“மூலதனம்” என்ற ஈடு இணையற்ற வர்க்கப் போராட்டத்திற்கு எதிராக உலகில் சமத்துவத்தை நிலை நாட்டுவதற்காக படைக்கப்பட்ட நூலை இயற்றிய “காரல் மார்க்ஸ்” பற்றி எண்ணற்ற நூல்கள் இப்புவியெங்கிலும் விரவிக்கிடக்கின்றன. அவற்றுள் இளைஞர்களிடையே காரல் மார்க்ஸை அறிமுகப்படுத்துவதற்கான சிறந்ததோர் படைப்பாக இந்நூலினை நிச்சயமாக கருதலாம்.

குறைந்த பக்கங்களில் எளிய வடிவில் அரிய செய்திகளுடன் பல்வேறு நூல்களிலிருந்து எண்ணற்ற தகவல்களை சேகரித்து அவற்றை முறையாக நெறிப்படுத்தி இந்நூலினை வடிவமைத்துள்ள திரு. ஆதி வள்ளியப்பன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பாரதி புத்தகாலயம் அவர்களின் BOOKS FOR CHILDREN வரிசையில் வெளிவந்துள்ள சிறந்ததோர் நூல்.

பொதுவாக மாபெரும் தலைவர்கள், அறிவியல் அறிஞர்கள் போன்றோர்களின் வரலாற்று நிகழ்வினை கூறும் புத்தகங்கள் சிறிது அயர்ச்சி அளிக்கும் வகையில் இருப்பதே இயல்பு. ஆனால், இந்நூல் பல்வேறுவிதமான ஓவியங்கள் மற்றும் அன்றைய காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் புகைப்பட நகல்கள் (அஞ்சல் தலை, கடித நகல், இதழின் முகப்பு பக்கம்) என படிக்கத் தூண்டும் வண்ணம் மிகவும் சுவாரசியமாக அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது.

1943இல் உ.வே. சாமிநாத சர்மா அவர்களால் பாரதி புத்தகாலயம் மூலம் “காரல் மார்க்ஸ்” என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. அதனை மூலமாக கொண்டு அதனுடன் பிற பாரதி புத்தகாலயம் வெளியீடுகளையும் மற்ற எழுத்தாளர்களின் நூல்களையும் வழிகாட்டியாகக் கொண்டு இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. நூலின் பிற்பகுதியில் வழிகாட்டி நூல்கள் வெளியிடப்பட்டுள்ளதால் அவற்றையும் படிக்கும் ஆர்வமே மேலிடுகிறது.

How to Draw karl Marx Drawing - YouTube

“மனித சமூகத்துக்கு உழைப்பதுதான் அவர் வாழ்வின் சாராம்சமாகும்” என்ற அறிமுகத்துடன் மார்க்சின் வாழ்க்கை வரலாறு தொடங்குகிறது எனலாம். இளம் வயதிலேயே மார்க்ஸ் கவிதை எழுதியுள்ளார். ஜெர்மன், பிரெஞ்சு இலத்தீன், கிரேக்கம் போன்ற மொழிகளும் கற்றுத் தேர்ந்துள்ளார். தனது தந்தையான ஹைன்றி மார்க்ஸ் மூலம் பிரெஞ்ச் தத்துவ அறிஞர்கள், ரூஸோ, வால்டேர் போன்றோரின் கருத்துக்கள் அறிமுகமாகி உள்ளன.

அண்டை வீட்டில் வசித்துவந்த தனது வருங்கால காதல் மனைவியான “ஜென்னி”யின் தந்தையான ‘லுத்விக் வான் வெஸ்ட் பாலன்’ மூலமாக கிரேக்க காவியங்களும் சேக்ஸ்பியர் நாடகங்களும் மார்க்சுக்கு அறிமுகமாகியுள்ளன. இங்ஙனம் இளம் வயதில் வேரூன்றிய விதைகளே பின்னர் வளர்ந்து தத்துவ அரசியல் கிளைகளாக வியாபித்து ‘மூலதனம்’ என்ற மாபெரும் ஆலமரமாக பரந்து விரிந்து பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பயனளித்து வருவதைக் கண்டு பிரமிப்படைய வேண்டியுள்ளது.

‘பிரெட்ரிக் ஹெகல்’ அவர்களின் இயக்கவியல் கோட்பாட்டையும் ‘லுத்விக் ஃபாயர்பாக்’ அவர்களின் ‘பொருள் முதல்வாதம்’ கோட்பாட்டையும் இணைத்தே மூலதனம் என்ற அரிய நூலை படைத்துள்ளார் காரல் மார்க்ஸ். பொருள் முதல் வாதத்தை இளைஞர்கள் எளிமையில் புரிந்துகொள்ள உதவும் வண்ணம் இந்நூலில் தெளிவுபடுத்தியுள்ளார் ஆசிரியர் எனலாம்.

இருபத்தி மூன்றாவது வயதிலேயே முனைவர் பட்டம் பெற்ற காரல் மார்க்ஸ் சட்டம் பயிற்றும் தன் வாழ்நாளில் ஒருமுறை கூட வழக்குரைஞராக பணியாற்றியது இல்லை என்பதை அறியும் பொழுது அவர் தத்துவ அரசியலின் பாலும் சமூகத்தின் பாலும் தொழிலாளர்கள் நலத்தின் மீதும் கொண்டிருந்த அக்கறையே நம் கண்முன் தோன்றி நம் கண்களை கண்ணீரால் பனிக்க வைப்பதாகவே உள்ளன.

யூதராக பிறந்த மார்க்ஸ் சிலகாலம் கிறித்துவராக வாழ்ந்த போதிலும் இறுதிவரை எந்த ஒரு இனத்தையோ மதத்தையோ சாராமல் மனிதராகவே வாழ்ந்துள்ளார் என்பதே நமக்கான சமூகப்பாடமாகும்‌. தான் மேற்கொண்ட எழுத்துப் புரட்சி காரணமாகவும் இயக்க செயல்பாடு காரணமாகவும் பல நாடுகளுக்கு கடத்தப்பட்டு வாழும் வாழ்க்கையே வாழ்ந்துள்ளார் மார்க்ஸ். ஜெர்மனியிலிருந்து பாரீஸ் பாரீஸிலிருந்து பிரஸ்ஸல்; மீண்டும் பிரஸ்ஸலிருந்து பாரீஸ் பின்னர் 1849 இல் லண்டன் சென்ற அவர் தன் இறுதி வரை லண்டனிலேயே வாழ்ந்துள்ளார்.

Book Review Karl Marx and the Birth of Modern Society by Michael ...

இவ்வாறு பல நாடுகளில் வாழ்ந்த போதிலும் தன் வாழ்நாள் முழுவதும் எந்த நாட்டு குடியுரிமையையும் அவர் பெறவில்லை என்பதே கவனிக்கத்தக்கது. இதற்காக அவர் கூறிய வாசகமே, ” நான் இந்த உலகத்தின் குடிமகன்” உண்மைதானே.

1848 இல் காரல் மார்க்ஸ், பிரடெரிக் ஏங்கெல்ஸ் இணைந்து உருவாக்கிய “கம்யூனிஸ்ட் அறிக்கை” இன்றுவரை உலகிற்கு தேவையான முக்கிய ஆவணமாக காட்சி அளிப்பதே மிகப்பெரிய வியப்பையும் அதே நேரத்தில் ஆழ்ந்த கவலையையும் அளிப்பதாகவே உள்ளது. அதிலுள்ள 10 அம்சங்கள் இன்றும் ஒவ்வொரு நாட்டிற்கும் தேவையாக இருப்பதை நினைக்கும்பொழுது நாடுகள் பயணிக்க வேண்டிய பாதையையும் தூரத்தையும் நாம் படித்து உணர வேண்டிய இக்கட்டான காலகட்டத்தில் இருப்பதாகவே தோன்றுகிறது.

“சுரண்டப்படாமலும் பொருளாதார செழிப்புடனும் தொழிலாளர்கள் வாழவேண்டுமானால் அரசியல் உரிமைப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட வேண்டும்” என்ற மார்க்ஸின் கூற்று இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்துவதாக தானே உள்ளது.

மார்க்ஸ் ஒரு நாளில் 18 மணி நேரத்திற்கு மேலாக அரசியல் பொருளாதார புத்தகங்களை படித்துள்ளார். மூலதனம் நூலுக்காக அவர் செலவிட்ட காலம் 40 ஆண்டுகள். சிறுசிறு “ரைன்லாந்து கெஸட்”போன்ற இதழ்களில் கட்டுரைகள் எழுதிப் பெற்ற வருமானம் மூலமாகவே தன் வாழ்வை மிகவும் கொடிய வறுமையின் கீழே வாழ்ந்து வந்துள்ளார். “கோட், குழந்தைகளின் பூட்ஸ்” போன்றவற்றை விற்று வாழும் கொடிய வாழ்வை வாழ்ந்து அளப்பரிய பணியை மேற்கொண்டுள்ளார் மார்க்ஸ்.

மார்க்ஸின் பொருளாதாரத்தை தூக்கி பிடித்தவர்களில் தலைசிறந்தவர் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் மட்டுமே.
தன் தாயான ஹென்றிட்டாவின் (1864) இறப்பிற்குப்பின் சொத்தில் கிடைத்த ஒரு பங்கும் உதவியது எனலாம். மற்றொரு நெருங்கிய நண்பரான “வில்ஹெம் வொல்ப்” (1864) இறப்புக்கு முன் அவருடைய சொத்தில் பெரும்பங்கை மார்க்சுக்கு எழுதி வைத்துள்ளார்.அதன் மூலமும் மட்டுமே மார்க்ஸ் ஓரளவு தன்னிறைவான வாழ்வை வாழ்ந்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. தனது மூலதனத்தின் முதல் பாகத்தை ஜெர்மன் புரட்சியாளரான திரு. வில்ஹெம் வொல்ப் ” அவர்களுக்கே சமர்ப்பணம் செய்துள்ளார் மார்க்ஸ் என்பது போற்றுத்தலுக்குரியது தானே… நன்றிக்கடனாற்றியதாகவே யான் கண்டு வியக்கிறேன். வேறுகாரணங்களும் இருக்கலாம்…

Marx & Engels – Band on the Wall

வாழ்நாள் முழுவதும் வறுமையில் உழன்று வந்த போதிலும் நீங்காத நெஞ்சு உறுதியுடன் மன தைரியத்துடன் சமூகத்திற்காக ஆற்றவேண்டிய பணியை மட்டுமே கருத்தாக கொண்டு மூலதனம் நூலை உருவாக்கியுள்ளார் மார்க்ஸ். வெறுமனே நூலுக்கான உழைப்பாக மட்டுமில்லாமல் சமூகப் போராட்டங்களிலும் தொழிலாளர்களை ஒன்றுபடுத்தி வலுப்படுத்துவதிலும் செயல் வீரராகவும் செயல்பட்டுள்ளார்; இந்த மாபெரும் தலைவர் என்பதே போற்றத்தக்கது.

“என்னுடைய புத்தகத்தை கையெழுத்துப் பிரதியாகவாவது எழுதி முடிக்காமல் இறந்துவிட்டால் உண்மையிலேயே நான் நிம்மதி அடைய மாட்டேன்” என்று கூறியுள்ளார் மார்க்ஸ். அவரின் கனவை நினைவாக்க அதில் பெரும் பங்கு வகித்தவர் பிரெடரிக் ஏங்கல்ஸ் மட்டுமே. 1883 மார்ச் 14 இல் மார்க்ஸ் இறந்த பின்னரே மூலதனத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்கள் பிரெட்ரிக் எங்கெல்ஸின் அதீத உழைப்பால் வெளிவந்துள்ளது கவனிக்கத்தக்கது.

காரல் மார்க்ஸ் மற்றும் பிரடெரிக் எங்கெல்ஸ் இருவரும் இணைந்து உருவாக்கியதே பொதுவுடமைக் கொள்கை. “எங்கெல்ஸ் இன்னொரு மார்க்ஸ்” : “பதில் அகம் (ALTER EGO)” என்று கூறியுள்ளார் மார்க்ஸ்.

“மார்க்ஸ் சிறந்த தலைவர் ; ஏங்கல்ஸ் சிறந்த தோழர்.” என்ற உ.வே சாமிநாத சர்மாவின் கூற்றே இதனை மெய்ப்பிக்க போதுமனதாக உள்ளது எனலாம்.

“ஏங்கல்ஸ் இல்லாவிட்டால் பொதுவுடமைக் கொள்கையை நடைமுறைக்குச் சாத்தியமான ஒரு கோட்பாடாக மார்க்ஸால் உருவாகியிருக்க முடியாது. அதைவிட மிகப் பெரிய உண்மை, ஜென்னி இல்லாவிட்டால் மார்க்ஸால் உயிர்வாழ்ந்து இருக்கவே முடியாது என்பதுதான்” என்று உ. வே. சாமிநாத சர்மா கூறிய கூற்று நூற்றுக்கு நூறு உண்மையானது தானே.

1848 இல் வெளியிடப்பட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையின் முடிவுடன் இந்த நூல் அறிமுகத்தை நிறைவு செய்யலாம் என்று கருதுகிறேன்.

Padithathil Pidithathu – Writer and Journalist Athi Valliyappan …

“உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள். நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை; கை விலங்குகளைத் தவிர. ஆனால், பெறுவதற்கு ஓர் பொன்னுலகம் உண்டு.”

“மார்க்ஸ் மேற்கொண்ட போராட்ட வாழ்க்கை, மார்க்ஸ் ஜென்னி காதல் வாழ்க்கை, அவர்களின் குடும்ப சூழல், மார்க்சுக்கு உதவிய நண்பர்கள், மார்க்ஸ் பணியாற்றிய இதழ்கள், மார்க்ஸ் வீட்டின் பணிப்பெண்ணான ‘லென்ஷன்’ பற்றிய குறிப்புகள், கம்யூனிஸ்ட் அறிக்கையின் 10 அம்சங்கள், பிரெட்ரிக் ஏங்கல்ஸ் உடனான மார்க்ஸின் நட்பு, முதலாளித்துவத்திற்கும் கம்யூனியசத்திற்குமான வேறுபாட்டு விளக்கப்படம்” என கிட்டத்தட்ட 30 சிறு கட்டுரைகளாக இந்நூல் தெளிவுபடுத்தியுள்ளது என்பதே உண்மை.

மார்க்ஸ் பற்றிய அரிய தகவல்களை மிக எளிய வடிவில் படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது இந்நூல்.

நன்றி.

வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள்.

இளையோருக்கு மார்க்ஸ் கதை
ஆதி வள்ளியப்பன்.

பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்:96
₹.80

💐 பா.அசோக்குமார்
மயிலாடும்பாறை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *