இந்திய துணைக் கண்டத்தின் அறிவியல் தொழில் நுட்ப வரலாறு – பொ.இராஜமாணிக்கம்
நூல் அறிமுகம் : “அறிவியல் ஆச்சரியங்கள்” – இரா.இயேசுதாஸ்
சமகால சுற்றுச்சூழல் சவால்கள்: தொடர் 3 – முனைவர். பா. ராம் மனோகர்
சூரிய ஆற்றல், சுலபமாய் கிடைக்குமா, நம் மக்களுக்கு!?
முனைவர். பா. ராம் மனோகர்.
சுற்றுசூழல் பிரச்சினைகளில், மிகவும் முக்கியமானது,”ஆற்றல் தேவை” ஆகும். உலக மயமாக்கல், நவீன இந்தியாவில், வணிகம், வாகனங்கள் பெருக்கம், மக்களின் வாழ்க்கை மாற்றத்தினால், மின்சாரம், எரிபொருள் ஆகியவை, அதிகம் பயன்பாடு, ஏற்பட்டுள்ளது எனில் மிகையில்லை! மேலும் படிவ எரி பொருட்கள், பெட்ரோலியம், நிலக்கரி குறைந்து வரும் நிலை ஒரு புறம், இருப்பினும் 1.4பில்லியன் மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் ஆற்றல் குறைபாடு, சமீபகாலமாக தவிர்க்க இயலாத ஒன்று.
மாற்று புதுப்பிக்கும் ஆற்றல் வளங்களான காற்று, கடலலை, சூரிய ஆற்றல் போன்றவற்றின் தொழில் நுட்பம் அறிந்து அவற்றை செயல்பட பல திட்டங்கள் தீட்டுதலும்
அவசியம் ஆகி, இந்தியாவில் மத்திய அரசு அவற்றை துவக்கம் செய்துள்ளது என்பது உண்மை! எனினும் அவற்றை சரியாக செயல்பட செய்ய பல சவால்களை எதிர் கொள்ள வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது என்பதையும் மறுக்க இயலாது.
சூரிய ஆற்றல் கருவிகளின் அடிப்படை பொருட்களான polysilicon பாலிசிலிகான், ingots இங்கோட்ஸ், wafers வெபர்ஸ் போன்றவற்றை நம் நாட்டில் உற்பத்தி செய்ய இயலவில்லை.
Solar photovoltaic (சூரிய ஒளி ஈர்ப்பு கருவி ), நவீன தொழில் நுட்பம், பொருளாதார அளவீடு, உயர் நிலம், மின்சார கட்டணம், குறை திறன் பயன்பாடு, உயர் நிதி கட்டணம், திறன் குறைவான தொழிலாளர் போன்றவை ஒருங்கிணைந்த நிலையில் இல்லாதது, உற்பத்தி விலை அதிகரிக்க காரணம் ஆகிவிட்டது.
சூரிய ஆற்றல் தேவை குறிக்கோளினை, சரியாக அடைய நிலையற்ற கொள்கையும், ஒரு தடை ஆகும்.
வழக்கமான ஆற்றல் கருவி உற்பத்தி நிறுவனங்கள், பெரும் தொழில் நிறுவனங்கள் மூலம் பெறப்படும் வணிகம் குறையும் என்ற அச்சத்தில் புது மாற்று ஆற்றல் முறைகளை தவிர்த்து வருகின்றன. மாநிலங்களுக்கு இடையில் சூரிய ஆற்றல் சட்ட விதிகள் மாறுவது, வாங்கும் திறன் மாற்றம் போன்றவை நுகர்வோருக்கு தடையாகிவிடுகிறது.
இந்த சூரிய ஆற்றல் கோட்பாடு, கொள்கை குழப்பம் செயல்பாடு மேற்கொள்ள, தாமதம் ஆகும் நிலை உள்ளது.
இதே போல் பெட்ரோலிய வாகனங்களுக்கு அதிக நிதி, கடன் வழங்கும் நிலை உள்ளது. சூரிய ஆற்றல் திட்டங்கள், கடன் நிதி பெற்று செயல் படும் நிலை கடினம்.
ஒரு புறம் அரசு புதுப்பிக்கும் எரி சக்தி விழிப்புணர்வு மேற்கொள்கிறது. ஆனால் நிலக்கரி உற்பத்தி,, சுரங்க தொழில் ஆகியவற்றிற்கு மானியம் கிடைக்கிறது.2018 ஆம் ஆண்டு துவக்க நிலை வணிக ஆற்றல் நுகர்தலில் 56%நிலக்கரி, 30%எண்ணெய், 6%வாயு, 3%புதுப்பிக்கும் ஆற்றல், 4%நீர் ஆற்றல், 1%அணு ஆற்றல் ஆகிய நிலையில் இருந்தது.
வழியில் முன்னுரிமை, சூரிய ஆற்றல் கருவிகள் உற்பத்தி, வணிகம் ஆகியவற்றுக்கு தர வேண்டும்.
வெப்பமண்டல பருவகால நாட்டில் எளிதில் பெறக்கூடிய ஆற்றல் என்பது சூரிய ஆற்றல் மட்டுமே! இது அனைத்து தரப்பு மக்கள் எளிதில் பெற கட்டணங்கள் குறைப்பு, பெரு விழா அரங்கம், தொழிற்சாலை ஆகியவற்றில் கட்டாய கருவி அமைப்பு போன்ற நிலை வர சட்டம் கொண்டு வரலாம்
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சூரியன் ஆற்றல் பற்றி பள்ளி, கல்லூரி மாணவர்கள் முழுமையாக அறிய வேண்டும். சுற்றுசூழல் பாதிக்காத, காற்று மாசு ஏற்படுத்தாத இந்த ஆற்றல் நாம் அனைவரும், எதிர் காலத்தில் எளிதில், விரைவில் பெறுவோம் என்ற நம்பிக்கை கொள்வோம்.
நூல் அறிமுகம்: டேவிட் எஃப்.நோபில் ’FORCES OF PRODUCTION’ – ஜீவா
அதிநவீன தொழில்நுட்பம் ஏன் வறுமையை இன்னும் ஒழித்த பாடில்லை?
நூல் அறிமுகம்:Forces of Production(1984) by David F Noble
ரிச்சர்ட் லிங்கலேட்டர் என்னும் அமெரிக்க இயக்குனர் எடுத்த Before Sunrise (1995) திரைப்படத்தில் ஒரு வசனம் வரும்:
“சில பேர் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு எவ்வளவு நேரத்தை சேமிக்கலாம் தெரியுமா என மகிழ்ச்சியுடன் தொழில்நுட்பத்தை சிலாகிக்கின்றனர். ஆனால் சேமித்த நேரத்தை மகிழ்ச்சியோடு அனுபவிக்கா விட்டால் அந்த தொழில்நுட்பத்தால் என்ன தான் என்ன பயன்? ஒரு வேலையை சீக்கிரமாக முடித்து விட்டு சேமித்த நேரத்தை வேறு ஒரு கடினமான வேலையில் செலுத்துவதற்கு எதற்காக அந்த நேரத்தை சேமிக்க வேண்டும்? நான் பயன் படுத்தும் அந்த word processor எனது நேரத்தை சேமித்து கொடுத்தது. சேமித்த நேரத்தை நான் ஒரு ஜென் மடாலயத்தில் ஏகாந்தமாக கழித்தேன் என்று ஒருவருமே சொல்வதில்லையே!”
பிரிட்டன் நாட்டின் முக்கிய பொருளாதார மேதை என அழைக்க பெற்ற ஜான் மாய்னார்ட் கெய்ன்ஸ் சென்ற நூற்றாண்டில் தொழில்நுட்பம் வளரும் வேகத்தை கண்டு மானுடத்தின் எதிர்காலம் குறித்து மிகவும் நம்பிக்கை கொண்டிருந்தார். எதிர்கால மக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கு தேவையான வேலைகளை மிகக் குறைந்த நேரத்திற்குள் முடித்து விட்டு மீதமிருக்கும் நேரத்தை தங்களுக்கு மிகப்பிடித்த, தங்கள் ஆன்மாவிற்கு திருப்தி தரக்கூடிய செயல்களில் ஈடுபடுத்தலாம். அதுவே மானுடத்தின் மகத்தான சாதனையாக இருக்கும் என நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் அவர் கணித்து கிட்ட தட்ட மூன்று தலைமுறைகளுக்கு பின்னரும் மானுடம் அப்படி எந்த பெரிய முன்னேற்றத்தையும் அடைந்த பாடில்லை.
இன்னமும் இந்திய போன்ற நாட்டின் பசி மற்றும் ஊட்டச்சத்தை பற்றிய தரவுகளில் அதன் மக்களில் கணிசமான பேர் போதுமான அளவிற்கு உணவு உட்கொள்ளுவதில்லை அல்லது போதிய ஊட்டச்சத்தை அவர்களும் அவர்களது பிள்ளைகளும் பெறுவதில்லை என்ற உண்மையை மட்டுமே நம்மால் காணமுடிகிறது. சப்-சஹாரன் ஆப்ரிக்க நாடுகளை விட பசி மிகுந்த நாடாகவே இந்தியா உலகெங்கும் அறியப்படுகின்றது. அத்தனைக்கும் இந்தியாவில் உழைப்பிற்கு எந்த விதத்திலும் குறைபாடில்லை. நமது முந்திய தலைமுறையை விட அதிக நேரம் உழைப்பவர்களாகவும் சட்ட ரீதியாகவே அனுமதிக்கப்பட்ட உழைப்பு சுரண்டலுக்கு ஆளானவர்களாகவும் தான் நமது தொழிலாளர் பட்டாளம் இருப்பதை பல தொழிலார்நல செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர்.
***
இரண்டாம் உலகப்போர் முடிந்த தருவாயில் ஜெர்மனியை வீழ்த்த சோவியத் யூனியன் ஆற்றிய நிகரற்ற பங்கின் காரணமாகவும் 1929-33 காலகட்டங்களில் உலகம் முழுதும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி சோவியத் யூனியனை கொஞ்சமும் அண்டாத காரணத்தினாலும் உலகமெங்கும் கம்யூனிச கருத்துக்களும் பொதுவுடைமை கொள்கை பற்றிய விழிப்புணர்வும் அதிகரிக்க துவங்கின. ஏன் முக்கியமாக முதலாளித்துவத்தின் சர்வதேச முகமாக விளங்கிய அமெரிக்காவிலும் கூட தொழிற்சங்கங்கள் பல்கி பெருகின. இதன் காரணமாக அமெரிக்காவின் தொழிலதிபர்கள் வேறு வழியின்றி அடிக்கடி கூலி உயர்வுகள், அதிக விடுப்புகள் போன்ற உரிமைகளை தொழிலாளர்களுக்கு தர வேண்டிய சூழல் ஏற்பட்டது. முன்பை விட அதிகமாக வேலைநிறுத்தங்களும் தொழிலாளர் போராட்டங்களும் நிகழத் தொடங்கின. அதே நேரத்தில் உலக அளவில் சோவியத் யூனியனின் செல்வாக்கு மற்றும் ஆதிக்கம்/பாதிப்பு கிழக்கு ஐரோப்பாவில் மட்டும் அல்லாது ஆசியா ஆப்பிரிக்கா வை சேர்ந்த நாடுகளிலும் பரவ தொடங்குவதை அமெரிக்காவின் ஆளும் வர்க்கம் கொஞ்சமும் ரசிக்கவில்லை.
தொழிலாளர்கள் கை ஓங்குவதை விரும்பாத அமெரிக்க தொழிலதிபர்களும், கம்யூனிச பரவலை தடுக்க திணறிய அமெரிக்க அரசாங்கமும் ஒருவருக்கொருவர் கை கோர்த்து ஒரு புது ஒப்பந்தத்தை நோக்கி நகரத்துவங்கினர். உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி பொதுவுடைமை சிந்தனை பரவலை தடுத்தாக வேண்டும். அதற்காக புது உத்திகளை கையாள வேண்டும். எனவே இனிமேல் அரசாங்கத்தின் வருடாந்திர செலவில் ஒவ்வொரு வருடமும் ஒரு கணிசமான பகுதியை பாதுகாப்பு குறிக்கோள்களை நோக்கி ஒதுக்க வேண்டும். அதற்கு புதிய தொழில்நுட்பங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு முதலீடு செய்ய வேண்டும். நாட்டின் விஞ்ஞான தொழில்நுட்ப துறை முழுவதையும் பாதுகாப்பு துறையின் கண்காணிப்பில் வைத்து பாதுகாப்பு துறை சார்ந்த நடவடிக்கைகளுக்கு மட்டுமே பெருமளவில் ஏற்பவாறு அதனை வளர்த்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்தது அரசு.
அதே நேரத்தில் தொழில் துறை ஆனது மனித உழைப்பின் தேவையை பெருமளவில் சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும். அதன் பொருட்டு தானியங்கி சாதனங்களையும் அவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் புதிய தொழில்நுட்பங்களையும் உருவாக்க முதலீடு செய்ய வேண்டும் என்று முதலாளி வர்க்கம் முடிவு செய்தது. இதனால் அமெரிக்காவின் பல்வேறு பல்கலை கழகங்களின் நிர்வாக செலவுகளுக்கும், அங்கே ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு தரப்பட வேண்டிய மானியங்களுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பாதுகாப்பு துறை மற்றும் பெருநிறுவனங்கள் தரும் நிதியே ஆதாரமாக மாற துவங்கின. இதனால் புதிதாக ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்கள் அவர்கள் நாட்டின் தொழில்வளர்ச்சி, குறிப்பாக பெருநிறுவனங்கள் ஈட்டும் லாபத்தை தானியங்கி தொழில்நுட்பங்களின் மூலம் பன்மடங்காக பெருக்குதல் மற்றும் நாட்டின் பாதுகாப்பு, குறிப்பாக குறுகிய நேரத்தில் அதிக பட்ச அழிவை ஏற்படுத்தும் ராணுவ தளவாடங்களை உருவாக்குதல் மற்றும் எதிரி தேசங்களை நூதன முறைகளில் கண்காணித்தல் ஆகிய குறுகிய வட்டங்களுக்கு வெளியே சிந்திக்காத வாறு பாடத்திட்டங்களும் கொள்கை வரையறைகளும் அப் பல்கலைக்கழகங்களில் அமைக்கப்பட்டன. இவ்விரு வட்டங்களுக்கு வெளியே உதாரணத்திற்கு விவசாய வளர்ச்சிக்கோ அல்லது சமூகத்தின் ஒட்டு மொத்த மேம்பாட்டிற்கோ ஏற்றவாறு புதிய ஆராய்ச்சிகளில் எவரேனும் ஈடுபட்டால் அவர்களுக்கு மானியம் கொடுப்பது மற்றும் அறிவுசார் ஆதரவளிப்பது போன்ற நடவடிக்கைகள் எல்லாம் உடனடியாக நிர்வாகத்தால் நிறுத்தப்பட்டன.
1940களில் தொடங்கிய இந்த போக்கு அடுத்த இருபது ஆண்டுகளில் அமெரிக்க சமூகத்தில் வெளிப்படையான பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த தொடங்கியது.
ஒரு நாட்டின் வளர்ச்சியில் தொழில்நுட்பத்தின் பங்கு தான் எத்தகையது? ஒரு நவீன ஜனநாயக அரசானது தனக்கு நிதி ஆதாரமாய் இருக்க கூடிய தனது மக்கள் தரும் வரிப்பணத்தை வைத்து தான் புதிய பாடசாலைகளையும் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் உருவாக்குகிறது. அந்த கல்வி நிலையங்களில் நடத்தப்படும் ஆராய்ச்சிகளும் அவை உருவாக்கும் புதிய தொழில்நுட்பங்களும் அவற்றை சாத்தியப்படுத்துவதற்கு பணத்தை வாரி இறைத்த பொது மக்களின் வாழ்க்கை மேம்பாடு, வறுமை ஒழித்தல் ஆகிய நோக்கங்களின் பொருட்டு தான் நடைபெறுகின்றனவா?
அப்படி நடக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். அப்படி என்றால் சாமானிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு சிறிதும் உதவாத புதிய கண்டுபிடிப்புகளும் தொழில்நுட்பங்களும் யாருக்கு உதவும் பொருட்டு தான் நடை பெறுகின்றன ? செயற்கை நுண்ணறிவு (artificial intelligence), க்ரிப்டோ மற்றும் டிஜிட்டல் கரன்சி. இயந்திர வழி கற்றல்(machine learning), தகவல் அறிவியல் (data science) போன்ற வியக்கத்தக்க புதிய தொழில்நுட்பங்கள் மிகுந்து வளர்ந்து வரும் இதே யுகத்தில் தான் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் கூட தேறாத மக்களின் கைகளில் கிட்டத்தட்ட உலகத்தின் ஐம்பது சதவிகத்திற்கும் அதிகமான செல்வம் சேர்ந்திருப்பதென்பது வெறும் விபத்தா? அல்லது தொழில்நுட்பத்திற்கும் பெருமுதலாளிகள் மேலும் பன்மடங்கு வளர்ச்சியடைவதற்கும் நேரடியான தொடர்பு ஏதும் உண்டா?
ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தில் பயிற்சி பெற்று அதே தொழில் நுட்பத்தில் பத்து வருடம் வேலை செய்து அதில் செம்மை அடைந்த ஒரு ஐடி ஊழியர் திடீரென சந்தையில் உதித்திருக்கும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை உடனடியாக கற்று கொண்டு நிபுணத்துவம் அடையவில்லை என்றால் அவர் சட்டென்று பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார் எனில் அது யாருடைய குற்றம்? தொழில்நுட்பங்கள் மனித சமூகங்களுக்கு உதவி செய்யவும் அவர்கள் வாழ்வில் மேன்மையுறவும் கண்டுபிடிக்க படுகின்றனவா அல்லது அவர்களை மேலும் வறுமையில் தள்ளத்தான் உருவாக்க படுகின்றனவா?
தொழில்நுட்ப புரட்சிகள் ஒரு பெரிய சமூகத்தின் ஒரு மிகக்குறுகிய சிறுபான்மைக்கே பலன் அளிக்கும் எனில், அந்த தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மீதம் இருக்கும் ஒட்டு மொத்த சமூகமும் தன்னை தானே தகவமைத்து கொண்டு தான் ஆக வேண்டும் எனில், அப்படி செய்யாத பட்சத்தில் அச்சமூகம் வறுமையில் சிக்கி அழியும் எனில் மாற வேண்டியது சமூகத்தின் கடமையா அல்லது தொழில்நுட்ப வளர்ச்சி செல்லும் திசையும் அதனை இயக்கம் சக்திகளுமா ? நண்பர்கள் மூன்று பேர் அடையாரிலும் ஒருவர் ஆவடியிலும் இருக்கிறார் எனில் அவர்கள் நால்வரும் ஒன்றாக சந்திக்க முடிவு செய்தார்கள் எனில் அந்த ஆவடிக்காரர் அடையாருக்கு செல்வது சரியா அல்லது அந்த மூவரும் ஆவடிக்கு செல்வது உசிதமா ?
***
1960களின் துவக்கத்திலேயே அமெரிக்காவில் ஆராய்ச்சியும் சோதனை முயற்சிகளும் முடிந்த புதிய தொழில்நுட்பங்கள் சந்தைக்கு வர துவங்கின. குறிப்பாக இயந்திர கருவிகள் துறை (machine tools industry) சார்ந்த தொழிற்சாலைகளில் புதிய தானியங்கி தொழில்நுட்பங்களை பெரு முதலாளிகள் பயன்படுத்த துவங்கினர். அத்தனை ஆண்டுகள் மனித உழைப்பை சார்ந்திருந்த உற்பத்தி படுவேகமாக இயந்திரம் சார் உற்பத்தியாக மாறத்தொடங்கியது. மனித உழைப்பின் தேவை குறைய ஆரம்பித்த தொழிற்சாலைகளில் நிரந்தர ஊழியர்கள் அவசியமற்றவர்கள் ஆக தொடங்கினர். தற்காலிக தொழிலாளர்களும் ஒப்பந்த தொழிலாளர்களும் பணிக்கு அமர்த்தப்பட்டனர். அவ்வளவு ஏன் வழக்கமாக அந்த அந்த துறைக்கு தேவைப்படும் தொழிலாளர் எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவான ஊழியர்களே போதும் என்ற நிலை உருவானது. புதிதாகவும் தாற்காலிகமாகவும் சேர்ந்த ஊழியர்களால் தங்களது நிச்சயமற்ற மற்றும் குறுகிய பணிக்காலங்களின் காரணமாக பல ஆண்டுகள் தொடர்ந்து இயங்கி வந்த தொழிற்சங்கங்களில் சேர முடியாமல் போனது. வேலை இழந்த தொழிலாளர்களுக்கு மாற்று பயிற்சி அளிக்கப்படாததால் அவர்களுக்கு மற்ற இடங்களிலும் வேலை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டது. பெரு நிறுவனங்களால் புதிய இயந்திரங்களின் வழியாக சந்தையில் பொருள்களை மிக குறைந்த விலைக்கு வியாபாரம் செய்ய முடிந்தது. இதனால் சிறு முதலாளிகளும் பழைய தொழில்நுட்பங்களை தூக்கி எறிந்து மிகவும் விலை உயர்ந்த புதிய தொழில்நுட்ப சாதனங்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களும் பெருமளவில் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்ய துவங்கினர்.
இவற்றின் பயனாக எண்ணிக்கை சக்தி மற்றும் அனுபவமிக்க தொழிலாளர்களின் வழிகாட்டுதல் ஆகியவற்றை இழந்த தொழிற்சங்கங்கள் தங்களது பேரம் பேசும் சக்தியை இழக்க தொடங்கின. வேலை வாய்ப்புகள் பறிபோக ஆரம்பித்த சமயம் குறிப்பாக 1970களில் அமெரிக்கா மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேர்ந்தது. வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமான காரணத்தினால் மக்களின் வாங்கும் சக்தி பெருத்த அடிவாங்கியது. பொருளாதாரத்தில் பண்டங்களின் தேவை குறைந்ததனால் விலை வாசியும் குறைய ஆரம்பித்தது. இதனால் பெரு முதலாளிகளின் லாப விகிதம் மேலும் குறைய ஆரம்பித்தது. நஷ்டத்தில் இருந்து தப்பிப்பதற்கு மேலும் பல ஊழியர்களை பணி நீக்கம் செய்தன அந்நிறுவனங்கள். பண்டங்களின் தேவை குறைந்ததனால் அவற்றை தயாரிக்க தேவையான ஊழியர்களின் தேவையும் குறைந்தது. பொருளாதார நெருக்கடி தீர்க்க முடியாத நிலையை அடைந்தது. பாதிப்படைந்த முதலாளிகள் அரசாங்கத்தை மிரட்டி நிதி சலுகைகள் மற்றும் தங்களுக்கு அனுகூலம் அளிக்க கூடிய தொழிலாளர் விரோத சட்டங்களையும் நிறைவேற்றி கொள்ளும் நிலை ஏற்பட்டது. அத்தனை வருடங்கள் தொழிற்சங்கங்களின் தொடர் போராட்டங்களினாலும் பெருகி வந்த பொதுவுடைமை கருத்துக்களின் ஆதிக்கத்தினாலும் உழைக்கும் மக்கள் பெற்று வந்த உரிமைகள், சலுகைகள் ஆகிய அனைத்தையும் மீண்டும் முதலாளிகளுக்கே தாரைவாக்கும் நிலை ஏற்பட்டது.
இந்த நீண்ட நெடுங்கதையை தமது உற்பத்தி சக்திகள் (Forces of Production by David F Noble) என்னும் 1984இல் வெளிவந்த நூலின் மூலம் எக்கச்சக்க தரவுகள், பல தொழிற்சங்க தலைவர்கள், தொழில் வல்லுனர்களின் கட்டுரைகள், செய்தித்தாள் மேற்கோள்கள் ஆகியவற்றின் துணை கொண்டு மிக வீரியமாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர் டேவிட் நோபல்.
‘விவசாயிக்கு உழைக்க தெரியும், மருத்துவருக்கு மருத்துவம் தெரியும், அரசனுக்கு தானே ஆள தெரியும்?’ என்ற ஒரு வசனம் எம் ஜி ஆர் நடித்த நாடோடி மன்னன் படத்தில் வரும்.
அதே உவமையை கொண்டு என்னிடம் சிலர் இப்படி கூறுவதுண்டு: ‘தொழில்நுட்ப துறை சார்ந்த ஆராய்ச்சிகள் புது கண்டுபிடிப்புகள் செல்லும் போக்கு ஆகியவற்றை அந்த அந்த தொழிலை நடத்தும் பெருமுதலாளிகளே தீர்மானிப்பதில் என்ன தவறு? அவர்களது பட்டறிவுக்கும் நிபுணத்துவத்திற்கும் தெரியாததையா நம் போன்ற சாமானியர்கள் கண்டுபிடித்து விட போகிறோம்?’
நோபல் எழுதிய அந்த புத்தகத்தில் தானியங்கி சாதனங்கள் கோலோச்சும் நிலை வருவதற்கு முன்னால், முதலாளிகள் மற்றும் முதலாளிகளின் அடிவருடியாய் செயல் பட்டு வந்த சில மேலாளர்களின் துணை மற்றும் தலையீடு இல்லாமலேயே ஒரு சில சமயங்களில் தொழிலாளிகள் தங்களை தாங்களே மேற்பார்வை செய்து கொண்டு தங்களது அனுபவ மற்றும் துறை சார்ந்த அறிவைக்கொண்டு கண கச்சிதமாக திட்டமிட்டு முதலாளி நிர்ணயித்த அதே மாதாந்திர உற்பத்தி இலக்கை அதிக பட்ச கடின உழைப்பில்லாமலேயே அடைந்து வெற்றி பெற்ற கதைகளையும் விளக்குகிறார்.
அது மட்டும் அல்லாது புத்தகத்தின் இடையில் வேறொரு முக்கியமான நிகழ்வையும் குறிப்பிடுகிறார் நோபல். இயந்திர கருவிகள் துறையில்(machine tools industry) எண்ணியல் கட்டுப்பாடு (Numerical Control) என்ற புதிய, பின்னாளில் பிரசித்தி பெற்று விளங்கிய ஒரு தானியங்கி தொழில்நுட்பம் முதலாளிகளுக்கும், தொழிற்சாலைகளை நிர்வகித்த மேலாளர்களுக்கும் புரிந்து கொண்டு செயல்படுத்த பெரிய சவாலாக இருந்ததாம். அந்த தொழில்நுட்பத்திற்கு பதில் ரெகார்ட் பிளேபாக் (Record Playback) என்ற மிகவும் கச்சிதமான மற்றும் சுலபமான அதே நேரத்தில் செலவு குறைந்த தொழில்நுட்பம் ஒன்றும் வளர்ந்து வந்ததாம். ஆனால் செலவுகளை குறைத்து லாபத்தை கூட்ட சாத்தியமுள்ள ரெகார்ட் பிளேபாக் தொழில்நுட்பத்தை முதலாளிகள் விரும்பவில்லையாம். காரணம் அதிக லாபத்தைத் தந்தாலும் அதனை கட்டுப்படுத்த தேவையான ஊழியர்களின் எண்ணிக்கை எண்ணியல் கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்திற்கு தேவையான எண்ணிக்கையை விட சற்று அதிகமாம்!
– ஜீவா
நூல் அறிமுகம்: சு.ஹரிகிருஷ்ணன் பெ.சசிக்குமாரின் ’ரயிலே ரயிலே’ – இரா.சண்முகசாமி
நூல் : ரயிலே ரயிலே… (வரலாறு – அறிவியல் – தொழில்நுட்பம்)
விலை: ரூ.170/-
ஆசிரியர்கள் : சு.ஹரிகிருஷ்ணன், முனைவர் பெ.சசிகுமார்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
ஆண்டு : பிப்ரவரி-2022
Email : bharathiputhakalayam@gmail.com
www.thamizhbooks.com
ரயிலை நேசிக்காத குழந்தைகள் உண்டா. சிறியவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் ரயிலை பார்த்தால் அவர்களின் மனம் சிறிய குழந்தைகளின் உயரத்திற்கேச் சென்று உயர பறக்கும். அந்தளவிற்கு ரயிலை நேசிக்காதவர்களே இல்லை எனலாம்.
ரயிலின் வெளித்தோற்றத்தை மட்டுமே கண்டு மகிழ்ந்த என்னைப் போன்றவர்களுக்கு அதன் முழுத் தகவலும் கிடைத்தால் மனம் மகிழ்ச்சியில் துள்ளத்தானே செய்யும்.
ஆம் இந்நூலின் ஆசிரியர்கள் இருவரும், பள்ளி ஆசிரியரும், அவருடைய பள்ளி மாணவர் ஒருவரும் அம்மாணவனின் வீரதிர செயலுக்காக விருது பெறும் நிகழ்ச்சியில் பங்கெடுக்க கோவையிலிருந்து இரண்டு நாள் ரயில் பயணத்தில் டெல்லி செல்லும் வழியில் உரையாடல் நடத்துவது போன்று மிக இயல்பாக எழுதப்பட்ட நூல் இது என்றால் மிகையல்ல.
நானெல்லாம் ஆரம்பத்தில் ரயிலில் உட்கார்ந்து செல்லும் சீட் மட்டுமே இருக்கும் என்று நீண்ட காலம் எண்ணியிருந்தேன். என்னுடைய எண்ணத்தை நொறுக்கும் விதமாக இந்தியன் வங்கி ஊழியர் தோழர் ஜெ.மனோகர் அவர்கள் ஒருமுறை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் நடத்தி வரும் ‘தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு’ நிகழ்ச்சி ஒன்றில் குழந்தைகளோடு செல்வதற்கான வாய்ப்பாக நாகர்கோயில் மாநாட்டுக்காக என்னையும் பல நண்பர்களுடன் சேர்த்து அழைத்துச் சென்றிருந்தார். “ம் சரி எவ்வளவு நேரம் உட்கார்ந்து போகப் போறோமோ” என்று நினைத்து ரயிலில் ஏறினேன். எனக்கு ஒரு சீட்டை காண்பித்தார். நானும் உட்கார்ந்துவிட்டு என்னோடு இன்னும் மூன்று நான்கு பேர் உட்கார வருவார்கள் என்று சீட்டின் ஓரமாக உட்கார்ந்திருந்தேன். ‘என்ன ஓரமா உட்கார்ந்திருக்கீங்க இந்த சீட் முழுவதும் உங்களுக்குத்தான். இரவில் நன்றாக தூங்கலாம் இது ‘படுக்கை சீட்’ என்று கூறினார். அப்படியே ஆச்சரியத்தில் “என்னது தூங்கிகிட்டு போற சீட்டா, இப்படி ஒரு வசதி ரயிலில் இருக்கிறது என்றே இவ்வளவு நாளா தெரியாமல் இருந்திருக்கேனே” என்று ஆச்சரியப்பட்டேன். அன்றிலிருந்து கடந்த இருபது ஆண்டுகளாக பயணம் எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு தூரமும் ரயிலையே தேர்ந்தெடுத்தேன். இப்போது வரை ரயில் பயணம் என்றால் அது எவ்வளவு தொகையா இருந்தாலும் செல்போனில் டிக்கெட்டை எடுத்து விடுவேன். அப்படித்தான் ஒருமுறை ஏல முறையில் ரயிலில் நிமிடத்திற்கு நிமிடம் டிக்கெட் விலை எகிறிடும் வகையில் இருந்த முறையில் சாதாரண நாளில் ரூ.1300 இருக்கும் டிக்கெட் அன்று இணைய ஏலத்தில் மதுரையிலிருந்து விழுப்புரத்திற்கு ஏசி கோச்சில் ரூ.5,000 கொடுத்து டிக்கெட் எடுத்தேன். ரயில் பயணம் அவ்வளவு ஈர்ப்பு என்றால் பார்த்துக்குங்களேன்.
இப்போ டிக்கெட் எடுத்தாலும் GST, கேன்சல் செய்தாலும் GST என்று அடுத்த ஏலச்சீட்டு நடத்த ஆட்சியாளர்கள் தயாராகி விட்டார்கள்.
சரி சரி நம்ம புராணத்தை அப்புறம் வச்சிக்குவோம். விஷியத்துக்கு வர்றேன்.
ரயில் எப்படி இயங்குகிறது;
தண்டவாளங்களில் கோளாறு இருந்தால் எப்படி கண்டுபிடிக்கிறார்கள்; சிக்னல்கள் ஒரு மஞ்சள் விளக்கு, இரண்டு மஞ்சள் விளக்கு, சிவப்பு இதெல்லாம் எதைக் குறிக்கிறது; தண்டவாளம் வளைவா இருக்கிற பகுதிகளில் ரயில் கவிழாமல் செல்வது எப்படி; ஒற்றை தண்டவாளத்தில் ரயில்கள் எதிரேயும், பின்னாடியும் வரும் ரயில்கள் எப்படி ஒழுங்கு குலையாமல், எதிரே வரும் ரயிலுக்காக ரயில்வே பிளாட்பாரத்தில் ஓரம் ஒதுங்கி நின்று செல்கிறது; ரயில்வே ஓட்டுநர்களுக்கு எப்படி பயிற்சி கொடுக்கிறார்; சரியான பிளாட்பாரத்தில் எப்படி ரயிலை நிறுத்துகிறார்கள்; ரயில் எஞ்சினில் பிரேக் பிடித்தால் எல்லா பெட்டிகளும் எப்படி ஒரே நேரத்தில் நிற்கிறது;
(ரயிலில் பிரேக் சிஸ்டம் என்பது எஞ்சினுக்கு எதிர்புற மின்சாரத்தை கொடுத்தால் சக்கரம் முன்னோக்கி சுற்றுவதற்குப் பதில் ரீஜெனரேட் முறையில் பின்னோக்கி சுற்றுவது போன்று அமைத்து ரயிலில் பிரேக் பிடிக்கிறார்கள் என்று இப்போதுதான் புதியதாக கற்றுக்கொண்டேன்); ரயில்வே ஊழியர்கள் எப்படி ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள்; ரயிலின் வேகம் எப்படி மாறுபடுகிறது; பிரேக் பிடித்தால் எவ்வளவு தூரம் சென்று ரயில் நிற்கும் போன்ற எண்ணற்ற கேள்விகளை பள்ளி மாணவன் கேட்பது போல் அமைந்த உரையாடல் வழியில் மிகவும் அருமையாக எழுதப்பட்ட இந்நூலை அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டும்.
ஒரே ஒரு தகவல் மட்டும்
ரயிலை இயக்கும் ஓட்டுநர்கள் ரயிலை இயக்கிவிட்ட பின்பு சற்று ஓய்வு கிடைக்கும் என இதுநாள் வரை நினைத்திருந்தேன். ஆனால் இந்நூலை படித்தவுடன் மிகவும் அதிர்ந்தே போனேன். ஆமாம் ரயில் செல்லும்போது ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை ரயில் எஞ்சினில் இருக்கும் ரயில் இயக்கும் கணினி தொழில்நுட்பத் திறையில் அது கேட்கும் தகவலை கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையெனில் ரயிலில் ஓட்டுநர் இல்லையென்று ரயில் சந்தேகப்பட்டு ஒலி எழுப்பிக்கொண்டே இருக்கும். அதற்கும் பதில் இல்லையெனில் தானாகவே பிரேக் போட்டு ரயில் நின்றுவிடும். எவ்வளவு பெரிய தொழில்நுட்பம் இது என்று ஆச்சரியப்பட்டேன். ஓட்டுநர்கள் (லோகோ பைலட்டுகள்) அவ்வளவு தூரம் கண்ணுறங்காமல் ரயிலை இயக்கும் ரயில் எஞ்சினில் ஓட்டுநர்களுக்கு என்று ஒரு கழிவறை இல்லையேயென்பது எவ்வளவு வேதனை. அவசரமாக வந்துவிட்டால் அடக்கிக்கொண்டு அடுத்த ரயில் நிலையம் வரை பொறுத்திருக்கனும். அதுவும் ஒருநிமிடம், ரெண்டு நிமிடத்திற்குள் ஓடிவந்துவிட வேண்டும். இவ்வளவு கொடுமையான சூழலிலும் ரயில் ஓட்டுநர்கள் பயணிகளை மிகவும் பத்திரமாக பயணிக்க உதவுகின்றனர்.
இன்னும் இன்னும் நிறைய பொக்கிஷங்களை தென்னக ரயில்வே முதன்மை லோகோ ஆய்வாளர் தோழர் சு.ஹரிகிருஷ்ணன் அவர்களும், இஸ்ரோ விஞ்ஞானி தோழர் பெ.சசிகுமார் அவர்களும் மிக எளிய மொழியில் நமக்கு வழங்கியிருக்கின்றனர்.
அத் தோழர்களுக்கும், நூலை மிகச்சிறப்பாக வெளியிட்ட பாரதி புத்தகாலயத் தோழர்களுக்கும், இந்நூலை எழுத வழிகாட்டிய தோழர் ஆயிஷா இரா.நடராசன் அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளையும், நெஞ்சார்ந்த நன்றியினையும் உரித்தாக்குகிறேன்.
அனைவரும் இன்றே மேற்கண்ட முகவரியில் நூலை புக் செய்து வாசித்து உள்ளம் மகிழுங்கள் தோழர்களே!
தோழமையுடன்
இரா.சண்முகசாமி
புதுச்சேரி.
செல் : 9443534321.
‘நேனோ‘ வித அறிவு – ஆயிஷா. இரா. நடராசன்
21 ஆம் நூற்றாண்டின் அறிவியல் தொழில்நுட்பம் மனித உடலில் இருந்து மின்சாரம் எடுக்கும்… இரவில் சூரிய ஒளியை புவியில் தேவையானபோது படரவைக்கும் அறிவியலை அடையும். ஏனெனில் அது நேனோ அறிவியலாக இருக்கும் – மிக்சியோ காக்கூ, 1998 (இயற்பியல் அறிஞர்)
இருபத்தோறாம் நூற்றாண்டின் முதல் இரு பத்தாண்டுகள் முடிந்துவிட்டன. நமது தொடர்பு சொல் ‘அறிவியலே‘ இப்படி நான் இந்த கட்டுரையை தொடங்கும்போது நீங்கள் விநோதமாக பார்ப்பது இயல்புதான் நோம் சாம்ஸ்கி (அமெரிக்க மொழியியல் அறிஞர்) சொல்கிறார்.. ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒரு தொடர்பு (பிரதான) சொல்லை மனித சமூக அடையாளமாக நாம் காணலாம். நோய்தொற்று…. பெட்ரோல் டீசல்விலை… ஜி.எஸ்.டி அது இது என்று இந்த நூற்றாண்டு அல்லோகல்லோ பட்டாலும் ‘அறிவியல்’ என்பதே இந்த இரண்டு பத்தாண்டுகளுக்கும் கடவு சொல்லாக உள்ளது.
“இந்த நூற்றாண்டின் அறிவியல் இருவிதமாக செயல்படுகிறது” என்று அறிஞர் மார்க் பர்க்கர் (ஜாக் மார்பர்க்கர் -2009) கூறிப்பிடுவார். ஒன்று ஆர்வ மேலிட்டு அறிவியல் மற்றொன்று தேவை மேலீட்டு அறிவியல். ஆர்வ மேலீட்டு கண்டுபிடிப்பு உருவாக்கிய தொலைநோக்கி (கலீலியோ) தேவை மேலிட்டு கண்பார்வை கண்ணாடி 4 லென்சுகளை மேம்படுத்தியது ஒரு புரட்சி என்றால் ஆர்வ அறிவியல் தொழில் புரட்சிக்கு வித்திட்டதா அல்லது தொழில் புரட்சி காரணமாக ஆர்வ அறிவியலில் அதிவேக மாற்றங்களை ஏற்பட்டதா என்று ஒரு விவாதம் இன்றும் தொடர்கிறது.
எது எப்படியோ இந்த 21ம் நூற்றாண்டின் பிரதான மனித பயன்பாட்டு கடவுச்சொல் அறிவியல் என்று ஏன் சொல்கிறோம் என்பதை நாம் சற்றே விரிவாக அலசவேண்டும். கைபேசி முக்கிய காரணம், அத்தோடு இன்னபிற உபயோகிப்பு அன்றாட சாதனங்கள், மாட்டு வண்டிகாரர் கூட ஜிபிஎஸ் பயன்படுத்திடும் விந்தையை ஜியோகிராஃபிகல் தொலைகாட்சி சானலில் பார்த்து வியந்தேன். நோய் பரவல் காலத்தில ரத்த ஆக்ஸிஜன் அளவு அறிய பலர் ஆக்ஸியோ பல்ஸ் மீட்டரை வீட்டிலியே வாங்கி வைத்தது வரை எல்லாமே கருவிமயம் ஆகிவிட்டது ஆன்லைன் கல்வி, இணைய ரயில் டிக்கெட், இ-மெயில் கடிதங்கள், செயற்கை கருத்தரிப்பு, திருப்பதி ஆன்லைன் தரிசனம் என்று வெளுத்து வாங்குகிறார்கள். அறிவியலே வெகுஜன கடவுச்சொல். ஆனால் இன்றைய 21ம் நூற்றாண்டு அறிவியல் வாதிகளின் கடவுச்சொல் எது. அதுதான் நேனோ, நேனோ தொழில் நுட்பம். சாதாரண மக்கள் அறிவியல் அறிவியல் என பதறவேண்டுமானால் விஞ்ஞானிகள் தொழில்நுட்ப நிபுணர்கள் நேனோ நேனோ என்று துடிக்கவேண்டும்.
தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய் (Necessity is the mother of inventions) என்பது உண்மைதான் என்றாலும் அந்தத் ‘தேவை’ மிக சரியாக எது என்பதை அடைவதே பெரிய சவாலாக இருக்கிறது. பிரெஞ்சு எல்லையில் ஜெனிவாவில் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் (CERN) விஞ்ஞானிகள்தான் www (World Wide Web) எனும் இணையத்தைத் தொடங்கினார்கள். மாபெரும் ஹாட்ரான் மோதுவி எனும் பிரமாண்ட இயற்பியல் துகளியல் செய்களக் கருவி சார்ந்து 10,000 இயற்பியலாளர்களோடு உலக அளவில் தங்களது அன்றாட கணக்கீடுகள் கண்டுபிடிப்புகளை பகிர்ந்திட அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. டிம்-பெர்னர்-லீ எனும் (டிம்பெல்) கணினிப் பொறியாளர் ஐ.எஸ்.டி எனப்படும் சர்வதேச டிரங்க் கால் தொலைபேசி அமைப்பை கணினிகளில் இணைத்து செர்வர் எனும் அமைப்பிற்கு அடிகோலினார். ஒரு சரியான கூரியர் சேவை –நேரடியாக –தந்தி சமிக்கை வழியே அதை மேலும் விலை குறைவாக செய்திருக்கமுடியும் என்று 1999ல் தணிக்கை குழு அவரை கண்டித்தது. இன்று அப்படி யாராவது சொன்னால் சிரிப்பார்கள் இணையப் புரட்சியே நேனோ புரட்சியின் முதல்படி என்பதை அப்போது பலரும் அறியவில்லை.
![]()
இன்னும் கூட தெளிவாக நேனோவின் அருமையை நாம் அறியவேண்டுமெனில் இன்னொரு வழி இருக்கிறது. உங்களது ஸ்மார்ட்ஃபோன் எனும் கைபேசியில் ஒரு காலத்தில் தனித்தனி கருவிகளாக இருந்த புகைபட கருவி, வீடியோ ரெக்கார்டர், ஒளி பதிவுக் கருவி, தட்டச்சு கருவி, திசைகாட்டும் கருவி, டி.வி. ரேடியோ உட்பட 16 கருவிகள் அந்த குட்டி இடத்தில் அழகாக வாகாக அடைந்து கொண்டு அசத்துவது நேனோ தொழில்நுட்பம் எனும் புதிய அறிவியலால்தான். இன்று வகுப்பறை கூட ஆன்லைன் வகுப்பறை என்றான பிறகு இந்த 21 ம் நூற்றாண்டின் மனித வாழ்வை முழுமையாய் ஆக்கிரமித்து பலபடி நிலைகள் உயர்த்தபோகும் அறிவியலை அது இன்னது என்று முழுமையாக அறியும் அவசியம் இருக்கிறது.
அது என்ன நேனோ தொழில் நுட்பம்? சாதாரண அறிவியல் தொழில் நுட்பத்திற்கும் அதற்கும் என்ன வித்தியாசம்? அணுக்கள் எவ்வளவு சிறியனவோ, மூலக்கூறு ஒன்றின் அளவு எத்தனை மிகமிக சிறிதோ அந்த அளவை அளவீடாக (Scale) கொண்டு அதற்குள் நுண்ணிய ‘பொருட்களை’ கண்டுபிடிப்புகளை, கருவிகளை உருவாக்க ஆய்வுகள் நடக்கும்துறையே நேனோவியல் ஆகும். நேனோ எனும் சொல் ஒரு அலகை குறிக்கும். 1960ல் நேனோ எனும் சொல் அறிமுகம் ஆனது. நேனஸ் என்பது லத்தின் மொழியில் குள்ள சாத்தான், சித்திர குள்ளன் என்ற அர்த்தத்தை குறிக்கும். ஆகச் சிறிய கண்ணுக்கே புலப்படாத அந்த அளவீட்டு உலகை புரிந்து கொள்வது எளிது. ஒரு நேனோ மீட்டர் என்பது ஒரு மீட்டர் நீளத்தில் ஒரு பில்லியனாவது துகள். அதாவது ஒரு பில்லியன் நேனோ மீட்டர்தான் ஒரு மீட்டர் ஹைட்ரஜன் அணுவைவிட பத்துமடங்கு விட்டம் . இதை புரிந்து கொள்ள இன்னொரு வகையில் முயற்சிப்போம். நமது தலைமுடியின் விட்டம் (அகலம்) எவ்வளவு. ரொம்ப குட்டிதான் அல்லவா. அது 80000 நேனோ மீட்டர்கள்‘!.
அந்த அளவிற்கு மிகமிகமிக சிறிதாக துகளாக்கப்பட்ட அளவில் வேதிப்பொருட்களை கையாளும்போது இயற்பியல் வேதியியல் விதிகள் அங்கே பொருந்துவதில்லை. தமிழில் சிலர் இதை மீநுண் தொழில்நுட்பம் என்றும் அழைக்கிறார்கள். பெரிய பொருட்களை கருவிகளை செய்ய இரும்பை பயன்படுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் அந்த இரும்பை நேனோ துகள்களாக்கி துல்லியமாக அணு அளவிலும் மூலக்கூறு அளவிலும் தூளாக்கி பிறகு கையாண்டு செய்தால் அதுவே நேனோ தொழிற்சாலை. ஒரு வேதிப்பொருளின் நிறம், பலம், மின்கடத்தல் திறன், கதிர் வீச்சு தன்மை என யாவுமே நேனோ அளவிலும் பொது அளவிலும் முற்றிலும் வேறுபடுகின்றன. உதாரணமாக கார்பன் நேனோ குழாய்கள் வார்ப்பிரும்பை விட 100 மடங்கு பலம் வாய்ந்தவை. ஆனால் ஆறுமடங்கு எடை குறைவானவை.
‘நேனோ தொழில் நுட்பம் ’ எனும் பதத்தை அறிமுகம் செய்தவர் எரிக் டிரெக்ஸ்லர். வருடம் 1986. ஆனால் இந்த யோசனை 1959ல் இயற்பியல் அறிஞர் ரிச்சர்டு ஃபைன்மனால் There is plenty of Room at the Bottom’ எனும் பிரபல அறிவியல் உரையில் தொடங்கி வைக்கப்பட்டது. அந்த பேருரையில் ரிச்சர்டு ஃபைன்மன் அணுக்களை அவற்றின் அதே அளவில் தனித்தெடுத்து கட்டுப்படுத்தி உருவாக்க முடிந்த பொருட் தொகுப்பின் சாத்தியங்கள் பற்றி விவரித்தார். ஆனால் டிரெக்ஸ்லர் தனது ‘நேனோ தொழில்நுட்பயுகம்’ எனும் 1986 நூலில் ஃபைன்மனோடு ஜப்பானின் நோரியோ தானிகுச்சி எனும் அறிஞரின் பொறியியல் கோட்பாடுகாளை இணைத்தார். இந்த ‘நேனோ தொழில் நுட்பம்’ புத்தகம்தான் முதன்முதலில் நேனோ அளவீடு அளவிற்கு முற்றிலும் தனித்தெடுக்கப்பட்ட நுண் துகள், அணுகட்டுப்பாட்டின் வழியே தன்னையும் உருவாக்கிக்கொண்டு பிறவற்றையும் புனையும் ஆற்றலை பெறுகிறது என அறிவித்தது. அது அற்புதமான திருப்புமுனை.
ஆனால் யாராலுமே கண்களால் காணமுடியாத அந்த நுண் உலகை புரிந்து செயலாற்றுவது எளிதாக இருக்கவில்லை. அதற்கான வழி 1981ல் பிறந்தது. ஊடுருவும் அலகீட்டு நேனோ நுண்நோக்கி. சூரிச் ஆய்வகத்தின் (ஜெர்மனி) ஜெர்டு பென்னிகு மற்றும் என்ரிச் உரோகிரர் ஆகியோர் அதை சாதித்தனர். 1986ல் இவர்களோடு குவேட் எனும் அறிஞரும் இணைந்து அணுவிசை நுண்ணோக்கியை கண்டுபிடிக்க பிறந்தது நேனோ யுகம்.
நேனோ துகளாக்கி ஒரு கருவியை உருவாக்குவதால் என்ன பயன்? சொன்னால் நம்ப மாட்டீர்கள். உங்களது கைபேசி சாதாரண தனிமத்தால் சாதாரண முறைபடி உருவானால் முதலில் இத்தனை பயன்பாடுகளை அடக்கமுடியாது. அப்படியே செய்தாலும் ஒரு மணிநேரம் நீங்கள் இழுக்கும் இழுப்பிற்கு (தடவும் தடவுக்கு) உங்கள் வீட்டு மின்சார பில்லை கட்ட வங்கியில் லோன் போடவேண்டி இருக்கும். நேனோ அளவுக்கு துகளான பிறகு ஆற்றல் மேம்பாடு உறுதி. அத்தோடு பயன்படுத்தும், செலவீனமாகும் ஆற்றலோ மிகமிக குறைவு. புகை இல்லாத சுற்று சூழலுக்கு உதவிடும் தொழில்நுட்பம் குறிப்பாக உடல்நலம் மற்றும் சுகாதார துறைக்கு நேனோ மிகமிக உதவியாக பல காரியங்களை செய்கிறது. மிக குறைவான விலை, மிக அதிக உற்பத்தி. நேனோகருவிகள் சிறியவை, எடைகுறைவானவை இப்படி நேனோ ஆதரவாளர்கள் ஆடுக்கிக்கொண்டே போகிறார்கள்.

குறிப்பாக சுகாதாரத்துறை, மருத்துவ உலகம் நேனோ தொழில் நுட்பம் நுழைந்த பிறகு முற்றிலும் மாறி இருக்கிறது. நேனோ ஒளிப்பட கருவிகளை ரத்த நாளங்களில் செலுத்தி புதுவகையான மருத்துவத்திற்கே வழிவகை செய்திருக்கிறார்கள். மலேரியா நுண்கிருமி ஒழிப்பில் 2005ல் பிரமாண்ட சாதனை. இப்போது நேனோ தொழில்நுட்பம் மருத்துவ துறையோடு கைகோர்த்து கோவிட் வைரஸை முற்றிலும் விவரித்து தடுப்பு முறைகளையும் முன்வைக்கிறது.உடலில் எந்த உள் உறுப்பில் பிரச்சனையோ அந்த உறுப்பிற்கு நேனோ மருந்து குறிப்புகளை நேரடியாக அனுப்பி வைத்தியம் பார்க்கும் துரித – சிகிச்சை! நாம் தையல்கடையில் அர்ஜெண்டா ஆர்டினரியா என – தைத்த ஒரு காலம் இருந்தது அல்லவா. இப்போது நேனோ மருத்துவத்தில் அதுதான் பேஷன்.
அரேபிய பாலைவனத்தில் தண்ணீரை மறுபடி மறுபடி பயன்படுத்த உதவும் நேனோ சுழற்சி இந்த பத்தாண்டுகளின் அற்புதம். முற்றிலும் நஞ்சான நீரைக்கூட உயிர்ப்புடன் மீட்கும் நேனோ வடிகட்டிகள் வந்துவிட்டன. பல நாடுகளில் இன்று விவசாயத்திலும் நேனோ புகுந்துவிட்டது. மிகசிறிய சென்சார்களை நிலங்களில் பயிர் மேல்தூவி எங்கோ பல மைல் தொலைவிலிருந்து விளையும் அளவு பூச்சிகளின் படையெடுப்பு என அறிந்து செயல்படும தொழில் நுட்பம் அது. கூடவே நேனோ உரங்கள் உணவுப்புரட்சிக்கு நடைபோடுகின்றன. உள்ளத்திலேயே அற்புதமானது உப்புமண் போன்ற விளைச்சலுக்கு முற்றிலும் தகுதியே இல்லாத மண்ணில் அல்லது நிலத்தடி நீர் வற்றிய சூழலில் மிகவும் வரண்ட பூமியில் நேனோ –அளவீட்டிற்கு விளை பயிர்களின் மரபணுக்களை லேசாக உருமாறறம் செய்து காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி விளையும் பேராற்றலை சீனாவில் தரமுடிந்திருக்கிறது நேனோ உணவு என்றே தனிகலாச்சாரம் அங்கேயிருந்து கொரியா, தான்சானியா , ஜார்ஜியா (பனி) என விரிவடைந்தும் வருகிறது.
2004 வரை கடலில் எண்ணெய் கப்பல்கள் கவிழ்ந்தால் கடலில் அந்த பகுதியில் எப்படியான பேரழிவு ஏற்பட்டு வந்தது என்பதை நம்மால் நினைவு கூற முடியும். இன்று நிலமை அப்படி இல்லை. நேனோ துகள்கள் கடலில் சில மணி நேரங்களில் எண்ணெய் அகற்றி பழையபடி ஆக்கிவிடும் சூப்பர் வேக தொழில்நுட்பம் அறிமுகம் ஆகி உள்ளது. மணலில் இருந்து எண்ணெயை பிரித்து, பாறைகள், கடலின்நீர், பறவைகளின் இறகுகள் என யாவற்றையும் சிலமணி நேரங்களில் பளிச்சென மாற்றிவிடுகிறது. ஹெலிகாப்டரில் இருந்தபடி நேனோதுகள் சுத்திகரிப்பான்களை தூவி அசத்துகிறார்கள்.
முப்பரிமான – உற்பத்தி (3D Production Technology) தொழில்நுட்பம் இன்று நான்காவது தொழிற்புரட்சி என்று அழைக்கப்படுகிறது. விண்வெளிக்கு பொருட்களை கொண்டு செல்லும் செலவை நேனோ தொழில்நுட்பம் குறைத்துவிட்டது. சாதாரண கம்பிகள் முதல் பெரிய படகுகள் வரை தயாரிக்கிறார்கள். நேனோ தொழில்நுட்ப பயன்பாட்டின் கதாநாயக தனிமம் கார்பன்தான். கார்பன் நேனோ டியூப்களை நம் இந்தியாவில் பஞ்சாபின் மொஹாலியில் உற்பத்தி செய்கிறார்கள். இந்த கார்பன் நேனோ டியூப்கள் எடைகுறைவான வடிவமைக்க எளிதாக உள்ள, வெப்பத்தை மிககுறைவாக வெளிப்படுத்தும், மின்சாரத்தை அட்டகாசமாக கடத்தும், செயல்திறன் மிக்கவை. ஆயிரக்கணக்கான விதமாக பிற நேனோ தனிமங்களோடு கலந்து பல பொருட்களின் உற்பத்தியில் உதவக்கூடியது. நமது கைபேசிகள் போட்டோ வோல்டாயிக்வகை நேனோ வொயர்களை பயன்படுத்துகின்றன. அதனால் கைபேசி உள்ளே இருக்கும் நேனோ வொயர்கள் (மின்கம்பி) வெளியே கூடதெரியாது.
நோனோ உயிரிதொழில்நுட்பம் பற்றியும் பார்க்க வேண்டும். அடுத்த பத்தாண்டின் அறிவியலாக அதுவே மலர உள்ளது. மருத்துவத்துறையில் நேனோ அறிவியலின் பங்குகுறித்து தினமும் ஒரு ஆயிரம் ஆய்வுக்கட்டுரைகளாவது வெளிவருகின்றன. புற்றுநோய் முதல் உயிர்கொல்லி நோயான எய்ட்ஸ்வரை வீழ்த்திட நாம் நேனோ யுகத்திற்குள் மெல்ல நுழைந்து கொண்டிருக்கிறோம்.
- நோய் பாதித்த திசுக்களை குணப்படுத்தும் தனிநோக்கத்தோடு கூட சிகிச்சை முறை
(Drug Trageting) பக்கவிளைவுகளை முற்றிலும் நீக்குகிறது. - சாதாரண மருந்துகளை விட அதிவீரியமிக்க ஆனால் குறைந்தஅளவு (mg)
எடுக்கத்தக்க நேனோ மாத்திரைகளை அறிமுகம் செய்கிறது. - முற்றிலும் சிதைந்த உயிரிசெல்களை நேரில் உடலுக்கு உள்ளே பயணித்து நேனோ
கருவிகள் செப்பனிட்டு தனித்து கவனம் செலுத்தி சரிசெய்யும் புதியமருத்துவம். - மரபணுக்களின் நேனோ ஆய்வு சந்ததி நோய்கள் அடுத்த சந்ததிக்கு பரவாமல் –
நோய் கடத்தும் டி.என்.ஏக்களை கண்டறிந்து மாற்றமுடியும். இப்படி
பலவிந்தைகள்.
உலக அளவில் இன்று மூன்றில் இரண்டு பங்கு ஆய்வுஉதவிகள் ஆய்வு நேனோ தொழில் நுட்பத்திற்கே ஒதுக்கப்படுகின்றன.பிரிட்டிஷ் பாலிசி ரிசர்ச் குழுமத்தின் மூத்த விஞ்ஞானி பால்மில்லர் கடந்த பத்தாண்டுகளில் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இத்துறை ஆய்வுகளுக்கு அரசுகள் ஒதுக்கியதாக கூறுகிறார். ஏறத்தாழ வளர்ச்சி அடைந்த மேற்கு உலகின் ஒவ்வொரு அறிவியல் சார்ந்த வருடாந்திர பட்ஜெட்டும் நேனோ – ஆராய்ச்சியை வைத்தே யோசிக்கப்படுகிறது.
மற்றபடி உலக அளவில் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் பிரேசில், சிலி, சீனா, இந்தியா, பிலிப்பைன்ஸ், தென்கொரியா, தென்அமெரிக்கா, தாய்லாந்து என பலநாடுகள் நேனோ போட்டியின் உச்சத்தின் உள்ளன. டொராண்டோவின் பயோ எத்திக்ஸ் மையம் இவற்றில் முன்னனி நாடுகள் என்று சீனா , தென்கொரியா மற்றும் இந்தியாவை பட்டியலிட்டுள்ளது.

இந்திய மண்ணில் வெறும் 60 கோடி பட்ஜெட்டோடு 1999ல் தொடங்கிய பயணம் இன்று வருடத்திற்கு 60,000 கோடி பட்ஜெட்டாக, வளர்ச்சி கண்டுள்ளது. 2013 வரையான ஐந்தாண்டுகளில் மட்டும் 23000 ஆய்வு கட்டுரைகள் (பிச்டி) சமர்பிக்கப்பட்ட பிரமாண்ட துறையாக நேனோ மாறிவிட்டது. தனிப்படை நேனோ ஆராய்ச்சி, மருத்துவ துறையில் நேனோ, தகவல் தொழில்நுட்பத்தில் நேனோ, பாதுகாப்பு தளவாட அறிவியலில் நேனோ, விண்வெளி ஆய்வில் நேனோ என்று பிரித்து இந்தியா கையாளுகிறது. நேனோ கட்டமைப்பு இயல், நேனோ எலெக்ட்ரானிக்ஸ் படிப்புகளை நாம் அறிமுகம் செய்து வளரும் தலைமுறையை தயார் செய்கிறோம். 2019ல் உலகஅளவில் நேனோ குறித்த ஆய்வுக்கட்டுரைகள் அதிகம் வெளியிட்ட நாடுகளின் பட்டியலில் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது . நேச்சர் நேனோ தொழில் நுட்ப சர்வதேச இதழில் இந்திய நேனோ விஞ்ஞானிகளான அரிந்தம் கோஷ் மற்றும் யமுனா கிருஷ்ணன் சர்வதேச அளவில் இந்திய நேனோ தொழில் நுட்பம் குறித்த ஆய்வுகளின் பங்களிப்பு குறித்து சிறப்பான கவனம் பெற்ற ஏழு ஆய்வுக் குழுக்கள் நன்னீர் தூய்மையாக்கலில் இருந்து ஆடை உற்பத்தி வரை இன்று பெரிய மாற்றங்களை விளைவித்ததை பதிவிட்டனர்.
நேனோ- தொழில்நுட்பம் குறித்த ஆபத்து என்று எதுவுமே இல்லையா. நேனோ தொழில்நுட்பம் எனும் பதத்தை நமக்கு அறிமுகம் செய்த எரிக் டிரெக்ஸ்லர் , தனது தன்னைத்தானே வடிவமைத்துக் கொள்ளும் இயந்திரங்களை நேனோ தொழில்நுட்பம் அறிமுகம் செய்யும் போது – அவை மிகுந்த ஆபத்தானவையாக மாறும் என்று எச்சரித்தார். இன்று நான்காவது தொழிற்புரட்சி என்பது யாருமே (நேரடியாக) தலையிட வேண்டிய அவசியமற்ற தன்னைத்தானே உற்பத்திசெய்து கொள்ளும் முப்பரிமாண உற்பத்தி (3D – Production) எனும் புதிய வகை தானியங்கி தொழிற்சாலைகள் ஆகும் . பல்கி – பால் எனும் நேனோ மூலக்கூறுகள் புவியில் புதிய சுற்றுசூழல் அச்சுறுத்தலாக மாறியும் வருகிறது. ‘பிளாஸ்டிக்கிற்கு மாற்று … ஆனால்.” என்று ஒரு கட்டுரையை சமீபத்தில் (டெஸ்லா ஆய்வகம், அமெரிக்கா, எழுவர்குழு) வாசித்தேன். தூக்கம் வரவில்லை. இன்று வெள்ளீயம் முதல் தங்கம், மெக்னீசியம் , தோரியம் என நேனோ துகள் இல்லாத இடம் புவியில் இல்லை. கடல் தூய்மை, தூய்மை உற்பத்தி என்பது நம் கண்களுக்குதான். இதோ அலகீட்டு நேனோ நுண்நோக்கி இதன் வழியே பாருங்கள் … என்கிறார்கள் இவர்கள். ஆனால் இந்தகட்டுரை எழுதப்படும் இந்த நிமிடம் வரை பெரிதாக அதனால் விளைவு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பதே ஆறுதல்.
எது எப்படியோ , நமது மகாக்கவி பாரதி அறிவியல் சம்பந்தமாக 1921 ம் ஆண்டு எழுதிய கட்டுரைக்கு ‘நானாவிதஅறிவு’ என்று தலைப்பிட்டார். அறிவு இதழ் என்று சூர்யோதயம் எனும் பத்திரிகை கூட தொடங்கினார். நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த யுகத்தில் இருந்திருந்தால் அவர் ‘நேனோ’ விதஅறிவு என்று தான் தன் கட்டுரைக்கு தலைப்பு வைத்திருப்பார். அந்த அளவுக்கு இன்று உலக அறிவியல், நேனோ அறிவியல் ஆகிவிட்டது என்பதே உண்மை.
துணை நின்றவை:
- எஞ்சின் ஆஃப் கிரியேஷன்ஸ் , எரிக்.கே.டெக்ஸ்லர் டபிள்டே வெளியீடு ISBN 978 – 0-385-19973-5.
- ஏ.ஹப்லர், டிஜிட்டல் நேனோ யுகம் , நேனோ வெற்றிடம் , நேனோ புரட்சி – காம்ப்ளக்ஸ் சிட்டி பிரஸ்.
- கார்பன் நேனோ டியூப்ஸ், மற்றும் ஆற்றல் மாற்றம் இ.ஷைன் – காம்ப்ளக்ஸ் சிட்டி பிரஸ்.
- நேனோ–மருத்துவம், ராஜிவ் சயானி, ஜர்னல் ஆஃப் கட்டேனியஸ், சர்ஜரி இதழ், 32-33
- இந்தியாவும் நேனோ தொழில் நுட்ப அறிவியலும் தற்போதைய நிலை- அரிந்தன்கோஷ் , யமுனா கிருஷ்ணன் www.nature.com/nnano/journal /v9/2019
••••
ஆயிஷா. இரா. நடராசன்
தேசிய விருதுபெற்ற அறிவியல் எழுத்தாளர்
eranatarasan@yahoo.com








