பரிசோதனை விகிதம் அதிகமாக இருப்பினும், தமிழ்நாடு பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தத் திணறுகிறது.
ஒரு கோடியை நெருங்கும் மக்கள்தொகையும், ஒரு சதுர கிமீக்கு சுமார் 26,553 மக்கள் என்ற அளவிற்கு மக்கள்தொகை நெருக்கமும் உள்ள சென்னையில், கோயம்பேடு சந்தை தொடர்பான திடீர் பரவல் வரை கோவிட் 19 பரவல் பெருமளவு சமாளிக்கத் தக்கதாகவே இருந்தது. மே 20 அன்று சென்னையில் நோய் தாக்கியவர்களின் எண்ணிக்கை 8,228 ஆகும். இது தமிழ்நாட்டின் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையான 13,191ல் சுமார் 60 சதம். மே 15ம் தேதியே மாநிலத்தின் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 10,000ஐத் தாண்டிவிட்டது. இது வரை சுமார் 5,882 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். குணமானோர் சதவிகிதம் 44.60 ஆகும். மே 20 வரை, இறந்தோர் எண்ணிக்கை 87, சதவிகிதத்தில் 0.65 என்பதில் அரசாங்கம் சற்று ஆறுதல் கொள்ளலாம்.
தினமும் ஊடகங்களுக்கு மாநில சுகாதாரத் துறையும், சென்னை மாநகராட்சியும் தரும் புள்ளிவிபரங்களிலிருந்து வைரஸ் மிக வேகமாகப் பரவுவது தெரிகிறது. நகரின் ராயபுரம் மற்றும் கோடம்பாக்கம் டிவிஷன்கள் ஆயிரம் நோயாளிகள் என்ற எண்ணிக்கையைக் கடந்துவிட்டன. மற்ற பல டிவிஷன்களில் எண்ணிக்கை 500ஐத் தாண்டி விட்டது. “குதிரைகள் வெளியே ஓடிவிட்ட பிறகு, அரசாங்கம் லாயத்தை மூட முயற்சிக்கிறது,” என்கிறார் நகர மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஒருவர். இராயபுரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் 44 கர்ப்பிணிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது நோய் சமூகம் முழுவதும் பரவி விட்டதைக் காட்டுகிறது.
கவனக்குறைவிற்குத் தந்த அதிக விலை
அரசாங்கத்தின் கோவிட் – 19 குழுவினர் கோயம்பேடு பகுதியில் பதுங்கியிருந்த அபாயத்தை ஒட்டுமொத்தமாகவே தவறாகக் கணித்து விட்டார்கள். கிட்டத்தட்ட 6000 முதல்நிலை, இரண்டாம் நிலை தொடர்புகள் அதோடு சம்பந்தப்பட்டிருந்தன. ஒட்டுமொத்த மாநிலமே ஊரடங்கில் முடங்கி இருந்த போது, அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை என்ற பெயரில் இந்த சந்தை திறந்திருந்ததும். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு வந்து சென்றதும் பெரிய முரண். சந்தையின் உள்கட்டமைப்பை நிர்வகிக்கும் சென்ன பெருநகர வளர்ச்சிக் குழும்மோ, (சிஎம்டிஏ) அல்லது சென்னையில் சுகாதார ஏற்பாடுகளை முறைப்படுத்தும் அதிகாரம் உள்ள உள்ளாட்சி அமைப்போ எந்த உறுதியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எந்தவித முறைப்படுத்துதலோ, கட்டுப்பாடோ இன்றி நூற்றுக்கணக்கான வியாபாரிகள், தொழிலாளிகள், வாங்க வந்தோர் அங்கு சுற்றித் திரிந்தார்கள்.
இந்த கவனக்குறைவிற்குத் தான் அதிக விலை தர நேர்ந்தது. மஹாராஷ்ட்டிராவிலிருந்து வெங்காயம் கொண்டு வந்த வாகனத்தைச் சேர்ந்தவர்கள்தான் கோயம்பேடு தொற்றுக்குக் காரணம் என்று ஒரு மூத்த மாநகராட்சி அதிகாரி பிரண்ட் லைனிடம் கூறினார். கோயம்பேடு மூலமான பரவல் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களிலும், சென்னையிலும், தொற்று எண்ணிக்கையை பெரிய அளவில் அதிகரித்து விட்டாலும், மாநிலத்தின் மேற்கு, மத்திய, தென் பகுதி மாவட்டங்களில் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அவை தத்தமது மாவட்ட ஆட்சியர்களின் வழிகாட்டுதலில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வந்தன.
முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி மூத்த அரசு அதிகாரியான ஜே.ராதாகிருஷ்ணனை சென்னைக்கான சிறப்பு அதிகாரியாக நியமித்திருக்கிறார். 50 நோயாளிகளுக்கு மேல் இருக்கும் வார்டுகளுக்கு இதே போல் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர். நகரின் மொத்த நோயாளிகளில் பாதிப் பேர் 34 வார்டுகளில் தான் உள்ளனர். மேம்பட்ட கண்காணிப்பிற்காக சந்தையை “பிரிப்பது, இடம் மாற்றுவது“ எனற அரசாங்கத்தின் ஆலோசனையைக் கேட்க கோயம்பேடு வியாபாரிகள் தயங்கியதாக முதலமைச்சர் குற்றம் சாட்டினார்.
வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் சிக்கியிருந்த தமிழ்நாட்டினர் இப்போது திரும்பி வர ஆரம்பித்துள்ளதில், மாநிலம் இப்போது மற்றொரு சவாலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது.
ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற இக்கட்டான நிலையில் இருக்கும் அரசாங்கம், தனது அனைத்து சக்தியையும் இந்த வைரஸ் பரவலைத் தடுக்க பயன்படுத்துகிறது. சென்னையில் உள்ள மூன்று முக்கியமான அரசாங்க மருத்துவமனைகள், மற்ற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகள் ஆகியவற்றில் வசதிகளை அதிகரித்தல், சுமார் 7000 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தர தற்காலிக மருத்துவமனைகள் அமைத்தல் ஆகியவை இதில் அடங்கும். அரசாங்க மருத்துவமனை ஒன்றின் முதுகலை மருத்துவ மாணவர் ஒருவர், தனிமை வார்டுகள். நிரம்பி வழிவதாகவும், அச்சப்பட்டு, பரிசோதனைக்காக வந்து கொண்டே இருக்கும் மக்கள் கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் பரிசோதனை மையங்கள் திணறுவதாகவும் பிரண்ட் லைனிடம் கூறினார். “நோய் அறிகுறி இருப்போருக்கு முதலில் ஒன்றாகவே சிகிச்சை தரப்பட்டது. பின்னர் ‘ அவர்கள் கடுமையான அறிகுறி, சுமாரான அறிகுறி, மிதமான அறிகுறி என்று பிரிக்கப்பட்டு, உரிய மையங்களுக்கு அனுப்பப் பட்டனர். நோய் அறிகுறி இருந்த போதும், தமது வீட்டில் தனிமையில் இருக்க விரும்பியவர்களை, அவ்வாறு இருக்க அனுமதிக்கிறோம்,” என்றார் அவர்.
மருத்துவமனைகளிலும், கொரோனா சிகிச்சை மையங்களிலும் நடப்பவையும் கவலை தரக் கூடியவைதான். பரிசோதனைக்காகச் சென்ற ஒரு பத்திரிகையாளருக்கு மோசமான அனுபவம்தான் கிடைத்தது. அங்கு“எல்லோருமே கொரோனா நோயாளிகள் போல்தான் காணப்பட்டனர். அந்த மருத்துவமனைக்கு உள்ளே செல்லவே அவர் கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் காத்திருக்க நேர்ந்தது. மருத்துவர்கள், செவிலியர், ஆய்வக ஊழியர்கள், மருந்தாளுனர்கள், இதர சுகாதார, தூய்மைப் பணியாளர்கள் எல்லோருமே களைப்பாகக் காணப்பட்டார்கள். ஏற்கனவே திணறும் மருத்துவத் துறைக்கு மேலும் நெருக்கடி தரும் விதமாக மருத்துவர்களுக்கும், இதர மருத்துவம் சார் பணியார்களுக்கும் நோய் தொற்றியிருப்பதில் வியப்பில்லை.
பரிசோதனை விகிதம்
சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மாநிலம் தொடர்ந்து “அதிக அளவில்” பரிசோதனைகளை நடத்தி வருகிறது என்கிறார். அது உண்மைதான். தமிழ்நாட்டின் பரிசோதனை விகிதம்தான் நாட்டிலேயே மிக அதிகம். ஏற்கனவே 3.5 லட்சம் பரிசோதனைகள் முடிந்த நிலையில் தினமும் சராசரியாக 10,000 முதல் 12,000 பரிசோதனைகள் நடக்கின்றன.
ஆனால், அரசாங்கம் ஆரம்பத்தில் “தப்லீக் ஜமாத்” கூட்டம் பற்றியே கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பேசிக் கொண்டிருந்தது, அதன் தடுப்புத் திட்டத்தின் போதாமையைத் தான் காட்டியது. அது பயணம் தொடர்பான, குழு தொடர்பான தொற்றுகள் மீதே கவனம் செலுத்தி, நீண்ட காலத்திற்கு முதன்மை, இரண்டாம் நிலை தொடர்புகளைக் கண்டறிவதை மட்டுமே செய்து கொண்டிருந்ததில், சமூகம் முழுவதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக (random testing) பரிசோதனைகள் செய்யத் தவறிவிட்டது.
மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு வெறுமனே காய்ச்சல் உள்ளதா என்று மட்டும் பார்த்துவிட்டு, அவர்களை தாமாகவே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிக் கொண்டது, தடுப்புச் செயல்திட்டத்தின் மற்றொரு குறைபாடு. தாங்கள் கேட்டுக் கொண்டதையும், மீறி அரசாங்கம் அவர்களை பரிசோதிக்காமல் விட்டுவிட்டது என்கிறார் ஒரு மூத்த தொற்றுநோயியல் நிபுணர்.
நீதிமன்ற வழக்குகள்
வைரஸிற்கு எதிரான போரில் ஆரம்பத்திலிருந்தே செயல்திட்டம் வகுப்பதிலும், முடிவெடுப்பதிலும் அரசாங்கத்தில் ஒரு குழப்பமும், நிச்சயமற்ற தன்மையும் நிலவின. ராபிட் டெஸ்ட் கருவிகளை ஒரு சீன நிறுவனத்திடமிருந்து வாங்குவது, அல்லது களப்பணியாளர்களுக்கு பிபிஈ கிட் இல்லாதது என ஒவ்வொரு செயல்திட்டத்திலும், செயல்பாட்டிலும் நிச்சயமற்ற தன்மையும், சர்ச்சைகளும் இருந்தன. இது அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை பெருமளவு குறைவதற்கு வழிவகுத்தது. ”இதன் காரணமாக, கோவிட்-19 நிலமை பற்றிய உண்மைகளை அறிய தொடர்ந்து பல பொதுநல வழக்குகள் அரசாங்கத்திற்கு எதிராகப் போடப்பட்டன,“ என்கிறார் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரும், சமூக-செயற்பாட்டாளருமான எஸ்.ஜிம்ராஜ் மில்டன். இது தொடர்பாக இவரும் ஒரு பொதுநல வழக்கு போட்டிருக்கிறார்.
உலக சுகாதார அமைப்பும், நோய்த் தடுப்பிற்கான தேசிய மையமும் வகுத்துள்ள நடைமுறைகளின்படி மாநில அரசாங்கம் விரிவான நடவடிக்கை எடுக்கவில்லை என்று மில்டன் தனது மனுவில் கூறியுள்ளார். பெரும்தொற்றுப் பரவலைச் சமாளிக்க மாநிலம் எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என்று அவர் கூறியுள்ளார். “இப்போதும் தற்போதைய நெருக்கடியான சூழல் பற்றி மக்களுக்குத் தெரியவில்லை,“ என்கிறார் அவர்.
மருத்துவர்கள், மருத்துவம் சார் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள். காவல்துறையினர் ஆகியோரின் பணியைப் பாராட்டிய நீதியரசர். என்.கிருபாகரன், அவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் அளிக்கப்பட வேண்டும், அவர்களுக்கு அவ்வப்போது பரிசோதனைகளும் நடத்தப்பட வேண்டும் என்று அரசாங்கத்திற்கு உத்தரவிட்டார். இலவச மருத்துவ உதவி தரப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கூடுதல் செயலாளரான கே.எஸ்.செல்வகுமார், நீதிமன்ற உத்தரவின்படி, மே 13 அன்று கோவிட்-19 ஐ அரசாங்கம் கையாண்ட விதம், அதன் தயார் நிலை பற்றிய ஒரு நிலைமை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மே 8ம் தேதி வரை சுகாதார ஊழியர்களுக்கு 17.757 பிபிஈ கிட்களும், 32,708 என் 95 முகக்கவசங்களும் தரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மருத்துவர்களுக்கு நோய் தொற்றுவது பற்றிக் குறிப்பிடும்போது, சில முதுகலை மாணவர்களுக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப் பட்டிருப்பதாகவும், அவர்கள் தங்கியிருந்த விடுதி, சென்னை பெருநகர மாநகராட்சியின் தனிமைப்படுத்துதல் கொள்கையின்படி சில நாட்களுக்கு மூடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மே 8ம் தேதி நிலவரப்படி, மாநிலத்தில் 2,19,377 பிபிஈ கிட்களும், 1,54,309 என்-95 முகக்கவசங்களும் இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்த பாதுகாப்பு உபகரணங்கள் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகின்றன, என்ன மாதிரியான உபகரணங்கள், இவை வழங்கப்பட்டும் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்ட களப் பணியாளர்களின் எண்ணிக்கை போன்ற கேள்விகளுக்கு இந்த நிலைமை அறிக்கையில் போதுமான தகவல்கள் இல்லை என்று மில்டன் கூறுகிறார். களப் பணியாளர்களுக்கு பிபிஈ தருவது குறித்த முக்கியமான இந்தப் பிரச்சனைக்கு அரசாங்கம் தெளிவற்ற பதிலைத் தந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார். ”கடுமையான நோய்த் தொற்று உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை தரும்போது மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார் பணியாளர்கள் சந்திக்கும் ஆபாயம் பற்றிய உண்மையை இந்த நிலைமை அறிக்கை கூறவில்லை என்கிறார் அவர். ” பிபிஈ தரக் குறைவானதாக இருந்தால், அத்தனை முயற்சிகளையும் அது பாழாக்கிவிடும்,“ என்கிறார் அவர்.
தரமான, பரிந்துரைக்கப்பட்ட பிபிஈ கிட்கள் தங்களுக்கு வழங்கப்படுவதில்லை என்று மருத்துவர்கள் கூறுவதாக அவர் பிரண்ட் லைனிடம் கூறினார். “இது மரண விகிதத்தை அதிகரிப்பதோடு, மருத்துவர்கள், செவிலியர்கள், இதர மருத்துவம் சார் பணியாளர்களுக்கும் அபாயத்தை ஏற்படுத்தும். அரசாங்கத்தின் நிலைமை அறிக்கை எத்தனை பேருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை தரப்பட்டது என்பதைத் தெரிவிக்கவில்லை. இப்போது வழங்கப்பட்டுள்ள பிபிஈ உடைகள் உலக சுகாதார அமைப்பு வகுத்துள்ள தரத்தில் உள்ளவை அல்ல. அவை அறுவை சிகிச்சைகளின் போது அணியும் ஏப்ரன்கள்தான்,“ என்கிறார் அவர். நிலைமை அறிக்கை குறித்த தனது கருத்துகளை மில்டன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
– நன்றி: Front line
—————————————————————————————————————————————-