Pngai Thamizhan's Poems பாங்கைத் தமிழனின் கவிதைகள்




‘பரம்பரை’
*************
காய் கனியில்
கண்டறிந்து…
காய்க்கும் விதையை
பூக்கா செய்தார்!
பூவா விதையை
காயாய் செய்தார்!
குட்டிகள் போட்டதை
மலடாக்கினர்!

மலட்டு விலங்கினை
மாதாவாக்கினர்!
உயிரென ஒன்றை
உசுப்பேத்தியே…
உடைத்தார் உடைத்தார்
படைத்தவன் விதியை!
மரபணு மாற்றம்
என்றதை அழைத்து….

உலகினை அதிலே
மயங்கிட வைத்தார்!
தத்தரிகிட தித்தோம்
தத்தரிகிட தித்தோம்;
தந்தனத்தோம் தந்தனத்தோம்
தாளம் மாற்றி
மேளம் அடித்தார்!
மரபணு உடைக்கும்
மதியாளர் சொல்வீர்….

மனிதர் தம்மின் மரபணுவதிலே
மதங்கள் தெரிந்ததா?
சாதிகள் தெரிந்ததா?
ஏழையர் மரபணு
ஏய்த்தவன் மரபணு
ஏதும் தெரிந்தால்
எம்மிடம் கூறும்!
கொற்றப் பரம்பரை
வீரப் பரம்பரை

அடிமைப் பரம்பரை
அணுக்களில் உண்டா?
மரபணு மாற்றும்
மா மேதைகாள்
மாநிலம் அறிய
மறைக்காமல் சொல்லும்!

‘குயிலோசை கேட்போம்’!
********************************
இங்கிருந்து தொடங்கு
சாதியை
சமயத்தை
உணவை
பழக்க வழக்கத்தை
ஒன்றெனச்செய்!

காசு பணத்தை
சொத்து பத்தை
ஒரே அளவீடாக்கு!
நிலம் நீரை
சமமாக்கு !
குப்பை அள்ளுவதை
கோயிலில் அள்ளுவதை
சமப் படுத்து!

இப்போது வா…
எந்த மொழி குயில்மொழியோ…..
அதன் குரலோசையை
ஒன்றாகக் கேட்போம்!

‘இதுதான் தலையெழுத்தோ? ‘
************************************
மாபெரும் கற்பனைக் கதையான
மகா பாரத பீஷ்மனின்
அம்புப் படுக்கைக்காக
அழுது கொண்டிருப்போர்
இருக்கும் வரை….
பசித் தீயின்
படுக்கையில்
மடிந்து கொண்டிருப்போர்
மடிந்து கொண்டுதான்
இருக்க வேண்டும்…
இந்த நாட்டில்!

இன்றும்….
பாஞ்சாலிகளின்
துகில் உரிப்புக்காக
துடித்துக் கொண்டிருப்போர்
இருக்கும் வரை…
எங்கள்
இந்திய ஏழைச் சகோதரிகளின்
மானத்தைக் காக்க
எந்த
கலியுகக் கண்ணனும்
பிறந்த பாடில்லை!

எந்த சாமியும் வந்து
எனக்கு
கோடி கோடியாய்க் கொட்டி
கோட்டை நிகர்
கோயில் கட்டிக்கொடுங்களென்று
கோரிக்கை வைக்காத முன்பே….
ஆட்டை போடுவதற்காக
ஆலயங்கள் அமைப்போர்
இருக்கும் வரை….
அரையாடை பக்கிரிகளை
அடையாளம் காண்போர்
வரப் போவதில்லை!

மதம் பிடித்தோர்களால்
தேசம் ஆளப்படும் வரை
மண்ணள்ளிப்
போட்டுக்கொள்ள வேண்டியதுதான்
தேசத்தின் தலையில்!

‘வலி’
***********
அதெல்லாம் ஒன்றும் பெரியதாகக்
காயப்படுத்தி விடவில்லை….
பழகிவிட்டது.

தொடாமல் இருப்பது
தொட்டுக் கொடுப்பதை
தூர வைக்கச் சொல்வது
வீட்டிற்கு வெளியே நிற்க வைத்து
பேசி அனுப்பி விடுவது…
அவனுங்களுக்கென்ன
அரசாங்கத்துப் பிள்ளைகள் என்று
அர்ச்சனை செய்வது;

கேட்டுக் கேட்டு
திரும்பக் கேட்டு விட்டால்
திமிரப் பார்த்தியா?
என்று
கும்பல் சேர்வது!
எல்லாமும் கடந்து
வந்தாகி விட்டது!
அடுத்தவருக்கு
முற்பட்டோர்… பிற்பட்டோரென்ற….
தூரத்தைத் தாண்டுவது மட்டுமே…
தாண்டி வரக்கூடியத் தடை!

இல்லாமை
கல்லாமை
அறியாமை
தெரியாமை
வறுமை
தீட்டு
அய்யோ…..அம்மாடி
தாண்டவே முடியாதத்
தடைகள்… தடைகள்… தடைகள்!

எந்த
மவராசனோ
அவன்
காந்தியோ…. நேரோ….
பீமாராவோ…. காம
ராசனோ
ராமசாமியோ….
கோடி புண்ணியமடா சாமி!
உங்கள் குலம் தழைக்கட்டும்!

சட்டம் வகுத்தது உச்சம்
அதனை
திட்டமாக்கியதும் உச்சம்!
சாமிங்கடா நீங்கள்!!

ஒரே வகுப்பு
ஒரே வாத்தியார்
ஒரே பாடத் திட்டம்
ஒரே தேர்வு முறை….
சாதியின் அடையாளமற்ற
விடைத்தாள்!
முன்னப் பின்ன மதிப்பெண்!

பத்துல….
ஒன்றோ…. ரெண்டோ…
குமாஸ்தா…. காவலன்… ஏவலன்….
அரசாங்கத்தில் அனுமதி!
அப்பாடா….
ஏதோ பசி போக்கிக்கொள்ள
ஒரு வழி!

அப்பனுக்கு….
ஆத்தாவுக்கு….
தாத்தா பாட்டிக்கு
மாமன் மச்சானுக்கு
அக்காள் தங்கை அத்தைக்கு
அண்ணன் தம்பிக்கு
சித்தப்பன் பெரியப்பனுக்கு
சந்தோசம்ங்றதை விட….
சப்போர்ட் கிடைக்குமாம்!

“ஏன்டா?
எங்கள் சோற்றில்
மண்ணள்ளிப்போட்டேன்னு”
கன்னத்தில் அறைந்திருந்தால் கூட
காயம் பெருசா இருக்காது!

தலைமுறையின்
முதல் கவர்மென்ட் குமாஸ்தா
வேலையில் சேருவதற்கான
என்னோடப் படிப்புச் சான்றையும்….
ஜாதிச் சான்றையும்
சோதிக்கும்போது….

நான் வேலையில் சேரும்
அலுவலக ஆபிஸரின்
முகத்தைப் பார்க்கணுமே….
ப்ப்ப்பா………
ஆயிரமாயிரம் கருந்தேள்
கொட்டிய
வலி……
இன்னும் வலிக்குது சாமி!

‘கைத்தடி’
*************
உடலது தளரும் போது
உள்ளத்தின் வலிமை குன்றும்;
உள்ளமும் உடலும் சோர்ந்தால்
உறுதியில் உடைசல் தோன்றும்

எண்ணத்தில் வலிமை கொண்டும்
இயல்பது தளரும் நாளே
முதுமைதான் வந்த போது
இயலாமை இயல்பு தானே!

மூப்புக்குத் துணை யென்றாலும்
மூர்க்கரை விரட்ட எண்ணி
காந்தியார் கையில் கொண்டார்
கைத்தடிக் காலாய் கொண்டார்!

பெரியாரின் கையில் தானே
பெருந்தடி கையில் கொண்டார்
பேய்களாம் மூடர்க் கூட்டம்
பிய்த்திட எண்ணம் கொண்டார்!

பெரியோர்கள் கையில் தானே
பேசின கைத் தடிகள்;
சிறியோர்கள் கூட்ட மாக
சேர்த்ததும் கைத் தடியே!

இயலாமை கொண்டோ ரெல்லாம்
எடுத்தனர் ஆளுக் கொன்றாய்
இதைமக்கள் புரிந்துக் கொண்டால்
எடுத்தவர் தடுக்கி வீழ்வார்!

சாதியை கையில் தடியாய்
சமயத்தை கையில் தடியாய்
கட்சியை கையில் தடியாய்
கைகொண்டார் கை இல்லாதோர்!

வாழ்க்கையில் வலிமை குன்றி
வந்திட்டக் காலந் தன்னில்
கைத்தடி ஊன்று கோ(கா) லாய்
உதவிடும் துணையாய் நின்று!

உழைப்பினால் உடைந்து போனோர்
ஊன்றியே நிற்றல் வேண்டி
கைத்தடி எடுத்தல் ஒன்றும்
கடுங்குற்றம் இல்லை இல்லை!

ஊரினை வளைத்துக் கொண்டோன்
உட்கார்ந்து உண்போன் எல்லாம்
சாதிகள் சமயம் தன்னை
சதிசெய்ய எடுக்க வேண்டாம்!

ஊன்றுகோல் உள்நோக் கத்தை
உலுத்தர்கள் அறிய மாட்டார்;
கைத்தடி போலே மக்கள்
கையிலே சிக்க வேண்டாம்!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *