Thurvai Book by S. Dharman Bookreview By Anpumanivel நூல் அறிமுகம்: சோ. தர்மனின் தூர்வை - அன்புமணிவேல்




சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கும் சோ. தர்மன் ஐயா அவர்களின் எழுத்துகளில்… என் முதல் வாசிப்பு இந்த “தூர்வை”.

ஐயாவின் சூல், கூகை குறித்தான வாசகப் பார்வைகளைக் கண்டிருந்த வகையில்.. அவற்றுக்கான வாசிப்புத் தேடலில் இருந்த எனக்கு.. நினைத்துப் பார்க்காதவாறு கைக்குச் சிக்கியது.. “தூர்வை”.

அந்தக் காலத்தில் ஆனந்த விகடன் சிறுகதைப் போட்டிக்குச் சென்று நிராகரிக்கப்பட்டு குப்பைக்குப் போன “கதவு” போல.. அதே விகடனின் நாவல் போட்டிக்குச் சென்று நிராகரிக்கப்பட்டது தான் இந்த “தூர்வை” யுமென..

படைப்புலகத்தின் இலக்கணக் குறிப்பீட்டுக்குள் பொருந்தாது போன இந்த கதை சொல்லி பாவனையிலான படைப்புகளின் நிலை குறித்தான தனது வருத்தங்களை..
“ஒரு பருக்கைப் பதம்” என்று முன்னுரையில் மனம் திறந்திருக்கிறார் கி.ரா.

🌷தூர்வை:
ஒரு சம்சாரிக் கோப்புக்குண்டான வாழ்க்கைப் பாட்டுக்கு ஆதார வேராக இருக்கின்ற நிலமும் நீரும் எந்தெந்த வகையிலெல்லாம் சுரண்டப்பட்டு ஒரு நிலவுடமைச் சமூகம் பையப் பைய ஒரு தொழில் மயச் சமூகத்திற்குள் எப்படியெல்லாம் தள்ளப்படுகிறது என்பதனை உருளைக்குடியை முன்வைத்து.. ஒரு பன்னாட்டுப் பிரச்சனையைக் களமாக்கியிருக்கிறது “தூர்வை”.

ஒரு பரிதாபத்துக்குரிய பச்சாதாபத்துக்குரிய அடையாளமாகத்தான் இதுவரைக்கும் ஒரு தலித் சமூகம் நமக்கு அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் நிலையில்.. நல்ல செழிப்பமும் வளப்பமுமான..ஒரு நேர்த்தியான கலாச்சார பண்பாட்டு வழிமுறைகளைக் கொண்டதான ஒரு தலித்திய வாழ்வியலை.. அறிமுகம் செய்திருக்கிறது உருளைக்குடி கிராமம்.

மினுத்தான்-பெரிய சோலை-சந்திரன் என்று மூன்று தலைமுறைகளை இழுத்துக் கட்டியவாறு நகர்கிறது கதை.

🌷முதல் தலைமுறை:
வெள்ளையன் விலாங்கு புடிச்ச கதை.. தொத்தப் பய துட்டி சொல்லிப் போன கதை..
வெள்ளெலி வேட்டைக்குப் போன சிவனாண்டி கதை.. பனை ஏறி பதினிக் கலயத்துக்குள்ள மிதந்த அயிரமீனுக் கதை..
கிடைக்காவல் சண்முகம் பொண்டாட்டி பெருமாத்தாளுக்கும் நல்லப்பனுக்குமான தொடுப்புக் கதை.. மகாதேவர் கோயில் அலப்பறைக் கதை..
எகத்தாளம் கூத்தாடுகிற சொலவடைகள்.. என்று நீளுகிற நூற்றுக் கணக்கான “கதைகளும்”…

உயிரோடு இருந்து கொண்டே தன் கருமாதிச் சோற்றைத் தானே தின்னும் குரூஸ்.. ரெண்டு தாரத்தையும் தீத்துக்கிட்டு ஓசிச் சோத்துக்குப் பண்டாரமா அலையுற முத்தையா… வெத்திலைச் சாறைத் துப்பிக்கிட்டே பேய்க்கதையா உருட்டித் தள்ளுகிற முத்துவீரன்…

சிலம்புக் கம்பு வாத்தியாரு ராமுக் கிழவன்… விலாங்குன்னு நினைச்சு வேட்டி நெறையத் தண்ணிப் பாம்பைப் புடிச்சாந்து நடுவீட்டுல கொட்டுன கெண்டல் சுப்பையா… தோத்தாத் தொங்கிருவேன்னு சேவச் சண்டையில கொடுத்த வாக்கைக் காப்பாத்துன உளியன்…

ஆண்டிப்பட்டி முனியம்மா.. மாசந்தவறாம பேய் புடுச்சு ஆட்டுகிற முத்தம்மா.. பஞ்சாயத்துக்குப் போறேன்னு ஊருலயும் வீட்டுலயும் பூசை வாங்கிக் கட்டிக்கிற மேகாட்டுச் சண்டியரு கருமலையான்… தாத்தையா நாயக்கரோட கெங்கம்மா அக்கா..

பருத்திக் களவாணி கூனன்… நரிவளர்த்தாப் பாட்டி… யென்று வெள்ளந்தி “மனிதர்களும்”.. சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், வில்லுப்பாட்டு, நாடகம், கொட்டுச் சத்தம், வேட்டுச் சத்தமென்று கேளிக்கையும் வேடிக்கையுமான “வழிபாடல்”களுமாக…

திரும்பிய பக்கமெல்லாம் விதையும் பயறும்… மிதிபடுவதெல்லாம் காயும் கனியும்.. எந்நேரமும் நிறைமாச சூலியாய்த் தானியக் குலுவைகளும்.. கம்மங்களியும், வரகுக் கஞ்சியும், கேப்பைக் கூழும், குதிரைவாலிச் சோறுமென அடுப்பணையா வனப்புமாக…

மினுத்தானின் தலைமுறையைப் பதிவு செய்திருக்கிற பக்கங்கள் யாவும்.. செவிவழிக் கதைகளாக நம்மைச் சேர்ந்திருக்கும்.. நம் தாத்தனும் பாட்டியுமான உலகம்.

🌷இரண்டாம் தலைமுறை:
பொய்த்துப் போன மழையின் நீட்சியில்..
காய்ந்து போன காடுகரையும்
மாய்ந்து போகும் மானுடப் பாடுமாக..
இருட்டுப் பானை தடவும்
குருட்டுப் பூனையாகத்
தரிசுக் காட்டைக் கட்டியழுக முடியாது வந்த விலைக்கு மண்ணை மாற்றி பிழைப்புக்கென நகரம் பெயர்ந்து வாட்ச்மேனாகவும், கொத்தாளு சித்தாளாகவும், தீப்பெட்டி தொழிற்சாலை, சாக்குத் தொழிற்சாலையென்று இருட்டைப் பழக எத்தனிக்கும் இரண்டாம் தலைமுறையாக… மினுத்தானின் மகன் பெரியசோலை.

குரோதம், துவேசம், துரோகம், வன்மம், வஞ்சினம், பகைமை, பொறாமை இப்படியான துர்க்குணங்கள் எதுவொன்றும் இதுவரை அறிந்திடாத கேள்வியுறாத இப்படியான மண்ணின் மனிதர்கள்..

நிலவுடமைச் சமூகத்திலிருந்து தொழில்மய சமூகத்திற்குத் துரத்தியடிக்கப்பட்டு.. மேற்கண்ட அத்தனை கல்யாண குணங்களோடான நகரத்து வாடகை வீட்டில்..
முறுங்கைக் கீரையும் கறிவேப்பிலையும் காசுக்கு வாங்க நேரிட்ட தங்கள் காலத்தை நொந்து கொண்டு.. மூச்சு முட்டிப் போகும்
பிழைப்பாக..

நம் அம்மையும் அப்பனுமாக நம் கண் முன்னே.

🌷மூன்றாம் தலைமுறை:
ஊரான ஊருக்குள்ள ஆகப் பெரிய ஜமீனென்று
கதையாக மட்டுமே தங்கிப் போன தாத்தா..
அத்தனையும் வித்துப்புட்டு
கூலிக்கு கையேந்தும் அப்பன்..
பொறப்பே கூலிப் பொழப்பு தான்னு தன் இருட்டுப் பாதைக்கு வெளிச்சம் தேடுகிற கேள்விக் குறியோடு.. மினுத்தானின் பேராண்டி சந்திரனில் வந்து நிற்கிறது மூன்றாம் தலைமுறை.

இந்தப் புள்ளியில்..
கைப்புண்ணுக்குக் கண்ணாடியாக
நாம்.

🌷பெண்கள்:
காட்டையும் வீட்டையும் மலர்த்துகிற விடியலாக…
கொண்டவனின் வலுவாக..
மதியூக யோசனைகளைக் கடத்துகிற ராஜ தந்திரியாக…
மனித வாசங்களை அரவணைத்துச் செல்லுகிற
ஆதித் தாயின் நிஜமாக..
தன் முதுமையை எவருக்கும் பாரமேற்ற விரும்பாது
ஆகாரம் நீக்கி ஆவியைப் போக்கிக்கொண்ட
உணர்வின் திடமாக…
நம் தாய்வழிச் சமூகத்தின் அடையாளமும்
நம்பிக்கையுமாக…
ஒரு மாபெரும் அதிர்வு… “மாடத்தி”.

“தூர்வை” யின் மொத்தக் குருதியோட்டமுமே “மாடத்தி பெரியம்மா” தான். மாடத்தி தவிரவும்..

சீனியம்மா, பொன்னுத்தாயி, முத்தம்மாயென்று நீளுகிற அந்த மண்ணின் பெண்களால் மட்டுமே தான்.. இந்தக் கரிசலின் காடும் வீடும்..நகர்கிறது.

🌷கரிசல் காட்டின் மாண்பு:
மனங்கசந்த வாழ்வைத் தொடராது.. அவரவரின் மறு வாழ்வைத் தேர்வு செய்து கொள்ளும் உரிமையும்.. பெண்ணின் விருப்பத்தையொட்டியே வாழ்வும் தீர்வும் என்பதான மனப்பாங்கும்.. இன்றைய நம் வாழ்வியலோடு பொருத்திப் பார்க்கையில் விரக்தியும் வெதும்பலுமே மிச்சமாகிறது.

🌷கதைகள்:
விதைப்பு, நாத்தறுப்பு, களையறுப்பு யென்று காட்டுக் கழனி வேலைகள் யாவையும் அலுப்புச் சலிப்பின்றி கடத்துவது.. அந்த மண்ணின் கதையாடல்கள் மட்டுமே. கதைகளாலேயே மனிதர்களின் வாழ்வு பின்னப்பட்டுக் கிடக்கிறது. கதைகள் தான் வயிற்றுக்கும் வாழ்வுக்குமான போராட்டத்துக்கு
உரம் ஏற்றுகின்றன.

நீரும் நிலமும் காடும் மலையும் பறவையும் விலங்கும் மண்ணும் மழையும் காத்தும் வெய்யிலுமான ஒரு தலைமுறையைக் கிளைக்கச் செய்யுமந்த ஆதி வேர்களின் கதைகளை.. இப்படியான கதைசொல்லிகள் தானே காலத்துக்கும் கடத்துகிறார்கள்.

இப்படியான கதைகளும் கதைசொல்லிகளும் இல்லாத இப்போதைய நம் வாழ்வு… வேர்களின் ஈரத்தை உணராத சருகின் நிலையாக.

🌷வாசிப்பனுபவம்:
ஊருக்கு வெளியே பயணிக்கையில.. “நிலம் விற்பனைக்கு” என்ற கூவலோடு.. கண்ணிலாடுகிற ப்ளாட் போடப்பட்ட பொட்டல் நிலங்கள்…

வருசத்துக்கொரு முறை மாசிப் படையலுக்கு ஊருக்குப் போகையில.. “மனுச மக்க யாருமில்லாம நான் மட்டும் வெறுச்சுனு இருக்க வேணாம்னு எல்லாத்தையும் வித்துட்டு இப்போ மகனோட தான் இருக்கேன்” னு வெறுமையாச் சிரிக்கிற எங்க கோவில் வீட்டு பூசாரித் தாத்தனும் அந்த அப்பத்தாவும்…

நாம எதையெல்லாம் இழந்திருக்கிறோம்.. எதை நோக்கிப் பயணிக்கிறோம் என்ற முடிச்சில்… தீர்வு நம் கையிலா… காலத்தின் கையிலா..? நிச்சயம்.. இதுவொரு ஆய்வுக்கான அத்தனை அம்சங்களும் பொருந்திய படைப்பு.

நூல்: தூர்வை
ஆசிரியர்: சோ. தர்மன்
வெளியீடு: அடையாளம்
பக்கங்கள்: 238
விலை:230

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *