தங்கேஸ் எழுதிய 5 கவிதைகள்
தங்கேஸ் கவிதைகள்
தங்கேஸ் கவிதைகள்
தங்கேஸ் கவிதைகள்
தங்கேஸ் கவிதைகள்
தங்கேஸ் கவிதைகள்
கடவுள் மனதில் சாத்தான் நுழைவது
*******************************************
ஒவ்வொரு மதத்திற்கும் தன் விலாசங்களை மாற்றிக்கொண்டிருக்கும் கடவுள்
ஒரு நாள் தொலைந்து போகிறார்
இடிக்கப்பட்ட கோவில்களிலும் மசூதிகளிலும்
தேவாலயங்களிலும் தேடியபிறகும்
அவரின் இல்லாமை
குருதியாய் பெருக்கெடுத்து ஓடுகிறது
குற்ற உணர்ச்சி கொண்ட மனங்கள்
ஆற்றாமையில் அரற்ற
சுயம்பு ஆண்பாலாக தோன்றுகிறார்
தவளையுடையணிந்த கடவுள்
இனி தன்னை நிருபிக்க அற்புதங்கள்
புரிந்தாக வேண்டும்
இரவெல்லாம் நிலத்திலும் நீரிலும் ஆகாயத்திலும்
நீந்திச்செல்லும் மனிதர்கள் மேல் மோதிவிடாமல்
தன் சக்திக்கும் மீறிய எத்தனை அபாயகரமானது
கடவுள் தன்மை பெரும்பாறையாய் தோளில்
அழுத்த
விற்பன்னர்களின் நீதியை சுமந்து செல்லும் இதயத்தில்
நெருஞ்சி முட்கள் முளைக்க
இதயத்தைக் கழற்றி வைக்கிறார்
மீதியிருக்கும் மனதின் குற்ற உணர்ச்சிகளின் வழி
சாத்தான் நுழைகிறான்
நிழல்களை அழைத்தல்
**********************************
பார்க்கும் போதே இருளுக்குள் மறைந்து கொண்டிருக்கும் ஒரு உருவத்தை
என்னவென்று சொல்வாய்
இருள் விழுங்கிய உருவா?
அல்லது கலைந்து போகும்
தோற்றக் கனவா ?
இந்தத் தெருவெங்கும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும்
துள்ளும் நிழல்களோடு குலாவ
விடைபெற்று விட்டதா?
நட்சத்திரங்களை சொல்லாக்க முடியும் கவிஞர்களுக்கு
சவால் விட்டுச் செல்கிறதா?
எப்படியோ கடைசியில்
காலத்தில் குதித்துவிட்டதென்று
முடித்துக்கொள்கிறேன்
ஒற்றைச் சொல்
***********************
ஓர் ஒற்றைச் சொல்
நம் உயிரைப் பிழிந்தெடுக்கிறது
மூன்று எழுத்து
ஈரசையில்
ஓர் ஒற்றைச் சொல் அது
அது சில நேரங்களில் மழை மேகமாகவும்
சில நேரங்களில் கணப்பு அடுப்பாகவும் இருந்தது
நம்மை அறியாமலேயே
வழிந்தோடும் கண்ணீர்த் துளிகளை
துடைத்தபடியேவும்
அது இருந்தது
ஒரு நாள் வானத்து விண்மீன் அகாலத்தில் உதிர்ந்த போது
குளத்திலிருந்த தவளை
குதித்து வெளியேறிப் போனது
அது எழுப்பிப்போன பேரலைகள்
இன்னும் குளத்தை உறுத்திக்கொண்டேயிருக்கின்றன
பச்சை பாசிக்கடியில் நீரின் மூலக்கூறுகளும் இன்னும்
மாறிய வண்ணமே இருக்கின்றன
