பூர்வ குடிகள்….!!! கவிதை – கவிஞர். ச.சக்தி

பூர்வ குடிகள்….!!! கவிதை – கவிஞர். ச.சக்தி




சாலையோரத்தில்
அமர்ந்தவாறு
கிழியாத
வெள்ளைத் தாளில்
தேசியக்கொடியை
வரைந்து
கொண்டிருந்தாள் சிறுமி ,

வரைந்த
தேசியக்கொடியினை
எங்கு ஓட்டி வைப்பதென்று
அப்பாவைப்
பார்த்துக் கேட்கிறாள் சிறுமி,

இடிக்கப்பட்டு
தலை சாய்ந்து கிடக்கும்
நம் வீட்டு
நடுச் சுவரில்

அந்த தேசியக்கொடியை
ஓட்டி வையுங்களென்று
சொல்லியவாறே
அங்கிருந்து
நகரத்தொடங்கினார் அப்பா
துரத்தப்பட்ட
நகரத்து வெளியே
மூட்டை முடிச்சுகளோடு ,

கவிஞர் ச.சக்தி ,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,

அந்தப் புன்னகையில் ஆதிரா கவிதை – கயல்விழி

அந்தப் புன்னகையில் ஆதிரா கவிதை – கயல்விழி




காலத்தின் நெடுஞ்சாலையில் எத்தனையோ
ஓட்டங்கள், எத்தனையோ பயணங்கள், முகம்
அறியாத பல முகங்கள், அனைத்தும் கடந்து
செல்கிறது கானல் நீராய்….. கடந்து செல்லும்
பாதையில் இவளும் பயணிக்கிறாள்.

அவள் தான் ஆதிரா. வயதான பெற்றோர், தான்
அடையாத உயரத்தை தம்பி, தங்கை அடைய
வேண்டும் என்ற எண்ணம், வலிகளோடு நிறைந்த
பாதச் சுவடுகள் அவள் செல்லும் வழி எல்லாம்
நிறைந்து கிடக்கின்றன.

கோலமிட்ட வாசல் முதல் கூட்டம் நிறைந்த
பேருந்து நிலையம் வரை ஓயாமல் நடை
போடுகின்றன பாதங்கள்.

அவள் கடக்கும் பாதையில் ஒரு ஒற்றை மாடி
கட்டடம். தன்னைத் தானே தாங்கி கொண்டு,
தனிமையில் நித்தம் ஏந்திக் கொண்டு,வேரூன்றி
நிற்கிறது, அந்த ஒற்றை மாடி கட்டடம். கூரை வீடு
எப்போது மாடி வீடாக  மாறும் என்று தன் தம்பி,
தங்கையின் கேள்விக்கு தினமும் கடந்து போகும்
அந்த கட்டடம் ஆதிராவின் பார்வையில் நீந்திக்
கொண்டே செல்லும். கட்டடத்தை மட்டும்
கவனித்த உள்ளம் அங்கு உள்ள மயில் ஜன்னல்
கம்பிகளுக்குப் பின்னால் இருக்கும் அந்த வசீகர
தோற்றத்தையும் கவனித்தது.

40 வருடங்கள் என வரைந்துவிட்ட அவள் சித்திரம்.
காலத்தின் பாதையில் எப்போதும் ஓயாது
ஓடிய கால்களை காலம் பார்த்து, காலமே பொறாமை
கொண்டு, ஓடியது போதும்  ஓய்வெடு என்று
சொல்லும் அளவிற்கு மாறியது அவள் கால்கள்.
இன்னல்களைக் கடந்து செல்லும் மனம்,
வாதத்தையும் கடந்து சென்றது.

சக்கர நாற்காலியில் வாழ்க்கை தொடங்கியது
இலட்சுமிக்கு. கணவனை இழந்த கண்ணீர்
மங்கை, குழந்தை இல்லா நங்கை. நான்கு
சுவற்றில் அடைபட்டுக் கிடக்கும் அவளுக்குத்
தனிமையில் இருந்து விடுபடக் கிடைத்தது
அவளுக்கு எழுத்துக்கள். பல பேரைக் கடந்து
செல்லும் மனம், ஆதிராவையும் கவனித்துச்
செல்கிறது.

வாடிய பூ போல அவள் முகம், இரத்தத்தை
வியர்வையாய் உறிஞ்சும் வேலை, ஓயாது ஓடி
வலுவிழந்த கால்கள்., இன்னும் ஓடியே ஆக
வேண்டும் என்ற எண்ணம். கடந்து செல்லும் ஒரே
சாலையில், இருவரும் பார்வையில் மிதந்து
செல்கின்றனர்.

ஒருநாள் பார்வை, மறுநாள் கவனிப்பு. இப்படியே
மாதங்கள் ஒட, சற்று புன்முறுவலும் வலம்
வருகிறது இருவர் பார்வையிலும். தனிமையில்
நித்தம் ஏங்கிய  இலட்சுமிக்கு, ஆதிராவின் சிறு
புன்முறுவல் தாளாத இன்பம். நாளாக நாளாக
புன்முறுவல் நீண்டு கொண்டே செல்கிறது.
எழுத்துகளோடு உறவாடிய இலட்சுமிக்கு,
ஆதிராவின் புன்முறுவலும் சில கனம் உறவாடிச்
சென்றது.

கணப் பொழுது இன்பம் காலத்திற்குப்
பொறுக்கவில்லை போலும். தொலைந்தது
ஆதிராவின் புன்முறுவல்.  பிள்ளையை
தொலைத்த அன்னை உள்ளம் போல தேடியது
இலட்சுமியின் மனம். எவ்வளவு தேடியும்
காணவில்லை.வீட்டை மட்டும் வட்டமடித்த
நாற்காலி, காலை வேளையில் தன் தெருவையும்
வட்டமடிக்கும் போது, அவள் நடை போடும்
சாலையின் சுவற்றில் எதார்த்தமாய்த்
தென்பட்டது கண்ணீர் அஞ்சலிக் காகிதம்.

கடலென பொங்கியது கண்ணீர், இறுகியது
மனம். காலம் முழுவதும் துணையாய் இருப்பேன்
என சொல்லும் நம்பிக்கை விழிகள் இமை
மறித்தன.

“சாலைகள் நீண்டன…
அவள் பாதம் பட்ட இடங்கள் பலர் பாதம்
தொட்டது…
சன்னல் அவ்வப்போது திறந்தது…

இருந்தாலும் பதட்டம் மீளவில்லை…
கண்ணீர் குறையவில்லை…
இன்றும் புன்னகை சிந்திக் கொண்டே இருக்கிறாள்…
கால்நடைகள் உண்ணாத…
சுவற்றின் மேல் கிழிந்த காகிதமாய்…
அந்தப் புன்னகையில் ஆதிரா…”

கயல்விழி
நாகை
9626552403
[email protected]

Kaviyoviyathodar Yuthageethangal - Kombu Mulaitha Narkali 35 Poetry Series by Na ve Arul. நா.வே.அருளின் கவியோவியத் தொடர் யுத்தகீதங்கள்- கொம்பு முளைத்த நாற்காலி 35

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: கொம்பு முளைத்த நாற்காலி 35 – நா.வே.அருள்




அதிகாரத்திற்குக் கொம்பு முளைத்த விஷயம்
உலகத்திற்கே தெரிந்துவிட்டது.
விவசாயி தலையில்
மிளகாய்த் தோட்டங்கள்!

அதிகாரத்திற்கு
முதலில் செயலிழக்கும் உறுப்புகள்
அதன் கண்கள்.

அதிகாரம் தற்போது
மிகவும் பழுத்துவிட்டது
ஊன்றுகோல் இல்லாமல் விழுந்துவிடும் ஆபத்து
சுருள் முள்வேலிகள்
ஆணிக் கம்பங்கள்
தெருக்களில் கல்வாரி மலைகள்

அதிகாரத்திற்கு
ஒரு குதிரையின் லாடம் மற்றும்
இரும்புத் தொழிற்சாலை போதும்.
வயல்வெளி அதற்கொரு கிழிந்த ரூபாய் நோட்டு.

கடவுளின் கைத்தொழிலில்
சாத்தான்களின் நிர்வாகம்
ஜனநாயகம் ஒரு ஷோ கேஸ் பொம்மை

அதிகாரம்
வெளுத்துப்போன கர்ப்பப் பையில்தான்
வளரத் தொடங்கியது
அதன் நிழலே அதனை
மெல்ல மெல்லத் தின்னத் தொடங்குவதால்
காணாமல் போய்விடுகிறது
விசித்திரம் என்னவெனில்
அதிகாரத்தின் இறுதி ஊர்வலம்
பட்டாபிஷேகம் போல் பளபளக்கும்!

கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்

Kaviyoviyathodar Yuthageethangal - Pattapoochiyin siragugalum vettukiliyin kalgalum 34 by Na ve Arul நா.வே.அருளின் கவியோவியத் தொடர் யுத்தகீதங்கள்- பட்டாம் பூச்சியின் சிறகுகளும் வெட்டுக்கிளியின் கால்களும் 34

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: பட்டாம் பூச்சியின் சிறகுகளும் வெட்டுக்கிளியின் கால்களும் 34 – நா.வே.அருள்




பட்டாம் பூச்சியின் சிறகுகளும் வெட்டுக்கிளியின் கால்களும்
********************************************************************
கடவுளின் தலையை
ஞானி பொருத்திக் கொள்கிறபோது
அவனது பெயர் விவசாயி.

விவசாயியின் இதயம்
எப்போதும் தரிசாய் இருப்பதில்லை
அது
நாற்காலிகளை மரங்களாக்கிவிடுகிறது
மரங்களைத் தோப்பாக்கிவிடுகிறது
தோப்புகளை வனமாக்கிவிடுகிறது.

உலகத்திலேயே தனக்குப் பிடித்தமான ஒன்றை
இடச்சொல்லி
விவசாயியிடம் ஓர் உண்டியலைக் கொடுத்தால்
அவன் ஒரு விதையைத்தான் தேர்ந்தெடுப்பான்.

அவன் வளர்த்த அட்டைகள்
அவனது வயலில்
அறுவடைகளை உறிஞ்சத் தொடங்கிய பின்புதான்
அவனது உடலின் குருதி குறைய ஆரம்பித்தது.

அவனது கவலையெல்லாம்
விளைச்சலில் இறங்கும் பூச்சிகள் அல்ல
அவனது வயலில் இறங்கிய
திசையெல்லாம் பறந்துகொண்டிருக்கும்
பட்டாம் பூச்சியின் சிறகுகளும்
வெட்டுக்கிளியின் கால்களும் கொண்ட
புதிய விலங்குகள்!
அவை விநோத மொழி பேசுகின்றன
அவை
பாசனத்திற்கான தாகத்தின் கடலைப்
பருகிவிடுகின்றன.

அவனது கூரையின் வானமும்
தரையின் மண்ணும் களவாடப்படுகின்றன.

அவன் மீது மரணம்
ஒரு மலிவான பொருளைப்போலத் திணிக்கப்படுகிறது.

சாணம் பூச மறந்த விதை
கெட்டுப் போவதைப்போல
எதிரிகளின் மூளை செயலற்றுவிடுகிறது.

விவசாயிகளை வெல்ல நினைப்பவன்
முதலில் ஆயுதங்களைக் கீழே எறிந்தாக வேண்டும்
விவசாயிகள் முன் நிராயுதபாணியாக
நிற்க வேண்டும்!

கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்

Kaviyoviyathodar Yuthageethangal - Thanthirangal 33 by Na ve Arul நா.வே.அருளின் கவியோவியத் தொடர் யுத்தகீதங்கள்- தந்திரங்கள் 33

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: தந்திரங்கள் 33 – நா.வே.அருள்




தந்திரங்கள்
*****************
மகாத்மா காந்தியின் மார்பில்
குண்டு துளைத்தது ஒரு விஷயமேயில்லை
இன்னும் சொல்லப் போனால்
எப்படி இறந்து போனார் என்பதை
மர்மத்தின் போர்வையால் மூடிவிடமுடியும்.

காந்தி பயன்படுத்திய
ஒவ்வொரு பொருளும்
காட்சிக்கு வைக்கப்படுகிற அதே அரங்கத்தில்
அவர் ஒரு விநோதமான ஏலப்பொருளாகிவிட்டார்.

எல்லாவற்றையும் விட
மகாத்மா காந்தியின் உருவப் படத்தில்
வேறொரு பிம்பத்தைச் செருகுவது
ஒரு தந்திரமான கலை.

ஒரு கழிவறையில் வெளித்தள்ளப்படும்
கழிவுகளைப் போல
மகாத்மாவின் நினைவுகள்
மக்களின் மனங்களிலிருந்து
அகற்றிச் சுத்தம் செய்யப்படுகின்றன.

மகாத்மாவின் பிரார்த்தனை உன்னதமானது
அது ஒரு விவசாயியை பிரதமராக்கும்
தூய்மை வாய்ந்தது.
பாராளுமன்றப் பாசனத்திற்கு
ஒரு விவசாயியைத்தான் விரும்பினார்.

இது நம்பிக்கைத் துரோகிகளின் காலம்

விவசாயி என்கிற வார்த்தையை மறந்துபோன
மூளைதான் அரசாங்க நாற்காலியின் காட்சிப்பொருள்
தலைநகரமே மரண பஜனைக்குத் தயாராகிவிட்டது
மகாத்மாவின் கனவுப் பிரதமர்களைக்
குறிபார்த்துக் கொண்டேயிருக்கின்றன
கோட்சேக்களின் குண்டுகள்!

கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்

Haiku Poems 3 இரா.கலையரசியின் ஹைக்கூ கவிதைகள் 3

ஹைக்கூ கவிதைகள் – இரா.கலையரசி




1)
பிழிந்த துணியில்
கொட்டித் தீர்த்தது
மழை.

2)
வரைந்த ஓவியத்தை
தீண்டி மகிழ்ந்தான்
பார்வை மாற்றுதிறனாளி

3)
காற்றிடம் சண்டை இட்டு
வாசலில் தர்ணா
சருகுகள்

4)
சுடுகாட்டுப்  பிணங்கள்
சண்டை இட்டன
சாதிச் சங்கத்திற்கு.

5)
காதுகளைக் கொஞ்சிய
அவனை அணைத்தேன்
அலைபேசி
Kaviyoviyathodar Yuthageethangal - Viyugangal 32 by Na ve Arul நா.வே.அருளின் கவியோவியத் தொடர் யுத்தகீதங்கள்- வியூகங்கள் 32

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: வியூகங்கள் 32 – நா.வே.அருள்




வியூகங்கள்
******************
காட்டுப் பன்றிகள்
வயலில் இறங்குவதைப் பார்த்த விவசாயிகளால்
அமைதியாக உறங்க முடியவில்லை.

இப்போது காட்டுப் பன்றிகள்
யானைகளைப்போலப் பருத்துவிட்டன
அவை
வயல்களை விழுங்கி விடுகின்றன
விவசாயிகளின் கிணறுகளைக்
குருதியால் நிரப்பிவிடுகின்றன.

அவை
முதலில் விவசாயிகளைக் கொன்றுவிட்டு
பிறகு வயல்களைத் தின்றுவிடுகின்றன.

அவை
நாற்காலிகளின் கீழே
சூழ்ச்சிகளின் புதர்களில் வசிக்கின்றன.
அரண்மனையின் முன் கட்டப்பட்டிருந்த
ஆராய்ச்சி மணிகளின் நாவுகளைக் கொறித்துவிடுகின்றன.

ஒரு கடுங்குளிரில்
பனிப் போர்வையின் வெடவெடப்பில்
விவசாயிகள் குப்புற விழுந்த போதுதான்
பின்னாலிருந்து
ஓநாய்களைப்போலத்
தனித்தும் பின் கூட்டமாகவும்
யுத்தத் தந்திரங்களால்
வியூகம் வகுக்கின்றன.

சில நேரங்களில்
காட்டுப் பன்றிகள் இறங்கிய வயல்களில்
விவசாயிகள்
செயலிழந்து தலைகவிழ்ந்து நிற்க நேரிடுவது
நம் காலத்து மிகப் பெரிய அபத்தம்தான்!

கவிதை – நா. வே. அருள்
ஓவியம் – கார்த்திகேயன்

Kaviyoviyathodar Yuthageethangal - Oru Nakkin Neelam 31 by Na ve Arul நா.வே.அருளின் கவியோவியத் தொடர் யுத்தகீதங்கள்- ஒரு நாக்கின் நீளம் 31

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: ஒரு நாக்கின் நீளம் 31 – நா.வே.அருள்




ஒரு நாக்கின் நீளம்
*****************************
அதிகாரத்தின்
நாக்குக்குச்
சிறகுகள் முளைக்கத் தொடங்குகின்றன.
அது வாய்க்கு வெளியே
வெகுதூரம் பிரயாணம் செய்து
சென்று சேருமிடம் கொலைக்களம்.

வளையும் உலோகத்தாலான அதன் நாக்கு
பொய்களின் உலைக்களத்தில்
வடிவமைக்கப்படுகிறது.
செய்நேர்த்தியுடன் செய்வதற்கு
நாட்பட்ட தீயில்
இதமான சூட்டில்
வாட்டி எடுக்க வேண்டும்.

நடனமிடும் நாக்கு
அழகாகக் குரைப்பதற்குப் பயிற்சிகள்
எடுத்துக் கொள்கிறது.
கால்களை நாவால் சுத்தம் செய்யும்
தொழில் நுட்பம் பழக்க
நிறைய தொழிற்கூடங்கள்..

