3- நம்மிடம் முதலீடு செய்ய வேண்டிய சர்வதேச சமூகத்திற்கு, நம்மைப் பற்றி தவறான செய்தி போய் விடும். 

4- தொழிலாளர்கள் மற்றும் சிறு குறு வணிகங்களுக்கு பணம் கொடுப்பதை கொஞ்சம் நாள் கழித்து நாம் பரிசீலிக்கலாம்.

இந்தியாவில் யார் முதலீடு செய்யப் போகிறார்களோ அவர்கள் உங்களைப் பற்றி இருக்கின்ற உருவத்தின் காரணமாக அதைச் செய்யப் போவதில்லை. நீங்கள் யார், உங்களிடம் என்ன உள்ளது என்பதைப் பொறுத்தே அவர்கள் முதலீடு செய்யப் போகிறார்கள், அதாவது நீங்கள் யார், உங்களிடம் என்ன உள்ளது என்பது உங்களுடைய பொருளாதாரமே.

எனவே முதலாவது தர்க்கம் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும்.  பொருளாதாரத்தை நன்கு பாதுகாத்தால், உங்களைப் பற்றிய உருவம் கிடைக்கும். யாரை வேண்டுமானாலும் இங்கே அழைப்பதில் நீங்கள் வெற்றி அடைவீர்கள். உங்களிடம் பொருளாதாரம் இல்லை என்றால், எதுவும் இருக்கப் போவதில்லை.

With a 'draconian' but porous lockdown, India flattened GDP curve ...

ராஜீவ் பஜாஜ்: இந்தியா போன்ற ஒரு பெரிய நாடு சிக்கலில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். நாம் மீண்டும் தேவைகளை உருவாக்க வேண்டும், மக்களின் மனநிலையை உயர்த்துகின்ற வகையில் உதவிகளை வழங்க வேண்டும். மனநிலையை உயர்த்துவதற்கான நடவடிக்கையே நமக்குத் தேவைப்படுகிறது. 6 மாதங்கள் 1 ஆண்டு காலமானாலும், மக்களின் மனநிலையை வலுவாக உயர்த்துவதற்கும், தேவைகளுக்கான தூண்டுதலை வழங்குவதற்கும் வலுவான முன்முயற்சிகள் எதுவும் ஏன் இல்லை என்று எனக்குப் புரியவில்லை.

ராகுல் காந்தி: கொரோனா வைரஸுக்கு முன்பே பொருளாதாரம் மந்தமாகி இருந்தது. கொரோனா வைரஸுக்கு முன்பாகவே வேலையின்மை கடுமையான பிரச்சினையாக மாறியிருந்தது. கொரோனா இப்போது அதை விளிம்பிற்குத் தள்ளியிருக்கிறது. வேலையின்மை பிரச்சினையை இந்தியா கவனித்துக் கொள்வதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? அது அதிகரிப்பது குறித்து நாம் என்ன நினைக்கிறோம். நிச்சயமாக இந்த புதிரின் ஒரு பகுதியாக நீங்கள் இருக்கிறீர்கள். சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் இந்த புதிரின் மிகப் பெரிய பகுதியாக இருக்கின்றன. உற்பத்தியை நீங்கள் எவ்வாறு கட்டவிழ்த்து விடுகிறீர்கள் என்பதே மிகமுக்கியமானது என்று நான் நம்புகிறேன், அதாவது உற்பத்தி இல்லாமல் இந்தியாவை உருவாக்க முடியும் என்று நினைக்கின்ற மக்களில் ஒருவனாக நான் இல்லை. உலக அரங்கில் நாம் எவ்வாறு போட்டியிடப் போகிறோம்?

ராஜீவ் பஜாஜ்: அன்றொரு நாள் நான் பிரேசிலில் உள்ள ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஏனென்றால் பஜாஜ் நிறுவனம் இப்போது பிரேசிலுக்குள் நுழைய நினைத்துக் கொண்டிருக்கிறது. நான் அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன். பிரேசிலில் ஹோண்டா மிகவும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது, மற்ற ஜப்பானியர்களால் ஹோண்டாவை வெளியேற்ற முடியவில்லை. பஜாஜுக்கு வாய்ப்பு இருப்பதாக நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் மிகவும் எளிமையான ஒன்றைச் சொன்னார், ஆனால் பெரும்பாலும் உண்மைகள் எளிய விஷயங்களிலேயே உறைந்திருக்கின்றன. ஐரோப்பிய வடிவமைப்பு, ஜப்பானிய தரம், இந்திய விலை என்ற கலவை பஜாஜிடம் இருப்பதை நான் காண்கிறேன். பல இந்திய நிறுவனங்களைப் பொறுத்தவரை, இது ஒரு மாய சூத்திரம் என்றே நான் நினைக்கிறேன் என்றார். மிக்சர் கிரைண்டர் அல்லது மோட்டார் சைக்கிள் இவற்றில் எதை நீங்கள்  தயாரிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. எதுவாக இருந்தாலும். இந்த லென்ஸ் மூலமாகப் பார்த்தால், இந்த உலகில் நீங்கள் விரும்பியதை எளிதில் அடைய முடியும் என்றே நான் நினைக்கிறேன். தேவை உருவாக்கத்திலிருந்தே, உலகளாவிய மேடையில் விளையாடுவது தொடங்குகிறது என்று நான் கருதுகிறேன். நீங்கள் செய்யும் செயல்களை குறிப்பிட்ட பகுதிக்குள் சுருக்கிக் கொள்ள வேண்டும். தோனியாக நீங்கள் இருக்க விரும்பினால், ஒரே நேரத்தில் ஆறு விளையாட்டுகளை நீங்கள் விளையாடக் கூடாது. அனைவருக்கும் அது தெரியும். சிறந்த சமையல்காரர், செய்தித் தொடர்பாளர், மருத்துவர், இசைக்கலைஞர் என்று இவர்கள் அனைவருமே தங்கள் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள். நிறுவனங்களும் இத்தகைய நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். உங்களிடம் இருக்க வேண்டிய உத்தியின் எளிய பொருள் நிபுணத்துவம் கொண்டிருப்பது என்றே நான் நினைக்கிறேன்.

ராகுல் காந்தி: நீங்கள் சொன்ன விஷயங்களில், ஒரு விஷயம் மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதை நான் கண்டேன். ஜப்பானிய தொழில்நுட்பம், ஐரோப்பிய வடிவம், இந்திய விலை என்று சொன்னீர்கள். அடிப்படையில் நீங்கள் சொல்வது என்னவென்றால், இந்தியா ஒரு பாலம். இந்தியா வெவ்வேறு கலாச்சாரங்களுக்கு இடையில் அவற்றை இணைக்கின்ற பாலமாக உள்ளது. வெவ்வேறு அமைப்புகளுக்கு இடையில் இருக்கின்ற பாலம். வரலாற்று ரீதியாக இந்தியா இதில் மிகவும் சிறப்பாக இருந்து வந்திருக்கிறது. நாம் எப்போது வெற்றிகரமாக இருந்தோம் என்று  நீங்கள் பார்த்தால், நாம் எப்போதுமே இணைப்பாளராகவே செயல்பட்டு வந்திருக்கிறோம். நம்முடைய வெளியுறவுக் கொள்கை, வணிக அமைப்பு, தத்துவம் அவ்வாறாகவே இருந்துள்ளது. பல நாடுகள் அல்லது நாகரிகங்களால் ஏற்றுக் கொள்ள முடியாதை நாம் ஏற்றுக் கொள்ளும் திறன் கொண்டிருந்திருக்கிறோம். விஷயங்களை நம்மிடம் எடுத்துக் கொள்வது. ஐரோப்பிய வடிவம், ஜப்பானிய தொழில்நுட்பம், சீன விலை ஆகியவற்றை சீனத் தயாரிப்பு  கொண்டிருப்பதாக யாராவது உங்களிடம் சொல்லியிருப்பார்களா என்று எனக்குத் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும், இந்தியா சமாளிக்கின்ற விதத்தில் அதே சமன்பாட்டில் சீனாவால் நடந்து கொள்ள முடியாது. இது நம்மைப் பொறுத்தவரை மிகுந்த சக்திவாய்ந்த விஷயமாகும். 

ராஜீவ் பஜாஜ்: நான் உங்களுடன் உடன்படுகிறேன். இது மிகவும் சரியான கருத்தாகும். அதை ஒருபோதும் நான் இவ்வாறு பார்த்ததில்லை என்றே நினைக்கிறேன், நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, இது ஏன் இவ்வாறு இருக்க வேண்டும் என்று எனக்குள் நானே கேட்டுக்கொண்டேன். நிச்சயமாக இது ஓரளவிற்கு நமது மனோபாவம், ஓரளவிற்கு ஆங்கிலத்தில் நமக்கிருக்கும் புலமையால் என்று நினைக்கிறேன். ஆனால் அனைத்திற்கும் மேலாக, நான் அதைப் பற்றி சொல்கின்ற போது,  மக்களாக நாம் ஒளிவுமறைவில்லாது திறந்த மனதுடன் இருக்கிறோம் என்று நினைக்கிறேன். இதை நான் எதிர்மறையாகக் கூறவில்லை. புரிந்துகொள்வதில், கற்றுக்கொள்வதில் நாம் அதிக திறந்த மனதுடன் இருக்கிறோம் என்பதை என்னால் சொல்ல முடியும். சில நேரங்களில் நாம் அவர்களைப் பற்றி பயப்படுகிறோம், அதனால்தான் நாம் அதைச் செய்கிறோம், சில சமயங்களில், எதோவொரு காரணத்தால் உண்மையிலேயே புத்திசாலித்தனமாக நடந்து கொண்டுள்ளோம்; ஆனால் அது எதுவாக இருந்தாலும், மக்களாக மிகவும் திறந்த மனதுடனே நாம் இருக்கிறோம், ஒரு நாடாக மிகவும் திறந்த மனதுடன் இருக்கிறோம், அவ்வாறு இருப்பது சில நேரங்களில் நமக்கு எதிராகச் செயல்படக்கூடும். ஆனாலும் இவ்வாறு வெளிப்படையாக இருப்பதை நாம் ஒருபோதும் இழந்து விடக்கூடாது, இது மிகவும் முக்கியமானது, நீங்கள் சொல்வதைப் போல், அரசாங்கம் அல்லது வணிகம் என்று எதுவாக இருந்தாலும் இதை நாம் கடைப்பிடிக்க வேண்டும். . .

Not infection but GDP: India has flattened the wrong curve, says ...

ராகுல் காந்தி: வெளிப்படையாக இருப்பது குறித்து நீங்கள் சொன்னீர்கள். சரி? நாம் வெளிப்படையாக இருக்கிறோம், நமது நாகரிகம் திறந்த மனதுடன் இருக்கிறது. ஏனெனில் பாரம்பரியமாகவே, நம் நாட்டில்  குறிப்பிட்ட சகிப்புத்தன்மை இருந்து வருகிறது. அதாவது, நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள் என்று. சரி? அதுவும் அப்படித்தான். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த சகிப்புத் தன்மை கணிசமாகக் குறைந்துவிட்டதான உணர்வை நாம் பெற்றிருக்கிறோம். அதாவது, நான் உங்களிடம் நேர்மையாக இதைச் சொல்கிறேன். நேற்று, எனது நண்பர் ஒருவர் என்னிடம் உங்கள் அடுத்த நேர்காணல் என்ன? என்று கேட்டார். திரு.பஜாஜுடன் பேசப் போகிறேன் என்று நான் சொன்னேன், அவர் உடனே ’அவ்வளவு தைரியம் இருக்கிறதா’ என்றார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்று நான் அவரிடம் கேட்டேன். ‘உங்களுடன் பேசுவதற்கு அவருக்கு தைரியம் இருக்கிறது’, இல்லையா?’ என்று அவர் கேட்டார். 

ராஜீவ் பஜாஜ்: எனது அனுபவங்களை நான் உங்களுக்குச் சொல்கிறேன். உண்மையில், உங்களைப்  போலவே, நானும் நேற்று ஒருவருடன் இதைப் பகிர்ந்து கொண்டேன், நாளை 12 மணிக்கு நான் ராகுலுடன், இது குறித்து பேசப் போகிறேன் என்று கூறினேன். அதை செய்ய வேண்டாம் என்பதே முதல் எதிர்வினையாக இருந்தது. ஏன் கூடாது? என்று நான் கேட்டேன். ’வேண்டாம். அது உங்களை சிக்கலில் சிக்க வைக்கும்’ என்றார். ஆனால் நான் சொன்னேன், நான் இதுபோன்று சில விஷயங்களைச் சொல்லப் போகிறேன். கொஞ்சம் கடுமையாகக்கூட அதைச்  சொல்லலாம். ஆனால் நான் ஏற்கனவே இதை என்டிடிவியில் சொல்லியிருக்கிறேன். எக்கனாமிக் டைம்ஸில் சொல்லியிருக்கிறேன், ஆஜ்தக்கில் சொன்னேன், இதை பல சேனல்களில், பல ஊடகங்களில் நான் சொல்லியிருக்கிறேன். எனவே அது தவறு என்றால், இது தவறுதான் என்றேன். ‘இல்லை ஊடகங்களில் பேசுவது வேறு’ என்ற அவர், ’ராகுல் காந்தியுடன் பேசுவது வேறு மாதிரி’ என்றார். நான் இதை கொஞ்சம் வலியுறுத்தினேன். நான் உங்களிடம் மிகவும் நேர்மையாகச் சொல்கிறேன். நான் அவரிடம் சொன்னேன், ’நாங்கள் வணிகம், பொருளாதாரம், பொதுமுடக்கம், என்ன செய்வது, எப்படி நகர வேண்டும், தொழில்நுட்பம், தயாரிப்புகள், அவர் மோட்டார் சைக்கிள்களை நேசிப்பவர் என்பதால், நாங்கள் மோட்டார் சைக்கிள்களைப் பற்றி பேசுவோம். இதுபோன்று எதுவும் நடக்க கூடாதா?’ என்று கேட்டேன். அந்த நபர் தொடர்ந்து, ’ஏன், ஏன் ஆபத்தை எதிர்கொள்ள  வேண்டும்?’ என்றார். ஆனால் ஆமாம், இதுதான் இன்றைக்கு இருக்கின்ற பொதுவான சூழல். உங்களுக்குத் தெரியும், நவம்பர் மாதத்தில், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் இருந்த எக்கனாமிக் டைம்ஸ் விருது விழாவில், என்னுடைய தந்தை அந்த விஷயத்தை எழுப்பினார். ஆக ஒருவர் இதைப் பற்றி நிறையக் கேட்கிறார். இது ஏன் அவர் சொல்வதைப் போல இருக்க வேண்டும் என்று நான் மக்களிடம் கேட்க முயற்சிக்கிறேன். ஏனென்றால் குறைந்தபட்சம் இதுவரை இவ்வாறு பேசியதற்காக, நான் எந்த விளைவையும் எதிர்கொள்ளவில்லை. குறிப்பாகச் சொல்வதென்றால் இதைப் பற்றி. ஆமாம், நீங்கள் சொல்வது உண்மைதான், இது பொதுவான எண்ணமாக இருப்பதாகவே தோன்றுகிறது, இது வருத்தமளிப்பதாக இருக்கிறது. ஏனெனில் வெளிப்படையாக இருப்பதே நமது பலம் என்று நான் நினைக்கிறேன், அதை நாம் ஒருபோதும் இழந்து விடக்கூடாது.

ராகுல் காந்தி: நீங்கள் குறிப்பிட்ட அந்த வகையான சூழல், இந்தியாவில் வணிகத்தைப் பாதிக்கின்றது  என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

ராஜீவ் பஜாஜ்: இல்லை. தன்னிடம் உற்சாகம், நம்பிக்கை இல்லாவிட்டால் யாரும் முதலீடு செய்ய மாட்டார்கள். எனவே இது குறித்து என்னிடம் எந்த சந்தேகமும்  இல்லை. இந்தியாவில் இந்த கேள்வி இப்போது எழுகிறது என்றால், 100 பேர் பேசுவதற்கு பயப்படுகிறார்கள் என்றால், அவர்களில் 90 பேரிடம் எப்படியாவது மறைக்க ஏதேனும் இருக்கிறது என்றே பொருள்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில், யுபிஏ 2 மற்றும் என்டிஏ 1 என்று நான் கூறுவேன், கடந்த காலங்களில் இதுபோன்று நிறைய உண்மைகள் வெளியே வந்துள்ளன என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். வணிகர்களும் பாலைப் போன்று வெளுத்தவர்கள் இல்லை. அது குறித்து பல எடுத்துக்காட்டுகளை நாம் பார்த்திருக்கிறோம். எனவே, என்னுடைய கருத்து என்னவென்றால், ஏராளமானோர் பேசுவதில்லை. ஆனாலும், நான் அப்படிச் சொல்லும் போது, என் தந்தையைப் போன்ற ஒருவரும் இருக்கிறார், ஆனால் அவர்களால் பேச முடியாது.

ஒருவேளை அது பயத்தால் இருக்கலாம். ஆனால் இங்கே எழுகின்ற கேள்வி என்னவென்றால், எது குறித்த பயம்? ஒருவேளை எதையாவது மறைக்க வேண்டும் என்ற பயம் இருக்கலாம். இரண்டாவதாக, நான் சொல்ல விரும்புவது, பேச விரும்பாதவர்களைப் பற்றி, நான் உயர்வாக நினைக்கிறேன். அவர்கள் பேச விரும்பாததற்கான காரணம், பின்னர் வரும் பின்னடைவை அவர்களால் சமாளிக்க முடியாது என்பதாக இருக்கலாம். நான் கொஞ்சம் அந்த வகையில்தான் வருகிறேன். எந்த சமூக ஊடகத்திலும் நான் இல்லாததற்கு ஒரு காரணம் இருக்கிறது, ஓரிரு சேனல்களைப் பெயரிடாமல் நான் உங்களிடம் சொல்வேன். நேற்று கூட, ஒரு மிக முக்கியமான சேனலில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது, அது அரசு சார்ந்திருப்பது. அத்தகைய சேனல்களில் தோன்ற நான் மறுத்து விடுகிறேன். அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய விஷயங்கள் சமூக ஊடகங்களில் இருப்பதால், உடனடியாக உணர்ச்சிவசப்படாதவர்களுக்குகூட ஆழ்ந்த வருத்தத்தைத் தருவதாக, அத்தகைய சேனல்களில் நடத்தப்படுகின்ற விவாதங்கள் இருப்பதைக் காண முடிகிறது. எனவே நான் அதை ஆம் என்றே நினைக்கிறேன், சகிப்புத்தன்மை, உணர்ச்சிவசப்படுவது, போன்ற சில விஷயங்களை இந்தியா சரிசெய்ய வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.

ராகுல் காந்தி: இறுதிக் கேள்வி. இப்போது நாம் பொதுமுடக்கத்தை நீக்கும் வழியில் இருக்கிறோம், அவ்வாறு திறக்கப்படும் போது, உங்களுடைய விநியோகச் சங்கிலியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், உங்கள் விநியோகச் சங்கிலி எப்போது நியாயமான மட்டத்தில் செயல்படத் தொடங்கும்? திறப்பதற்கு எவையெவை முழுமையாகத் தேவைப்படும்?

3-ம் கட்ட லாக்டவுன்: பச்சை, சிவப்பு ...

ராஜீவ் பஜாஜ்: திறப்பது குறித்து மென்மையான, ஒருங்கிணைந்த, இசைவான இயக்கம் இருப்பதாக நான் காணவில்லை. ஆமாம். நான் நேற்று கேட்டதை அடிப்படையாகக் கொண்டு, அந்த திசையில் நாம் நகர்கிறோம் என்பதைப் புரிந்து கொள்கிறேன். ஒரு வகையில் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை என்று நான் நினைக்கிறேன். ஒருவர் ஒரு விஷயத்தை சொல்வார், அது யாரென்று எனக்குத் தெரியாது. அது மாநில முதல்வரா அல்லது மாவட்ட ஆட்சியரா அல்லது அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனாலும், அனைவரும் ஒன்றாக ஒருங்கிணைந்த வழியில் முன்னேறிச் செல்ல வேண்டும். அது இங்கே நடக்கவில்லை. மீண்டும் நாம் உருவாக்கியிருக்கும், அந்த தொற்று என்றால் மரணத்திற்குச் சமம் என்ற பயம்தான் அதற்கான காரணமாக இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்.  நோய்த்தொற்றுகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில், பொது​​மக்கள் அந்த பயத்தை இன்னும் தங்களிடம் சுமந்து கொண்டிருக்கிறார்கள். எனவே மன்னிக்கவும், நான் உங்கள் கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்கவில்லை. ஆனால் நான் மிகவும் வேதனையடைகிறேன், ஏனெனில் திறப்பது என்பது மிகக் கடினமான பணியாகும்.

இந்த அச்சத்தை மக்களுடைய மனதில் இருந்து அகற்றுவதே இப்போது முதல் பிரச்சனை என்று நான் நினைக்கிறேன். மிகத் தெளிவாக ஒருங்கிணைந்த நடவடிக்கை இருக்க வேண்டும், நான் பிரதமரிடமிருந்து இதைக் கூறுவேன். ஏனென்றால் சரியோ அல்லது தவறோ, அவர் ஏதாவது சொல்லும்போது மக்கள் அதைப் பின்பற்றுவதாகவே தெரிகிறது. அவர் எழுந்து நின்று அனைவரிடமும் சொல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இப்படித்தான் நாம் முன்னேறப் போகிறோம், அனைத்தும் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தொற்றுநோயைக் கண்டு அஞ்சாதீர்கள். கிட்டத்தட்ட யாருமே இறக்கவில்லை. அது உங்களுக்குத் தெரியும், நாம் இப்போது முன்னேறிச் செல்ல வேண்டும் என்று சொல்ல வேண்டும். 

ராகுல் காந்தி: சரி. நன்றி. மிக்க நன்றி ராஜீவ். உங்களுடன் பேசியது அருமையாக இருந்தது. 

ராஜீவ் பஜாஜ்: நன்றி. நீங்கள் இவ்வளவு நேரத்தை என்னுடன் கழித்ததற்கு நன்றி. மிக்க நன்றி, உண்மையிலேயே பாராட்டுகிறேன்.

https://www.nationalheraldindia.com/india/watch-rahul-gandhi-in-conversation-with-industrialist-rajiv-bajaj

2020 ஜூன் 04 

https://www.youtube.com/watch?v=p1tbgVLJVZo

நன்றி: நேசனல் ஹெரால்டு

தமிழில்: தா.சந்திரகுரு

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *