அந்த உலகம்
அவ்வளவு அழகாக இருந்தது.
எனக்கானவற்றை நானே
உருவாக்கிக் கொள்கிறேன்.

ஒருநாளும்
அந்த வாழ்க்கையை
நான் வெறுக்கவில்லை.

அச்சம்
பயம்
கிஞ்சித்த
அளவேனும் இல்லை.
எனக்கு வாழ பிடித்திருந்தது

நிறவேற்றுமை
சாதிப் பாகுபாடு
பெண்ணடிமை
வன்புணர்வு
வன்கொடுமை
தீட்டு
குடிநீரில் மலம் கலப்பது
இரட்டைக் குவளை
மலச்சட்டி தூக்கிச் சுமப்பது
சாணிப்பால்
சவுக்கடி
ஊர் சேரி என்று
எந்த கொடுமையும்
நடந்ததாக வரலாறு இல்லை.

கடவுளைப் பற்றிய
தேவை எழவில்லை
அதனால் மதச் சண்டை
அங்கு இல்லை.

குரோதமான
வன்மம் நிறைந்த
மனிதர்களை
அங்கு
நான் கண்டதே இல்லை.

பெண்கள்
அவர்கள் விரும்பியவரை
காதலித்தனர்.
அவர்கள் காதலுக்கு ஒருநாளும்
ஒருவரும் யாரும் தடையாக
இருந்தது இல்லை

குழந்தைகளை
குழந்தைகளாகவே
பார்க்கிறார்கள்.
மறந்தும் ஒரு நாளும்
பாலுணர்வுக்கு
துன்புறுத்தப்படவில்லை.

பாலின வேறுபாடும்
வயது வித்தியாசமின்றி
அனைவரும் அனைவரிடமும்
நட்புக் கொண்டிருந்தனர்.

யாரும்
ஒதுக்கப்பட்டவர்கள்
ஓரம் கட்டப்பட்டவர்கள்
ஒடுக்கப்பட்டவர்கள்
என்ற சொற்களை
அறிந்ததில்லை.

நாங்கள்
நினைத்த இடங்களுக்கு
சுதந்திரமாகச் சென்று வந்தோம்.
ஒருவரை ஒருவர் பார்க்கும் பொழுது
அன்பு பாராட்டி
ஆறத்தழுவிக் கொண்டோம்.

எதிர்காலம் குறித்த
எந்தக் கவலையும் இல்லை.
ஆனால்
எங்களுக்கான கடமை
இருப்பதை உணர்ந்தோம்.

நாங்கள்
ஒவ்வொரு நாளும்
விடியலுக்குப் பிறகு
உயிருடன் தான் இருக்கிறோம்
என்ற எந்த நிர்பந்தத்திற்கும்
ஆளாக்கப்படவில்லை.

நான்கு வர்ணங்களைப் பற்றி
நாங்கள் கேள்விப்பட்டதில்லை.

அதனால்… அதனால்…
பிரம்மா
விஷ்ணு
சிவன்
போன்ற கடவுளர்களும்
புத்தன்
இயேசு
நபி
போன்ற போராளிகளையும்
நாங்கள் அறிந்திருக்கவில்லை
நாங்கள்
விரும்பிய
கல்வியை
கற்றோம்

நாங்கள்
விரும்பிய
உணவை
உட்க்கொண்டோம்.

எங்கள்
கரங்களிலிருந்து
புத்தகங்கள்
களவாடப்படவில்லை.

எழுதுகோல்
சுதந்திரமாக
எங்கள்
கரங்களில்
தவழ்ந்து விளையாடியது.

உழைப்பு மீது
அத்தனை மதிப்பு
மிக்கவர்களாக இருந்தனர்.
உழைப்புக்கேற்ற
ஊதியம் கிடைத்தது.
எந்த சுரண்டலுக்கும்
உள்ளாக்கப்படவில்லை.
எங்களுக்குள்
எந்த வர்க்க பேதமும்
உண்டாகவில்லை.

என்
புல்லாங்குழலிருந்து
வரும் இசையைப் போலவே
எல்லா திசைகளிலும்
நீக்கமர கலந்திருந்தோம்.

மானுட தத்துவத்தின்
அடையாளமாகவே
மட்டும் இருந்தோம்.

சொல்லப்போனால்
போலி தேசபக்தர்களின்
பாரத மாதாவுக்கு ஜே!
என்கின்ற வெற்றுகோசம்
இல்லாமல் இருந்தது.

பேரா. எ. பாவலன்
[email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



One thought on “கானல் நீர் கவிதை – பேரா. எ. பாவலன்”
  1. எதிர்மறையான ஒரு வாழ்வியல் நடத்தைகளை எல்லாம் மீள் உருவாக்கம் செய்து எண்ணிப் பார்ப்பது போல தனக்குள்ளாகவே பேசிக் கொள்கிற எதிர்காலத்தை கண்டு ரசிக்கிற அது இக்காலத்தில் நடந்து விடாதா என்று யோசிக்கின்ற ஒரு கவிஞன்னுடைய ஏக்கர் கனவை இந்த கவிதையில் காண முடிகிறது அதை தாண்டி தான் என்ன எதிர்பார்க்கிறேனோ அந்த உலகம் இப்படித்தான் இருக்க வேண்டும் என கூறுவதாகவும் இக்கவிதை அமைந்திருக்கிறது சிறப்பான கவிதையை நாட்டின் அவலத்தை கடைசியாக கூறிச் சென்று முத்தாய்ப்பாய் ஒரு வீரமிக்கதான கவிதையில் யாருக்கும் எந்த பயப்படுதலும் இல்லாமல் உலகம் எப்படி தான் இருக்க வேண்டும் என்று கூறிய அழகு பேராசிரியர் பாவலன் அவர்களுக்கு உரித்தானது மிகச் சிறப்பான கவிதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *