கடவுள் மனதில் சாத்தான் நுழைவது
*******************************************
ஒவ்வொரு மதத்திற்கும் தன் விலாசங்களை மாற்றிக்கொண்டிருக்கும் கடவுள்
ஒரு நாள் தொலைந்து போகிறார்
இடிக்கப்பட்ட கோவில்களிலும் மசூதிகளிலும்
தேவாலயங்களிலும் தேடியபிறகும்
அவரின் இல்லாமை
குருதியாய் பெருக்கெடுத்து ஓடுகிறது
குற்ற உணர்ச்சி கொண்ட மனங்கள்
ஆற்றாமையில் அரற்ற
சுயம்பு ஆண்பாலாக தோன்றுகிறார்
தவளையுடையணிந்த கடவுள்
இனி தன்னை நிருபிக்க அற்புதங்கள்
புரிந்தாக வேண்டும்
இரவெல்லாம் நிலத்திலும் நீரிலும் ஆகாயத்திலும்
நீந்திச்செல்லும் மனிதர்கள் மேல் மோதிவிடாமல்
தன் சக்திக்கும் மீறிய எத்தனை அபாயகரமானது
கடவுள் தன்மை பெரும்பாறையாய் தோளில்
அழுத்த
விற்பன்னர்களின் நீதியை சுமந்து செல்லும் இதயத்தில்
நெருஞ்சி முட்கள் முளைக்க
இதயத்தைக் கழற்றி வைக்கிறார்
மீதியிருக்கும் மனதின் குற்ற உணர்ச்சிகளின் வழி
சாத்தான் நுழைகிறான்

நிழல்களை அழைத்தல்
**********************************
பார்க்கும் போதே இருளுக்குள் மறைந்து கொண்டிருக்கும் ஒரு உருவத்தை
என்னவென்று சொல்வாய்
இருள் விழுங்கிய உருவா?
அல்லது கலைந்து போகும்
தோற்றக் கனவா ?
இந்தத் தெருவெங்கும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும்
துள்ளும் நிழல்களோடு குலாவ
விடைபெற்று விட்டதா?
நட்சத்திரங்களை சொல்லாக்க முடியும் கவிஞர்களுக்கு
சவால் விட்டுச் செல்கிறதா?
எப்படியோ கடைசியில்
காலத்தில் குதித்துவிட்டதென்று
முடித்துக்கொள்கிறேன்

ஒற்றைச் சொல்
***********************
ஓர் ஒற்றைச் சொல்
நம் உயிரைப் பிழிந்தெடுக்கிறது
மூன்று எழுத்து
ஈரசையில்
ஓர் ஒற்றைச் சொல் அது

அது சில நேரங்களில் மழை மேகமாகவும்
சில நேரங்களில் கணப்பு அடுப்பாகவும் இருந்தது
நம்மை அறியாமலேயே
வழிந்தோடும் கண்ணீர்த் துளிகளை
துடைத்தபடியேவும்
அது இருந்தது

ஒரு நாள் வானத்து விண்மீன் அகாலத்தில் உதிர்ந்த போது
குளத்திலிருந்த தவளை
குதித்து வெளியேறிப் போனது
அது எழுப்பிப்போன பேரலைகள்
இன்னும் குளத்தை உறுத்திக்கொண்டேயிருக்கின்றன

பச்சை பாசிக்கடியில் நீரின் மூலக்கூறுகளும் இன்னும்
மாறிய வண்ணமே இருக்கின்றன
ஆனால் தவளை குதித்து குதித்துப் போன
மாயம் தான் இன்னும் தெரியவில்லை
எல்லாம் அந்த ஒற்றைச் சொல் தான் …

– தங்கேஸ்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *