புவியின் வித்து
*******************
புல்லும் பேசும்
பூவும் பேசும்
கல்லும் பேசும்
கனியும் பேசும்!
புலியும் பேசும்
பூனையும் பேசும்
தத்துவ வித்திவன்
தரணியின் முதல்வன்!
அன்பால் உலகை
ஆண்டிடும் அரசன்
அவனிக்கு இவனோர்
அவதார புருஷன்!
அரண்மனை சுகத்தை
அனுபவித்திருந்தால்
அகிலம் ஆசையில்
அழிந்தே இருக்கும்!
இல்லற சுகத்தை
இனிதெனக் கருதா
உன்னதக் கோமான்
உலகின் முதல்வன்!
நானிலம் உய்ய
நல்வழி காட்ட
தன்னிலை துறந்த
தரணியின் தாயிவன்!
தேடிய ஞானம்
திரைகடல் பெரிது
அமுதத்தை விடவும்
அகிலத்தில் உயர்வு!
காற்றின் நிகரிவன்
கருத்துகள் எல்லாம்
சுவாசித்தால் தெரியும்
சுகமிது என்று!
புத்தன் புனிதன்
புலமிதைக் காப்போன்
புறப்படுத் தோழா
அவன்வழி செல்வோம்!
பூமியின் சொத்து
*********************
இன்று மட்டுமல்ல
என்றும்
புதிது புதிதாய்
பிறப்பவன் நீ!
அக்கினிக் குஞ்சுகளை
அடைகாக்கும்
தீக் கங்கு நீ!
அன்று
அக்ரஹாரத்தில்
தவறிப் பிறந்தவன் நீ!
இன்று
ஆணிலும் பிறக்கின்றாய்
பெண்ணிலும் பிறக்கின்றாய்!
சமயங்கள், சாதிகள்
மொழிகள், நாடுகளென்று
எங்கும்…..
பிறந்து கொண்டேயிருக்கின்றாய்!
ஒரு பெண்ணால்
உணர முடியாத
உள் வலிகளை
உன்னால் மட்டுமே
உணர முடிந்தது!
உன்னை
ஆண் சாதிக்குள்
எப்படி அடக்கி வைக்க முடியும்?
அடங்காத
ஆண்மையை, பெண்மைக்குக் கொடுத்து
அழகு பார்த்தவன் நீ!
பாரதி….
நீ
உருவத்தால் ஆண்;
உணர்வுகளால் பெண்!
சரஸ்வதி பெண்!
அறிவைக்கொடு
ஆஸ்தியைக்கொடு
என
இறைவனிடம்
பிச்சையெடுப்பவரின்
முகத்தில்…
துப்பியவன் நீ!
சுடர்மிகும் அறிவுடன்
படைத்ததற்காக
ஆதி பராசக்தியை
அர்ச்சனை செய்தவன் நீ!
எமனை
அருகில் அழைத்து
எட்டி உதைப்பேனென
கர்ஜித்த
இறுமாப்பு உன்னுடைய
ஆண்மை!
சோற்றுக்கு மட்டும்
சோதனையில்லாமல்
இருந்திருந்தால்….
பரங்கியரையும்….
பார்ப்பனீயத்தையும்
நீ ஒருவனே
பந்தாடியிருப்பாய்!
உன்னை…
பாட்டுக்கொருப் புலவனென
பட்டிக்குள் அடைத்து விட்டார்கள்!
நிலத்தில்
யார்க்கும் அஞ்சாத…
அடங்காத….
அடலேறே…
நீ…
நிலத்தில் உதிக்கும்
சூரியன்!
அதனால்தான்
அந்த
ஆதவனைப்போல
தினம் தினம்
பிறந்து கொண்டேயிருக்கின்றாய்!
இன்றும்…
– பாங்கைத் தமிழனின்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.