ஆனால் தவளை குதித்து குதித்துப் போன
மாயம் தான் இன்னும் தெரியவில்லை
எல்லாம் அந்த ஒற்றைச் சொல் தான் …
– தங்கேஸ்
தங்கேஸ் கவிதைகள்
1
தோல் போர்த்திய எலும்புக்கூடு
ஏந்திய கரமொன்றில்
இரண்டு ரூபாய் நாணயத்தை திணித்துவிட்டு
ஏதோ தோன்றமுகம் பார்க்கிறேன்
வருடங்க ளுக்கு முன்பு
தொலைந்து போன
பெரியம்மாவின் சாயல் தென்பட
அப்படி ஏதும் இருந்து விடக் கூடாதென்று
தன்னிச்சையாக
அவ்விடம் விட்டு நகர்கிறேன்
தம்பி என்றழைக்க நினைத்த வார்த்தையை
அவரசமாக விழுங்கி விட்டு
நான் போகும் திசையை வெறித்தபடி
நாணயத்தோடு
அதுவும் நகர்ந்திருக்க கூடும்
வேறு இடம் தேடி
2
வயலுக்குப் போனாலும் வரப்புக்குப் போனாலும்
பார்வதி வாரேன்
என்று சொல்லிவிட்டுப் போகும்
ஆண்டி தாத்தா
பாட்டியிடம் சொல்லாமல் போன
அன்று தான்
ரெட்டைப் புளிய மரப் பிஞ்சையில்
உழவுச்சாலுக்குள்ளேயே பிணமாக
கிடந்தார்
பார்வதிப்பாட்டியும் ஒரு நாள்
தெருப் பார்த்த திண்ணையில் சாய்ந்தவாறே
செத்துப் போயிருந்தாள்
எங்கள் அலுவலகத்தில் ஒரு நாள்
ஏ3 சார்
ஒரு தம்ளர் தண்ணிர்
தொண்டைக்குள் இறங்குவதற்கும் முன்பே
ஒரு வார்த்தை சொல்லாமல்
என் மடியிலேயே உயிரை விட்டிருந்தார்
ஒரு முறை
ஐநூறு மைலுக்கு அப்பாலிருந்த விற்பனைப் பிரதிநிதி
தந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்திருப்பதாக சொன்ன
குறுஞ்செய்திக்கு அலறியடித்து
இரவெல்லாம் பயணித்து
அதிகாலையில்
அவரை வந்து பார்த்த போது
வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும்
வயர்கள் செருகப்பட்டு கிடந்த அவரால்
ஒரு வார்த்தை பேச முடியவில்லை
கடைசி மூச்சு பிரியும் போது
கடைக் கண்ணோரம் சரிந்த
இரண்டு துளி கண்ணீர் மட்டுமே
உருண்டு விழுவதற்காக காத்திருந்தது
சிறிது வெளிச்சம் இருந்தாலும்
தொடர்ந்து வரும் நம் நிழல்
இருளுக்குள் வந்ததும்
சொல்லாமலே விடை பெறுவது போலத்தானா
மனிதர்கள் வாழ்க்கையிடமிருந்து
விடை பெறுவதும்
தங்கேஸ் கவிதைகள்
கவிதை 1
கண்களை மூடிக்கொள்கிறேன்
இன்னொரு முறை விழிகளுக்குள் பறந்து போ பறவையே!
அந்த இளவேனிற் காலம் திரும்பி வரும்போது
ரேடியோப் பூக்கள் பூத்த மலைச்சரிவுகளில்
நாம் பசுந்தளிர்களிடம் உரையாடியபடி நடந்து கொண்டிருப்போம் !
பால்கொடிகள் என் மேனியெங்கும் பற்றிப் படர
மெய்சிலிர்ப்பில் நான் மீண்டும் பனிச்சிலையாகி விடுவேன்.
தெளிந்த வானமும்
அதன் மீது நிலவும்
அரைவட்டமடித்துப் போகும்
வெண்நாரைக்கூட்டங்களும்
மீண்டும் தோன்றும் போது
கடைக்கண்ணோரம் துளிர்க்கும்
ஒரு துளி கடலில்
நீ படைத்த அத்தனை உயிரினங்களும் உன் முன்னால்
இரகசியமாய் நீந்தி மறைந்து விடும் கண நேரத்தில்
கவிதை 2
கடவுள் புன்னகைக்க வந்து விடுவார்
காற்றில் மிதந்து வரும் வார்த்தைகளென
தாழப்பறக்கின்றன
அதிகாலையின் முதல் பதிவை எழுதும்
வண்ணத்துப்பூச்சிகள்
காலைப்பறவைகள்
பனித்துளிகளில் தேங்கியிருக்கும்
ஈரக்காற்றை இறக்கைகளால் கிழிக்காமல்
கவனமாக நீந்திப்போகின்றன
மரங்கள் தியானித்துக்கொண்டிருக்கின்றன
இன்னும் கண் திறக்காமல்
செங்கல் பொடியையும் சாம்பலையும்
வரிகளாய் உடம்பில் தெளித்திருக்கும்
சங்குப்பூனையும்
உறுத்தும் மியாவிற்குப் பயந்து
நீட்டி சோம்பல் முறிக்கும்
அருக்கம் புல் புதரிலிருந்து
தெருநாய்கள் அடையாளம் தொலைந்து
சண்டையிடாமல் இருக்கும்
சற்று வெயிலேறும் வரைக்கும்
நசுக்கப்பட்ட சிவப்புத்தக்காளியாய்
தோற்றம் கொள்ளக் காத்திருக்கிறது
இன்றைய அதிகாலைச்சூரியன்
இன்னொரு தென்னங்கீற்றாய்
தலைகீழாகத் தொங்கி கிடக்கிறது
பச்சை அரவம் ஒன்று
கடைசி இரவும்
சொட்டிக்கொண்டிருக்கிறது
இருள் நதியாய்
அதன்மீது
தாயின் வெப்பச் சிறகுகளுக்குள் பதுங்கியிருக்கும்
காக்கைக் குஞ்சுகளுக்கும்
தாய்ப் புறாவின் வெது வெதுப்பில்
கண்ணயர்ந்திருக்கும் புறா குஞ்சுகளுக்கும்
இந்த நாள்
இன்னும் ஒரு காணாத
கனவென
இருக்கக்கூடும்
டப் டப் டப்டப் டப் டப்
இன்றைய அதிகாலையின் முதல் பதிவு
பூமியின் தோலை கிழித்துப்பறக்கின்றன
நான்கு கால்கள் இரண்டு கால்கள்
பெட்ரோலைக் குடித்துப்
புகையைத் துப்பி
சற்றதிர்ந்து விழித்த
அதிகாலையின் முகத்தில்
கரியைப் பூசி
விரைகின்ற ஒரு காரியமாய்
தென்னையில் அமர்ந்திருந்த
குரங்கொன்று அதிர்ந்து
பட படத்து
கிளைக்குக் கிளை தாவ
காக்கைகள் பட படத்து
ஓலமிட்டு அலற
காயை காலை நீட்டி
கதை கதையாய்க் கதைத்து
நடக்கிறார்கள்
அஷ்ட கோணலாய்
கும்பல் கும்பலாய் நின்று
செய்கிறார்கள் சிரிப்பு வைத்தியம்
அணில் பிள்ளைகள்
தலை தெறிக்க ஓடுகின்றன
மறு கூடு தேடி
மது வாசனையும்
சிகரெட் புகையும்
ஊது வத்தி வாசனையும்
பரவ ஆரம்பிக்கிறது
தெருக்களில்
குப்பைத் தொட்டிக் கருகில்
குவிந்து கிடக்கின்றன
காலி மதுப்புட்டிகளும்
சுருட்டி மடக்கப்பட்ட
பேப்பர் பொட்டலங்களும்
தண்ணீர் பைகளும்
குரல் உயர்த்தாத தெருநாய்களும்
மற்றும் நைந்த துணிகளுக்குள்
நைந்த உடல்களும்
சற்று நேரத்திற்கெல்லாம்
கடவுள் வந்து விடுவார்
ஒரு உக்கிரக புன்னகையோடு








