மாக்சிம் கார்க்கியின் வாழ்க்கை சொல்லும் பாடம்
மறைந்து போன ஈழத் தமிழ் இலக்கிய விடிவெள்ளி – வீ. பா. கணேசன்
கடந்த சனிக்கிழமை (04/12/2021) அன்று காலை சென்னையில் இயற்கை எய்திய தோழர் செ. கணேசலிங்கன் பல வகையான பாரம்பரியங்களை நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார். அவரது வாழ்க்கைப் பாதையின் சுவடுகளை திரும்பிப் பார்க்கையில் இலங்கை, தமிழ்நாட்டு இலக்கிய உலகு எத்தகைய ஆளுமையை இழந்திருக்கிறது என்பதை நம்மால் உணர முடிகிறது. 1970களில் தமிழகத்தில் சமூக அக்கறையோடு எழுந்து வந்த எம்மைப் போன்ற மாணவர் தலைமுறையிடம்தான் அவரின் எழுத்துக்கள் முதன்முதலில் வந்து சேர்ந்தன.
ஈழத் தமிழ் இலக்கியத்திற்கும் தமிழகத் தமிழ் இலக்கியத்திற்கும் ஓர் உறவுப் பாலமாக பல்வேறு வகையில் அவர் விளங்கினார். ஓர் எழுத்தாளராகவும், மாத இதழ் ஒன்றின் ஆசிரியராகவும், நூற்பதிப்பாளராகவும் தமிழகத்துடன் அவர் மேற்கொண்ட உறவு இரு கரைகளிலும் எண்ணற்ற மாற்றங்களை ஏற்படுத்தின. ஈழத்து எழுத்தாளர்கள் இங்கு அறிமுகமானதும் தமிழ் எழுத்தாளர்கள் அங்கு அறிமுகம் பெற்றதும் அவர் தீவிரமாக இயங்கிய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூலமாகவே நிகழ்ந்தது. அவரின் செறிவுமிக்க வாழ்க்கையில் சில முக்கிய அத்தியாயங்களை மீள் நோக்கிப் பார்ப்பதே இந்த அஞ்சலிக் கட்டுரையின் நோக்கம்.
செ. கணேசலிங்கன் இலங்கையில் யாழ்ப்பாணம் அருகில் உள்ள உரும்பிராய் எனும் கிராமத்தில் 09.03.1928 அன்று க. செல்லையா- இராசம்மா தம்பதியரின் இரண்டாவது மகனாகப் பிறந்தார். சிறுவயதிலேயே படிப்பில் சூட்டிகையாக இருந்த அவர் யாழ்ப்பாணம் பரமேஸ்வரன் கல்லூரியில் எச்.எஸ்.சி. படித்து தேர்வு பெற்றதோடு, லண்டன் மெட்ரிகுலேஷன் தேர்விலும் தேர்ச்சி பெற்று, 1950ஆம் ஆண்டில் இலங்கை அரசின் பாதுகாப்புத் துறையில் ஓர் எழுத்தராகப் பணியில் சேர்ந்து 1981ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றார்.
இளம் வயதிலேயே சமூக அவலங்களை எதிர்த்துச் செயல்படுவதில் ஆர்வம் காட்டிய செ.க. தொடக்கத்தில் யாழ்ப்பாணம் பகுதியில் நிலவி வந்த தீண்டாமை கொடுமைக்கு எதிராகவும் அப்பகுதியில் உள்ள கோவில்களில் அனைத்துச் சாதியினரும் சென்று வழிபடும் உரிமை கோரியும் செயல்பட்டு வந்தார். இந்தப் பின்னணியில்தான் ‘மகாத்மா காங்கிரஸ்’ என்ற அமைப்பைத் தொடங்கி அதன் செயலாளராகவும் செயல்பட்டு வந்தார். 1949இல் கடல் வழியாக ரகசியமாக இலங்கை சென்ற கம்யூனிஸ்ட் தலைவர் ப. ஜீவானந்தம் அவர்களை யாழ்ப்பாணத்தில் சந்தித்து தன் சொந்த ஊரான உரும்பிராய் கிராமத்திற்கு அழைத்துச் சென்று தீண்டாமைக்கு எதிரான கூட்டத்தில் உரையாற்ற வைத்தார்.
பின்னர் இலங்கை கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. ஏற்கனவே சமூக அவலங்கள் குறித்த தெளிவான பார்வை கொண்டவராக இருந்த நிலையில், உண்மையான சமூக மாற்றத்திற்கு மார்க்சியப் பார்வை எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்தவராக மார்க்சிய நூல்களை ஆழப் பயிலத் தொடங்கினார்.
அவரின் ’மன்னிப்பு’ என்ற முதல் சிறுகதை 1950இல் தினகரன் நாளிதழில் வெளிவந்தது. இதே நேரத்தில் இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை நிறுவுவதில் முன்னின்று செயல்பட்டார். இதன் தொடர்ச்சியாக 1956ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற சிலி நாட்டுக் கவிஞர் பாப்லோ நெரூடாவை இலங்கையில் வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அந்த நிகழ்ச்சிக்கும் கணேசலிங்கன் தலைமை தாங்கினார்.
இன்றும் இலங்கை தமிழ் இலக்கிய உலகில் ஜாம்பவான்களாகத் திகழும் கலாநிதி க. கைலாசபதி, கலாநிதி கா. சிவத்தம்பி, கலாநிதி சு. வித்தியானந்தன், கலாநிதி எம்.ஏ. நுஃமான் என்று எண்ணற்ற அறிஞர்களின் செயல்பாட்டுக் களமாக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இருந்தபோது அதன் பின்னாலிருந்த உந்துசக்தியாக அவர் செயல்பட்டு வந்தார். அறிஞர்கள் இருக்கும் சபையில் சண்டை இல்லாமலா?
பாரதியின் சமூகப் பார்வை குறித்தும் தமிழ் இலக்கிய உலகில் அவரின் இருப்பு குறித்தும் ஏராளமான மாறுபட்ட கண்ணோட்டங்கள் இலங்கையில் மட்டுமல்ல; தமிழ்நாட்டிலும் நிலவி வந்த காலமது. இயற்கையாகவே, பாரதியின் தகுதியை குறைத்தும் கூட்டியும் விவாதிக்கும் குழுக்கள் இந்த இரண்டு பகுதிகளிலும் ஏராளமாகவே இருந்தன.
இருந்தபோதிலும், கருத்து வேறுபாடு கருத்து மட்டத்தில் மட்டுமே என்பதை தெளிவாக வரையறுத்து, அனைத்து பிரிவினருடனும் தோழமை உணர்வுடன் பழகி எழுத்தாளர் இயக்கத்தை முன்னெடுத்துச் சென்ற ஒரே எழுத்தாளர் அவர் என்று 1996இல் இலக்கு என்ற இதழ் குறிப்பிட்டிருந்தது. இலக்கிய விமர்சனம் என்ற புதிய பிரிவின் வலிமையையும் ஆழத்தையும் அவசியத்தினையும் தமிழ் இலக்கிய உலகிற்கு எடுத்துக் காட்டிய கலாநிதி க. கைலாசபதியின் நூல்களை பதிப்பிக்க சென்னை பாரி நிலையத்தை அணுகி இறுதி செய்தவர் அவர்.
பாரதி குறித்து மட்டுமின்றி, வேறுபல விஷயங்களிலும் இந்த இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவிய போதிலும் கைலாசபதி மறைந்து ஒரு மாதத்திற்குள்ளாகவே அவரது திடீர் இழப்பைத் தாங்க இயலாத துக்கத்துடன் எங்கெங்கோ சிதறிக் கிடந்த அவரது 19 கட்டுரைகளை மிகுந்த முனைப்புடன் தேடிச் சேகரித்து ’இலக்கியச் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் தனது குமரன் புத்தக இல்லம் வழியாகவே வெளியிட்டார். இதுபற்றி ஆர். சிவகுருநாதன் எழுதிய முதலுரையில் “ இவ்வரு முயற்சிக்கு அச்சாணி போன்றிருந்தவர் பேராசிரியரின் உள்ளங் கவர்ந்த நண்பர் செ. கணேசலிங்கன் ஆவர். நாட்டின் பல பகுதிகளிலும் பரந்து வாழ்கின்ற, பேராசிரியர் மீது பற்றுக் கொண்டுள்ள, இலக்கிய ஆர்வலர்களுடன் உடன் தொடர்பு கொண்டு பல கட்டுரைகளை சில தினங்களில் பெற்றார். பேராசிரியர் மீதும் தமிழ் மீதும் கொண்ட அன்புப் பாசத்தால் இரவும் பகலும் இதே வேலையாக இருந்து இந்நூலை உருவாக்கித் தந்தார்” என்று குறிப்பிட்டிருந்தார்.
கணேசலிங்கன் தனது பதிப்புரையில் “எவ்வாறாயினும் கைலாசபதியின் ஆராய்ச்சி முயற்சிகளும் விமர்சனக் கோட்பாடுகளும் இந்நூலிலுள்ள கட்டுரைகளில் தொக்கு நிற்பதைக் காணலாம். இவற்றைப் பரவலாக தமிழ் மக்கள் புரிந்து கொள்ள மேலும் பல தசாப்தங்கள் ஆகலாம். காலத்துக்கு முந்திய தீர்க்கமான சிந்தனை முடிவுகள் அவரது எழுத்தில் புதைந்துள்ளன” என்று பேராசிரியர் கைலாசபதியின் வகிபாகத்தை மிகச் சுருக்கமாகவும் ஆணித்தரமாகவும் எடுத்துக் காட்டியிருந்தார். அதேபோன்று கலாநிதி கைலாசபதியின் முனைவர் ஆய்வு நூலான Tamil Heroic Poetry என்ற நூலை தமிழர் வீரயுகப் பாடல்கள் என அவரின் குமரன் புத்தக இல்லம்தான் தமிழில் வெளியிட்டது.
ஒரு மனிதராக அவரது மானுடப் பண்பினை சித்தரிக்க எண்ணற்ற நிகழ்வுகள் உள்ளன. எழுத்தில் எவ்வாறு மார்க்சிய வழி நின்று மனித குலத்தின் விடிவைக் குறித்துப் பேசினாரோ, அதே போன்று தெளிவாகவும், உறுதியாகவும் தன் நிலைபாட்டினை தோழமையுணர்வுடன் எடுத்துக் கூறிய அடுத்த கணமே எளிமையோடும் பண்போடும் முற்போக்கு-பிற்போக்கு என்ற பேதமின்றி சக மனிதர்களின் இடர்ப்பாடுகளைக் களைய முன்நிற்பதில் அவரை விஞ்ச எவருமில்லை. 1980களின் இறுதியில் சென்னையில் நிலைகொண்ட அவர் இலங்கையிலிருந்து சிகிச்சைக்காகவும் வேறு பல காரணங்களுக்காகவும் வரும் எண்ணற்ற நண்பர்களுக்கு பரிவோடு உதவி செய்து வந்தார்.
அவரின் எழுத்து பற்றிக் கூறுவதெனில், ஒரு விஷயத்தை முதலில் கூறி விடுகிறேன். இலங்கை தமிழ் எழுத்தாளர்களில் நான் முதலில் வாசித்த எழுத்து அவருடையதே. அதன் பிறகே கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரின் எழுத்துக்கள் எல்லாம் எனக்கு அறிமுகமாயின. சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தன் படைப்பின் மூலம் வாசகர்களின் முன் வைத்த அவர் அதற்கான தீர்வுகளையும் நயமாக, உரிய இடத்தில், உரிய வகையில் எடுத்து வைப்பதிலும் திறன் பெற்றவராக இருந்தார்.
அவரின் சொந்த மகள்களுக்கும் மகனுக்கும் எழுதுவது போல் தோற்றமளித்த குந்தவிக்குக் கடிதங்கள், குமரனுக்குக் கடிதங்கள், மான்விழிக்குக் கடிதங்கள் போன்ற நூல்கள் மனித குலத்தின் வரலாற்றை மார்க்சிய நோக்கில் மிக மிக எளிமையாக எடுத்துக் கூறியது. சிறுவர்களுக்காக அவர் எழுதிய நூல்கள் அனைத்துமே இளம் வயதினரை பகுத்தறிவு பெறவும், அறிவியல் உணர்வு பெறவும் தூண்டுவதாக அமைந்திருந்தன.
1950இல் தொடங்கிய அவரின் இலக்கியப் பயணம் மிகத் தெளிவான ஒன்றாகவே இருந்தது. ” இலக்கியம் வாழ்க்கையை அதன் வரலாற்றோடும், வளர்ச்சியோடும் ஒட்டிச் சித்தரிக்க வேண்டும். தனி மனித வாழ்வு சமுதாயத்துடன் பின்னிப் பிணைந்து இருப்பதையும், சமுதாயத்தின் வளரும் – தேயும் சக்திகளைப் புலப்படுத்துவதையும் சித்தரிப்பதே உயர்ந்த இலக்கியமாகும். இத்தகைய இலக்கியம் படைப்பதற்கு எழுத்தாளன் முதலில் மனித இனத்தை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அவனுக்கு எதிர்காலத்தைப் பற்றிய தெளிவும் நம்பிக்கையும் திராணியும் பொறுப்புணர்ச்சியும் இருத்தல் வேண்டும்” என தன் சிறுகதைத் தொகுப்பு ஒன்றின் முன்னுரையில் பிரகடனம் செய்திருந்தார். அவ்வாறே இறுதி வரை வாழ்ந்தும் மறைந்தார் என்பதே உண்மை.

1950இல் இருந்து வாழ்நாளின் இறுதிவரை எழுதிக் கொண்டேயிருந்த அவரின் பேனாவில் இருந்து 71 நாவல்களும், ஏழு சிறுகதைத் தொகுப்புகளும், 22 கட்டுரைத் தொகுப்புகளும் சிறுவர்களுக்கான எட்டு நூல்களும் வெளிவந்தன. இவற்றில் அவரின் முதல் நாவலான ‘நீண்ட பயணம்’ இலங்கை சாகித்திய மண்டலத்தின் பரிசினை 1966ஆம் ஆண்டில் பெற்றது. 1987 முதல் 1999 வரை அவர் எழுதிய பத்து நாவல்கள் இலங்கைத் தமிழர் பிரச்சனையின் பல்வேறு அம்சங்களைப் பேசுவதாக இருந்தன. அவரின் ‘மரணத்தின் நிழலில்’ நாவல் 1994ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் பரிசினைப் பெற்றது.
இலங்கை தமிழ்ப்புதின உலகில் புதுத்தடம் பதித்த செ. கணேசலிங்கன் தன் எழுத்துக்களில் சமகாலத்தினை பிரதிபலித்ததோடு மட்டுமின்றி, சமூக மாற்றம், பெண்ணியம், சிறுவர்களுக்கான எழுத்துக்கள், சமூகத்தின் மீதான உலக மயமாக்கலின் தாக்கம் என பல துறைகளிலும் முத்திரை பதித்த படைப்புகளை வழங்கியிருந்தார். அவரின் எழுத்துக்கள் சமூக மாற்றம் தவிர்க்க முடியாதது என்பதை தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டே இருந்தன. தன்முனைப்பு அற்று அடக்கமாக வாழ்ந்த இந்த மனிதநேயவாதியின் இயல்புகள், படைப்புலகம் பற்றிய விரிவான ஆவண நூல் செ. கணேசலிங்கனின் படைப்பும் படைப்பாளியும் 2013 ஆம் ஆண்டில் வெளிவந்தது.
15-01-1971 முதல் கொழும்பிலிருந்து மாணவர்களுக்கான இதழாக வெளிவரத்தொடங்கிய கணேசலிங்கனின் குமரன் மாத இதழ், பின்னர் படிப்படியாக கலை, இலக்கிய, அறிவியல் படைப்புகளையும் மார்க்ஸீய சிந்தனைகளின் அடிப்படையில் கட்டுரைகளையும் வழங்கத்தொடங்கியது.
கலை, இலக்கியம், அரசியல், திரைப்படம், நாடகம் முதலான துறைகளில் அறிவியல்பூர்வமான ஆக்கங்களை வெளியிட்ட குமரன் 1979 ஜூன் மாதம் (56வது இதழ்) தடைப்பட்டு, மீண்டும் பாரதி நூற்றாண்டு காலத்தில் 1982 நவம்பர் மாதம் முதல் வெளிவந்தது. ஆயினும், 1983 ஜூலை மாதத்திற்குப் பின்னர் நின்று போன குமரன் மீண்டும் மே 1989இல் வெளிவரத் தொடங்கி 1990 ஜூன் உடன் முழுமையாக நின்றுபோனது. மொத்தமாக 77 இதழ்கள் வெளிவந்தன. இதை முழுத் தொகுதியாக 993 பக்கங்களுடன் கணேசலிங்கன் குமரன் புத்தக இல்லம் மூலமாகப் பின்னாளில் வெளியிட்டார். இலங்கையிலும் தமிழகத்திலும் நடைபெற்ற இலக்கிய சர்ச்சைகளின் ஆழத்தை இத்தொகுதியில் முழுமையாகக் காணலாம்.
இலங்கையின் தமிழ்ப்புதின எழுத்துலகில் புதுத்தடம் பதித்த செ. கணேசலிங்கன் தன் எழுத்துக்களில் சமகாலத்தினை பிரதிபலித்ததோடு மட்டுமின்றி, சமூக மாற்றம், பெண்ணியம், சிறுவர்களுக்கான எழுத்துக்கள் என பல துறைகளிலும் முத்திரை பதித்த படைப்புகளை வழங்கியிருந்தார்.
அதிலும் குறிப்பாக பெண்களின் மீதான சுரண்டல், சமூக ஒடுக்குமுறை ஆகியவற்றை அவர் எழுதிய பல்வேறு நாவல்களில் மிக விரிவாக எடுத்துரைத்துள்ளார். இன்றைய உலக மயமாக்கலின் நவீன கலாச்சார ஆதிக்கத்தால் பெண் இனம் எதிர் கொண்டு வரும் அடக்குமுறையை அவர் அளவிற்கு விரிவாக எழுதியவர் அபூர்வம் என்றே கூறலாம்.
உதாரணமாக, பாலுமகேந்திரா இயக்கி கமல்ஹாசன் நடித்த கோகிலா என்ற கன்னட மொழிப் படத்தின் தயாரிப்பு நிர்வாகியாக கணேசலிங்கன் பணியாற்றிய அனுபவப் பின்னணியில் திரைத்துறையில் சிறு வேடங்களில் வந்து போகும் நடிகர்கள், நடிகைகள் நடத்தப்படும் விதத்தைப் பற்றி கவர்ச்சிக் கலையின் மறுபக்கம் என்ற நாவலில் சித்திரமாக வடித்துள்ளார்.
அதைப் போன்றே தேசிய இனப் பிரச்சனையை மையமாக வைத்து மொத்தம் பத்து நாவல்களை 1987 முதல் 1999 வரை எழுதியுள்ளார். ஈழத்து சிறுவர் இலக்கியத்தின் வளர்ச்சியிலும் அவருக்கு மிகப்பெரும் பங்குண்டு. அவருக்கு 75 வயது நிறைவடைய இருந்த தருணத்தில் வாசகர்களும் நண்பர்களும் அத்தருணத்தை நினைவு கூரும் வகையில் சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டு பவள விழாவாக கொண்டாட வேண்டுமென முயற்சி செய்தபோது தலையிட்டு அதைத் தடுத்து நிறுத்தும் அளவிற்கு அடக்கமும் எளிமையும் நிரம்பப் பெற்றவராக அவர் திகழ்ந்தார்.
அவரது எழுத்துக்கள் அனைத்தின் ஊடாக நிற்பது மார்க்சிய கண்ணோட்டத்துடன் கூடிய மனித நேயமும் சமூக அவலங்கள் குறித்த விரிவான விமர்சனமுமே ஆகும். இந்தத் தெளிவான பார்வையே வாசகனை தன் சமூகத்தை நோக்கி கேள்வி எழுப்ப வைக்கிறது. அதன் மூலமே ஓர் ஆசிரியராக செ. கணேசலிங்கன் வெற்றி பெற்றார். அவரது நீண்ட வாழ்க்கை எண்ணற்ற துயர்களை எதிர்நோக்கிய போதிலும், இறுதிவரை மனித நேயம் பிறழாது சமூக மாற்றத்தின் மீது எள்ளளவும் நம்பிக்கை இழக்காது தன் எண்ணத்தை எழுத்தில் வடித்துக் கொண்டே இருந்தார் என்பதில்தான் அவரின் பெருமை துலங்குகிறது. அவரது நினைவைப் போற்றுவோம். எத்தகைய சமூக மாற்றத்தை அவர் விழைந்தாரோ, அதை உருவாக்கப் பாடுபடுவதே அவருக்கு நாம் செலுத்தும் சரியான அஞ்சலியாக இருக்கும்.
தோழர் செ. கணேசலிங்கனுக்கு செவ்வணக்கங்கள்!
இன்றும் வானம் ’செவ்வானம்’ ஆகத்தான் இருந்து வருகிறது!
பாதை புதிது பயணம் புதிது | பாட்ரிக் லேன்: என்னில் வளர்கின்றது ஒரு தோட்டம் – சா. தேவதாஸ்
இப்புவிக் கோளத்தின் சருமத்தில் உள்ள ஒவ்வொன்றும் உயிர்ப்புடன் உள்ளது. புழுக்கள் நூற்புழுக்கள் பாக்டீரியா பூஞ்சைக்காளான் என்பன இப்பரப்பில் தம் வாழ்வைப் பெருக்குகின்றன. அவை சிலவற்றை நொறுக்கித் தள்ளுகின்றன. சிலவற்றை கட்டியெழுப்புகின்றன. அவற்றில் உயிர்த்திருப்பவை மற்றும் மடிந்தவையால் தாவரங்கள் உரம் பெற்று வாழ்கின்றன. இந்த பூமி மேலடுக்கின்றி நமக்கு ஒன்றுமில்லை. தூய மணலை எண்ணிப் பார்க்கின்றேன். குவிந்த என்கைகளில் அதனை வைத்துக் கொள்ள விரும்புகின்றேன். ஒவ்வொன்றும் தனித்துவமிக்க கல்லாக மணல் மணிகள் பிரகாசிக்கின்றன. தகிக்கின்றன. இருப்பினும் பெரும்பாலானவர்கள் ஈர மண் கட்டியை கையிலெடுக்குமுன் தயங்குகின்றனர். அது ரகசிய வாழ்வு நிரம்பியிருப்பதால், அவர்களைக் கவலைப்பட வைக்கிறது. இருண்ட ஈரப்பதமான மணிகளுக்குள்ளே ஏதோவொன்றிருக்கிறது, அது அவர்களை ஊக்கமிழக்க வைக்கிறது, அமைதியிழக்கச் செய்கிறது. அங்கே என்ன இருக்கிறது? அவர்கள் வினவுகிறார்கள்.

What the stones Remember/ Patrick Lane, pp.32
கனடாவின் முக்கிய கவிஞர்களுள் ஒருவரான பாட்ரிக்லேன் (1939-2019) கனடாவின் இருபெரும் இலக்கிய ஆளுமைகளான மார்கரெட் அட்வுட் மற்றும் அலீஸ் மன்றோவால் பாராட்டப் பெற்றவர். கொந்தளிப்பான வாழ்க்கை நெருக்கடிகளால் பந்தாடப் பட்டு, குடியிலும் போதை மருந்திலும் தன் உடலையும் ஆன்மாவையும் இழந்து, மீண்டு வந்தவர். அப்படி அவர் மீண்டு வந்தபோது எழுதிய நினைவுக் குறிப்புகள் தான் What the stones Remember என்னும் புத்தகம்.
நீங்கள் மீண்டு வந்தபோது நீங்கள் புண்படுத்தி மறந்துபோனவற்றையும் உங்களால் இழைக்கப்பட்ட தீங்கால், உங்களை மன்னிக்க இயலாதுபோனவர்களையும் கண்டறிந்தீர்களா? அப்படியானால் இவை உங்களுக்குத் தடைகளாக இருந்தனவா? என மார்கரெட் அட்வுட் முன்வைக்கும் கேள்விக்கு, லேன் அளித்திடும் பதில் நெகிழ வைப்பதாகும்.
நண்பர்கள், குடும்பம், ….சக பணியாளர்கள் என பட்டியல் நீண்டது, ஆனால் நான் பார்க்கச் சென்ற ஒவ்வொருவரும் என் மன்னிக்கும் கோரிக்கைகளையும் அன்பையும் ஏற்றுக் கொண்டனர். இறந்தவர்களிடம் மன்னிப்புக் கோருவதுதான் சிரமமாயிருந்தது. அங்கும் கூட என் தாய்- தந்தையரின் சகோதரரின் கல்லறைகளில் மீட்பையும் சமாதானத்தையும் கண்டேன். நேரியதன்மை பணிவின் மூலம் குணப்படுத்தல் கண்டறியப்பட்டது.
20 கவிதைத் தொகுப்புகள், சிறுகதைகள் நாவல் என்று வெளியிட்டுள்ள பாட்ரிக் லேனுக்கு, உடல்- உள சிகிச்சைக்குப் பின் ஆன்மாவை சீர் செய்வதாக இந்நூல் அவருக்கு அமைந்தது. நீண்ட உரைநடை கொண்ட பகுதிகளாக, ஒவ்வொன்றின் இறுதியிலும் கவிதையுடன் முடித்திருக்கிறார்.
என் வாழ்வை நிரந்தரமாக மாற்றிப் போடும் நிகழ்வுகள் நடக்க இருந்தன. ஆனால் எழுத்து தங்கியிருந்தது. உயல்நிலைப் பள்ளி தாண்டி எனக்கு ஆசிரியர்களோ, வழிகாட்டிகளோ, கல்வியோ எனக்கில்லை. ஆனால் எல்லாக் கலைஞர்களும் பெற்றிருந்தது எனக்கு இருந்தது. எனக்குள்ளிருந்து நான் கேட்ட குரலுக்கு பீடிப்புத் தன்மையதானதும் முழுக் கடப்பாட்டானதும் இருந்தது. ஆலைகள், முதல் உதவி, வறுமை, போராட்டம், ஆனந்தம்- கசப்புணர்வு என்ற காலகட்டத்தை எண்ணிப் பார்த்தேன். என்னை இயங்க வைத்திருடும் ஒரே விசயம், என்னை உயிர்ப்புடன் வைத்துள்ள ஒரே விசயம் கவிதை என்றறிவேன்.
50 ஆண்டுகளுக்கு மேலாக கவிஞராக விளங்கி வந்த கனடாவின் உயரிய விருதுபெற்றுள்ள பாட்ரிக் லேனின் தந்தை கொலை செய்யப்பட்டார் தாய் புற்றுநோயால் மடிந்தார். ஒரு சகோதரர் கோர மரணம் அடைந்தார். பாட்ரிக் லேனே பலமுறை தற்கொலைக்கு முயன்றவர். கைவிடப்படல், புறக் கணிப்பு, அவமதிப்பு, திடீர் மரணம், கொலை, விவாகரத்து, குடிப்பழக்கம் மற்றும் சகோதரர்கள், குழந்தைகள், மனைவியர், தாய், தந்தையரின் அளவிட முடியாத இழப்புகள் நிரம்பிய வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன். திரும்பிப் பார்க்கையில், அவ்விழப்புகள் என் எல்லா எழுத்திலும் இருண்ட உட்பிரதியாக இருந்திருப்பதை அறிகிறேன். ஆனால் அவற்றை இந்நூலில் இடம் பெறச் செய்திருப்பதால், அச்சுமைகளிலிருந்து விடுபட்டிருப்பதாக உணர்கிறேன். 2001இன் ஆரம்ப மாதங்களில் நான் எழுதியபோது, சின்னச் சின்ன விசயங்கள் எனக்கு நிகழத் தொடங்கின.
இரண்டாண்டுகளுக்கு முன் அவரது எதிர்ப்பாற்றல் கடுமையாக பாதிப்புறவே, மருத்துவர்கள் திகைத்துப் போயினர். பத்து நாட்களே வாழ்வார் எனக் குறித்துவிட்டனர் என்பதை லேனே ஒரு நேர்முகத்தில் குறிப்பிட்டிருந்தார். (மார்ச், 2018 Calgaryheaald.com நேர்முகத்தில்) லேன் 2019 வரை உயிர் வாழ்ந்தார். அவரது கவிதைகளில் ஒன்று.
சூரியப் பயணம் வருகின்றது.
இடது கை ஆட்காட்டி விரலால் தட்டச்சு செய்கிறேன்
இன்று கவிதை மிகவும் மெல்ல வருகின்றது.
ஒரு நேரத்தில் ஓர் அட்சரம், ஒரு வார்த்தை, ஒரு வரி. இது
வல்லது எது.
நெருக்கமான ஊர்தலுக்குப் படிமங்கள் எவ்வளவு மந்தமாகின்றன என ஆச்சரியப்படுகிறேன்
ஒவ்வொரு வார்த்தையும் கல்லிலிருந்து எட்டிப் பார்க்கும் கலமாந்தர்.
இக்குளிர்கால மீன்கள் ஆவிகள், குளத்தின் கச்சித எண்ணங்கள்
என் வாயிலாக காலம் கடந்துபோகையில், இந்நிசப்பத்தை நேசிக்க முயலுகிறேன்
எதையேனும் ஆழ்ந்துணர்வது அரிது. நான் அனுமதித்தால் என் வாழ்க்கை ஒரு விருந்து.
மெல்ல விழும் மழை ஓய்வதில்லை. வேளைக்கு ஒரு துளியாக பனிக்கட்டியை உணர்கிறது.
இப்போதெல்லாம் என் உடல் இயக்கமிழந்து போகிறது.
என் வலக்கையை உயர்த்த முடியவில்லை.
மனங்களில் வாழ்ந்தபோது நானிருந்ததுபோல மெலிந்துள்ளன என் கவிதைகள்.,
உயர்மட்ட பனிகளிலிருந்து கீழே வந்தபோது ஏனைய நம்ப முயன்றேன்.
மரங்களின் பாதுகாப்பிலிருந்து நீரைக் கவனித்தேன் நெடு
அது எத்தகைய தினமென்று காணவைத்தது நேரமாக உயரும் குளத்துமீன், சிற்றலைதான்.
தோட்டம், குளம், மழை, பயணத்திலிருந்து மீளல், உடல் இயக்கம் இழந்து போதல், கவிதை எழுத முயலல் எனச் சிறு சிறு விசயங்கள் அடுக்கடுக்காக இடம் பெற்று, ஒரு நம்பிக்கைக் கீற்றுக்கான எதிர்பார்ப்பை மறைமுகமாக உணர்த்துகிறது இக்கவிதை. லேனுக்கு இது முக்கியமாக கவிதை உயர்நிலைப் பள்ளி படிப்பே அரை குறையாக முடிந்த நிலையில், மர அறுவை ஆலைப் பணியிலிருந்து முதலுதவி சிகிச்சையாளர்வரை பல்வேறு பணிகள் செய்து, கவிஞரான பின் பல்கலைக் கழக பேராசிரியராகி, சக பல்கலைக்கழக பேராசிரியை லோர்னாவை மணந்து கொண்ட பாட்ரிக் லேன், எது எப்படியாயினும் மொழியும் கவிதையும் மட்டும்தான் தான் சாரம், தன்மையும் என்று உணர்ந்து வந்துள்ளார். அவரது சகோதரர் ரெட் லேனும் கனடாவில் முக்கிய கவிஞர்.

எனக்கு 19 வயது. என்னுடன் என் வார்த்தைகள் இருந்தன. சப்தம் என்னுடன் இருந்தது. உரத்து வாசித்தேன் தனியே வாசித்தேன். வார்த்தையாக விரும்பினேன். உணவு- தூக்கத்தை விடவும் என் மனைவி- மக்களை விடவும் கவிதை எனக்கு முக்கியமானதாயிருந்தது. இவ்வுலகில் எனக்கான இடத்தை மொழியுடன் கண்டேன். மொழியினால் என்னைக் குணப்படுத்திக் கொள்ள இயலும், என்னைச் சூழ்ந்திருப்பவற்றை கட்டுப்படுத்த முடியும் என்பதில் உறுதியாயிருந்தேன். வீடு எரிந்துபோனால் எனக்கு முக்கியமாயிருந்தது. மறுநாள் தீப்பிழம்புகளை எப்படி விவரிப்பேன் என்பதுதான். நேசம் எனக்கு கற்பிதமான இடங்களில் இருந்ததே அன்றி, நிஜ உலகில் அல்ல. மரணத்தின் ஒரே ஆதிக்கம் கவிதையில்தான்.
பாட்ரிக் லேன் பிரச்சனைகளைப் பேசவில்லை, கருத்துகளை விவாதிக்கவில்லை. தத்துவத்திற்குள் செல்வதில்லை. இருந்தும் இன்றைய வாசகனுடனும் அவரால் தொடர்புறுத்த, உரையாட முடிகிறது. நெருக்குண்டு தவித்து அல்லாடி மீண்டுவந்த அவரது மனமும் இருதயமும் ஆன்மாவும் விசாலமடைந்து விகசிப்புக் கொள்கையில் யார்தான் கவனிக்காது, கேட்காது இருக்க முடியும்..
கவிஞராகவே எதனையும் அணுகுகின்ற அவர், டி.எச். லாரன்ஸின் ஒரு படிமத்திலிருந்து அற்புதமான சித்திரத்தை தீட்டி விடுவார்.
நான் எனக்கான மரணக் காலத்தை நிர்மாணித்துக் கொள்ள வேண்டும் என்கிறார் டி.எச். லாரன்ஸ். ஞாபகமறதியை நோக்கிய என் பயணத்தில் எனக்கு அது தேவைப்படும் என்கிறார். இலையுதிர்காலம், நிஜமானதும் கற்பிதமானதுமான மரணத்தின் பருவம். ஏழாண்டுகளுக்கு முன் கருப்பு வால்நட்டிலிருந்து எனது அம்மாவின் சவப் பெட்டியைச் செய்தபோது புரிந்து கொண்டேன். என் தாய் பயணிக்க சிறியதொரு மரணக் கப்பல். சவப் பெட்டியின் மேலே மெதுஸா போன்ற சுருள்களையுடைய பெண் தலையின் சிற்பத்தை ஒட்டியிருந்தேன். …… என் சகோதரன் மைக்கால் செதுக்கப்பட்டது. இருளில் அவளது பயணத்திற்கு வெளிச்சம்தர, மூடியினுள்ளே தீக்கல்லினை ஒட்டி வைத்தேன். அதனைச் செய்யும் என் வேலையை எளிதாக்கியது. கருப்புக் கட்டையினை மணல் பூசி எண்ணெய் தடவி பிரகாசமாக்கி என் தந்தையின் கல்லறை அருகே வைத்ததும், முழுமையினைக் கண்டேன்.
நான் குழந்தையாயிருந்ததுதொட்டே கவிஞராகவே எப்போதும் விரும்பினேன் என்று தன்னை வெளிப்படுத்தும் பாட்ரிக்லேன், கவிஞராகவே வாழ்ந்துள்ளார். அதுதான் அவரது வாழ்வில் பிரச்சனையும் கூட.
அதிர்ச்சிகள் அடுக்காக வந்து நிலைகுவைய வைத்து, வேதனைகள்- கொந்தளிப்புகள், விரக்தியிலிருந்து விடுபட்டு, தான் எழுப்பிய தியானத் தோட்டத்தில் புழுக்கள்- பூச்சிகள், வண்டுகள் -பறவைகள், கூழாங்கள்களிடத்தில் ஒன்றிவிடும்போது, மழை விழும் வேளையில் அவர் பதிவு செய்கிறார்.
இம்மழைக்கு ஒரு தந்தை உண்டா? அல்லது இம்மழைத்துளிகளைப் பெற்றெடுத்திருப்பது யார்? என்னிடம் பதில் இல்லை, ஆனால் என் தோட்டத்தின் ஆப்பிள் மரத்தினருகே நின்று, மழைக்குள் என் முகத்தை எட்டிப் பார்க்க வைத்து, அதன் சின்னஞ்சிறு கரங்களை என் சருமத்தில் உணர்ந்தேன். அதனை உணர்ந்து கொள்வதே போதுமானதாயிருக்கலாம். வோர்னாவுடன் சேர்ந்து நின்று, நாங்கள் இணைந்துள்ள வாழ்வையும் மழையையும் போற்றுவது போதுமானதாயிருக்கலாம்.

பாட்ரிக் லேன் கனடா தேசத்துக் கவிஞர் கொந்தளிப்பான வாழ்விலிருந்து கவிதையிடம் புகலிடம் கோரியவர். கவிதை அவருக்கு மருந்தாகி, குணப்படுத்தி சிகிச்சை அளித்ததாக உணர்ந்தார்.
ஆதாரங்கள்:
- What the Stones Remember, Patrick Lane Trumpeter, 2005.
- Confessions of an Indiosyncratic Hind Margaret Atwood in Conversation with patricklane, Deccan Chroniel, 30 October 2005
- Reading Magic/ canlit.ca.
ஆபிரகாம் பண்டிதர்: “சகலகலா கலைஞர், சகலமும் அறிந்த அறிஞர்” – பிச்சுமணி
“நடைபாதை கடையில் உன் பெயர் படித்தால் நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்” என்ற பாடல் வரிகளின் அர்த்தம் எளிதாக விளங்கும். அதை தனிமனிதன் ஒவ்வொருவரும் உணரவும் முடியும். அது காதலன் காதலி குறித்தான பாடலாக இருப்பினும். தனக்கு விருப்பமான தலைவர்கள் அறிஞர்கள் எழுத்தாளர்கள் நூல்கள் அல்லது தனக்கு நெருக்கமான உறவுகள் நண்பர்கள் மற்றும் ஊர்களின் பெயர்களை எங்காவது கேட்டாலோ படித்தாலோ அந்த மயக்கம் யாவருக்கும் ஏற்படும். அப்படி ஒரு மயக்கம் எனக்கும் சமீபத்தில் முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் உலாவிய ஒரு பெயர் எனக்கு துள்ளல் மயக்கத்தை தந்தது.
நான் வசிக்கும் ஊரின் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் தான் அந்த ஊர். நான் நடந்தே அதிக நாள்கள் பயணப்பட்ட அந்த ஊரில் தான் தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஆளுமை.
மருத்துவம், விவசாயம், ஆசிரியர் பணி, அச்சுக்கலை, புகைப்படக்கலை மற்றும் தமிழ் இசை அறிஞர்; ஆய்வாளர். தமிழிசையின் தந்தை என போற்றப்படும் ஆபிரகாம் பண்டிதர், அந்த ஊரில் தான் பிறந்திருக்கிறார் என்று அறியும் போது மனசுக்குள் கர்வம் கலந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
தென்காசியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் ‘சாம்ட்ரை’ என்று மக்கள் வழக்கு மொழியில் இருக்கும் சாம்பவர் வடகரை என்னும் ஊரில் 1859 ம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் தேதி முத்துசாமி–அன்னம்மாள் தம்பதியினர்க்கு பிறந்தவர்தான் தமிழிசையின் தந்தை ஆபிரகாம் பண்டிதர்.
முத்துசாமியின் தந்தை சுப்பிரமணிய நாடார் அவர்களுக்கு பதிமூன்று குழந்தைகள். ஆனால் பதிமூன்று குழந்தைகளும் நிலைக்கவில்லை. காலரா என்னும் கொடிய நோயிக்கு பதினொரு பிள்ளைகள் பலியாகினர். ஆபிரகாம் பண்டிதரின் தந்தை முத்துசாமியும் அவரது சகோதரி மட்டுமே சுப்பிரமணிய நாடார்க்கு நிலைத்தனர்.
அந்த காலகட்டத்தில் சுப்பிரமணிய நாடார் கிறித்தவ சமயத்தை தழுவினார். ஒரு சிலர் ஆபிரகாம் பண்டிதரின் தந்தைக்கு பதிமூன்று குழந்தைகள் என தவறுதலாக குறிப்பிடுகிறார்கள்.
ஆபிரகாம் பண்டிதரின் தந்தை முத்துசாமி அவர்கள் பண்டிதர் பிறந்த சில வருடத்திலே சாம்பவர் வடகரையிலிருந்து அருகிலுள்ள பங்காளா சுரண்டை ஊருக்கு குடியேறுகிறார். தந்தை முத்துசாமி அவர்கள் ஒரு பாதிரியாரிடம் தோட்ட பணியாளராக வேலை செய்கிறார். தாய் அன்னம்மாள் ஆலய பணியும், சிறுவர் சிறுமியர்க்கு வேத பாடங்கள் கற்றுத்தரும் பணியும் செய்கிறார். பண்டிதர் பின் நாட்களில் பெரும் தோட்டப் பண்ணை வைத்து விவசாயம் செய்யும் எண்ணங்கள் தந்தை முத்துசாமியின் மூலமாக தோன்றியிருக்கலாம்
ஆபிரகாம் பண்டிதர் ஆரம்பக்கல்வியை பங்களா சுரண்டையிலேயே படிக்கிறார். பன்றிகுளம் என்னும் ஊரில் உயர் ஆரம்ப கல்வியும்..பின்னர் திண்டுக்கல் சென்று அங்குள்ள நிர்மல் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்று சுரண்டைக்கு திரும்பி… சுரண்டைக்கு அருகிலுள்ள திருமலாபுரம் என்ற ஊரில் ஆசிரியர் பணியை தொடங்கினார். இரண்டு ஆண்டுகள் மட்டுமே திருமலாபுரத்தில் ஆசிரியர் பணி செய்தவர். மீண்டும் திண்டுக்கலுக்கு செல்கிறார்.
திண்டுக்கல்லில் யார்க் (York) என்ற ஆங்கிலேயர் நடத்திய ஒரு பள்ளியில் ஆசிரியர் பணியை தொடர்கிறார் ஆபிரகாம் பண்டிதர். யார்க் (York) பள்ளியின் தலைவர். புகைப்படக் கலையில் தேர்ச்சி பெற்றவர். ஆபிரகாம் பண்டிதர் ‘யார்கி’டம் புகைப்படக்கலை நுட்பத்தை கற்று அக்கலையில் நல்ல தேர்ச்சி பெற்றார். பின்னாளில் இதன் காரணமாக 1909 ம் ஆண்டு அவர் லண்டனில் உள்ள அரசு கலைச்சங்கத்தின் உறுப்பினராக( Member of the Royal Society Arts, London) தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல்லில் கந்தசாமி பிள்ளை என்பவர் அச்சகம் நடத்தி வந்தார். அவரிடம் நட்பு கொண்ட ஆபிரகாம் பண்டிதர் அவரிடம் அச்சுக்கலை கற்று தேர்ச்சி பெற்றார். அதன் காரணமாய் 1912 ல் தஞ்சையில் மின்விசையில் இயங்கும் முதல் அச்சகமான ‘லாலி அச்சகம்’ என்ற மின்விசை அச்சகம் ஒன்றை நிறுவி.. வரலாற்றில் பதிப்பக ஆசிரியராகவும் தன்னை நிலைநிறுத்தி உள்ளார் ஆபிரகாம் பண்டிதர்.
1882 ல் திண்டுக்கல்லில் ஆசிரியர் பணியின் போது பள்ளி விடுமுறை காலத்தில் சொந்த ஊரான சுரண்டைக்கு வந்தபோது ஆபிரகாம் பண்டிதர்க்கு அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க எண்ணி திருநெல்வேலி மாவட்டம் மானூர் வட்டத்திற்கு உட்பட்ட நாஞ்சான்குளம் என்னும் ஊரில் வேதக்கண் அவர்களின் மகளான ஞானவடிவு பொன்னம்மாள் அவர்களை திருமணம் முடித்து வைத்தார்கள்.
ஞானவடிவு பொன்னம்மாள் அந்த காலகட்டத்திலேயே உயர்நிலை ஆசிரியர் பயிற்சி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திண்டுக்கல்லில் தங்கள் வாழ்க்கை பயணத்தை தொடங்கிய இருவரும் ஆபிரகாம் பண்டிதரின் நண்பர் ஞானமுத்து என்பவரின் அழைப்பின் பேரில் தஞ்சாவூருக்கு சென்றனர்.
தஞ்சையில் W.H.பிளேக் (W.H.Blake) அவர்களை சந்தித்து பூக்கடைப்பள்ளி என்றழைக்கப்பட்ட நேப்பியர் பெண் பள்ளியில் ஆசிரியர் பணியை தொடர்ந்தனர். இதில் சிறப்பு என்னவென்றால் ஆபிரகாம் பண்டிதர் மனைவி ஞானவடிவு பொன்னம்மாள் தலைமை ஆசிரியராகவும் ஆபிரகாம் பண்டிதர் தமிழ் பண்டிதராகவும் பணி செய்ததுதான். அந்த காலக்கட்டத்தில் பெண்கள் படிப்பது பெரும் சவாலான காலம், அதுவும் மனைவி தலைமை ஆசிரியராகவும் கணவர் தமிழ் ஆசிரியராகவும் ஒரே பள்ளியில் வேலை செய்தது அந்த காலச்சூழலில் பெரிய மாற்றம் தான்.
ஆபிரகாம் பண்டிதர் திண்டுக்கல்லில் ஆசிரியர் பணியின் ஓய்வின் போது மருத்துவம் சார்ந்த ஓலைச்சுவடிகளை தேடித் தேடி படித்தார். சில நோயாளிகளுக்கு மருந்துகளை அவரே தயாரித்து கொடுத்தார் சித்த மருத்துவ குறிப்புகளை அறிந்துகொள்ள முனைந்து திரு.பொன்னம்பலம் என்ற சித்த வைத்தியர் உதவியுடன் சுருளிமலை பகுதிகள் முழுவதும் சுற்றினார். அங்குதான் கருணாந்தமகரிஷியின் அறிமுகம் கிடைகிறது. மருத்துவ மூலிகைகள் பற்றி அறிந்துக் கொள்கிறார். பின்னாளில் 1890ல் தஞ்சையில் தனது ஆசிரியர் பணியை விட்டு விட்டு முழுமையாக மருத்துவ தொழிலை ஆபிரகாம் பண்டிதரும் அவரது மனைவி செய்ய துவங்கினார்கள். தான் கண்டுபிடிக்கும் மருந்துகளுக்கு “கருணானந்த சஞ்சீவி மருந்துகள்”என பெயரிட்டு மருத்துவம் செய்தார்.

அந்த காலகட்டத்தில் சித்த வைத்தியத்தில் சிறந்து விளங்குபவர்களை பண்டூவர் என்று அழைப்பார்கள் அது மருவியே பண்டிதர் ஆனது. ஆப்ரகாமும் பண்டிதரானார் சித்த மருத்துவ தொழில் அவருக்கு பெரும் பேரும் புகழும் தேடித் தந்தது. அவரின் மருந்துகள் சிங்கப்பூர், இலங்கை, பர்மா என வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் ஆனது
மருத்துவ வருமானத்தை வைத்து தஞ்சையில் 100 ஏக்கர் நிலத்தில் தோட்டப் பண்ணை அமைத்து பெரும் அளவில் விவசாயமும் செய்ய தொடங்கினார். அந்த தோட்டப் பண்ணைக்கு ‘கருணானந்தபுரம்’ என பெயரும் வைத்தார்.
மூலிகை செடிகள் அனைத்து விதமான பழ வகைகள், கரும்பு, சோளம் மற்றும் மலர்கள் என அனைத்தையும் தோட்டத்தில் பயிரிட்டார். குறிப்பாக ராஜா கரும்பு என்னும் புதிய வகை கரும்பை உருவாக்கியவனார். ஆஸ்திரேலியா செந்நிற சோளம் மற்றும் பல கலப்பினை சோளவகைகளை சோதனை முறையில் பயிரிட்டு ஆராயவும் செய்தார். புதிய பயிர் ரகங்கள் உருவாக்கியும் இருக்கிறார்.
அதுமட்டுமின்றி ஆட்டுப்பண்ணை, மாட்டுப்பண்ணை மற்றும் பட்டுப்பூச்சி பண்ணையும் வைத்து செயல்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 1907 முதல் 1914 வரையிலும் பல்வேறு விவசாய பொருட்காட்சிகளில் பங்குபெற்று தங்கப்பதக்கங்களும் நற்சான்றிதழ் பட்டங்களும் பெற்றது கூடுதல் சிறப்பு.
1908 ல் அன்றைய சென்னை மாகாண ஆளுநர் ‘சர் ஆர்தர் லாலி’ கருணானந்தபுரத்தை பார்வையிட்டு வெகுவாக பாராட்டினார். 1909 ம்ஆண்டு சித்த மருத்துவ துறையிலும், வேளாண்மைத் துறையிலும் ஆற்றிய அரும் பணிக்காக பாராட்டி அன்றைய அரசாங்கம் ‘ராவ் சாஹிப்’ என்ற பட்டத்தை வழங்கி ஆபிரகாம் பண்டிதரை சிறப்பித்தது.
இப்படி ஆசிரியர் பணி புகைபடக்கலைஞர் சோதிடம் கணிக்கும் முறை அச்சுக்கலை மருத்துவம் விவசாயம் என எல்லாவற்றையும் சாதித்து காட்டிய ஆபிரகாம் பண்டிதர் தமிழ் இசையை ஆய்வு செய்துதான் மாபெரும் சாதனை….
“இசை உருவானது செந்தமிழே- முதல்
ஏழிசை கண்டதும் செந்தமிழே”.. என்பார்கள் தென்னிந்திய இசைகளின் மூலம் தமிழ் இசையின் இலக்கணமே என்பதை ஆய்வின் மூலம் முதன் முதலில் நிறுவித்தவரும் இசை அறிஞர் ஆபிரகாம் பண்டிதரே.

அதுவரை 22 சுருதிகள் தான் தென்னிந்திய இசையில் இருந்தது என்கிற கூற்றை மறுத்து, 12 ஸ்வரஸ்தானங்கள் 24 சுருதிகளாகவே வர முடியும் என்றும் 48, 96 என்று நுண் சுருதிகளாகவும் வளரும் ஆற்றல் கொண்டது இசைத் தமிழ் என்றும் நிறுவினார். அதை 1916 ம் ஆண்டு பாரோடவில் நடைபெற்ற அகில இந்திய இசை மாநாட்டில் தன் மகள்களான மரகதவல்லி, கனகவல்லி இருவரையும் வீணையிலும் இசைத்தும் வாய் பாட்டின் மூலம் பாடியும் நிறுவிக்கவும் செய்தார்.
1912 முதல் 1916 ஆண்டு வரையிலான ஐந்தாண்டு காலத்தில் “சங்கீத வித்தியா மகாஜன சங்கம்” என்ற அமைப்பை நிறுவி ஏழு இசை மாநாடுகளை தன் சொந்த செலவில் நடத்தியிருக்கிறார். ஆபிரகாம் பண்டிதரின் தமிழ் இசையின் ஆராய்ச்சி நூலான “கருணாமிர்த சாரகம்” காலவேட்டத்தில் மறைந்து கிடந்த தமிழ் இசை வரலாற்றை உலகிற்கு தந்தது.
இன்று இசை உலகில் புகழ் பெற்று விளங்கும் இசைஞானி இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் இசை கல்வியை வால் பிடித்து பின்னோக்கி போனால் அங்கு ஆபிரகாம் பண்டிதர் இருப்பார். இளையராஜா அவர்களும், ரகுமான் அவர்களும், தன்ராஜ் மாஸ்டரிடம் இசை பயின்றவர்கள் தன்ராஜ் மாஸ்டர் ஆரம்பகாலத்தில் ஆபிரகாம் பண்டிதரின் மகன் ஜோதி பாண்டியனிடன் இசை கற்றவர். தன்ராஜ் மாஸ்டரின் தந்தை கோவிந்தராஜ் ஆபிரகாம் பண்டிதரிடம் உதவியாளராக இருந்தவர் என்று சொல்லப்படுகிறது.
தமிழிசையின் வரலாறும் ஆபிரகாம் பண்டிதரின் வரலாறும் முற்றுப்பெறாதது. 2008-ம் ஆண்டு அவருடைய படைப்புகள் அரசுடமையாக்கபட்டது
தன் வாழ்நாள் முழுவதும் கலையால் ஆராய்ச்சியால் பொழுதளந்த தமிழிசையின் தந்தை ஆபிரகாம் பண்டிதருக்கு பிறப்பிடத்தில் சிறப்பிக்கு வண்ணம் ஏதுமில்லை.. தென்காசி தனிமாவட்டமாகிவிட்டது ஆபிரகாம் பண்டிதர் பெயரில் அரசு அவரின் பிறப்பிடத்தில் எதாவது ஒன்றை நிறுவினால் சிறப்பாக இருக்கும்.
– பிச்சுமணி
99521 32280
களங்கமின்மையின் சுடர் – கு. அழகிரிசாமியின் குழந்தைகள் உலகம்
“உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்ளுவதும் அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டுணர்ச்சியும் ஒரு நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப் போலப் பேசி, குழந்தையைப் போல் ஆடிப்பாடி, குழந்தையை விளையாட்டுப்பொம்மையாகக் கருதி அதற்குத்தக்கவாறு நடந்து கொள்கிறார்கள். ஆனால் அந்தச் சூதுவாதறியாத குழந்தைகளோ அப்படி நடிப்பதில்லை. அவர்களுடைய ந்பில் விளையாட்டுணர்ச்சி கலக்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள் “
குழந்தைகளின் உலகம் எளிமையானது. கபடோ, பாசாங்கோ, கள்ளத்தனங்களோ, அற்றது. அந்தந்தக்கணங்களில் வாழ்கிறவர்கள் குழந்தைகள். வாழும் அந்தத் தருணங்களில் முழு அர்ப்புணிப்புடன் தங்களை ஈடு கொடுப்பவர்கள். எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காதவர்கள். எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து குழப்பமடையாதவர்கள். இயல்பானவர்கள். எந்த உயிர்களிடத்தும் ஏற்ற தாழ்வுகளைப் பார்க்காதவர்கள். பெரியவர்களாகிய நாம் சொல்லிக்கொடுக்காதவரை உயர்வு தாழ்வு என்ற சிந்தனை இல்லாதவர்கள். அவர்களுடைய போட்டியும் பொறாமையும் குழந்தைமையின் ஒரு பண்பு. அந்தக் குணங்கள் அவர்களிடம் வெகுநேரம் நீடிப்பதில்லை. எந்தச் சண்டையையும் நீண்ட நேரத்துக்கு போடாதவர்கள். காயும் பழமுமாக அவர்களுடைய வாழ்க்கையை வண்ணமயமாக்குபவர்கள். அன்பு நிறைந்தவர்கள். அன்பால் நிறைந்தவர்கள். குழந்தைமை என்பதே வெகுளித்தனமும், களங்கமின்மையும், கபடின்மையும் தான். ஒரு காலத்தில் குழந்தைகளாக இருந்த பெரியவர்கள் வளரும்போது அந்தக் குழந்தைமையைத் தொலைத்து விடுகிறார்கள். தங்களுடைய பரிசுத்தமான உணர்ச்சிகளால் நிறைந்த அப்பாவித்தனமான இளகிய இதயத்தை வளர வளர இரும்பாக்கி விடுகிறார்கள். ஒருவகையில் இலக்கியம் அந்த மாசற்ற அன்பைப்பொழியும் களங்கமின்மையை மீட்டெடுக்கிற முயற்சி தான்.
குழந்தைகள் உலகை தமிழிலக்கியத்தில் புனைவுகளாக நிறையப்பேர் எழுதியிருக்கிறார்கள். புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், வண்ணதாசன், பிரபஞ்சன், தமிழ்ச்செல்வன், கோணங்கி, ஜெயமோகன், கி.ராஜநாரயணன், எஸ்.ராமகிருஷ்ணன், என்று குழந்தைகளை மையப்படுத்திய கதைகளை எழுதி சாதனை செய்திருக்கிறார்கள். குழந்தைகளின் உளவியல், இயல்புகளைப் பற்றிப் பெரியவர்கள் புரிந்து கொள்கிற கதைகளாக அவை வெளிப்பாடடைந்திருக்கின்றன. சிறார் இலக்கியத்தின் முக்கியமான மூன்று வகைமைகளாக குழந்தைகள் வாசிப்பதற்காக பெரியவர்கள் எழுதும் இலக்கியம், குழந்தைகளே எழுதுகிற இலக்கியம், குழந்தைகளைப் புரிந்து கொள்வதற்காகப் பெரியவர்கள் எழுதுகிற இலக்கியம் என்று சொல்கிறார்கள் சிறார் இலக்கிய ஆய்வாளர்கள். அதில் குழந்தைகளைப் பற்றி பெரியவர்கள் எழுதியுள்ள ஏராளமான கதைகளில் கு.அழகிரிசாமியின் கதைகளான ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு, தம்பி ராமையா, பேதமை, தெய்வம் பிறந்தது, போன்ற கதைகள் உச்சத்தைத் தொட்டிருக்கின்றன. கு.அழகிரிசாமியின் எளிமையான கலைவெளிப்பாடு குழந்தைகளின் எளிமையான உலகத்துடன் மிகச் சரியாகப் பொருந்தி அந்தக் கதைகளை கலையின் பூரணத்துவத்துக்கு அருகில் கொண்டு போய் விடுகிறது.
கு.அழகிரிசாமியின் தனித்துவமான வெளிப்பாடு என்று எதைச் சொல்லலாமென்றால் அன்றாட வாழ்க்கையின் அன்றாடக்காட்சிகளிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்கிறார். அதில் தன் கருத்தைத் திணிக்காமல் அதே நேரம் அந்தக் காட்சியில் தன் கருத்துக்கு ஏற்ற இயல்பை, வண்ணத்தீற்றலை அல்லது கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து வளர்த்தெடுக்கிறார். குழந்தைகள் வரையும் ஓவியம் போல அவ்வளவு இயற்கையாக இருக்கிறது. முதலில் அதன் எளிமை நம்மை ஏமாற்றி விடுகிறது. ஆனால் உற்று நோக்க நோக்க அந்த ஓவியத்தின் அழகும், ஆழமும், கடலென விரிவு கொள்கிறது. அதை உணர்ந்து கொள்ளும் போது வாசகனுக்குத் திடீரென தான் ஒரு பெருங்கடலுக்கு நடுவே நிற்பதை உணர்வான். தன்னச்சுற்றி வண்ணவண்ண முத்துகள் கீழே கொட்டிக் கிடப்பதைப் பார்ப்பான். ஒரு ஒளி வாழ்க்கை மீது ஊடுருவி பேருணர்வின் தரிசனத்தைக் கொடுக்கும். அதுவரை கெட்டிதட்டிப்போயிருந்த மானுட உணர்வுகளின் ஊற்றுக்கண் உடைந்து உணர்ச்சிகள் பெருகும். விம்மலுடன் கூடிய பெருமூச்சு எழுந்து வரும். கண்களில் ஈரம் பொங்கும். தன்னையும் அந்தச் சித்திரத்துக்குள் ஒரு கதாபாத்திரமாக உணரவைக்கும்.

அப்போது தான் கு.அழகிரிசாமியெனும் மகாகலைஞனின் மானுட அன்பை உணர்வான். அவருடைய கலைக்கோட்பாட்டை உணர்வான். அவருடைய கலை விதிகளைத் தெரிந்து கொள்வான். அவருடைய அரசியலை புரிந்து கொள்வான். அந்தச் சித்திரம் வாசகமனதில் அவர் ஏற்படுத்த நினைக்கும் தாக்கத்தைத் துல்லியமாக ஏற்படுத்தியதை உணர்ந்து கொள்வான். கு.அழகிரிசாமியின் கதைகளில் பெரிய தத்துவவிசாரமோ, ஆன்மீக விசாரமோ, செய்வதில்லை. ஆனால் அப்படியொரு வாய்ப்பு அந்தக் கதைகளுக்குள் வருமென்றால் அதை ஒதுக்கித் தள்ளுவதுமில்லை. பழந்தமிழ் இலக்கியத்தில் நல்ல வாசிப்பு இருந்தாலும், ஏராளமான கவிதைகளை எழுதியிருந்தாலும் கதைகளில் எளியமொழியையே கையாண்டார். இதழியல் துறையில் வேலை பார்த்ததாலோ என்னவோ யாருக்கு எழுதுகிறோம் என்ற போதம் இருந்தது. தமிழ்ச்சிறுகதைகளின் வரலாற்றில் பல உச்சங்களைத் தொட்டிருந்தார் கு.அழகிரிசாமி. குறிப்பாக குழந்தைகளை மையமாக வைத்து அவர் எழுதிய, ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு, தம்பி ராமையா, பேதமை, என்ற நான்கு கதைகளிலும் குழந்தைகளின் அப்பாவித்தனத்தை, ஏக்கத்தை, அறியாமையை, குழந்தைகளோடு குழந்தையாக இருந்து எழுதியிருப்பதை வாசிக்கும் போது உணரமுடியும்.
ஒருவகையில், ராஜா வந்திருக்கிறார் கதை கு.அழகிரிசாமியின் மையம் என்று கூடச் சொல்லலாம். அவர் இந்த வாழ்க்கையின் அவலத்தை, எத்தனை நெருக்கடிகள் வந்தாலும், துன்பதுயரங்கள் வந்தாலும் தாயம்மாளைப் போலத் தாங்கிக் கொள்ளவும் மங்கம்மாளைப் போல நம்பிக்கையுடன் கடந்து செல்லவும். தான் வாழும் வாழ்க்கையை வம்புக்கிழுக்கவும், அதில் வெற்றி பெறவும் முடியும் என்பதைச் சொல்கிற மிக முக்கியமான மானுட அரசியல் கதை. இந்த ஒரு கதைக்காகவே கு.அழகிரிசாமி உலகத்தரத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டிய எழுத்தாளராகிறார்.
1950 – ல் சக்தி இதழில் வெளியான ராஜா வந்திருக்கிறார் கதையின் தொடக்கமே மங்கம்மாளின் குழந்தைகளின் போட்டி விளையாட்டுடன் தான் தொடங்குகிறது. சிறுகுழந்தைகள் அணிந்திருக்கும் சட்டையில் தொடங்கும் போதே இரண்டு வர்க்கங்களை அறிமுகப்படுத்தி விடுகிறார் கு.அழகிரிசாமி. மங்கம்மாளும், அவளுடைய மூத்த சகோதரர்களான செல்லையாவும் தம்பையாவும் ஏழ்மையில் உழலும் குடும்பம் என்பதும் அந்த ஊரிலேயே பெரிய தனக்காரரின் மகனான ராமசாமி சில்க் சட்டை போடுகிற, ஆறு பசுக்களை வைத்திருக்கிற வசதியான குடும்பத்தினர் என்பதும் தெரிந்து விடுகிறது. புத்தகத்தில் பதிலுக்குப் பதில் படம் காண்பிக்கும் விளையாட்டிலிருந்து என் வீட்டில் ஆறு பசு இருக்கிறது உன்வீட்டில் இருக்கிறதா? என்று வளர்ந்து பதில் பேச முடியாத ராமசாமியை மங்கம்மாளும், செல்லையாவும், தம்பையாவும், சேர்ந்து தோத்தோ நாயே என்று கேலி செய்வதில் முடிகிறது. இரண்டு குடும்பத்தினரும் வெவ்வேறு சாதியினர் என்பதை கோழி அடித்துத் தின்பதைப் பற்றிக் கேலியாக ராமசாமி சொல்வதன் மூலம் காட்டி விடுகிறார். செல்லையாவையும் தம்பையாவையும் விட மங்கம்மாளே துடிப்பான குழந்தையாக அறிமுகமாகிறாள்.
ராமசாமியின் வீட்டு வேலைக்கராரால் விரட்டப்பட்டு குடிசைக்கு வரும் குழந்தைகளில் மங்கம்மாள் அவளுடைய தாயாரான தாயம்மாளிடம் ஐயா வந்து விட்டாரா? என்று கேட்பதிலிருந்து வேறொரு உலகம் கண்முன்னே விரிகிறது. எங்கோ தொலைதூரத்தில் வேலை பார்த்து அரைவயிறும் கால்வயிறுமாகக் கஞ்சி குடித்து எப்படியோ மிச்சப்பட்ட காசில் தீபாவளிக்கு குழந்தைகளுக்கு மல் துணியில் இரண்டு பனியன்களும், இரண்டு டவுசர்களும், ஒரு பாவாடையும், பச்சைநிறச்சட்டையும், ஒரு ஈரிழைத் துண்டும் இருக்கின்றன. அம்மாவுக்குத் துணியில்லை. அப்பாவுக்கு அந்தத் துண்டை வைத்துக்கொள்ளலாம் என்று அம்மா சொல்கிறார். அம்மாவுக்கு இல்லாத துணி அப்பாவுக்கு எதுக்கு என்று மங்கம்மாள் கேட்கிறாள்.
இருட்டில் அவர்கள் குடிசைக்குப் பின்னாலிருந்த வாழைமரத்துக்குக் கீழே ஒரு சிறுவன் எச்சில் இலையை வழித்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து அவனை அழைத்து விவரம் கேட்கிறார் தாயம்மாள். அப்பா, அம்மா, இல்லாத அநாதையான சிரங்கும் பொடுகும், நாற்றமும் எடுக்கும் தன் அரையில் கோவணம் மட்டுமே கட்டியிருந்த அந்தச் சிறுவனுக்குக் கூழு கொடுத்து தன் குழந்தைகளோடு படுக்க வைக்கிறாள். இரவில் பெய்யும் மழைக்கூதலுக்கு தான் மறுநாள் தீபாவளியன்று உடுத்தலாம் என்று எடுத்து வைத்திருந்த பீத்தல் புடவையை எல்லாருக்குமாகப் போர்த்தி விடுகிறார். மறுநாள் விடிகாலையிலேயே குழந்தைகளை எழுப்பி எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி விடுகிறார். ராஜா என்ற அந்தச் சிறுவனுக்கும் எண்ணெய் தேய்த்து சீயக்காய் பொடி போட்டு பக்குவமாகக் குளிப்பாட்டி விடுகிறார். குளிக்கும் போது சிரங்குப்புண்களால் ஏற்பட்ட வேதனையினால் ராஜா அழும்போது சரியாயிரும் சரியாயிரும்.. புண் ஆறிரும் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார். அந்தப் பகுதியை வாசிக்கும் போது மனம் இளகாமல் இருக்கமுடியாது. பரிவின் சிகரத்தில் தாயம்மாளை படைத்திருக்கிறார் கு.அழகிரிசாமி.

மற்ற குழந்தைகள் புதுத்துணி உடுத்தும் போது ராஜாவுக்கு என்ன செய்ய என்று தாயம்மாள் குழம்பி நிற்கும் போது மங்கம்மாள் தான் அப்பாவுக்கென்று வைத்திருந்த அந்த ஈரிழைத்துண்டைக் கொடுக்க சொல்கிறாள். அவள் சொன்னதும் தயக்கமில்லாமல் அந்தத் துண்டை எடுத்து ராஜாவுக்குக் கட்டி விடுகிறாள். ஒரு வகையில் தாயம்மாளையும் மங்கம்மாளையும் ஒரே உருவின் இரண்டு பிறவிகளாகப் படைத்திருக்கிறார் கு.அழகிரிசாமி என்று சொல்லலாம். புதுத்துணி உடுத்திய குழந்தைகள் தெருவுக்கு வரும்போது பெரிய வீட்டு ராமசாமி வருகிறான். அவனுடைய அக்காவைத் திருமணம் முடித்த ஜமீன் ராஜா அவர்களுடைய வீட்டுக்கு வந்திருக்கிறார் என்பதை
“எங்க வீட்டுக்கு ராஜா வந்திருக்கிறார்..” என்று சொல்லும்போது, மங்கம்மாள் பழைய பள்ளிக்கூடப்போட்டியை நினைத்துக் கொண்டு,
“ஐயோ! உங்க வீட்டுக்குத்தானா ராஜா வந்திருக்கிறார்… எங்க வீட்டுக்கும் தான் ராஜா வந்திருக்கிறான்.. வேணும்னா வந்து பாரு..”
என்று சொல்வதோடு கதை முடிகிறது. இந்த வரிகளை வாசிக்கும் போது கண்ணில் நீர் துளிர்க்கிறது. இந்தக்கதையை வாசிக்க வாசிக்க வாசகமனதில் பேரன்பு ஒன்று சுரந்து பெருகி இந்த மனிதர்களை, உலகத்தை, பிரபஞ்சத்தை, அப்படியே சேர்த்தணைப்பதை உணரமுடியும்.
எளியவர்களின் மனவுலகை, அவர்கள் இந்த வாழ்க்கையை பார்க்கும் பார்வையை இதை விடச்சிறப்பாக யாரும் சொல்லவில்லை. எல்லாவிதமான இல்லாமைகளுக்கும் போதாமைகளுக்கும் நடுவில் தாயம்மாளிடம் அன்புக்குக் குறைவில்லை. தாய்மையுணர்வு குறையவில்லை. பொங்கித்ததும்பும் இந்த அன்பின் சாயலையே குமாரபுரம் ஸ்டேஷன் கதையிலும் வரைந்திருப்பார். முன்பின் தெரியாதவர்களிடம் ஏற்படும் உறவுகளின் தார்மீகநேசத்தைச் சொல்லியிருப்பார்.
கு.அழகிரிசாமி ராஜா வந்திருக்கிறார் கதையில் தன்னுடைய அம்மாவுக்கு கோயில் கட்டியிருப்பதாக கி.ரா. சொல்லியிருந்தார். உண்மையில் ஒரு இந்திய கிராமத்தின் ஆத்மாவினைத் தொட்டுக்காட்டுகிற கதையாக ராஜா வந்திருக்கிறார் கதையைச் சொல்லலாம். தமிழ்ச்சிறுகதைச் சிகரங்களில் ஒன்று ராஜா வந்திருக்கிறார்.
வாழ்வின் எந்தக் கட்டத்திலாவது புறக்கணிப்பின் துயரை அனுபவிக்காதவர்கள் இருக்கமுடியாது. அந்தத் துயரே அவர்களை வாழ்க்கை முழுவதும் வேட்டையாடிக் கொன்று தீர்த்து விடும். நிராகரிப்பின் கொடுக்குகளால் கொட்டப்பட்ட ஒருவனுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு துளியும் எவ்வளவு கசப்பானதாக இருக்குமென்பது அதை அனுபவித்தவர்கள் உனர்வார்கள். ஆனால் குழந்தைகள் தங்களுக்கு நேர்கிற புறக்கணிப்பை எப்படி அவர்கள் வழியிலேயே ஈடு கட்டி மகிழ்கிறார்கள் என்பதை நேர்த்தியாகச் சொல்கிற கதை அன்பளிப்பு. கதையின் ஒவ்வொரு கணமும் நம்முடைய வாழ்வில் நாம் அனுபவித்த, நாம் பங்கேற்ற கணமாகவே இருப்பதை வாசிக்கும்போது உணரலாம். கதையின் இறுதிக்காட்சியில் நம்மை அறியாமல் நாம் மூச்சு விடக்கூட மறந்து போவோம். அந்தக் கடைசி வரியில் புறக்கணிப்பின் துயர் மொத்தமாக நம்மீது மிகப்பெரிய பளுவாக இறங்கி நசுக்குவதை உணர்ந்து கொள்ளமுடியும். ஒரு புதிய பாதை, ஒரு புதிய வெளிச்சம் நம் கண்ணுக்கு முன்னால் தெரியும். நமக்கு அழுகை வரும். சிரிப்பும் வரும். நாம் அழுதுகொண்டே சிரிக்கவோ, சிரித்துக்கொண்டே அழவோ செய்வோம். இதுதான் கு. அழகிரிசாமி நம்மிடம் ஏற்படுத்துகிற மாயம்.
மிகச்சாதாரணமாகா ஆரம்பிக்கிற கதை எப்படி இப்படியொரு மனித அடிப்படை உணர்வுகளில் ஊடாடி நம்மை அசைக்கிறது. வாழ்க்கை குறித்த மகத்தான ஞானத்தை நம்மிடம் ஏற்படுத்துகிறது என்பது தான் கலை. மகத்தான கலை எளிமையாகவே இருக்கிறது. அந்தக் கலை ஏற்படுத்தும் உணர்வு மானுடம் முழுவதற்கும் பொதுமையானது. அன்பளிப்பு கதை அந்த உணர்வை அளிக்கும் அற்புதத்தைச் செய்கிறது.
பத்திரிகை அலுவலகத்தில் வேலை பார்க்கும் கதாநாயகன், பக்கத்து வீடுகளிலிருக்கும் குழந்தைகளோடு மிக அன்னியோன்யமான பாசத்தையும் நேசத்தையும் கொண்டிருக்கிறான். அந்தக் குழந்தைகளும் அவன் மீது அளவில்லாத பிரியம் கொண்டிருக்கின்றன. அவனை வயது மூத்தவனாகக் கருதாமல் தங்களுடைய சமவயது தோழனாகக் கருதுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாளென்று விடிந்து வெகுநேரமாகியும் தூங்கிக் கொண்டிருக்கிற அவனை முதுகில் அடித்து எழுப்புகின்றன குழந்தைகள். குழந்தைகள் வாசிப்பதற்காக அவன் வாங்கிக்கொண்டு வருவதாகச் சொன்ன புத்தகங்களுக்காக வீட்டை கந்தர்கோளமாக ஆக்கிவிடுகின்றனர். அவனும் அவர்களுக்கு சமமாக விளையாடி கொண்டு வந்த புத்தகங்களைக் கொடுக்கிறான்.
அவன் தாயாரோடு இந்த வீட்டுக்கு வந்த புதிதில் அவனுக்குப் பரிச்சயமான சித்ராவும் சுந்தர்ராஜனும் எப்போதும் முதல் உரிமையை எடுத்துக் கொள்கிறார்கள். அவனும் அதைச் சாதாரணமாகவே எடுத்துக் கொள்கிறான். மற்ற குழந்தைகளும் அதை நியாயம் தான் என்று நினைக்கும் போது சாரங்கராஜன் மட்டும் ஏங்குகிறான். அதற்காக வால்ட்விட்மேனின் கவிதை நூலை வாசிக்கக் கேட்கிறான். அதை மறுக்கும்போது அழுகிறான். அடுத்து அவன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பிருந்தாவுக்குக் காய்ச்சல் கண்டு படுத்திருப்பதைக் கேள்வி கேட்டு அவர்கள் வீட்டுக்குப் போய்ப் பார்க்கிறான். பிருந்தா அவனைப் பார்த்ததும் மாமா மாமா என்று புலம்புகிறாள். கொஞ்சம் தெளிவடைகிறாள். அப்போது சாரங்கனும் தன்னுடைய வீட்டுக்கு வரச்சொல்லி வற்புறுத்துகிறான். அதன்பிறகு இரண்டு டைரிகளைக் கொண்டுவந்தவன் சித்ராவுக்கும் சுந்தர்ராஜனுக்கும் மட்டும் கொடுக்கிறான். அப்போதும் சாரங்கன் ஏமாந்து போகிறான்.
ஏற்கனவே சொன்னபடி ஞாயிற்றுக்கிழமையன்று சாரங்கனின் வீட்டுக்குப் போகும் கதாநாயகனுக்கு உப்புமா காப்பியெல்லாம் கொடுத்து உபசரிக்கிறான் சாரங்கன். பின்னர் மெல்ல அவனுடைய டவுசர் பையிலிருந்து ஒரு டைரியை எடுத்து அவனுக்கு முன்னால் வைத்து எழுதச் சொல்கிறான் சாரங்கன்.
என்ன எழுத? என்று கேட்கும் அவனிடம், சொல்கிறான் சாரங்கன்.
”என் பிரியமுள்ள சாரங்கனுக்கு அன்பளிப்பு“
குழந்தைகளின் களங்கமற்ற அன்பைச் சொல்கிற மிகச் சிறந்த கதை. குழந்தைகளிடம் பெரியவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற அரிச்சுவடியைக் கற்பிக்கும் கதை அன்பளிப்பு. இந்தக் கதைக்குள் ஓரிடத்தில் கதையின் கதாநாயகன் நினைப்பதாக கு.அழகிரிசாமி எழுதுகிறார்.

“உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்ளுவதும் அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டுணர்ச்சியும் ஒரு நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப் போலப் பேசி, குழந்தையைப் போல் ஆடிப்பாடி, குழந்தையை விளையாட்டுப்பொம்மையாகக் கருதி அதற்குத்தக்கவாறு நடந்து கொள்கிறார்கள். ஆனால் அந்தச் சூதுவாதறியாத குழந்தைகளோ அப்படி நடிப்பதில்லை. அவர்களுடைய ந்பில் விளையாட்டுணர்ச்சி கலக்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள் “
உண்மையிலேயே குழந்தைகளின் உலகத்தில் குழந்தைகளோடு குழந்தையாக வாழ்பவரால் மட்டுமே இப்படியான கவனிப்பைச் சொல்ல முடியும். இந்தக்கதை 1951-ல் சக்தி அக்டோபர், நவம்பர் இதழில் வெளியாகியிருக்கிறது.
ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு, இரண்டு கதைகளும் தமிழிலக்கியத்துக்கு கு.அழகிரிசாமி கொடுத்துள்ள கொடை என்று சொல்லலாம்.
1959 – ஆம் ஆண்டு எழுதப்பட்ட தம்பி ராமையா கதையில் அப்போதே கல்வியினால் தங்களுடைய குடும்பம் உய்த்து விடும் என்று நம்பி காடுகரைகளை விற்று மூத்தமகனான சுந்தரத்தை படிக்கவைக்கிறார் கிராமத்து விவசாயியான பூரணலிங்கம். ஆனால் மகன் படித்து முடித்து நான்கு வருடங்களாக வேலை கிடைக்காமல் வீட்டிலிருக்கும் அவலத்தைப் பார்த்து கல்வியின் மீதே வெறுப்பு வருகிறது. ஊரிலுள்ள மற்ற பேர்கள் தங்களுடைய குழந்தைகளைப் படிக்கவைப்பது குறித்து பேசும்போது பூரணலிங்கம் படிப்பினால் எந்தப் பிரயோசனமுமில்லை என்று வாதிடுகிறார். இந்த நிலைமையில் மதுரையில் நண்பன் ஒருவன் மூலம் சொற்ப சம்பளத்துக்கு வேலைக்குப் போன சுந்தரம் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி மாதாமாதம் ஐந்து ரூபாய் சேமித்து ஆண்டுக்கு ஒருமுறை ஊருக்கு வருகிறான். ஊருக்கு வரும்போது தம்பி தங்கைகளுக்குத் துணிமணிகள், பலகாரங்கள், வாங்கிக் கொண்டு வருகிறான். தந்தையின் கையில் முப்பதோ, நாற்பதோ பணமும் கொடுக்கிறான். அவன் ஊரில் இருக்கும் சில நாட்களுக்கு தினமும் விருந்துச்சாப்பாடு நடக்கிறது. இதைப்பார்த்த தம்பி ராமையா அண்ணனுடன் ஊருக்குப் போனால் தினம் பண்டம் பலகாரம் புதுத்துணி, பொம்மை என்று வசதியாக இருக்கலாம். ஆனால் அண்ணன் அவனைக் கூட்டிக் கொண்டுபோக மறுக்கிறான் என்று நினைத்து அண்ணன்மீது வெறுப்பு வளர்ந்து அவன் ஊருக்குப் போகும்போது அலட்சியப்படுத்துகிறான்.
அண்ணனால் தம்பியின் வெறுமையான பார்வையைத் தாங்க முடியவில்லை. ஆனால் வீட்டிலுள்ளோருக்குப் புரியாமல் தம்பி ராமையாவை அதட்டி உருட்டி அண்ணனை வழியனுப்ப ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்துக் கொண்டு வருகிறார்கள். ராமையா அண்ணனுக்கு விடைகொடுக்க கையைக்கூட அசைக்கவில்லை.
அப்போது சுந்தரம் நினைக்கிறான்,
“ராமையா நான் உன்னை நடுக்காட்டில் தவிக்க விட்டுவிட்டு இன்பலோகத்துக்கு வந்து விடவில்லையடா. நான் வேறொரு நடுக்காட்டுக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறேன்.. நீயாவது என்னை வெறுப்பதன் மூலம் ஆறுதலைத் தேடிக்கொண்டாய்.. எனக்கோ எந்த ஆறுதலும் இல்லை….. தினம் தினமும் உன்னையும் உன் ஏக்கத்தையும் இப்போது உன் வெறுப்பையும் எண்ணி எண்ணித் துயரப்படுவதற்குத் தான் மதுரைக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.. நீ நினைப்பது போல் நான் ஈவு இரக்கமற்ற பாவியில்லை..”
தம்பிராமையா என்ற ஏழுவயது சிறுவனின் மனநிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிற கதை. அண்ணன் சுந்தரத்தின் வழியே கதையை நடத்தும் கு.அழகிரிசாமி அந்தக் காலத்தைப் பற்றிய சமூக விமரிசனத்தையும் கல்வி குறித்த விமரிசனத்தையும் முன்வைக்கிறார். இந்தக் கதை பல தளங்களில் வைத்துப் பேசப்படவேண்டிய கதை.
கு.அழகிரிசாமியின் வர்க்க அரசியலை வெளிப்படையாக உணர்த்துகிற கதை தெய்வம் பிறந்தது. ராமசாமிக்குத் திருமணமாகி நீண்ட பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு பிறக்கிறான் குழந்தை ஜகந்நாதன். அவர் அவனை இந்த உலகின் அனைத்து தர்மநியாயங்களும் அறிந்த உத்தமனாக வளர்க்க நினைக்கிறார். அதற்காக அவர் அவனுக்கு எல்லாவிதமான நீதிநெறிகளையும் நன்னெறிகளையும் சொல்லிக்கொடுக்கிறார். அவர் சொன்னபடியே கேட்டு நடக்கிறான் ஜகந்நாதன். அப்பாவுக்கு ஷவரம் செய்ய வரும் வேலாயுதத்தை வணங்கி மரியாதை செய்கிறான்.
வீட்டில் காந்தியின் படத்தை மாட்டும்போது அவர் சமூகத்துக்குச் செய்த சேவையைப் பற்றி ஜகந்நாதனிடம் சொல்கிறார். அப்போது அவன் அபப்டியென்றால் சாமிப்படங்களை ஏன் மாட்ட வேண்டும் என்று கேட்கிறான். இந்த உலகை, இயற்கையைப் படைத்துக் காப்பாற்றுகிற சாமிப்படங்களை மாட்டி வைக்கலாம் என்று சொன்னதும் கேட்டுக் கொள்கிறான். ராமசாமிக்கு ஒரு குடும்பப்படம் எடுத்து வீட்டில் மாட்டி வைக்க ஆசை. அதற்காகப் பிரயத்தனப்பட்டு போட்டோ ஸ்டுடியோவுக்குப் போய் போட்டோ எடுத்து கண்ணாடிச் சட்டமிட்டு சுவரில் மாட்டுகிறார். அப்போதும் குழந்தை ஜகந்நாதன் கேள்வி கேட்கிறான். நம்முடைய போட்டோவை எதுக்கு நம் வீட்டில் மாட்டவேண்டும் என்கிறான். தந்தையால் பதில் சொல்லமுடியவில்லை. காந்தி, சாமிப் படங்களை மாட்டியிருப்பதற்குச் சொன்ன பதிலையே அவன் திரும்பக் கேள்வியாகக் கேட்கிறான். நமக்கு நன்மை செய்கிறவர்களின் படங்களைத் தான் மாட்டவேண்டுமென்றால் நம்முடைய வீட்டுக்கு வருகிற துணி வெளுக்கிற கோமதி நாயகம், ஷவரம் செய்கிற ஐயாவு, வேலாயுதம், காய்கறிக்காரர், இவர்களுடைய படங்களை ஏன் மாட்டவில்லை? என்று கேட்கிறான் குழந்தை. அந்தக்கேள்வியைக் கேட்ட ராமசாமி சிலிர்த்து மகனைக் கட்டியணைத்து கண்ணீர் சிந்தி, என் வயிற்றிலும் தெய்வம் பிறக்குமா? பிறந்து விட்டதே! என்று ஆனந்தக்கூச்சலிட்டுக்கொண்டு மனைவியைத் தேடிப்போகிறார்.
பெற்றோர்கள் எல்லோருமே தங்களுடைய குழந்தைகள் நீதிமான்களாக நியாயவான்களாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள் தான். அந்த நியாயமும், நேர்மையும் அவர்களைத் தர்மசங்கடப்படுத்தாதவரையில் குழந்தைகளுக்கு நன்னெறி, நீதிநெறி, ஆகியவற்றைச் சொல்லிக் கொடுப்பார்கள். தெய்வம் பிறந்தது கதையில் வருகிற ராமசாமி குழந்தையின் கேள்வியில் புளகாங்கிதமடைகிறார். அந்தக் கேள்வியின் தாத்பரியத்தைக் கண்டு அகமகிழ்கிறார். கு.அழகிரிசாமி தன்னுடைய அரசியல் சார்பு நிலையை ஜகந்நாதன் மூலம் வெளிப்படுத்துகிறார் என்று சொல்லலாம். இயல்பு மாறாமல் குழந்தையின் கேள்விகளை திறம்பட புனைவாக்கித் தந்து கதை முடிவில் ஒரு புதிய வெளிச்சத்தைக் காட்டுகிறார் கு.அழகிரிசாமி.
1960 – ஆம் ஆண்டு தாமரை பொங்கல் மலரில் வெளியான கதை தெய்வம் பிறந்தது.
மேலே சொன்ன கதைகளுக்கு மாறாக குழந்தைகளின் பேதமையைப் பற்றி எழுதிய் கதை பேதமை. 1960- ஆம் ஆண்டு மார்ச் மாதம் கலைக்கதிர் பத்திரிகையில் வெளியான கதை. வாசகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் கதை.
தெருவில் கடைக்காரரால் மிருகத்தனமாக அடிக்கப்பட்டு கதறிக் கொண்டிருக்கும் இரண்டு கந்தலுடையில் அழுக்காக இருந்த ஏழைச்சிறுவர்களை அந்த அடியிலிருந்துக் காப்பாற்றுகிற கதாநாயகன் சற்று நேரத்துக்கு முன்னால் அவனே அடிக்க வேண்டும் என்று நினைத்தவன் தான். வீடு வீடாகச் சென்று பிச்சைச்சோறு வாங்கி வந்து கொண்டிருந்த வயதான குருட்டுப்பிச்சைக்காரரின் தகரக்குவளையில் அந்த இரண்டு சிறுவர்களும் மண்ணையள்ளிப் போட்டு விட்டுச் சிரிக்கிறார்கள். அதைப்பார்த்த எல்லோருக்குமே ஆத்திரம் வந்தது. ஆனால் கடைக்காரர் அந்த ஆத்திரத்தை கண்மண் தெரியாமல் காட்டி விட்டார். குழந்தைகளின் அவலக்குரலைத் தாங்க முடியாமல் அவரிடமிருந்து அவர்களை மீட்டு அவர்களுடைய வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.
ஊருக்கு வெளியே இருந்த குடிசையில் அவனுடைய அம்மா மட்டுமல்ல அக்கம்பக்கத்திலிருந்த குடிசைகளிலிருந்தவர்களும் கூட அந்தக் குழந்தைகளை அடிக்க வேண்டும் என்கிறார்கள். அப்ப்போது கூட குழந்தைகளின் பேதமையை நினைத்து, இப்படியொரு கொடூரமான வாழ்க்கையிலிருந்து தப்பிக்கத் தானே எண்ணம் வரும் என்றெல்லாம் யோசிக்கிறார் கதாநாயகன். ஆனால் அந்த இடத்தை விட்டுப் புறப்படும்போது அந்தக் குடிசைக்குத் தட்டுத்தடுமாறி இன்னொரு குருட்டுப்பிச்சைக்காரன் ஒரு கையில் குவளையும். ஒரு கையில் தடியுடன் வந்து சேர்கிறான். அவன் தான் அந்தக் குழந்தைகளின் தந்தை. அதைப் பார்த்ததும் கதாநாயகனுக்கு நெஞ்சே வெடித்து விடும் போலிருக்கிறது. குருடன் பெற்ற பிள்ளைகள் தான் குருடன் சோற்றில் மண்ணள்ளிப் போட்டுச் சிரித்தவர்கள்.
துயரம் தாங்க முடியாமல் கடைசி வரியில் குழந்தைகளே! என்று விளிக்கிறார் கதாநாயகன்.
புறவயமான சமூகச்சூழலின் விளைவாக இருந்தாலும் இந்தக் கதையில் வரும் குழந்தைகளின் பேதமையை யாராலும் பொறுத்துக் கொள்ளமுடிவதில்லை.
குழந்தைகளைப் பற்றிய இன்னுமொரு கதை இருவர் கண்ட ஒரே கனவு.
கு.அழகிரிசாமியின் கலை உன்னதங்களை மட்டுமல்ல, கீழ்மைகளையும் நமக்குக் காட்டுகிறது. அவரளவுக்கு நுட்பமாக குழந்தைகளின் உலகை வெளிப்படுத்தியவர்கள் தமிழில் மிகவும் குறைவு.
இருவர் கண்ட ஒரே கனவு கதையில் ஏழைத்தாய் காய்ச்சலினால் இறந்து போய் விடுகிறாள். அவளுடைய இரண்டு பையன்களும் இரண்டு மூன்று நாட்களாகச் சாப்பிடாமல் கிடக்கிறார்கள். அவர்களைப் பார்த்து இரக்கப்பட்டு கஞ்சி கொடுக்கிறார் விவசாயத்தொழிலாளியான வேலப்பன். அடுத்தவர்கள் கொடுக்கும் எதையும் வாங்கிச் சாப்பிடக்கூடாதென்ற அம்மாவின் கண்டிப்பினால் ஆசைப்பட்டு கஞ்சியை வாங்கிவந்த சின்னவனிடம் பெரியவன் சண்டைபோட்டு கஞ்சியைக் கீழே கொட்டி விடுகிறார்கள். அம்மாவிடம் புகார் சொல்வதற்காக ஓடிவந்தால் அம்மா இறந்து கிடக்கிறாள். எப்போதும் அவள் விளையாடும் விளையாட்டென்று நினைத்து அவளை அடித்துக் கிள்ளி எழுப்புகிறார்கள். அம்மாவின் இழப்பைக் கூட உணரமுடியாத பிஞ்சுக்குழந்தைகள். முன்னர் கஞ்சி கொடுத்த வேலப்பன் தன் வீட்டில் அவர்களைத் தங்கவைக்கிறான். இரவில் இரண்டு குழந்தைகளும் ஏக காலத்தில் அம்மா என்றலறி எழுந்திரிக்கிறார்கள். கேட்டால் இருவருக்கும் ஒரே கனவு. அவர்களுடைய அம்மா வந்து தான் உடுத்தியிருந்த சேலையை அவர்கள் மீது போர்த்திவிட்டு நான் சாகவில்லை.. என்று சொல்லிவிட்டுப் போவதாக கனவு வந்து அம்மாவை தேடுவதாகக் கதை முடிகிறது.
கிராமப்புற ஏழைகளின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை மட்டுமல்ல அநாதரவான குழந்தைகள், ஏழைச்சிறுவர்கள், திரும்பத்திரும்ப கு.அழகிரிசாமியின் கதைகளில் வருகிறார்கள். அவர்களுடைய மனநிலையை அவ்வளவு யதார்த்தமாகச் சித்தரிக்கிறார். கு.அழகிரிசாமியின் கதைகளில் குழந்தைகள் அழியாத சித்திரங்களாக அமைந்து விடுகிறார்கள். கதையின் முக்கியக்கதாபாத்திரங்களாக இல்லாவிட்டாலும் கூட அவர்களுடைய இருப்பை கு.அழகிரிசாமி அபூர்வமான வண்ணத்தில் தீட்டி விடுகிறார். குழந்தைகளின் மீது அவர் கொண்ட பேரன்பும் பெருநேசமும் அவரை அப்படி எழுத வைத்திருக்கிறது.
தரிசனம் என்ற கதையிலும் முத்து என்ற ஒரு ஆதரவற்ற கிழவரும், ஆண்டியப்பன் என்ற அநாதையான சிறுவனும் வருகிறார்கள். முதியவருக்கு உணர்வுகள் மரத்துப் போய் விடுகிறது. எதுவும் நினைவிலில்லை. சித்தசுவாதீனமில்லாதவர் என்று ஊரார் சொல்கிறார்கள். ஆனால் அவர் அன்றாடம் கூலிவேலைக்குப் போய் கிடைக்கும் கூலியைத் தூரத்து உறவினரான ஆறுமுகத்திடம் கொடுத்து அவனிடமும் அவன் மனைவியிடமும் ஏச்சும் பேச்சும் வாங்கிக் கொண்டு திண்ணையில் முடங்கிக் காலத்தைக் கழிக்கிறார். ஆண்டியப்பனுக்கோ தாயும் தந்தையும் இறந்து ஆதரவின்றி அந்த ஊர் பெரிய தனக்காரரிடம் வேலை பார்த்துக் கொண்டு தொழுவத்தில் படுத்துக் கிடக்கிறான். பத்து நாட்களாக விடாமல் பெய்யும் மழை சிறுவனையும் திண்ணைக்குத் தள்ளுகிறது. இருவரும் திண்ணையில் இரவுப்பொழுதைக் கழிக்கிறார்கள். அப்போதுதான் திண்ணையின் மூலையில் ஒரு குருவிக்கூடிருப்பதைப் பார்க்கிறார் கிழவர் முத்து. அது தன் குஞ்சுகளுக்கு இரை கிடைக்காமல் தட்டழிவதைப் பார்க்கிறார். வெளியே மழை பெய்து கொண்டேயிருக்கிறது.
மழையினால் கூலி வேலையில்லையென்பதால் ஆறுமுகத்தின் மனைவி வைது கொண்டே சோறு போடுகிறாள். அவள் போடும் சோற்றில் பாதியை ஒரு காகிதத்தில் எடுத்து வந்து தாய்க்குருவி கண்ணில் படும் இடத்தில் வைத்து விடுகிறார். தாய்க்குருவி சோற்றை எடுத்துக்கொண்டு போய் குஞ்சுகளுக்கு ஊட்டுகிற காட்சியைப் பார்த்து கிழவர் தெய்வ தரிசனத்தைக் கண்டமாதிரி கண்களில் கண்ணீர் வழிய கும்பிடுகிறார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் ஆண்டியப்பன் தொழவேண்டியது அவரையல்லவா என்று அவரைக் கும்பிடுகிறான்.
இந்தக்கதை முழுவதும் கிழவர் முத்துவைச் சுற்றியே வந்தாலும் ஆண்டியப்பன் என்ற கதாபாத்திரமும் தரிசிக்கிறது. இரண்டுபேரும் இரண்டு தரிசனங்களைப் பார்க்கிறார்கள். இரண்டு தரிசனங்களின் வழியாக வாசகர்களுக்கு வேறொரு தரிசனத்தைத் தருகிறார் கு.அழகிரிசாமி.
எளியவர்களின் வழியாகவே வாழ்க்கையின் உன்னதங்களை உணர்த்துகிறார் கு.அழகிரிசாமி. குழந்தைகளின் இயல்புணர்வை அவரளவுக்கு பதிவு செய்தவர்களும் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்குக் கதைகளில் குழந்தைகள் வந்து செல்வதையும் பார்க்கும்போது, எந்தளவுக்கு கு.அழகிரிசாமியின் மனதில் குழந்தைகளின் மீதான பிரியமும் பேரன்பும் இருக்கிறது என்பது புரியும்.
எங்கள் அன்புக்குரிய கலைஞன் கு.அழகிரிசாமியின் கதைகளில் குழந்தைகள் சுதந்திரமாக இருக்கிறார்கள். தங்களுக்கு நேர்ந்த புறக்கணிப்பைத் தாங்களே சரி செய்து கொள்கிறார்கள். வாழ்க்கையின் சிடுக்குகளை எளிதாக அவிழ்த்து விடுகிறார்கள். தங்களுடைய நேசத்தினாலும் பரிவினாலும் இந்தப் பிரபஞ்சத்தையே பற்றியணைக்கும் வல்லமை கொண்டவர்களாகிறார்கள்.
அவர்கள் யாவரும் கு.அழகிரிசாமியே! எங்கள் மூதாயே!
கனிவின் ஒளியும் குரூரத்தின் இருளும் – கு. அழகிரிசாமியின் இரண்டு சிறுகதைகளை முன்வைத்து – உதயசங்கர்
உலக இலக்கியத்தில் ரயில் நிலையம் போல வேறு ஒரு இடம் அதிகமாகப் பதிவாகியிருக்குமா என்பது சந்தேகமே. உலகப்புகழ்பெற்ற டால்ஸ்டாயின் அன்னா கரீனினாவில் ரயில்வே ஸ்டேஷன் ஒரு கதாபாத்திரமாக வருகிறது. அன்னா ரயிலில் பாய்ந்தே தற்கொலை செய்து கொள்கிறாள். அஸ்தபோ ஸ்டேஷனில் டால்ஸ்டாய் தன்னந்தனியராக தன் இறுதிக்கணங்களைக் கழிக்கிறார். நதானியல் ஹாதர்னின் சுவர்க்க சாலை என்ற சிறுகதை இரும்புக்குதிரையை அதாவது ரயில் எஞ்சினை முன்வைத்து ஜான் பனியனின் பயணியின் முன்னேற்றம் என்ற நாவலை கேலி செய்து எழுதப்பட்டது. இந்திய இலக்கியத்திலும் மிக முக்கியமான பங்கை ரயில்களும், ரயில்வே ஸ்டேஷன்களும் வகிக்கின்றன. ரஸ்கின் பாண்டின் கதைகளில் குழந்தைகளின் அன்புக்குரியதாக ரயில்களும் ரயில்வே ஸ்டேஷனும் வருவதைப் பார்க்கலாம். அப்படி தமிழிலக்கியத்திலும் கு.ப.ரா.வின் விடியுமா என்ற சிறுகதை முழுவதும் ஓரிரவு ரயில்பயணத்தில் நடக்கிறது. உணர்ச்சிகளின் சங்கமமாக, உணர்ச்சிகளின் குவிமையமாக, வாழ்க்கை பற்றிய அடிப்படையான பார்வையை உருவாக்குகிற இடமாக ரயில்களும் ரயில்வே ஸ்டேஷன்களும் இலக்கியத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன.
தமிழ்ச்சிறுகதை மேதைகளில் ஒருவரான கு. அழகிரிசாமியின் இரண்டு சிறுகதைகளில் தகப்பனும் மகளும், குமாரபுரம் ஸ்டேஷன், ஆகியவற்றில் ரயிலையும் ரயில்வே ஸ்டேஷனையும் முக்கியமான களமாகவும் கதாபாத்திரமாகவும் சித்தரித்திருக்கிறார். அதில் தகப்பன் மகளும் கதையில் ரயிலில் எதிரே உட்கார்ந்திருக்கும் இரண்டு இளைஞர்களிடமிருந்து தன்னுடைய சிறுமியான மகளைப் பாதுகாப்பதற்காக அந்தச் சிறுமியின் தந்தை செய்கிற கோணங்கித்தனங்களே அவரை ஒரு அற்பனாகக் காட்டுகிற கதை. பொதுவாக கு. அழகிரிசாமி வாழ்க்கையின் யதார்த்தமான காட்சிகளையே சித்தரிக்கிறார். அந்தக் காட்சிச் சித்தரிப்பில் மனிதர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள். அப்போது அவர்கள் வெளிப்படுத்துகிற மனவிகாரங்கள், விசித்திரங்கள், மானுடத்தருணத்தின் ஒளிக்கீற்றுகள், ஆகியவற்றையே அவர் நமக்குத் தரிசனங்களாகத் தருகிறார். எளிமையான வாழ்க்கையை எளிமையான சொற்களால், எளிமையான வடிவத்தில், எளிமையான கலையாக செதுக்குகிறார் கு. அழகிரிசாமி. அவருடைய தனித்துவமென்பது சாமானியர்களின் வாழ்வை சாதாரணமாகச் சொல்வது தான். அந்த சாதாரணத்துவத்துக்குள் தார்மீகமான அறவிழுமியங்களைத் தேடுகிறார்.

தான் கண்டடைந்த மானுடத்தார்மீக அறவிழுமியங்களை ஒரு குழந்தையின் குதூகலத்துடன் வாசகர்கள் முன் காட்டுகிறார் கு. அழகிரிசாமி. குழந்தையின் களங்கமின்மையும், தான் கண்டுபிடித்ததை உடனே காட்டிவிடும் வெள்ளந்தித்தனமும், கபடின்மையும் தான் கு. அழகிரிசாமியின் கலைத்துவம். குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்கள் கண்டெடுக்கும் உடைந்த பொம்மையோ, அறுந்து விழுந்த பொத்தானோ, துருப்பிடித்த ஆணியோ, பழைய பாசிமணியோ, உண்மையான முத்துகளோ, பவளங்களோ, எல்லாம் ஒன்று தான். எல்லாவற்றையும் சமமான மதிப்புடனே அவர்கள் வைத்துக்கொள்வார்கள். அப்படித்தான் கு. அழகிரிசாமியும் தான் கண்ட அனைத்திலும் உள்ளுறைந்திருந்த மானுடநாடகத்தைத் தன்னுடைய கதைகளில் நிகழ்த்தினார்.
ஒரு சம்பவம், ஒரு தருணம், ஒரு நிகழ்ச்சி, ஒரு உணர்ச்சியைச் சுற்றி திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு எழுதப்படும் நவீனச்சிறுகதைகளுக்கு மாறாக கு. அழகிரிசாமியின் குமாரபுரம் ஸ்டேஷன் கதையில் பல சம்பவங்கள், பல தருணங்கள், ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத பல கதாபாத்திரங்கள், பல உணர்ச்சிச்சுழல்கள், எல்லாம் இயல்பாக ஒன்று கூடி ஒரு மானுடத்தரிசனத்தை உருவாக்குகிறது. அந்தத் தரிசனம் இந்த வாழ்வைக் கனிவுடன் சாந்தமாக உற்று நோக்குகிறது. கு. அழகிரிசாமி அந்தக்கனிவின் சிகரத்தில் நின்று கொண்டிருக்கிறார்.
கோவில்பட்டி என்ற சிறுநகரத்துக்கு அருகில் பத்து கி.மீ. தூரத்திலுள்ள இடைசெவல் என்ற கிராமத்தில் தமிழிலக்கியத்தின் இரண்டு மேதைகள் கு. அழகிரிசாமி, கி. ராஜநாராயணன், உருவானார்கள். அவர்கள் அண்டைவீட்டுக்காரர்கள் என்பதும் சமவயதினர் என்பதும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் இரண்டு பேரும் கம்யூனிச இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் என்பதும் இரண்டு பேரும் இசைமீது பெரும்பித்து கொண்டவர்கள் என்பதும், பழந்தமிழ் இலக்கியத்தைக் கரைத்துக் குடித்தவர்கள் என்பதும் தமிழிலக்கியத்தில் பாரதூரமான தாக்கங்களை உருவாக்கியவர்கள் என்பதும் சாதாரணமான விஷயங்களில்லை.
23-9-1923 அன்று கு. அழகிரிசாமி பிறந்தார். ஆரம்பக்கல்வியை கோவில்பட்டியிலுள்ள ஆயிரவைசிய ஆரம்பப்பள்ளியிலும், உயர்நிலைக்கல்வியை வ. உ. சி. அரசுப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை கல்வி கற்றார். கல்வியில் மிகச்சிறந்த மாணவனாகவே இருந்தார் கு. அழகிரிசாமி. உடல்நிலை காரணமாக பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாமல் போன கி.ரா. பக்கத்து வீட்டுக்காரனான கு. அழகிரிசாமியுன் அத்யந்த நட்பு கொண்டிருந்தார். இருவரின் பாலிய காலத்தைப் பற்றி விரிவாக கி.ரா. நிறைய எழுதியிருக்கிறார்.
இடைசெவலுக்கு அருகிலிருந்த குமாரபுரம் ஊரில் அமெரிக்கன் கல்லூரியில் படித்த ஆங்கிலம் தெரிந்த எட்டக்காபட்டி முத்துச்சாமி என்ற கரிசல்க்காட்டு சம்சாரியிடமிருந்து ஆண்டன் செகாவின் சிறுகதை நூலை வாங்கிக் கொண்டு வாசித்தார். அவரையே தன் இலக்கியகுருவாக கு. அழகிரிசாமி வரித்துக் கொண்டார். அவரிடமிருந்த இலக்கியநூல்களை அழகிரிசாமியும் அவர் மூலமாக கி.ரா.வும் கற்கத் தொடங்குகிறார்கள். பிறகு இருவரும் அப்போது இளைஞர்களை ஈர்த்துவந்த கம்யூனிச இயக்கத்தில் இணைந்தார்கள். கு. அழகிரிசாமி சிறிது காலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இடைசெவல் கிளையின் செயலாளராக இருந்தார். கி.ரா. இந்திய விவசாயிகள் சங்கத்தின் செயலாளராக இருந்தார். கோவில்பட்டி கவிஞர் கந்தசாமிச்செட்டியார் மூலம் கவிதையில் ஈடுபாடு கொண்டு கவிதைகளை எழுதினார். பள்ளியிறுதி வகுப்பு முடிந்ததும் அரசு வேலைக்கு சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதி தேர்ச்சி பெற்றார். பத்திரப்பதிவுத்துறையில் வேலை கிடைத்து ஆரம்பத்தில் சுரண்டையிலும் பின்னர் தென்காசியிலும், நாங்குநேரியிலும் சில மாதங்கள் வேலை பார்த்தார்.. தென்காசியில் வேலைபார்த்தபோது ரசிகமணி டி.கே.சி.யைச் சந்தித்தார். அவருடைய நன்மதிப்பைப் பெற்று ரேடியோவில் கவியரங்க நிகழ்ச்சியில் ரசிகமணியுடன் இணைந்து பங்கேற்றார்.
1943 –ல் கு. அழகிரிசாமியின் முதல்கதையான உறக்கம் கொள்ளுமா? என்ற கதை ஆனந்த போதினியில் வெளியானது. 1944 – ஆம் ஆண்டு பிரசண்டவிகடனில் உதவி ஆசிரியர் வேலையில் சென்னைக்குப் போய்ச் சேர்ந்தார். அதன்பிறகு தன் வாழ்நாள் முழுவதும் பத்திரிகையாளராகவே வேலை பார்த்தார். பிரசண்டவிகடன், சக்தி, தமிழ்மணி, தமிழ்நேசன், நவசக்தி, தமிழ்வட்டம், சோவியத் நாடு போன்ற பத்திரிகைகளில் வேலை பார்த்தார். 1952 –ல் அவருடைய முதல் சிறுகதைத்தொகுப்பு சிரிக்கவில்லை வெளியானது. அதன்பிறகு 13 சிறுகதைத்தொகுப்புகள், 3 நாவல்கள், 8 கட்டுரை நூல்கள், 3 சிறுவர் நூல்கள், 2 நாடகங்கள், 11 மொழிபெயர்ப்புகள், 4 பதிப்பு நூல்கள் என்று இலக்கியத்தின் அனைத்து வகைமைகளிலும் பங்களிப்பு செய்திருக்கிறார்.
கம்யூனிச இயக்கத்தின் மீது அவருக்கு இருந்த ஈடுபாட்டை அவர் கி.ரா.வுக்கு எழுதிய கடிதங்களில் காணமுடிகிறது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வாங்கி அனுப்பும்படியும், ஜீவாவின் சிங்கக்கர்ஜனையைப் பொதுக்கூட்டத்தில் கேட்டதாகவும், அந்தக்கூட்டத்தில் இடதுசாரி இயக்கத்தின் தலைவர்களான ராமநாதன், ராமகிருஷ்ணன், சிண்டன், எம்.ஆர்.வி, போன்றோர் கலந்து கொண்டு பேசியதாகவும் எழுதியிருந்தார். பி.ராமமூர்த்தியின் பேச்சைக் கேட்க ஆவலாக இருந்ததாகவும் அவர் வராத குறையை ஜீவா தீர்த்துவைத்ததாகவும், மறுநாள் பாமினிதத்தின் பேச்சைக் கேட்க போகப்போவதாகவும், ஜனசக்தி, பீப்பிள்ஸ் ஏஜ், தவறாமல் வாசிப்பதாகவும், முடிந்தவரை இயக்கம் சார்ந்த செய்திகளை அவர் வேலை பார்க்கும் பத்திரிகையில் முடிந்தவரை பிரசுரிக்க முயற்சிப்பதாகவும் எழுதியிருக்கிறார்.
1962 –ல் எழுத்து பத்திரிகை ” எதற்காக எழுதுகிறேன்? ” என்ற கேள்வியை முன்வைத்து சிறந்த எழுத்தாளர்களிடமிருந்து பதிலை வாங்கி கட்டுரைத் தொடராகப் பிரசுரித்தது. அதில் கு. அழகிரிசாமி எழுதும்போது,
“ நான் மனிதனாக வாழவிரும்புகிறேன்.. நான் மனிதனாக சுதந்திர புருஷனாக இருப்பதற்கு வழி என்ன? நான் எழுதுவது ஒன்றே வழி. நான் முழுச்சுதந்திரத்தோடு இருக்கச் சந்தர்ப்பங்கள் துணை செய்யாத சமயத்திலும் மன உலகில் சுதந்திரத்தை இழக்கத்தயாராக இல்லை. ஆகவே எழுதுவதால் நான் மனிதனாக இருக்கவும், நான் மனிதனாக வாழவும், மனிதனாக வளரவும் முடிகிற காரணத்தால் எழுதுகிறேன்…..
பிரசாரத்துக்காக எழுதவில்லையா, நிர்ப்பந்துக்காக எழுதவில்லையா, பணத்துக்காக எழுதவில்லையா, வாழ்க்கைச் செலவுக்காக எழுதவில்லையா என்றெல்லாம் கேட்கலாம். இத்தனைக்காகவும் நான் எழுதுகிறேன் என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால் அடிப்படை என்னவோ ஒன்று தான். புறக்காரணங்கள் எவையாக இருந்தாலும் என் குறிக்கோள் மாறிவிடவில்லை. ஒருவேளை உள்ளே மறைந்து நிற்கலாம். ஆனால் மாறவில்லை. மாறாது. எனவே சந்தர்ப்பத்தேவைகளையோ, புறக்காரணங்களையோ பெரிதுபடுத்தி முழுக்காரணங்கள் ஆக்கவேண்டியதில்லை. லட்சியம் தவறும்போது தன் ஆத்மாவுக்கும் மனித குலத்துக்கும் துரோகம் இழைக்கும்போதும்தான் அவற்றை முழுக்காரணங்கள் ஆக்க முடியும்… இப்படிப்பட்ட காரியத்தைக் கலைகளினாலேயே சாதிக்கமுடியும். நான் பயின்ற கலை எழுத்து. அதனால் எழுதுகிறேன்.. ( எழுத்து மே, 1962 )

தான் ஏன் எழுதுகிறேன் என்பதைப் பற்றிய ஒரு எழுத்தாளனின் சுயவாக்குமூலம் இது. கு. அழகிரிசாமியே சொல்லியிருக்கிறபடி மனிதன் என்ற அந்த மகத்தான சொல்லின் முழு அர்த்தத்திலேயே தன்னுடைய கலைக்கொள்கையை வகுத்து அதைப் பின்பற்றினார். எல்லாவித நிர்ப்பந்தங்களுக்கேற்றபடியும் சந்தர்ப்பங்களுக்கேற்றபடியும் அவர் எழுதியிருந்தாலும் அவருடைய தார்மீகமான மானுட அறவிழுமியங்களின் பாதையிலேயே தன்னுடைய பயணத்தை அமைத்துக் கொண்டார். அவர் எழுதியுள்ள 105 கதைகளில் ஏராளமான கதைகள் உலகத்தரத்தில் வைத்துப் போற்றப்படவேண்டியவை. சிரிக்கவில்லை, தவப்பயன், திரிபுரம், ராஜா வந்திருக்கிறார், வெறும்நாய், அன்பளிப்பு, பாலம்மாள் கதை, அழகம்மாள், பெரியமனுஷி, திரிவேணி, காலகண்டி, தம்பி ராமையா, சுயரூபம், குமாரபுரம் ஸ்டேஷன், இருவர் கண்ட ஒரே கனவு, பேதமை, போன்ற கதைகளை மிகச்சிறந்த கதைகளாகக் கொள்ளலாம்.
இந்தக்கட்டுரையில் 1960-ல் அவர் எழுதி கல்கியில் வெளியான குமாரபுரம் ஸ்டேஷன் என்ற கதையைப் பற்றியும் 2002 – ல் நான் எழுதிய குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு என்ற கதையைப் பற்றியும் பேசிப்பார்க்கலாம்.
குமாரபுரம் ஸ்டேஷன் என்பது ஒரு காட்டு ஸ்டேஷன் என்ற முதல்வரியுடன் தொடங்குகிறது கதை. சுற்றிலும் ஊரோ, ஆள் நடமாட்டமோ இல்லாத ஸ்டேஷன். அந்த ஸ்டேஷனின் வரலாற்றிலேயே முதன்முதலாக வந்திறங்குகிறார் முக்கியஸ்தர் சுப்பராம ஐயர். கோவில்பட்டியில் ஒரு பள்ளியின் தலைமையாசிரியரான அவர் தன்னுடைய பாலியகால நண்பரான குமாரபுரம் ஸ்டேஷன் மாஸ்டரோடு மூன்று நாள் விடுமுறையைக் கழிப்பதற்காக வந்திருந்தார். ஸ்டேஷன் மாஸ்டரின் மகனின் ஆறாவது பிறந்தநாளைக் கொண்டாட வந்திருந்த ஒரே விருந்தினர். குமாரபுரம் ஸ்டேஷனின் அலாதியான தனிமை, யாரைப்பற்றியும் கவலைப்படாமல் அவ்வப்போது வந்துபோகும் ரயில்வண்டிகள், பயணிகள் யாரும் வராமல் தண்ணீர்ப்பந்தலாக நின்று கொண்டிருக்கும் ஸ்டேஷன் என்று சுப்பராம ஐயர் அலட்சியமாக நினைக்கிறார். ஆனால் தவநிலையில் அந்தக் கரிசக்காட்டில் அமைதியாக நின்று கொண்டிருக்கும் குமாரபுரம் ஸ்டேஷனின் வழியே உலகத்தைப் பார்க்கிறார் ஸ்டேஷன் மாஸ்டர்.
இரண்டு நாட்கள் அங்கே தங்கிய பிறகு, மூன்றாவது நாளில் குமாரபுரம் ஸ்டேஷன் அவருக்கு வேறொன்றாகத் தெரிகிறது. அடுத்து பத்து கி.மீ. தூரத்திலிருந்த கோவில்பட்டி ஸ்டேஷனுக்கு வருகிற இருபது நிமிடப்பயணத்திலும் சுப்பராம ஐயருக்கு ஞானம் கிடைக்கிறது. தான் இருக்குமிடத்திலிருந்து உலகத்தைப் பார்க்கும் ஞானம் கொண்ட ஸ்டேஷன் மாஸ்டர். சூதுவாதில்லாமல் உரக்கப்பேசிக்கொண்டிருக்கும் கிராமத்துவாசிகள், ஊர்க்குழந்தைகளையும் தன்னுடைய குழந்தையோடு மேல் படிப்புக்காக பள்ளிக்கூடத்தில் சேர்க்க அழைத்து வந்த பெரியவர், மேல்படிப்புக்காக அந்தக்குழந்தைகளுக்குப் பயிற்சி கொடுத்து அனுப்பும் ஆசிரியர், ரயிலில் வருகிற திருநெல்வேலி பங்கஜ விலாஸ் ஹோட்டல் முதலாளியான பூதாகாரமானவர் தனக்குக் குழந்தையில்லையென்றால் என்ன? தன்னுடைய ஹோட்டலில் சாப்பிடுகிற அத்தனை குழந்தைகளும் தன் குழந்தைகள் தான் என்று சொல்லும் உரிமை. இடைசெவல் குழந்தைகளையும் கல்லூரிக்கு வரும்போது தன்னுடைய ஹோட்டலில் தான் வந்து சாப்பிடவேண்டும் என்ற வேண்டுகோளோடு வழியனுப்புகிற அன்பு, கோவில்பட்டியில் அந்தப்பையன்களுடைய ஊர்க்காரரான போர்ட்டரின் விருந்தோம்பல், எல்லாக்காட்சிகளையும் கண்ணுற்ற சுப்பராம ஐயர் பரவசமடைகிறார். குமாரபுரம் ஸ்டேஷனை மிகப்பெரிய பள்ளிக்கூடமென்று நினைக்கிறார்.
ஒரு மகத்தான மானுட தரிசனத்தை குமாரபுரம் ஸ்டேஷனில் மிக லகுவாக நிகழ்த்துகிறார் கு. அழகிரிசாமி. கலையமைதியின் உச்சத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது குமாரபுரம் ஸ்டேஷன். அடுத்தடுத்த காட்சிகளில் சுப்பராம ஐயருக்கு மட்டுமல்ல நமக்கும் மானுடமேன்மையின் உன்னதம் தெரிகிறது. எளிய மனிதர்களின் எளிய உரையாடல்கள், எளிய வாழ்க்கைச் சித்திரங்களின் மூலம் கதையினை பல அர்த்தத்தளங்களுக்குக் கொண்டுபோகிறார் கு. அழகிரிசாமி.

முதலில் ஸ்டேஷன் பற்றிய வர்ணனை. ஸ்டேஷன் மாஸ்டருடனான உரையாடல். ஸ்டேஷனின் தனிமை ஏற்படுத்தும் உணர்வு. ரயில் வரும் முன்பு தூங்கிக் கொண்டிருந்த ஸ்டேஷன் உயிர் பெற்று எழுந்து நாடகக்காட்சிகளைத் தொடங்குகிறது. அந்த மானுட நாடகம் ரயிலிலும் தொடர்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமான பதிவுகளை ஏற்படுத்துகிறார் கு. அழகிரிசாமி. அதனால் ஏற்கனவே குமாரபுரம் ஸ்டேஷன் தங்கலில் மனம் மாறத்தொடங்கியிருந்த சுப்பராம ஐயர், ரயில் பயணத்தில் முற்றிலும் மாறிவிடுகிறார். சுப்பராம ஐயரின் மன ஆழத்திலிருந்து பேரூணர்வு எழுந்து அவரைப் பரவசப்படுத்துகிறது. அதே பரவசத்தை கிராம்த்துப்பெரியவரும் குழந்தைகளும் பள்ளிக்கூடத்தில் அடைகிறார்கள். சுப்பராம ஐயர் குமாரபுரம் ஸ்டேஷனை ஞானம் தந்த போதிமரமாக நினைக்கிறார்.
கு. அழகிரிசாமியின் கலை செகாவியன் பாணியிலானது. யதார்த்தக்காட்சிகளின் வழியே சாமானியர் மக்களின் குணவிசித்திரங்களின் வழியே எளிய மொழியில் கட்டமைக்கப்பட்டு எழுப்பப்படுவது, கொஞ்சம் அசந்தாலும் அவருடைய கலையின் சூட்சுமம் பிடிபடாமல் போய் விடும் வாய்ப்பு உணடு. அதனால் கதைகள் சாதாரணமானதாகத் தோற்றமளிக்கும் ஆபத்தும் நேரிடும்.
கு. அழகிரிசாமியிடம் திருகுமுருகலான வலிந்தெழுதும் மொழி இல்லை. வாசகர்களை மயக்கும் உத்திகளில்லை. எதிர்பாராத திருப்பங்களில்லை. விநோதமான கருப்பொருளில்லை. ஆனால் கரைபுரண்டோடும் வாழ்க்கைச்சித்திரங்கள் இருக்கின்றன. அவர் காட்டுகிற காட்சிகள் சாதாரணமானவை தான். அவர் சித்தரிக்கிற மனிதர்கள் சாதாரணமானவர்கள் தான். ஆனால் அவற்றின் மூலம் ஒரு மானுடத்தருணத்தை உருவாக்க முயற்சிக்கிறார். அந்த மானுடத் தருணங்களின் வழியாக மனிதர்களின் மீது கனிவு கொள்கிறார். பரிவையும் அன்பையும் காட்டுகிறார். வாசகர்களிடம் இதோ பாருங்கள். இந்த மனிதர்கள் சாதாரணமானவர்கள் தான். அவர்கள் சாதாரணமாக இருப்பதின் வழியே தான் இந்த வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறார்கள். அன்பைப் பரிமளிக்கச்செய்கிறார்கள் என்று கிசுகிசுக்கிறார். பொதுவாக அவர் உரக்கப்பேசுவதில்லை. ஆனால் அவருடைய முணுமுணுப்பை உற்றுக் கேட்காவிடில் கு. அழகிரிசாமியின் மேதைமை நமக்குப் புரியாது.
குமாரபுரம் ஸ்டேஷன் கதையை தான் எழுதியதைப் பற்றி கு. அழகிரிசாமி கதைக்கு ஒரு கரு என்ற தலைப்பில் 1963 – ல் தாமரையில் எழுதிய கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
“குமாரபுரம் ஸ்டேஷனுக்கு குமாரபுரம் ஸ்டேஷன் தான் கரு. என் சொந்த கிராமமாகிய இடைசெவலுக்கு அருகில் உள்ள இந்த ஸ்டேஷன் தான் நான் முதன்முதலில் பார்த்த ரயில்வே ஸ்டேஷன். நடுக்காட்டில் ஒரு கட்டடம். கிராமத்தில் காணும் எந்த வீட்டையும் விட அழகும் வசதியும் வாய்ந்தது. அதை ஒட்டி சில வீடுகள். சுகமான மனோரம்யமான வாழ்க்கை! நடுக்காட்டில் உள்ள வீட்டில் சமைத்துச் சாப்பிடுவது, தினந்தோறும் வனபோஜனம் சாப்பிடும் இன்பானுபவமாகத் தோன்றியது. ஸ்டேஷன் மாஸ்டரின் வாழ்க்கை கிராமத்து ஜனங்களின் வாழ்க்கையை விட கவர்ச்சிகரமாக அந்தச் சிறு வயதில் எனக்குத் தோன்றியது. அப்பொழுது மனசைக் கவர்ந்த ஒரு இன்ப உலகமாகக் காட்சியளித்த அந்த குமாரபுரம் ஸ்டேஷன் அந்த “ முதற்காதல் “ – எத்தனையோ வருஷங்களுக்குப் பிறகுகூட உள்ளத்தைக் கவர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த ஸ்டேஷனை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன். பல வருஷங்களுக்குப் பிறகு எழுதினேன். காதல் நிறைவேறியது போல் இருந்தது. எனக்குப் பிடித்த என் சிறுகதைகளில் குமாரபுரம் ஸ்டேஷனும் ஒன்று “
இந்தக் கதையை கு. அழகிரிசாமி எழுதிய காலம் நாடு விடுதலையடைந்து வாழ்வில் தேனும் பாலும் தெருக்களில் ஓடும் என்று அரசியல் கட்சிகள் சொல்லிக் கொண்டிருந்த காலம். நிலவுடமைச் சமூக மதிப்பீடுகள் மெல்ல மெல்ல மறைந்து நவீன காலத்தின் புதிய மதிப்பீடுகள் உருவான காலம். கல்வியினால் கடைத்தேறிவிடலாம் என்ற நம்பிக்கை பெருகிய காலம். நம் கண்ணெதிரே ஒரு புதிய உலகம் உருவாகிக்கொண்டிருக்கிறது என்ற நம்பியிருந்த காலம். அந்தக் காலத்தில் கிராமத்து வெகுளித்தனமும், அன்பும், பரிவும் எப்படி நவீன சமூகத்தின் அடையாளமாக அங்கே தன்னந்தனியாக நின்று கொண்டிருந்த குமாரபுரம் ஸ்டேஷனையும் அந்த ஸ்டேஷன் மாஸ்டரையும், அங்கே அலட்சியமாக வந்து தங்கியிருந்த பள்ளியின் தலைமையாசிரியரான சுப்பராம ஐயரையும் மாற்றுகிறது. நவீன சமூகம் எந்தப் பாதையில் போகவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இடதுசாரித்தத்துவத்திலும் இயக்கத்திலும் ஈடுபாடு கொண்டிருந்த கு.அழகிரிசாமியின் கலைக்கொள்கையை மையப்படுத்திய கதை என்று குமாரபுரம் ஸ்டேஷன் கதையைச் சொல்லலாம். கு.அழகிரியிசத்தைப் புரிந்து கொள்வதற்கு குமாரபுரம் ஸ்டேஷன் கதையை வாசிக்காமல் கடந்து செல்லமுடியாது.

குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷன் 1876 – ஆம் ஆண்டு கோவில்பட்டி – திருநெல்வேலி ரயில் மார்க்கத்தில் அமைந்திருக்கிறது. அருகில் எந்த ஊரும் கிடையாது. கு. அழகிரிசாமி எழுதியிருப்பதைப் போல அது ஒரு காட்டு ஸ்டேஷன் தான். எப்போதாவது பகலில் ஆடு, மாடு, மேய்க்கும் பையன்களோ, கரிசல்க்காடுகளில் வேலை செய்பவர்களோ வந்து தாகம் தீர்க்கவும் அங்கிருக்கும் வேப்பமரம், புளிய மரம், பன்னீர் மரம், பிள்ளைவளத்தி மரம், விளாமரம், கருவை, மரங்களின் நிழலில் ஓய்வெடுப்பதும் உண்டு. நான் குமாரபுரம் ஸ்டேஷனில் 1999 – லிருந்து 2018 – வரையிலான காலத்தில் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் வேலை பார்த்தேன். எங்கு மாறுதல் தந்தாலும் மீண்டும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கு வந்து விடுவேன். குமாரபுரம் ஸ்டேஷன் அப்படி என்னை ஈர்த்திருந்தது. அது மட்டுமல்ல அதன் ஏகாந்த அமைதியும் அவ்வப்போது வீசும் ஊ ஊ ஊ என்று கூப்பிடும் குருமலைக்கணவாய் காற்றும் எதிரே விரிந்திருக்கும் குறும் புதர்களும், காடை, கௌதாரி, காட்டுப்புறா, மணிப்புறா, மயில், காகம், கருங்குருவி, பனங்காடை, மரங்கொத்தி, தவிட்டுக்குருவி, செம்போத்து, போன்ற பறவைகளின் சுதந்திரமான நடமாட்டமும், இரவில் கூகை, ஆந்தை, குள்ளநரி, கருநாகம் தொடங்கி அத்தனை விதமான பாம்புகள், நட்டுவாக்காலி, தேள், பொரிவண்டு, உள்ளங்கையகலம் இருக்கும் மரவண்டுகள், தீப்பூச்சி, நாற்றமெடுக்கும் பச்சைப்பூச்சி, என்று எல்லாவிதமான உயிரினங்களையும் தரிசிக்கலாம். காலையில் கௌதாரி தன் குஞ்சுகளுடன் காலாற இரைதேடிப் போவதைப் பார்க்கலாம். இணையைச் சேருவதற்காக மயில் தோகைவிரித்து சிலிர்த்தாடுவதைக் காணலாம்.
இப்படிப்பட்ட ஸ்டேஷனை விட்டுப்போக யாருக்கு மனம் வரும்? அதுவும் கு. அழகிரிசாமியைப் போன்ற ஆளுமையின் கதை பெற்ற ஸ்தலமான குமாரபுரம் ஸ்டேஷன் என்னை வசீகரித்துக் கொண்டேயிருந்தது. 1960-ஐப் போலவே அந்த ஸ்டேஷன் கிராசிங்குக்காகவே உருவாக்கப்பட்டிருந்ததென்பதால் வேறு எந்தத் தொந்திரவும் கிடையாது. ரயில்கள் போய் விட்டால் நம்மருகில் தனிமை வந்து தானாக நாற்காலி போட்டு உட்கார்ந்து கொள்ளும். அப்படியொரு அமைதி.
1992 –ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டு இந்தியாவே ரணகளமாகி மக்களின் மனதில் மதவெறி விஷவிதையெனத் தூவப்பட்டு விருட்சமாக வளர்ந்து கொண்டிருந்த காலம். அன்றாடம் மக்களைப் பதட்டத்தில் வைத்திருந்த காலம். அமைதியென்பதே இனி வராதோ என்றிருந்த காலம். தங்களுடைய பொருளாதாரக்கஷ்டங்களுக்கு விடிவு காலம் கிடையாதோ என்று பரிதவித்துக் கொண்டிருந்த காலத்தில் நான் குமாரபுரம் ஸ்டேஷனில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். இரவுகளில் திடீர் திடீரென்று தண்டவாளங்களின் வழியே ஆட்கள் நடந்து வருவார்கள். அவர்களைப் பார்த்தாலே பயமாக இருக்கும். அழுக்கான உடையுடன். தாடி, முடியெல்லாம் சடைபிடித்து, அழுக்குப்பையுடன், அழுக்கான தேகத்துடன் எதையோ வெறித்த கண்களுடன் எங்கேயாவது தப்பித்துப் போய் விடவேண்டுமென்ற வேகத்துடன் வடக்கிலிருந்து தெற்கு திசை நோக்கியும், தெற்கிலிருந்து வடக்கு திசை நோக்கியும் போய் வருவார்கள்.
லாரி கேலின்ஸ் – டொமினிக் லேப்பியர் இணைந்து எழுதிய FREEDOM AT MIDNIGHT என்ற நூல் மொழிபெயர்ப்பாளர் மயிலை பாலுவின் மொழிபெயர்ப்பில் நள்ளிரவில் சுதந்திரம் என்று அலைகள் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருந்தது. அந்த நூலை வாசித்த நாட்களில் என் மனம் நிலை கொள்ளவில்லை. எப்போதும் வன்முறைக்காட்சிகள் கண்முன்னால் தோன்றிக் கொண்டேயிருந்தன. உடலில் ஒரு விறைப்புத்தன்மை கூடிக் கொண்டிருந்தது. தனியே இருக்கும்போது பயம் கிளை கிளையாய் விட்டது. காதுகளில் ஓலம். பெண்களின், குழந்தைகளின் ஓலம் கேட்டுக் கொண்டேயிருந்தது. மனிதர்களின் மீதான நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது.
அந்த நேரத்தில் தான் நான் திடீரென்று ஒருநாளிரவு குமாரபுரம் ஸ்டேஷனில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போதே வெறி பிடித்ததைப் போல எழுதத்தொடங்கினேன். இரவு முழ்வதும் எழுதினேன். எப்படி ரயிலகள் வந்தன: போயின என்று எனக்குத் தெரியவில்லை. இரவு பனிரெண்டு மணிக்குத் தொடங்கிய எழுத்து காலை ஆறு மணிக்குத் தான் முடிந்தது. ஏதோ ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்தது போல, ஏதோ ஒரு ஆசுவாசம் என்னிடம் தோன்றியது. மனம் இளகியிருந்தது. அதன்பிறகு ஒரு வாரகாலத்திற்குப் பிறகு மீண்டும் வாசித்துபார்த்து செம்மை செய்தேன்.
குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு கதையில் ஸ்டேஷன் மாஸ்டர் நாராயணன் இரவுப்பணி பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு முன்னால் நள்ளிரவில் சுதந்திரம் புத்தகம் விரிந்து கிடக்கிறது. எதிரே காட்டின் உயிர்த்துடிப்பு, மின்மினிப்பூச்சிகள், இராப்பூச்சிகளின் சங்கீதமென கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறார். குமாரபுரம் ஸ்டேஷனின் வெளிச்சத்தை நோக்கி அத்தனை உயிரினங்களும் கலங்கரை விளக்காக நினைத்துக் கொண்டு பாய்ந்து வருகின்றன. மின்சாரம் தடைபட்டு அந்தக் குறுக்காட்டில் இன்னொரு புதராக குமாரபுரம் ஸ்டேஷன் இருக்கிறது. அப்போது இருளிலிருந்து முளைத்து வந்தவனைப் போல ஒருவன் அவர் முன்னல் நிற்கிறான். அவன் கையேந்தியபடி நிற்கிறான். அவனுக்கு டீ கொடுக்கச்சொன்ன நாராயணன் உள்ளே ரயில் வருவதற்கான அனுமதியைக் கொடுக்கச் செல்கிறார். திரும்பி வந்து பார்த்தபோது அந்த மர்ம மனிதனைக் காணவில்லை.

மீண்டும் நள்ளிரவில் சுதந்திரம் புத்தகத்தை வாசிக்கும் போது புத்தகத்திலிருந்த எழுத்துகள் அவரைச் சரித்திரத்தின் சுழலுக்குள் இழுத்துச் செல்கிறது. அங்கே அமிர்தசரஸ் ஸ்டேஷனில் ஸ்டேஷன் மாஸ்டர் சானிசிங்காக நின்று கொண்டிருக்கிறார். பிரிவினைக் கலகங்களும் வன்முறைகளும் வெடித்து விட்டன. லாகூரிலிருந்து வருகிற ரயில் முழுவதும் பிணங்கள் வருகின்றன. அதைப் பார்த்த சீக்கியர்கள் ஸ்டேஷனில் வேலை பார்க்கும் அன்வரை ஸ்டேஷன் மாஸ்டரின் வேண்டுகோளையும் மீறி இழுத்துச் சென்று கொலை செய்கின்றனர். நடந்து கொண்டிருந்த சம்பவங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த சானிசிங் மயங்கிச் சரிகிறார்.
குமாரபுரம் ஸ்டேஷனின் நாராயணனை அவருடைய உதவியாளர் எழுப்பி என்ன சார் அழுறீங்க? என்கிறார். நாராயணன் எழுந்து வெளியே பார்க்கிறார். பொழுது விடிந்து விட்டது. வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்நோக்கி காடு சலம்பிக் கொண்டிருக்கிறது. டீ குடிக்கும் போது முந்தின நாளிரவு பார்த்த அதே மர்மமனிதன் திடீரென வந்து டீ கேட்கிறான். அவர் அவனிடம் பேச்சுக் கொடுத்து அவனுடைய பெயரைக் கேட்கிறார். அவன் சானிசிங், அமிர்தரஸ் ஸ்டேஷன் மாஸ்டர் என்று சொல்கிறான்.
இந்தக் கதை வரலாற்றின் பக்கங்களுக்குள் சென்று இன்றைய நிலைமையின் பயங்கரத்தை அன்றைய நிலவரத்துடன் ஒப்பிட்டு சூசகமாக வாசகனுக்குக் கடத்தி விடுகிறது.
ஒரே இடம் வெவ்வேறு காலகட்டத்தின் இரண்டு எழுத்தாளர்களின் கருப்பொருளாக மாறி வெவ்வேறு விதமாக வெளிப்பட்டிருப்பதென்பது தமிழிலக்கியத்தில் முன்னெப்போதுமில்லாததொரு விஷயம்.
இரண்டு கதைகளிலும் குமாரபுரம் ஸ்டேஷன் மாறவில்லை. அதன் ஏகாந்தம் மாறவில்லை. அதன் அழகு மாறவில்லை. ஆனால் நாற்பதாண்டு கால இடைவெளியில் சமூகத்தின் சூழல் மாறிவிட்டது. 1960-களில் சமூகம் இருந்த நிலைமையை வைத்து கு. அழகிரிசாமி எழுதிய குமாரபுரம் ஸ்டேஷன் கனிவின் ஒளியில் மனிதர்களைக் காட்டியது என்றால் 2002 –ல் இருந்த சமூகநிலைமையை வைத்து நான் எழுதிய குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு என்ற கதை ஒரு நம்பிக்கைக்காக, ஒரு கருத்துக்காக மனிதர்கள் பைத்தியம் பிடித்ததைப் போல மாறி ஒருவரையொருவர் கொலை செய்வதை, குரூரத்தின் கொடிய இருளைப் பற்றி எச்சரிக்கை செய்கிறது. நம்முடைய இருண்டகாலத்தின் கடந்த காலப்பயணத்தை ஞாபகப்படுத்துகிறது.
குமாரபுரம் ஸ்டேஷன் கதையில் கு. அழகிரிசாமி காட்டுகிற மானுட கரிசனத்தின், மகத்தான அன்பின் தரிசனத்துக்காக ஏங்கித் தவிக்க வைக்கிறது.
கு. அழகிரிசாமியே! என் மூதாதையே!
நூற்றாண்டின் ஈடு இணையற்ற கதைசொல்லி காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் – தமிழில்: சொ.பிரபாகரன்
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற கதைசொல்லிகளில் ஒருவர்.
தனக்குள் தனது லத்தீன் அமெரிக்க நிலத்தின் பல்வேறு கதைகளையும், மனிதர்களையும் சுமந்து அலைந்த மார்க்கேஸின் இறுதி நாட்களைப் பற்றி அவர் மகன் எழுதியுள்ள கட்டுரை ஒன்றை வாசித்தேன்.
ஒரு படைப்பாளிக்கு நிகழவே கூடாத ஒன்று அவருக்கு அவரின் இறுதி நாட்களில் நிகழ்ந்துள்ளது. அது தனது அத்தனை நினைவுகளை, கதைகளை, மனிதர்களை அவர் மறந்து போனது .
சில நேரங்களில் சரியான வார்த்தைகள் மறந்துள்ளார். தன்னுடன் இருப்பவர்கள் யார் என்பதையும் மறந்துள்ளார். ஒரு கட்டத்தில் “வீட்டில் எல்லாரையும் அதட்டி வேலை வாங்கிக் கொண்டிருக்கும் இந்த பெண்மணி யார்?” என்று தனது மனைவியைப் பார்த்து கேள்வி கேட்டுள்ளார்.
இது அவரின் மனைவிக்கும் மகனுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
அவருக்கு நினைவாற்றலைக் கொஞ்சம் கொஞ்சமாக மறக்க வைக்கும் டிமென்ஷியா நோய் தாக்கியுள்ளது. டிமென்ஷியா அறிகுறிகள் தென்படும் ஆரம்ப நிலையிலேயே மார்க்கேஸ் கூறிய வார்த்தைகள்
“நான் என் நினைவுகளின் வழியாக வேலை செய்கிறேன். நினைவகமே எனது கருவி மற்றும் எனது மூலப்பொருள். அது இல்லாமல் என்னால் வேலைகளைத் தொடர இயலாது. எனக்குத் தயவு செய்து உதவுங்கள்.”

“நான் என் நினைவுகளை இழந்துவிட்டேன், ஆனால் அதிர்ஷ்டவசமாக நான் அதை இழக்கிறேன் என்பதையும் மறந்துவிட்டேன்.”
“அனைவரும் என்னை ஒரு குழந்தை போல் நடத்துகிறார்கள். ஆனால் இதுவும் நன்றாக உள்ளது நான் இதை விரும்புகிறேன்.” என்று கூறியுள்ளார்.
தனது நினைவுகளை முற்றிலும் இழந்த நாட்களில் ஒருநாள் மாலை வேளையில் தனது தோட்டத்தில் நின்று கொண்டு எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அங்கு வந்த அவரின் உதவியாளர்
டான் கேப்ரியல், நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்?
“அழுது கொண்டிருக்கிறேன்”
“அழுகையா! கண்ணீர் வரவில்லையே? ”
“ஆமாம் கண்ணீர் இல்லாமல் அழுகிறேன். என் தலை இப்போது குப்பையாக இருப்பதை நீ உணரவில்லையா? ” என்று கூறியுள்ளார்.
இன்னும் நிலைமை மோசமாக மாறுகிறது.
இது என் வீடு அல்ல. நான் என் வீட்டிற்குச் செல்ல விரும்புகிறேன். அது என் அப்பாவின் வீடு. என் அப்பாவுக்கு அருகில் எனக்கு ஒரு படுக்கையும் இருக்கிறது என்று திரும்பத் திரும்ப சொல்கிறார்.
அவர் தனது தந்தை என்று சொல்வது அவரின் தந்தையை அல்ல, அவரது தாத்தா கர்னல் ஆரேலியானோ புவேண்டியாவை என்று அவரது மகன் சொல்கிறார்
காப்ரியேல் எட்டு வயது வரை அவருடன் தான் வாழ்ந்தார். அவரது தாத்தா கர்னல் அவரது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நபர். மார்க்கேஸின் படைப்புகளை வாசித்தவர்களுக்குத் தெரியும் அவரின் தாத்தா அவரின் பல படைப்புகளில் முக்கியமான கதாபாத்திரமாக வருவார் என்பது.

ஆச்சரியமாக எல்லாவற்றையும் மறந்து போன காப்ரியேல் எப்படி தனது தாத்தாவை மட்டும் மறக்கவில்லை என்று தெரியவில்லை.
இதைப் பற்றித் தேடி வாசித்தால் இதற்கும் விடை கிடைக்கிறது. தனது எட்டு வயது வரை மார்க்கேஸ் வளர்ந்தது தனது தாத்தா மற்றும் பாட்டியுடன் தான். மார்க்கேஸின் தாத்தா கர்னல் ஒரு அரசாங்க அதிகாரி அவர் மார்க்கோஸின் மீது அளவு கடந்த அன்பைச் செலுத்தியுள்ளார். லத்தீன் அமெரிக்காவின் பூர்விக (மேஜிக் ரியலிசம்) கதைகளை மார்க்கோஸ்க்கு சொன்னது அவர் தான்.( இந்த கதைகளின் வழியாகப் பிறந்தது தான் தனிமையின் நூறாண்டுகள் என்கிற புகழ் பெற்ற நாவல்) இதுமட்டுமின்றி அவர் தாத்தா சொன்ன பல கதைகள் அவரின் ஆழ் மனதில் கடைசி வரை இருந்துள்ளது.
ஒரு படைப்பாளி தனது நினைவுகளை இழந்தாலும் அவனுக்குள் இருக்கும் கதைகளும், கதைசொல்லிகளும் மறைவதில்லை போல.
இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த கதைசொல்லி தற்போது நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பார்.
நீங்கள் உறங்குங்கள் காப்ரியேல் எனக்குப் பிடித்த உங்களின் ஒரு வார்த்தையை நான் எனக்கு மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.
“எதுவாக இருந்தாலும், நீங்கள் ஏற்கனவே ஆடிய வாழ்க்கை நடனங்களை யாராலும் உங்களிடமிருந்து பறித்துச் செல்ல முடியாது.”
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்.
தமிழில்: சொ.பிரபாகரன்








