வீடற்ற இயேசுநாதர் கவிதை – இந்திரன்

வீடற்ற இயேசுநாதர் கவிதை – இந்திரன்




வீடற்ற இயேசுநாதர்
**************************
வீடற்ற இயேசுநாதர் தூங்குவதைப் பார்த்தேன்
அதிகாலைப் பூங்காவின் பெஞ்சு ஒன்றில்

வெளியே தெரிந்த  பாதங்களில்
சிலுவையில் அறைந்த ஆணிகளின் ரத்தம் பார்த்துதான்
அவர் இயேசுநாதர் என்று தெரிந்து கொண்டேன்.

இரவெல்லாம் பெய்த பனித்துளி பல்புகள்
அவர் தலை போர்த்தித் தூங்கிய
அங்கியை ஈரமாக்கி இருந்தன.

மூன்றாம் நாளே உயிர்த்தெழுந்தவர்
தலைமறைவு வாழ்க்கையில்
நிறைய சுற்றிய களைப்பு
விடிந்த பிறகும் அவர் தூங்குவதில் தெரிந்தது.

தயங்கியபடி தட்டி எழுப்பினேன்.
தேவாலயங்களின் பிராரத்தனை பெஞ்சுகளில் தூங்காமல்
ஏன் இங்கே தூங்குகிறீர்கள் என்று கேட்டேன்.
தூக்கக் கலக்கத்தில் தாடியை நீவியபடி சொன்னார்
“ வீடற்றவர்கள் எல்லோருக்கும் வீடு கிடைத்த பிறகுதான்
நான் தேவாலயத்துக்குள் நுழைய முடியும்.”
—————————–—————————————————————————-
கனடிய சிற்பி டிமத்தி ஷ்மால்ட்ஸ் படைத்த சிற்பம்



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *