இறைவன்
கனவாகவே இருக்கும்
இன்னொரு பொம்மை
சாத்தான்
பயமுறுத்தும்
இன்னொரு பூச்சாண்டி
மதம்
ரசனை ததும்பும்
இன்னொரு பாட்டிக் கதை
போர் விமானம்
சிறகடிக்காமல் பறக்கும்
அதிசய பட்டாம்பூச்சி
வெடிகுண்டு
விழாக்கால
நவீனப் பட்டாசு
உள்நாடு
துள்ளி விளையாடும்
சொந்த வீடு
அயல் நாடு
சுவர் எழுப்பிய
அண்டை வீடு
சண்டை
ஒருவருக்கொருவர்
“கா ” விடுவது
சமாதானம்
ஒரு இனிப்பை
கடித்துப் பகிர்வது
உலகமே அறியாத
இந்தப் பிஞ்சு குழந்தைகளை
கதறக் கதற
கருவறுக்க கற்றுத்தந்த
கருணை மிக்க மதம் எது?
நெருப்பைத் தெளித்து
சமூகத்தைப் புனிதப் படுத்துவதாகப்
புலம்புகிறீர்கள்
ரத்தக் கடலில்
முத்துக் குளிப்பதாக
நடிக்கிறீர்கள்
உங்களிடம்
ஒரே ஒரு கேள்வி
சாம்பலில் பிறக்கும்
சமாதானம்
பூக்களையா மலரச் செய்யும்?
எழுதியவர்
ஐ.தர்மசிங்
நாகர்கோவில்