ஸ்ரீதர்பாரதியின் கவிதைகள்

ஸ்ரீதர்பாரதியின் கவிதைகள்




சன்மானம்
**************
தவில்காரனின் நடைக்கும்
நாயனக்காரனின் ஏற்ற இறக்கத்திற்கும் ஏற்றபடி

பபூனை சோடியிட்டு
குலுங்கி ஆடுகிறாள்
குஜிலியம்பாறை ஆட்டக்காரி

செத்துப்போன சிலுக்குவார்பட்டி மைனர் மாத்திரம்
இந்நேரம் இருந்திருந்தால்
அள்ளி அணைத்து
குத்தியிருப்பார்
ஐநூத்தி ஒன்னு.

அரட்டல்
***********
சென்ற வருடம்
நாண்டுகொண்ட சின்னம்மா

வயதுக்கு வந்த தன் மகளை
அன்றாடம் அரட்டுவதாக
என்னிடம் குமைகிறாள்
அத்தை

அப்புராணி சின்னம்மா
அப்படி அரட்டுவதாயிருந்தால

கூத்தியாள்பேச்சைக்கேட்டு
கொடுமைப்படுத்திய
குடிகார சித்தப்பனை அல்லவா
அரட்டியிருக்கவேண்டும்?

நிழல்
********
வெயிலில் காய்கிறார்
வீரனார்

வீச்சரிவாள் மீது கவிகிறது
வேம்பின் நிழல்

தேஜஸ்
*********
பௌர்ணமி இரவில்
மினுங்கும் அரசிலைகளுக்கு

புத்தனின் தேஜஸ்

கிளை
********
பழங் கட்டிடத்தில் வேர் பிடித்து நிற்கும்
மரமொன்றின் சிறு கிளைக்கு

பறவையொன்றின்
பாதத்தோற்றம்

– ஸ்ரீதர்பாரதி

கார்கவியின் கவிதைகள்

கார்கவியின் கவிதைகள்




மென்மைப்பூச்சி
********************
பறக்க நினைக்கும் பொழுதெல்லாம்
ஏதோ ஒரு காரணத்தினால்
இறகின் வண்ணத்தைத்
தூரிகையில் பதம் பார்த்து விடுகிறாய்
உன் பார்வைகளால்
பார்வையாளர்களை எப்படி நான் கவர்வது.?…………

நான் தினம் பறக்கும்
நிலவின் நிழலில் மட்டும்
என்னை மிஞ்சிய பல பட்டாம்பூச்சிகள்
நீ மேனி உரசிய காரணத்தினால்
கலைந்துவிட்டன காத்திருப்பு வண்ணங்கள்…………….

ஒரு புள்ளியில் யாரெல்லாம்
அழகை அடைகாத்து சிலாகித்தார்களோ
அவர்களுக்கு மட்டும்
கன்னத்தை வண்ணமாக்கிச் செல்கிறது
இந்த அழகு பட்டாம்பூச்சி……

நானும் வண்ணமாகி விடுகிறேன்
குழந்தையின் கையில் சிக்கிய வானவில் வளையங்களைப் போல
நீளமும் சதுரமும் வட்டமுமாய் மாறிப் போன
உணர்வி ததும்பிகளாய்
வண்ணங்கள் மட்டும் எனது எண்ணத்தூரிகையில்
மேலும் கீழுமாக…….

இருக்கட்டும்
இறுக்கம் திறந்த இறகுகளைக் கொண்ட அந்த ஒரு பட்டாம்பூச்சி
வானவில்லாய்
எனது எட்டாவது வண்ணத்தில்…………..

மெல்லியதொரு_இறுக்கம்
*******************************
இறுக அழுத்தி
கரம்பற்றி நகரும்
துணைகளுக்கு
இறுக்கத்தை மேலும் கற்றுத்தருகின்றன
இருவித்திலை தாவரங்கள்….

யதார்த்தமாக
கரம் கோர்த்த ஒரு மோதிரத்தின் வலி
கரம் மாறும் பொழுது வலிக்கத்தான் செய்கிறது்…….

ஒத்து ஊதும் நாயனத்தின் இறுதியில்
இரு உள்ளங்களின் சிரிப்புதான்
நுரையீரலை இசைப்படுத்துகிறது…….

கைப்பிடித்து
முகம்பார்த்து
பூச்செண்டை விசிறி எறியும் பொழுது
அறிவதில்லை
எறிவது மீண்டும் தரை திரும்புமென…….

சிவப்புக் கம்பள விரிப்புகளுள்
அவ்வப்போது விருப்பப் பாதங்களும்
அன்றாடம் வெறுப்பு பாதங்களும்
சற்று அதிகமாகவே பதிவுறுகின்றன……..

கவிஞர் சே கார்கவி

கலா புவன் கவிதைகள்

கலா புவன் கவிதைகள்

நிழலும் நிஜமும்
நிழலின் ஒளியிலே நான் நடக்கிறேன்
உயிர் உறையும் பனியின் காற்றில் மனிதநெடியின் வாசம்
குண்டுகள் குவலயத்தை தீக்கிரையாக்கிய நெடி
மனிதம் உருவழிந்து போயிற்று

புள்ளினங்கள் மடிந்து போயின
குழந்தையின் அலறலும்
ஆந்தையின் அலறலும் நடுநிசியைக் கிழித்தன
மனிதனின் இருப்பின் நிலை கேள்வியானதோ
கேவலத்தின் உச்சம் ஆக மனிதன் ஆனானோ?
அவலங்களின் மொத்த வடிவமே அகிலந்தானோ?

தீச் செயல்கள் படையெடுக்க தீய்ந்தது மானிடந்தானோ ?
அரசும் மக்களும் எதிர் எதிர் பாதைகளில் பயணித்தல் கொடுமையன்றோ?
சிவப்புக் குருதிநதிகள் தெருக்களில் ஓடுகின்றன
உவப்பு வாழ்க்கை எங்கோ ஓடிவிட்டது
மேகங்கள் பொழியும் மழை கண்ணீராய் மாறிவிட்டது

இந்நிலை எந்நாளும் என்றால்
உயிர்கள் இல்லா உலகே
நிதர்சனமாகும்
தீப்பந்தங்களின் கொடூரத்தால் குழந்தைகள் மடிந்து போகும்
துப்பாக்கி ஓசைகள் நாட்டின் இசையாகும் அவலம் அரங்கேறும்
அய்யகோ அய்யகோ மானுடம் இங்கே அழிந்தம்மா

*************************************************
மேகத் திரைக்கு பின்னால் இரு சந்திரன்கள்
ஒன்று சிவன் தலையில்
இன்னொன்று வானத்தில

கைலாயத்தின் பொற்கிரணங்கள்
வெண்பனி மலையில் பணியை சாரல் நதியாக்குகின்றன
மேகலையின் இடை நெகிழ்ச்சியில்
அன்பு ஊற்றெடுக்கிறது

எங்கிருந்தோ வரும் சூலாயுதம்
கைலாயத்தின் பள்ளத்தாக்கை
ஊடுருவிச் செல்கிறது
சிவப்புக் குருதி பொங்கி வழிகிறது

நந்தவனத்தின் பூ வாசனை
உலகத்தை வாசமாக்குகிறது
நீல நிற ஆகாயம் விண்மீன்களை பார்த்து
கண்சிமிட்ட சொல்ல

அவை தப்பாது
அப்பணி தனை
செய்கின்றன
அகிலத்தில் ஆனந்த லீலா விநோதங்கள்
அதிசயப் பூக்களாய் பூக்கின்றன

Kala puvan's Poems கலா புவன் கவிதைகள்

கலா புவன் கவிதைகள்




சமர் பறவைகள்
•••••••••••••••••••••••••
சிறகுகளின் மடிப்புகளில்
சமர் குறிப்புகளை வைத்திருக்கும்
பறவைகள் தினம் தினம் பறக்கின்றன
தமது மூதாதைகளின் கனவை ஒரு விழியிலும்
தமது வாழ்க்கைப் போராட்டத்தை மறு விழியிலும்
சுமந்து வைராக்கியத்தை இலக்காக
ஒற்றைச் சிறகிலும் தூக்கிப் பறக்கிறது
நேற்றின் மகிழ்ச்சியையும்
இன்றைய அவலங்களையும்
நாளைய எதிர்பார்ப்புக்களையும்
தனது குஞ்சுகளுக்கு உணவுடன் ஊட்டுகிறது
சமர் பற்றிய புரிதலை
தமது குஞ்சுகளுக்குக்
கூடுகளிலேயே அறியப்படுத்துகிறது
அச்சத்தின் எச்சங்களை
தமது கழுத்தில் சுமந்து கொண்டு
தூரங்களைப் பறந்து கடக்கின்றன
இப்படித்தான் பறவைகள்
தங்கள் வானங்களில்
வாழ்க்கையை நடத்துகின்றன….
ஆமென்

நிழல்
•••••••••
என்னிலிருந்து என் முன் நீளும்
என்னிலிருந்து என்னுள் இறங்கும்
என்னிலிருந்து என் பின் தொடரும்
ஆதவனுக்கும் நிழலுக்கும் அப்படி ஒரு சம்பந்தம்
நிழலுக்கு உயிர் தருபவன் ஆதவன்
இரவு நேர நிழல்கள் விளக்குகளாலும்
மெல்லிய விளக்குகொளியாலும் ஏற்படுவன
விளக்கின் கண்ணாடியில் அமரும் சிறு கொசுவின் நிழல்
சுவரில் பூதாகரமாய்த் தெரியும்
நம்மைப் பயமுறுத்தும்
இரவு நிழலைக் கண்டு பயப்படாத குழந்தைகளும்
பெண்களும் அபூர்வம்
எப்படியிருந்தாலும் நாமும் நிழலும்
ஒன்றுடன் ஒன்றாய்ப் பின்னிப்பிணைந்து கிடப்பவர்களே
நானின்றி நிழலில்லை
நிழலின்றி நானில்லை
ஆமென்

காத்திருப்பு
••••••••••••••••••
என் கனவுகளின் மீது நிஜங்களை நீ வரைகிறாய்
முகையவிழும் மலர்க் காடுகளில் வசந்தம் வந்து வீசிப்போயிற்று
பேரன்பின் உதிர்தல் பற்றி நீயறிவாயா ?
இரவுகள் உதயமாகின்றன
பகல்கள் நீளங்களை அளக்கின்றன
அது பெருங்கடல்
ஆழத்தில் உறைகிறது

நிறங்களை
வண்ணத்துப்பூச்சிகள் வர்ணஜால வண்ணங்களாய்
மாற்றுகின்றன
அவை என்
கண்ணுக்குள் நுழைத்து என் கனவுக்குள் புகுகின்றன
நாம் இருவரும் மெளனங்களை மொழியாக்கி பேசிக்கொண்டிருக்கிறோம்
நீலோற்ப மலர்கள் வண்டினங்களின் வரவுக்காகக் காத்துக் கிடக்கின்றன
நம்மைப்போல……….
ஆமென்

Nizhalgalin Nijangal Poem By Adhith Sakthivel நிழல்களின் நிஜங்கள் கவிதை - ஆதித் சக்திவேல்

நிழல்களின் நிஜங்கள் கவிதை – ஆதித் சக்திவேல்




கூட்டியும் குறைத்தும் தம்மைக் காட்டி
நாட்டியம் ஆட முடிகிறது நிழல்களால்
நிஜங்களைப் போலன்றி

தம்மைச் சுற்றி நாற்புறமும் பிரகாசமான ஒளி வீசிட
நிழல்கள் ஒளிந்து கொள்கின்றன
கண்கள் கூசியதால்

காலத்தின் நிழலை
வேகமாய் உலுக்க
உதிர்கின்றன நினைவுகள்
ஓய்வு கொள்ள
உள்ளம் உறங்குகிறது அந்நினைவுகளின் நிழலின் மடியில்

மரத்தினைத் தழுவிட முடியா
நிலவின் கதிர்கள்
சுழன்று சுழன்று ஆடுகின்றன
இலைகளின் நிழல்களுடன்
மரத்தின் நிழலில்

பழுத்த இலைகளின்
நிழல்களுக்குப் புரிகிறது
தம் இறுதி ஆட்டம் அதுவென
மனம் விரும்பிய படி ஆடுகின்றன
அந்த இறுதி விளையாட்டை

சொட்டும் பனியின் துளிகள்
இலைகளில் வடிந்ததில்
ஈரமாகின்றன அதன் நிழல்களும்

பனிக் காலக் குளிரில்
மரத்தின் நிழலைப்
போர்த்திக் கொள்கின்றன புற்கள்
பிரியும் மனங்கள்
பிழிந்த சோகத்தை
தழுவிய கைகள்
மறைத்து விடுகின்றன
தம் நிழலில்

கரை தொட்டு நிற்கும்
மரங்களின் நிழலைத்
தன்னுடன் இழுத்துச் செல்ல
வேகமாய் ஓடிய ஆற்றின் ஆசையில்
வெள்ளமெனக் கலக்கிறது
ஏமாற்றம்

நிழலாய்
நிலத்தில் பறக்கும் பட்டத்தின் நூல் நிழலின் கையில்
மலர்ந்த பூவையும்
அதன் நிழலையும் பிரிக்கிறது
மணம் என்னும் மெல்லிய கோடு

உச்சிக்குச் செல்லச் செல்ல
நிழல்களை விழுங்கும்
சூரியனின் நிழல் எங்கே விழும்?

மேகம் உரசிப் பறக்கும்
பறவைகளின் நிழலில்
நிறைந்திருக்கிறது சிறகுகளின் வலி

நினைவுகளில் விழுந்த
இசையின் நிழல் ஒலிக்கிறது
அவ்விசை மறைந்த பின்னும்

காகிதங்களில் பதிந்த
கவிஞனின் நிழல்கள்
வாசிக்கப்படுகின்றன கவிதைகளாய்

பின் தொடரும்
வாழ்க்கையின் நிழல்
சில நேரங்களில்
முன்னே பாய்ந்து வர
அந்நிழலைக் கண்டு
அஞ்சுவோரும் உண்டு
நிழலின்றி நிஜமுண்டு
நிஜமின்றி நிழல் ஏது?

Vasanthadheepan Poems 15 வசந்ததீபன் கவிதைகள் 15

வசந்ததீபன் கவிதைகள்




(1) நதிச் சங்கமம்
**********************
உன் விழிகள் என் திசைகாட்டிகள்
உன் இதழ்கள் என் நீர்த்துறைகள்
உன் நிழல்தேடி தாகமாய் வருகிறேன்
உனக்குப் பரிசளிக்க வேண்டும்
உலகம் கண்டிராத
அற்புதமான பொருள்
ஒருவராலும் தரமுடியாத என் இதயம்
முத்தமிட வந்தேன்
முட்கள் சூழ நிற்கிறாய்
மனமொடிந்து திரும்புகிறேன்
உன் உடலுக்குள் ஒரு கடல்
மீன்கள் ஆயிரம் துள்ளுகின்றன
கண்ணாடிக் குடுவைக்குள் நீ
ராகங்கள் பெருகும் தடாகம்
சந்தங்கள் கமழும் பூந்தோட்டம்
மனம் எனும் மாய இசைக்கருவி
கள்ளிப்பழ உதடுகள்
கனிந்து சிவந்தன
கண்கள் துள்ளிக் குதித்தன
காதல் வெள்ளம் பிரவாகமெடுத்தது
மழைச்சாலையில் யாரும் இல்லை
காற்று ஓலமிட்டு ஓடுகிறது
இறந்தபடி இணை பிரிந்த பறவை
சிரிப்பால் எனக்குத் தீ மூட்டினாள்
வெந்து கொண்டிருக்கிறது
என் இதயம்
பசியாறப் பார்க்கிறது கனவு.

(2) மரிக்கும் பறவையின் குரல்
*************************************
சுழித்தோடும் உன் புன்னகை
நெளிந்தாடும் உன் புருவங்கள்
சுழலுள் சிக்கிய துரும்பானேன் நான்
ஆறப்போடு
ஊறப்போடு
அப்படியே தூக்கித் தூரப்போடு
படிக்கிறேன்
திரும்பத் திரும்பப் படிக்கிறேன்
விளங்க முடியாத கவிதை வாழ்க்கை
நிழல் தரும் மரங்களில் இலைகளில்லை
அழகு மிளிரும் செடிகளில் பூக்களில்லை
உதிர்காலத்தில் உழல்கிறது கனவிலான வாழ்வு
ஒரு மிடறு குடித்தான்
வேதனையின் காரணிகள் நிழலாடின
அடுத்த மிடறு
அவனைக் குடித்துவிட்டது
நந்தவனத்திலோர் ஆண்டி
அவன் நாலாறு மாதமாய் செய்த தோண்டி கூத்தாடிக் கூத்தாடி பட்டென்று உடைந்தாண்டி
நீ வந்த போது நான் இல்லை
நான் வந்த போது நீ இல்லை
நமது காலடித்தடங்கள் மட்டுமாவது சந்தித்திருக்கலாம்
உக்கிரமான கோபம்
கனவுகளை எரிக்கிறது
நாமெல்லாம் மெளனமாகத் தான் வாழ்கிறோம்.

Kalai's Short Poems கலையின் சின்னஞ்சிறு கவிதைகள்

கலையின் சின்னஞ்சிறு கவிதைகள்




1.
காத்து வாக்குல
சுற்றினாலும்
குளிரீரத்தை மெதுமெதுவாய்
பருகி கொண்டே புரள்கிறது
குளுமையை உறிஞ்சி
சுகம் காணுகிறது
ஆனால்
எரியும் நெருப்புப் பூக்களை
மட்டுமே
ஆணியாய் அடிக்கிறது
அக்னி வெயில்…

2.
நிர்வாணமாய்த்
திரியும் வெயிலை
கருணை கலந்த
ஒருதலைக் காதலோடு
மரங்களின் ஒத்தாசையுடன்
கருப்புடை உடுத்தி விடுகிறது
நிழல்…
வெயில் ஏனோ
அப்படியே திரிகிறது இன்றும்!

3.
திரும்பவும்
ஏமாற்றப்பட்ட நினைவே இவ்விடங்களில் திரும்பி வந்து போகிறது
ரேசனில் பொருள் வாங்க காத்திருந்த பல மணிநேரம்..
பள்ளியில் பாலகன் சீட்டுக்கு குடியிருந்த சில நாள்..
தாலுகா அலுவலகத்தில் அன்றாடம் அலைந்து போன பொழுது..
அரசு மருத்துவமனையில் மருத்துவத்திற்காய் மயங்கி
விழுந்த விநாடி..
ஓட்டுப் போட்டு
காலம் மட்டும் கடந்து போனதால்!

Parameshwari Poems. து.பா.பரமேஸ்வரி கவிதைகள்

து.பா.பரமேஸ்வரி கவிதைகள்




நிழல்
******************
நித்தமொரு நிழல்
அவ்வப்போது
எனையாற்றும் புல்லாங்குழல்..
நான் அதைத் தொடர்வேனா
என்னிடத்து அது விலகுமா..
ஏதும் புரியாத புதிர்..
எது எப்படியோ..
பெரும் போர்தொடுப்பிற்குப்பின்
மிச்சசொச்சமான அந்த நிழல்..
அது மட்டுமே எனக்கான பேராறுதல்
எனது மீப்பெரும் அமைதிக்குப் பின்..

உலகின் பரிசுத்தம்
**************************
புனிதம்
மனித சக்தியின்
அதீதம்
என்பன இரண்டுண்டு..
ஒன்று நீர்..
மற்றொன்று மனித மனம்..
இரண்டுமே..
அதிதூய்மையில் வழங்கப்பட்ட
அதிவேகத்தின் ஓட்டத்தில்
அதிவிரைவில் மாசடையும்
இயல்பு கொண்டவை.
ஆதலால்…
மானிடா
இரண்டையும்
அதனதன் போக்கில் இருத்தி வை..

உன் கையோ
பிறர் செய்கையோ
உரசாமல் பார்த்துக்கொள்..

 காத்திருப்பு
******************
அந்தி மேகம்
மஞ்சள் வெயில்
மந்த மாலை
மயக்கும் வேளை
உன் வருகை வேண்டி
பூச்சூடி
புத்தாடையுடுத்தி
மைபூச்சிட்டு
சிவந்த பொட்டிட்டு
முன்புறம் நோக்கியே
விழியிரண்டும் வழிதேட
தவிக்கும் கால் கட்டைவிரல்கள்
தவம் கிடக்கின்றன பாதகமலங்கள்…
வாசலைத் தாங்கியே..
காதல் தெய்வத்தின் வருகைக்காக..
நினைவுகளின் நெரிசல்
ஐம்புலன்கள் சிதைவுற்றன..
பார்வையின் பலவீனம்
செவிகளின் செயலிழப்பு
சுவாசத்தின் சூடு
சுவையில் சுணக்கம்
உணர்த்தலின் ஊடல்
மொத்ததில்  யாவும் முடக்கம்
முழு ஊரடங்கு சற்றும் தளர்வின்றி
ஆனால் …
இதயம் மட்டும் துளியும் ஓய்வின்றி
உன் நினைவுகளை உள்வாங்கியும் வெளிப்படுத்தியும்
விழிகளின் வழியே
அடர்த்தியாய் வார்க்கிறது கண்ணீர் ரசம்
சிறிதும் தடையின்றி..
இத்தனை கட்டுக்கோப்பிலும்
தளர்வின்றி இயங்கும்
இதயம் ஒரு இயக்கவாதி
விழிகள் வாழும் ரசவாதி..
அன்பே வருவாயா…
நெரிசலை நெறிபடுத்த..
கடைந்தெடுத்த காந்தத்தைக் 
கண்களில் சுமக்கும் கண்மணியே….
*************************************************
யார் சொன்னது..
இருவேறு துருவங்கள் இணையும்
ஒன்றான துருவங்கள்
ஒரு போதும் சேராது என..
நம் காதலில்லையா..
யாதொரு விதியையும் உடைத்தெறிய.
ஏதொரு கோட்பாட்டையும் தகர்த்தெறிய
ஒற்றைச் சிந்தனை
ஒன்றான பார்வை
ஒருங்கிணைந்த செயல்
ஒரே நெறியாளளண்மை
ஒவ்வாத தலைக்கனம்
திமிர்த்தனம் மட்டும் சற்றே கூடுதல்..
எனைக் காட்டிலும் உன்னிடத்தில்
ஆனால் என்ன???
காதல்‌ மனம்‌ இருவருக்குள்ளும்
ஒன்று தானே..
அதே ஒற்றைச் சிந்தனையில்
ஒருகூடும் பார்வையில்
 ஒருசேரும் செயலில்
 ஒன்றான நெறியில்
 ஒத்திசைந்த தலைக்கனத்தில்
 உனது மேல்போக்குத் திமிர்த்தனத்தில்.
உயிர்த்தெழுந்த நம் காதல்
விண்வெளியின் துருவங்களைத்
 தாண்டிய அருவம்..
பொதுவுடமைக்கப்பாற்பட்டது
நம் காதல்
இனி படைப்போம்..
காதலுக்கான புதிய விதியொன்றை ..
காதலின் புனிதத்துவம்
*******************************
நொடிக்கொரு அழைப்பு
நிமிடமொரு உரையாடல்
மணிக்கொரு முத்தம்
கணமொரு கொஞ்சல்
தினமொரு கெஞ்சல்
இதுவல்லவே காதல்…
இதுவெறும் உணர்ச்சித்தூண்டல்
பலநூறு மைல் தொலைவில்
பல்லாயிரம் தடைகளுக்கிடையில்
பலகோடி மனிதர் மத்தியில்
பல லட்சம் நட்சத்திரவெளியில்
உயிரும் உயிரும்
கடக்கும் நாழிகையிலும்
கடந்த வினாடியிலும்
நினைப்பின் நனைப்பில்
உரையாடும் உன்னதமே காதல்.
எங்கோ வாழும் உயிர்
தனது விழைகளை
தமது விருப்பங்களை
ஏழ்கடல் தாண்டி
ஏழண்டம்‌ கடந்து
தூதாகக் கடத்திச் சென்று
தனது ஜீவனிடம்
சேர்க்கும் நொடியொன்றில்
நிகழும் அதிசயங்கள்
நான் நினைத்தேன்
நீ முடித்தாய்
என வியக்கும் நிமிடமே
காதலின் தூரம் …
காதலரின் அருகாமை..
எத்துனை பேருக்கு அமையும்
இப்படியான காதல்..
ஜீவனே..
நம் காதல் புனிதம்…