சுருக்கம் விழுந்த வயிறுகளின் பட்டினிதான்
பொய்களின் நாவுகளுக்கான
ரொட்டித்துண்டு.
சப்பாத்துகளின் தோல் ருசியில்
நாகரிகமாகப் பருத்துவிடுகிறது
நாக்கு.

உலகின் எந்த நதியைவிடவும் நீளமானது
உலகின் எந்த மலையை விடவும் பெரிதானது
உலகின் எந்தக் கடலைவிடவும் ஆழமானது
பொய்களின் நாக்குதான்.

அது புரள்வதற்காக வதைமுகாம்களின் குருதியில்
உமிழ்நீர் சுரந்துகொள்கிறது.
கோட்டை அகழியின்
முதலைகளைத் தீனியாக்கிக் கொள்கிறது.

அதன் ஒற்றை உடலைச் சுமப்பதற்கு
எட்டுக்கால் நாய்கள்
எப்போதும் தயாராய் இருக்கின்றன..

கான்கிரீட் சவப்பெட்டியில் பாதுகாப்பான அறையில்
தனது காதலியுடன் இறந்துபோன ஒரு குரங்கை
காட்டுக்கு ராஜாவாகிவிட்டதாகக்
கதை சொல்கிறது.

இப்போதோ சுவற்றில் எழுதப்பட்ட
சரஜீவோ என்கிற வார்த்தையைக் கண்ட
பாபிலோனிய பெல்ஷாஜ்ஜர் போல
மரணத்தின் வீதிகளில்
தலைதெறிக்க ஓடத் தொடங்கிவிட்டது.

கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்

பின்குறிப்பு
இட்லரின் பிரச்சார அமைச்சனை அறிஞர் அண்ணா–கோணிப்புளுகன் கோயபல்ஸ் என்பார்.
இட்லர் செத்த பின்பும்கூட கோயபல்ஸ் கடைசி நேரத்தில்

சிவப்பு மிருகங்களுக்கெதிராக -தலைநகரின் மையத்தைப்பாதுகாப்பதற்காக இட்லர் முன்னணிப்படையில் நிற்கிறார்- என்று புளுகினான்.
அதற்கு ஒரு எழுத்தாளன் பதில் எழுதினான்—
உண்மையில் அந்தக்குரங்கு தனது காதலியோடு கான்கிரீட் சவப்பெட்டியில் பாதுகாப்பான அறையின்
ஆழத்தில் இறந்து கிடக்கிறது–என்று.
பின்பு பாசிஸ்டுகள் அனைவரும் செஞ்சேனையால் அழிக்கப்பட்டனர். வரலாறு மறப்பதேயில்லை.

Kaviyoviyathodar Yuthageethangal - Kanakku 30 by Na ve Arul நா.வே.அருளின் கவியோவியத் தொடர் யுத்தகீதங்கள்- கணக்கு 30

கவியோவியத் தொடர் யுத்த கீதங்கள்: கணக்கு 30 – நா.வே.அருள்




கணக்கு
*********************
நாங்கள் காயம்பட்டுத் திரும்பியிருக்கிறோம்
துரோகங்களின் ஆயுதங்கள்
துளைத்துவிட்டன.
இன்று இரவு எங்கள் கூடாரத்தில்
கர்ஜிக்கும் சிங்கத்துடன் உறங்கி எழுவோம்.

பிடரி மயிர் சிலிர்க்க
பிறகு பிறகு என்று
போராடிக் கொண்டே இருப்போம்.

எங்கள் ஓணான்களுடன்
பச்சோந்தியை அனுப்பி வைக்கும்
தந்திர மிருகங்களின்
குணமறிவோம்.

விடுதலை என்பது வலி மிகுந்த
சுயமரியாதை.
அதன் ருசி துரோகிகளுக்குத் தெரியாது.

இது தோல்வியல்ல
துயரங்களைக் குருதியில் குழைத்து
மனம் முழுதும் பூசிக் கொள்கிறோம்
எங்கள் ஏர்க்கலப்பைகள்
ஆயுதங்களாக மாறிவிடுகின்றன.

துரோகிகளின் பாதத் தடங்கள்
இந்தியாவின் பிச்சைப் பாத்திரங்கள்.
எங்களுக்குத் தெரியும்
விடுதலை வீரர்களின் பாதத் தடங்கள்
சுதந்திர தேவியின் மலர் மாலைகள்.

கவிதை – நா.வே.அருள்
கார்த்திகேயன் – ஓவியம்