சாதியால் தமிழினம் சிதைந்து போக
சதியும் இங்கே
தொடருதடா – நாம்
செய்யும் செயலில் சிந்தனை இன்றி
சிதைந்து போனதால்
கெட்டதடா!
சாதிகள் இல்லா சமன்மை உலகை
சண்டை போட்டு
வெல்வோமடா – மனு
நீதி சொல்லும் நிழல்மனத் தவனை
நெருப்பில் போட்டு
கொல்வோமடா!
சாதிகள் பெயரால் சதிகள் செய்து
சண்டை மூட்டி
விட்டது யார்? – நம்மை
ஆதித் தமிழர் மீதித் தமிழர்
ஆகப் பிரித்து
விட்டது யார்?!
எத்தனைக் காலம் எதிரும் புதிருமாய்
மடிந்து கிடக்கப்
போகின்றோம் – நாம்
இத்தனைக் காலம் இருளில் கிடந்து
இன்னல் பட்டுச்
சாகின்றோம்!
கற்பி! ஒன்றுசேர்! களத்தில் சென்று
வென்று முடித்திட
வேண்டுமடா – நீ
கற்ற வழியில் கசடை நீக்கி
கதிராய் எழுந்திடத்
தூண்டுமடா!
சாதி வெறியில் சண்டைப் போட்டு
செத்து மடிந்தது
போதுமடா – மடமை
சாதிய உணர்வு சாகும் மட்டும்
சாகா திங்கே
வாழுமடா!
சாதிக்கு சாவு மணியை அடித்து
சரிநிகர் ஆக
வாழ்வோமடா-இல்லெனில்
சாதி மதத்தால் செத்து மடிந்து
சிறப்பை இழந்து
வீழ்வோமடா!
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.