தற்போதைய இந்த ‘கரோனா’கால ஊரடங்கும், சமூகத் தனிமையும் சிலருக்கு அதிர்ச்சியையும் உளச் சிக்கல்களையும் ஏற்படுத்தி உள்ளது! உலகளாவிய நிலையில் வரலாற்றின் வழி நெடுகிலும் பல சமூகங்கள், தலைமுறை தலைமுறைகளாகத் தனிமைப்படுத்தப்பட்டும், ஒடுக்கப்பட்டும், சுரண்டப்பட்டும், அதிர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டும், வந்துள்ளன. அப்படிப்பட்ட சமூக அவலம் குறித்து உரக்கக் குரல் கொடுத்து, மனித சக்திகளைத் திரட்டி மிகப் பெரிய மாற்றம் கண்ட புத்தகங்கள் சில உள்ளன. அனுபவம், கல்வி, சிந்தனை, செயல் என்பது மனித குலத்தின் இயக்கப் படிநிலைகள். இதில் அனுபவம் என்பதுதான் மிக முக்கியம்.
அந்த அனுபவம் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் இருந்து பெறப்படுவதில்லை. அது வெவ்வேறு நிலப் பரப்பில், மாறுபட்ட சமூகச் சூழல்களில் இருந்து காலம், காலமாக வெவ்வேறு நிலைகளில் இருந்து தொடர்ச்சியாகப் பெறுவது. இந்த அனுபவத்தினை அனுபவித்துத் தான் பெறுவது என்றால், அது இயலாத காரியம்! ஆனால் அந்த அனுபவங்களை நமக்குச் சில புத்தகங்களால் எளிதில் தந்து விட முடியும்! புரட்சி – எழுச்சி – கிளர்ச்சி – வெளிச்சம் இவை எல்லாம் ஏற்படுவதற்குக் கருவியாக ஊக்க சக்தியாக இருந்த புத்தகங்கள் என வரலாறு சிலவற்றைப் பதிவு செய்து வைத்துள்ளது. உலகிற்கே ‘சுவாசம் தந்த இந்தப் பத்துப் புத்தகங்களையும் நாம் நம் வாழ்நாளில் ஒருமுறையாவது அவசியம் வாசித்து விட வேண்டும்.’
தனி மனித சுதந்திரம் – சமத்துவம்
Economica
“மக்களை ஆளும் சட்டம், மக்களால் உருவாக்கப்படுகின்ற போது தான், மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்” என்கிறது தாமஸ் பெயின் எழுதிய காமன்சென்ஸ் என்ற புத்தகம். ‘அமெரிக்கப் புரட்சி’ தொடங்குவதற்கு ஊக்கியாகச் செயல்பட்டது இந்தப் புத்தகம் தான்! தனி மனித சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் வலியுறுத்தி எழுப்பப்பட்ட முதல் குரல் இது, எளிய அமெரிக்க மக்களிடம் நேரடியாக உரையாடலை நிகழ்த்திய முதல் புத்தகமும்! இதுதான். அரசை எதிர்த்து, மக்களை ஒன்று திரட்டி அரசுக்கு மிகப் பெரிய நெருக்கடியைத் தந்தது 1776இல் வெளியான இந்தப் புத்தகம்!
முதன் முதலில் வெளியிட்ட போது தாமஸ் பெயின் தன்னுடைய பெயரைப் புத்தகத்தில் போடாமலே ‘மொட்டை கடுதாசி’ போலத்தான் வெளியிட்டார்.
ஃபிரடெரிக் டக்ளஸ் ஓர் அடிமை விவசாயி. தனக்காக ஒரு வாழ்விடம் இல்லாமலே நாடோடி போல அலைந்து திரிந்தவர். தான் எப்போது பிறந்தேன் என்பது கூட அவருக்குத் தெரியாது. வெள்ளை அமெரிக்கர்களால் மிகவும் நசுக்கப்பட்டவர். தன்னுடைய வலிமிகுந்த ‘நாடோடி’ அலைச்சலை Narrative of the life of Frederick Douglass {‘வாழ்க்கைக் கதை}’ என்ற தலைப்பில் சுய சரிதமாக 1845இல் எழுதி வெளியிட்டார். இது உலகில் மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது! ‘அடிமை ஒழிப்பு இயக்கம்’ என்ற மக்கள் இயக்கம் உருப்பெற்று, உலகம் முழுவதுவும் வீறு கொண்டு எழ, இந்த நூல் தான் மூல விதை!
நிறவெறியும் – வேற்றுமையும்
அமெரிக்க வெள்ளை இனத்தைச் சார்ந்த இளம் பெண் ஒருவருக்கு, வேலைக்காரனாகப் பணியில் சேருகிறான் கறுப்பின இளைஞன் ஒருவன். இவர்கள் இருவருக்குமான நீண்ட பயணத்தில் பிணக்கு இல்லை என்றாலும் ஒருவிதமான பதட்டத்தில் அவன் அவளைக் ‘கொன்று விடுகிறான். ஏதோ ஒன்று அவனை பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது. “நேட்டிவ் சன்” என்ற நாவல் இந்த மையத்தில் இருந்துதான் முன்னும் பின்னுமாக நகர்கிறது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஏற்பட்டிருந்த நிற வெறித் தாக்குதல்களையும் அதனால் சிதைவுற்றுத் திரிந்த ஒரு சமூகத்தையும் ரிச்சர்ட் ரைட் இந்த நாவல் மூலம் மிக நுட்பமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்.
மனித உரிமை குறித்து உரக்கப் பேசும் முதல் நாவலாக இது கருதப்படுகிறது. 1940இல் வெளிவந்த இந்த நாவல் உலகம் முழுவதுவும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நாவலாசிரியருக்கு அமெரிக்க அரசு 2009ஆம் ஆண்டு தபால் தலை வெளியிட்டுச் சிறப்பித்தது!
உலகம் முழுவதும் பெண்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுவதையும், பெண்ணின் உடலும் பொருளாதாரமும் சுரண்டப்படுவதையும் எதிர்த்து முதன் முதலில் கலகக் குரல் எழுப்பிய பெண்ணின் குரல் தான் ‘தி செகண்ட் செக்ஸ்.’ இந்த நூலை எழுதியவர் ‘சைமன்-டி-பியுவோர்’ என்ற பிரெஞ்சு பெண் எழுத்தாளர். பெண்களை இழிவு படுத்துதல், பெண்களுக்கு வாரிசு சொத்து மறுப்புக்கு எதிராக, எழுந்த தீவிரமான குரல் இது. 1949இல் இரண்டு பாகங்களாக வெளியான இந்த நாவல் தான் பெண்ணியத் தத்துவங்களை முதன்முதலில் முன் வைக்கிறது!
புலம் பெயர்வும் மனித இழிவும்
உலகப் போர் தொடங்குவதற்கு முன்பு 1929இல் தொடங்கி, பனிரெண்டு வருடங்கள் அமெரிக்கா மிகப் பெரிய பஞ்சம் – பட்டினிச் சாவுகளைச் சந்தித்தது. இது மிகப் பெரிய புலப் பெயர்வை ஏற்படுத்தியது. மக்கள் கொத்துக் கொத்தாக தேசம் விட்டு தேசம் அபலைகளாக வலியோடும், வேதனையோடும், பசியோடும் அலைந்து திரிந்தார்கள். மனித இனத்தின் மிகப் பெரிய அழிவு காலமாக இது கருதப்பட்டது. நெஞ்சை உருக்கும் இந்த சித்திரத்தினை உயிரோட்டமாக வரைந்து காட்டி, ஆட்சியாளர்கள் முகத்தில் ஓங்கி அறைந்த நாவல் தான் ஜான் ஸ்டீன்பெக் என்ற அமெரிக்க எழுத்தாளர் எழுதிய ‘தி கிரேப்ஸ் ஆப் ராத்!’ இந்த நாவல் ஏற்படுத்திய மிகப் பெரிய வலியாலும் வார்த்தைகளாலும் தான் ‘புலம் பெயர்ந்த மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து புரட்சியில்’ ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாகத் தான் புலம் பெயர்ந்த மக்களைக் காப்பதற்காக அமெரிக்கா தனிச் சட்டம் கொண்டு வந்தது. 1939இல் வெளியான இந்த நாவலுக்கு ‘புலிட்சர் பரிசும், நாவலாசிரியருக்கு 1962இல் நோபல் பரிசும்’ கிடைத்தன.
‘பஞ்சம் பிழைக்க’ சிகாகோவிற்கு வந்த மக்களையும், தொழில் நகரங்களில் கூலிகளாகத் தஞ்சமடைந்தவர்களின் உழைப்பையும் ‘சுரண்டி’ வாழும் வர்க்கத்தின் கோர முகத்தைத் தோல் உரித்துக் காட்டுகிறது அமெரிக்க எழுத்தாளர் அப்டன் சின்க்ளேர் எழுதிய ‘தி ஜங்கிள்’ என்ற நாவல். 1905இல் வெளியான இந்த நாவல் தான் முதன் முதலில் ‘உணவுப் பாதுகாப்பினை’ வலியுறுத்தியதோடு, வறுமைக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டிப் போராடவும் வைத்தது! அந்த அளவுக்கு வீரியம் கொண்ட நாவல். இதன் தாக்கத்தால் தான் 1906ஆம் ஆண்டு ஐ.நா.சபை ‘உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை’க் கொண்டு வந்து நிறைவேற்றியது. அந்த அளவுக்கு இந்த நாவல் உலகத்தின் கவனத்தை ஈர்த்தது!
மனித வதையும் புரட்சியும்
‘நாஜி’க்களின் ஆக்கிரமிப்பின் போது, நெதர்லாந்தில் பதினான்கு வயதுப் பெண் ஒருத்தியையும், அவள் குடும்பத்தினரையும் ‘சித்திரவதை முகாமில்’ அடைத்து மிகக் கொடுமையாகச் சித்திரவதை செய்கின்றனர். அதில் இருந்து, அந்த இளம் பெண் எப்படியோ தப்பித்துச் சென்று தலைமறைவாக இருக்கிறாள். தலைமறைவாக இருக்கும் நாட்களில் அவள் தினமும் ‘டைரி’ எழுதுகிறாள். அந்த இளம் பெண் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள மேற்கொண்ட துன்பகரமான போராட்டத்தையும், மனிதகுல வரலாற்றின் மிக மோசமான ‘மனித வதை’ குறித்தும் உணர்வு பொங்க எழுதிய அந்த ‘டைரி’ அந்தப் பெண்ணின் தந்தையின் கைக்குக் கிடைக்கிறது! 1947இல் அந்த ‘டைரி’ சுயசரிதைப் புத்தகமாக வெளியிடப்படுகிறது. பின்பு ஆங்கில உட்பட அறுமொழிகளில் வெளியிடப்பட்டு மனித குலத்தையே பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அது தான் அன்னே ஃபிராங்க் எழுதிய ‘தி டைரி ஆப் எ யங் கேர்ள்’
உழைக்கும் தொழிலாளர்களை வதைத்து, சுரண்டி, வாழ்வு நடத்தும் வர்க்கத்துக்கு எதிரான மிகப் பெரிய எதிர்ப்புக் குரல் தான் காரல் மார்க்ஸின் தாஸ் கேப்பிடல் என்ற நூல். இருபதாம் நூற்றாண்டை உருவாக்கிய நூல் என உலகம் இதனைக் கொண்டாடுகிறது.
சீனாவிலும், தைவானிலும் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் ஏற்பட்ட மனித வதையையும் அழிவையும் முன் வைத்து மிக நீண்ட உரையாடலை நிகழ்த்துகிறது. ‘தி வைல்ட் ஃபையர்’ இதனை எழுதியவர் லங்-யிங்-தாய் என்ற தைவானைச் சார்ந்த பெண் எழுத்தாளர். போர் காலத்தில் தன்னுடைய ஒரு வயதுக் குழந்தையைப் பிரிந்து புலம் பெயர்ந்தவர். 38 வருடங்கள் கழித்துத் தான் சொந்த மண்ணுக்குத் திரும்புகிறார் லங்-யிங்-தாய். இந்த உலகம் அடக்கு முறையில் இருந்து விலகி ஜனநாயகப் பாதையைத் தேர்வு செய்ய ஆற்றுப்படுத்தியதில் இந்தப் புத்தகத்திற்கு மிகப் பெரிய பங்கு உண்டு!
சுற்றுச் சூழல் என்ற கருத்தாக்கத்தின் முதல் குரல்
சூழல் சீர்கேட்டால் மனித குலம் சந்திக்கும் மிக மோசமான அழிவுகள் குறித்த சிந்தனையைத் தூண்டிய முதல் குரலும், இயற்கை வேளாண்மைக்குத் திரும்ப வேண்டிய அவசியம் குறித்து எழுப்பப்பட்ட முதல் குரலும் ‘ரேச்சல் கார்சன்’ என்ற அமெரிக்கப் பெண் எழுத்தாளரின் குரல் தான். இவர் 1962 வெளியிட்ட “சைலண்ட் ஸ்பிரிங்”நூல்! பூச்சிக் கொல்லிகளால் ஏற்படும் பேராபத்தையும் அதனால் ஏற்படும் மனித இன அழிவையும் குறித்து எச்சரித்தது இந்த நூல். உலக அளவில் இந்த நூல் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவு தான் D.D.T என்ற பூச்சிக் கொல்லிக்குத் தடை வந்தது. அமெரிக்காவில் சுற்றுச்சூழல் காப்பு நிறுவனம் அமையக் காரணமாகவும் அமைந்தது!
இந்தப் பத்துப் புத்தகங்களும் மிகப் பெரிய அதிர்வைத் தந்தவைகள். உலகச் சமூகம் இவற்றை மாற்றம் தந்த சக்தியாகப் பார்க்கிறது.
– பாரதிபாலன்
நன்றி தமிழ் இந்து
மிக பயனுள்ள கட்டுரை
நன்றி