1
காற்றடிக்கும் திசையில்
கொடி பறக்கிறது என்பதற்காக
கொடிக்கு நம் மீது அன்பு
என்பது அர்த்தமற்றது…
எங்கே ஈர்ப்பு விசை இருக்கிறதோ
அங்கே ஈர்த்துக் கொள்கிறது…
எங்கே பசை இருக்கிறதோ
அங்கே ஒட்டிக் கொள்கிறது…
எங்கே தேவை இருக்கிறதோ
அங்கே இணைந்து கொள்கிறது…
ஏதுமற்ற ஒன்றில் பிணைப்போ
அன்போ நட்போ ஏதொன்றும்
நிலைப்பதில்லை…
பயன்பாட்டிற்கு உகந்தது
என்பதற்கு பல பெயர்கள்…
2
சிகப்பு மஞ்சள் பச்சையும் கருப்பும்
பூசிக் கொண்டேன்…
பார்த்தவர்கள் அனைவரும்
பரவசம் ஆனார்கள்
என் பேச்சைக் கேட்டவர்களோ குதூகலித்தார்கள்…
கண்களில் வண்ணம் தீட்டி
சிரிப்பில்லா உதட்டில் சிரிப்பதாய் வண்ணம் தீட்டினேன்…
கோலாடும் திசைக்கு ஆடும் குரங்காய்
வேடிக்கை பார்த்தார்கள்…வேஷம் கலைத்த பிறகும்
என் வார்த்தைகள் வேடிக்கையாகத்தான் தெரிகிறது…
இருக்கும் இடத்தை குதூகலமாய் வைத்திருக்க நினைத்தேன்…,
பேசும் வார்த்தைகளைக்
கூர் தீட்டாமல் பார்த்துக் கொண்டேன்…
பார்க்கும் பார்வையில் வஞ்சமின்றி கடந்து வந்தேன்…
நான் கடந்தவர்கள் அத்தனை பேரும்
ஏதோ ஒரு காரணத்திற்காக மட்டுமே
என்னோடு பேசுகிறார்கள்
என்று தெரிந்த பிறகு
மௌனம் மட்டுமே என் மனம் முழுவதும் பூசிக் கொண்டேன்…
சிரித்தால் என்ன ஆகிவிடப் போகிறது…
பேசினால் என்ன ஆகிவிடப் போகிறது…
என்பதெல்லாம் போலியான வார்த்தைகள்…
அதிகப்படியான பேச்சும் சிரிப்பும் நம்மை கோமாளி ஆக்கிவிடும்…
– சுதா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.