காங்கிரஸ் - ராகுல் காந்தி - பாரத் ஜோடோ யாத்ரா (Bharat Jodo Yatra - Gongress - Rahul Gandhi)

இந்தியனாக உங்கள் கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள், வரலாறுகளை மதிப்பது என்னுடைய கடமை : ராகுல் காந்தி

நாகாலாந்து மொகோக்சுங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி உரையாற்றினார். ராகுல் காந்தி உரை இங்கே தரப்பட்ட அன்பான, பாசம் மிக்க நாகா பாணி வரவேற்புக்கு எனது நன்றி. இப்போது இரண்டு நாட்களாக நான் உங்கள்…
Struggles pilgrimages to maintain democratic sentiments போராட்டங்கள் யாத்திரைகள்

ஜனநாயக உணர்வுகளைத் தக்க வைத்துக் கொள்வதற்கான போராட்டங்கள், யாத்திரைகள் 

ஜனவரி இருபத்தியிரண்டாம் நாள் நடைபெறவிருக்கும் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கான மாபெரும் பிரச்சாரம், அணிதிரட்டல் நடைபெற்று வருகின்ற வேளையில் இந்திய ஜனநாயகம், மதச்சார்பற்ற நெறிமுறைகளைச் சுயபரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் நமக்குத் தேவைப்படுகிறது. நாடு சுதந்திரம் அடைந்த உடனேயே…
வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையினை அரசு அளிக்கிறதா? – பேரா.பு.அன்பழகன்

வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையினை அரசு அளிக்கிறதா? – பேரா.பு.அன்பழகன்




பசுமைப் புரட்சியின் முதன்மையான நோக்கம், தொழில்நுட்ப மற்றும் நிறுவன ரீதியான மாற்றங்கள் வழியாக உணவு உற்பத்தியில் தன்னிறைவினை அடைதல் மற்றும் வேளாண்மை வளர்ச்சியினை எட்டுதல் ஆகும். எனவே, 1960களில் வேளாண் சார்புக் கொள்கைகளும், திட்டங்களும் வகுக்கப்பட்டன. இந்த அடிப்படையில், விவசாயிகளின் நலனை மேம்படுத்தவும், வேளாண் உற்பத்திப் பொருட்களின் விலை வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்கவும் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்பட்டு வருகிறது. வேளாண் பொருட்களின் உற்பத்தி அதிக அளவில் காணப்படும்போது அதற்கான சந்தை விலை குறைந்துவிடுகிறது, இதனால் விவசாயிகள் பெரும் இழப்பினைச் சந்திக்கின்றனர். எனவே, அரசே தன்னுடைய காப்பு இருப்புக்கு (Buffer Stock) தேவையானதை நேரடியாகக் கொள்முதல் மையங்களைத் திறந்து இடைத்தரகர்களின் தலையீடு இன்றி கொள்முதல் செய்கிறது. அப்போது அரசு அறிவிக்கின்ற குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு வேளாண் விளைபொருட்களை விவசாயிகளிடமிருந்து வாங்குகின்றனர். ஆனால், இந்த குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது சட்டப்பூர்வமானதல்ல. அரசின் முறைப்படுத்தப்பட்ட மண்டிகள், தனியார் மண்டிகளில் இது கட்டாய நடைமுறையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ் அரசு கொள்முதல் மையங்கள் நிலையாக ஆண்டு முழுவதும் செயல்படாது, அறுவடைக் காலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் இம் மையங்கள் செயல்படும். இதனால் இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளும் இவ் ஆதரவு விலையினால் பயன்பெற முடியாது. பொதுவாக விவசாயிகள் தங்களின் வேளாண் விளைபொருட்களைத் தனியார் மண்டிகள், வேளாண் விளைபொருட்களுக்கு இடுபொருட்களை அளிப்பவர்கள், தரகு முகவர்கள், அரசு அல்லது கூட்டுறவு போன்றவர்களிடம் விற்பனை செய்கின்றனர். இந்தியாவைப் பொருத்தமட்டில் வேளாண் உற்பத்தி பொருட்கள் சந்தை படுத்துதலில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இந்திய விவசாயிகள் தங்கள் விளைபொருட்களைப் பெருமளவிற்குத் தனியார்களிடம் விற்பனை செய்கின்றனர் (நெல் விற்பனையில் உத்திரப் பிரதேசம் 81.35 விழுக்காடும், மேற்கு வங்காளம் 87.58 விழுக்காடும், கர்நாடகா 95.45 விழுக்காடும், இது போன்று கோதுமை விற்பனையில் உத்திரப் பிரதேசம் 85.38 விழுக்காடும், குஜராத் 80.71 விழுக்காடும், ராஜஸ்தான் 76.17 விழுக்காடும் தனியார்களிடம் விற்கின்றனர்). தனியார்கள் வேளாண் உற்பத்தி பொருட்களைக் குறைந்தபட்ச ஆதரவு விலையைவிடக் குறைவான விலைக்கே வாங்குகின்றனர். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தில் மட்டுமே அதிக அளவாகக் குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரசு வேளாண் விளைபொருட்களை நேரடியாக இந்திய உணவுக் கழகத்திற்குக் கொள்முதல் செய்கிறது. இதற்கு முக்கியக் காரணம் இந்த மாநிலங்களில் நீர்ப்பாசன வசதி, அதிக உற்பத்தி திரன், நெல், கோதுமை அதிக அளவில் உற்பத்தி, சிறந்த சந்தைக் கட்டமைப்பு, அரசுக் கொள்முதல் மையங்கள் அதிக அளவில் செயல்படுவது போன்றவற்றைச் சுட்டிக்காட்டலாம். 2019-20ல் மொத்த நெல் உற்பத்தியில் 43.86 விழுக்காடும், கோதுமை உற்பத்தியில் 31.72 விழுக்காடும் தேசிய அளவில் அரசு கொள்முதல் செய்கிறது. பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, உத்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய நான்கு மாநிலங்களில் அதிக அளவில் அரசு நேரடி நெல் கொள்முதலைச் செய்கிறது. இதுபோல் ஹரியானா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்திரப் பிரதேசத்தில் அதிகமாகக் கோதுமையை அரசு நேரடியாகக் கொள்முதல் செய்கிறது (Gopi Sankar Gopikuttan et al 2022).

குறைந்தபட்ச ஆதரவு விலை

குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு அளிக்கப்படும் உத்தேசமான விலையாகும். இதில் விவசாயிகள் ஆதாயம் பெரும் வகையில் விலை தீர்மானிக்கப்பட்டிருக்கும். குறைந்தபட்ச ஆதரவு விலையானது பசுமைப் புரட்சி நடைமுறைப்படுத்தப்படும்போது விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான செலவு மற்றும் விலைக்கான வேளாண்மைக் குழுவின் (Commission for Agricultural Costs and Prices – CACP) பரிந்துரையின் அடிப்படையில் ஒன்றிய அரசு அறிவிக்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலையினை CACP, கணக்கிடும்போது, வேளாண் பொருட்களின் தேவை மற்றும் அளிப்பு, உற்பத்திச் செலவு, உள்நாட்டு வெளிநாட்டுச் சந்தையில் விலையின் போக்கு, விளைபொருட்களுக்கிடையே உள்ள விலையின் ஒப்புமை, வேளாண் மற்றும் வேளாண் சாரா வர்த்தக நிலை, உற்பத்தி செலவினை விடக் குறைந்தபட்சம் 50 விழுக்காடு விளிம்புநிலை, குறைந்தபட்ச ஆதரவு விலையினால் நுகர்வோருக்கு ஏற்படும் விளைவுகள் போன்றவை அடிப்படையாகக் கொள்கிறது. இவ்விலை வேளாண் பொருட்கள் கொள்முதல் செய்யும் போது கட்டாயம் அனைத்து கொள்முதல் செய்பவர்களும் பின்பற்றவேண்டியதில்லை. விவசாயிகளும் தங்களின் உரிமை என இவ்விலையினைக் கோரவும் முடியாது. அதாவது குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது சட்டப்பூர்வமானது அல்ல. 1966-67ல் முதன் முதலில் கோதுமைக்கு இவ்விலை (ஒரு குவிண்டாலுக்கு ரூ.54 நிர்ணயிக்கப்பட்டது) அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து டி.எல்.தந்த்வாலா குழுவின் பரிந்துரைப்படி நெல்லிற்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்கப்பட்டது. தற்போது 23 வகையான வேளாண் விளைபொருட்கள் (7 தானிய வகை, 5 பருப்பு வகை, 7 எண்ணெய் வித்துகள், 4 வாணிப விளைபொருட்கள்) குறைந்தபட்ச ஆதரவு விலைகள் அறிவிக்கப்படுகிறது (Udit Misra 2022). இவ்விலையினால் அதிக அளவிற்கு நெல், கோதுமை விளைபொருட்கள் பயன் அடைகின்றன. இவ் விளைபொருட்களுக்கு ஆண்டிற்குச் சம்பா (காரீப்), குறுவை (ரபி) ஆகிய பருவ காலங்களுக்கு விலை (நெல்லைப் பொருத்தமட்டில் சன்னரகம், சாதாரண ரகம் என தனித்தனியே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது) என பிரித்து ஒன்றிய அரசு அறிவிக்கிறது.

குறைந்தபட்ச ஆதரவு விலையினைத் தீர்மானிப்பதில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டுக் காரணிகளின் தாக்கமும் உள்ளடங்கியுள்ளது. பன்னாட்டுக் காரணிகளில் முக்கியமானது உலக வர்த்தக அமைப்பு ஆகும். இந்த அமைப்பின்படி மொத்த வேளாண் உற்பத்தி (2004ல்) மதிப்பில் 10 விழுக்காட்டுக்குமேல் மானியங்கள் வேளாண் விளைபொருட்களுக்கு அளிக்கக் கூடாது என்கிறது. இந்த அடிப்படையில் இந்தியா மீது பலநாடுகள் மானியம் அதிகமாக அளிப்பதாகத் தொடர்ந்து உலக வர்த்தக அமைப்பிடம் புகார் அளித்து வருகின்றன. ஆனால் உண்மையில் பல வளர்ந்த, வளரும் நாடுகளைவிட இந்தியா குறைவான அளவிலேயே மானியம் வழங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது (Nitya Nanda 2021). இந்தியாவில் 86 விழுக்காடு குறு, சிறு விவசாயிகள் ஆவார்கள், இவர்களுக்கு வேளாண் இடுபொருட்களான இரசாயன உரம், பூச்சிக்கொல்லி, விதை மற்றும் நீர்ப்பாசனத்திற்கு அரசின் மானியம் தேவையாக உள்ளது. மானியம் அளிக்கவில்லை என்றால் இவ்விவசாயிகள் பெரும் இழப்பினை எதிர்கொண்டு விவசாயத்தைவிட்டு அதிகமாக வெளியேறும் நிலை ஏற்படும், விவசாயத் தற்கொலைகளும் அதிகரிக்கும். மேலும் இந்தியா உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான ஏழைகளைக் கொண்டுள்ள நாடாகும். இதனைக் குறைக்க அனைவருக்கும் உணவு பாதுகாப்பு அளிக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, வேளாண் விளைபொருட்களுக்கு மானியங்கள் வழங்கி உற்பத்தியினை பெருக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. பன்னாட்டுத் தொடர் அழுத்தத்தின் காரணமாக 2020ல் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் (1.வேளாண்மை உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வணிபச் சட்டம், 2) வேளாண் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்தச் சட்டம், 3) அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்) அடிப்படையில் அரசு மானியங்களைக் குறைப்பதற்காகக் கொண்டுவரப்பட்டது. இச்சட்டங்களால் விவசாயிகள், வேளண்சார் முகவர்கள், அரசு மண்டிகள் பெருமளவிற்குப் பாதிப்படையும். குறைந்தபட்ச ஆதரவு விலையும் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படும், பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டில் விவசாயம் சென்றடையும் என்பதால் விவசாயிகள் பெரும் இழப்பினை எதிர்கொள்ள நேரிடும். எனவே, விவசாயிகளின் கடும் போராட்டங்களை முன்னெடுத்தனர். விவசாயிகளின் கடும் எதிர்ப்பினால் ஒன்றிய அரசு இச்சட்டங்களை 2021ல் விலக்கிக்கொண்டது. மேலும் பன்னாட்டு அளவில் கோதுமை, அரிசி விலைகள் நிலையற்ற போக்கினைக் காணமுடிகிறது. இதனால் இந்திய விவசாயிகள் கடும் இழப்பினை அவ்வப்போது சந்திக்கவேண்டியுள்ளது எனவே குறைந்தபட்ச ஆதரவு விலையினை நிர்ணயிக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. உள்நாட்டு அளவில் அரசியல், நிதிப்பற்றாக்குறை, காப்பு இருப்பு போன்ற முக்கியக் காரணிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையினை தீர்மானிப்பதாக உள்ளது. நாட்டின் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் முன்பு ஆளும் அரசியல் கட்சிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையினை அதிகமாக உயர்த்துவார்கள் அதன் பின் குறைவாக உயர்த்துவார்கள். நிதி பற்றாக்குறையினைக் காரணம் காட்டி குறைந்தபட்ச ஆதரவு விலையின் உயர்வினை மட்டுப்படுத்தப்படுகிறது. இதேபோல் காப்பு இருப்பின் அடிப்படையினையும் கருத்தில்கொண்டு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு தீர்மானிக்கப்படுகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலையின் வழியாக அரசு கொள்முதல் செய்யப்படும் உணவு தானியங்கள் நாட்டின் ஏழை எளிய விளிம்பு நிலையில் மக்களுக்கு உணவளிப்பதற்குப் பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்தபட்ச ஆதரவு விலை கணக்கிடுதல்

எல்.கே.ஜா குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் வேளாண் விளைபொருட்களின் செலவுகள் கணக்கிடுவதற்கு 1965ல் வேளாண் விளைபொருள் விலைக் குழு நடைமுறைக்கு வந்தது. இதனைத்தான் வேளாண் செலவு மற்றும் விலைக் குழு (Commission for Agricultural Costs and Prices – CACP) என 1985முதல் அறியப்பட்டது (Kadasiddappa Malamasuri et al 2013). ஜா குழுவின் கணக்கிடும் முறை கடினமாகவும், எளிமையாகப் புரிந்துகொள்ள இயலாமல் இருந்தது, எனவே எஸ் ஆர் சென் தலைமையில் 1979ல் ஒரு குழு அமைக்கப்பட்டு வேளாண் விளைபொருட்களின் செலவுகளைக் கணக்கிட சில சீர்திருத்தங்களை முன்மொழிந்தது. 1990ல் சி.எச்.அனுமந்தப்பா தலைமையிலான குழு, மேலாண்மை செலவு, சொந்த நிலத்திற்கான வாடகை மதிப்பு, போக்குவரத்து செலவு பொன்றவை வேளாண் விளைபொருட்களின் செலவில் கணக்கிடப் பரிந்துரைத்தது. 2003ல் ஒய்.கே.அலக் தலைமையிலான குழு குறைந்தபட்ச ஆதரவு விலையினைத் தீர்மானிக்க பல்வேறு பரிந்துரைகளை அளித்தது.

2004ல் எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையில் தேசிய விவசாயிகள் குழு அமைக்கப்பட்டது. இக்குழு 2004 – 2006ஆம் ஆண்டுக்குள் ஐந்து பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது. இக்குழுவின் பரிந்துரையின்படி வேளாண் விளைபொருட்களுக்கான செலவுகளுடன் அச்செலவில் 50 விழுக்காட்டையும் கூட்டி குறைந்தபட்ச ஆதரவு விலையினை நிர்ணயிக்கவேண்டும் என்றது. இதன்படி 2018ல் (A2 + FL) + 50% என்ற அடிப்படையில் கணக்கிட்டு (A2 என்பது செலவு, FL என்பது சொந்த குடும்ப உறுப்பினர்களின் உழைப்பின் மதிப்பு) குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்படுகிறது. ஒன்றிய அரசு எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையினை நிறைவேற்றியுள்ளதாக பிரகடனப்படுத்துகிறது. ஆனால் இக்குழுவின் பரிந்துரையினை ஒன்றிய அரசு பின்பற்றவில்லை என்பது தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். உண்மையில் சுவாமிநாதன் குழு பரிந்துரைத்தது C2 + 50% என்பதாகும்.

செலவு A1 என்பது நில உரிமையாளர்களின் வேளாண் விலைபொருட்களின் உற்பத்திக்காக ரொக்கமாகவும், கருணையாக அளிக்கக்கூடிய (kind) செலவுகள் அடங்கியதாகும் இச் செலவுகள் கூலிக்காக வேலைசெய்யும் தொழிலாளர்களின் உழைப்பின் மதிப்பு, சொந்த இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான வாடகை மதிப்பு, இயந்திரங்களுக்கு அளிக்கப்படும் வாடகைத் தொகை, பயன்படுத்தும் விதைகளின் (சொந்த மற்றும் வாங்கப்படும்) மதிப்பு, பூச்சிக்கொல்லிக்குச் செலவிடும் மதிப்பு, இயற்கை உரம் (சொந்த மற்றும் வாங்கப்படும்) பயன்படுத்தப்பட்டதின் மதிப்பு, உரத்தின் மதிப்பு, நீர்ப்பாசன செலவுகள், பயிர்செய்வதற்குப் பயன்படுத்தும் பொருட்களின் தேய்மானம், நிலத்தின் வருமானம், நடைமுறை மூலதனச் செலவின் மீதான வட்டி மற்றும் பிற வகைச் செலவுகள் ஆகும்.

செலவு A2 என்பது செலவு A1 உடன் குத்தகைக்கு விடப்பட்ட நிலத்திற்கான வாடகையையும் சேர்த்தது.

செலவு B1 என்பது செலவு A1 உடன் நிலம் தவிற பிற சொந்த மூலதனச் சொத்தின் மதிப்பிற்கான வட்டி.

செலவு B2 என்பது செலவு B1 உடன் சொந்த நிலத்திற்கான குத்தகை மதிப்பு மற்றும் குத்தகைக்குப் பயிரிடும் நிலத்திற்குச் செலுத்தப்படும் குத்தகை மதிப்பு.

செலவு C1 என்பது செலவு B1 உடன் சொந்த குடும்ப நபர்கள் நல்கிய உழைப்பின் மதிப்பு.

செலவு C2 என்பது செலவு B2 உடன் சொந்த குடும்ப நபர்கள் நல்கிய உழைப்பின் மதிப்பு.

தற்போது ஒன்றிய அரசு இதில் செலவு A2 உடன் சொந்த குடும்ப நபர்கள் நல்கிய உழைப்பின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு அத்துடன் 50 விழுக்காடு சேர்த்து குறைந்தபட்ச ஆதரவு விலையினை அறிவித்துவருகிறது. ஆனால் ஒன்றிய அரசு வசதியாகச் செலவு C2 யைக் கணக்கிடாமல் தவிர்த்துள்ளது. எனவே சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையினை அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்பது தெளிவாகிறது. இவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டதால் எவ்வளவு வேறுபாடு உள்ளது என்பதை கீழ்கண்ட அட்டவணையில் விளக்கப்பட்டுள்ளது.

அட்டவணை : தற்போதைய குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும், செலவு C2யின் அடிப்படையில் கணக்கிடுவதற்குமான உள்ள வேறுபாடு

 

பயிர்A2 + FLC2குறைநத்தபட்ச ஆதரவு விலைA2 + FL வைவிட அதிகரித்த விளிம்பு அளவு (%)C2 வைவிட அதிகரித்த விளிம்பு அளவு (%)
(1)(2)(3)(3) /  (1)(3) /  (2)
நெல்12451667186850.0412.06
கோதுமை92314291925108.5635.08


குறிப்பு
: 2020-21ஆம் ஆண்டு செலவின் அடிப்படையில் கணிக்கிடப்பட்ட விவரங்கள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Sukhpal Singh et al 2021.

இந்த அட்டவணையில் சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையான செலவு C2 உடன் 50 விழுக்காட்டினை கணக்கிட்டு குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டால் விவசாயப் பொருட்களின் விலை தற்போது அளிக்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட அதிகமாக உள்ளது. எனவே செலவு C2 வின் அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலையானது விவசாயிகளுக்கு நன்மை தருவதாக இருக்கும்.

2015ல் ரமேஷ்சந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின்படி சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையான செலவு C2 உடன் கூடுதலாகச் சில செலவுகளையும் சேர்க்கவேண்டும் என்றது. அதன்படி வேளாண்மையில் ஈடுபடும் குடும்பத் தலைவரின் உழைப்பினை திறனுடைய உழைப்பாளர் என கருதி கணக்கிடவேண்டும், நடைமுறை மூலதனத்தின் மீதான வட்டி முழு சாகுபடி காலத்திற்குக் கணக்கில் கொள்ள வேண்டும், எந்த வரையறையின்றி நிலத்தின் உண்மையான வாடகையை கணக்கில் கொள்ளுதல், அறுவடைக்குப்பிந்தைய நிலையில் வயல்களை சுத்தம் செய்தல், தரப்படுத்துதல், உலரவைத்தல், கட்டிடுதல், சந்தைப்படுத்துதல், போக்குவரத்து செலவு போனவற்றைக் கணக்கில் கொள்ளவேண்டும் என்கிறது. மேலும் இக்குழு செலவு C2 உடன் 10 விழுக்காட்டிற்கு விவசாயிகளின் இடர்களை எதிர்கொள்வதற்கும், மேலாண்மை செய்வதற்கும் என்ற அடிப்படையில் அதிகரிக்க வேண்டும் என்கிறது. இவ்வாறு ரமேஷ்சந்த் குழுவின் பரிந்துரையானது அடிப்படையில் பார்த்தால் செலவு C2 ஆனது கோதுமைக்கு 30.38 விழுக்காடும், நெல்லுக்கு 24.61 விழுக்காடும் அதிகரிக்கும் என கணக்கிடப்படுகிறது. மொத்த செலவு அளவில் கூடுதலாக 50 விழுக்காடு (C2 + 50%) அதிகரித்தால் நெல்லுக்கு தற்போது உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையினை விட 66.80 விழுக்காடு அதிகமாகவும், கோதுமைக்கு 44.77 விழுக்காடு அதிகமாகவும் கிடைக்கும். அதாவது 2020-21 விலையின் அடிப்படையில் நெல்லுக்கு ரூ.1868 என்பதற்கு பதில் ரூ.3116 என்றும், கோதுமைக்கு ரூ.1925க்கு பதில் ரூ.2787 என்றும் கிடைக்கும். எனவே ரமேஷ்சந்த் குழுவின் பரிந்துரைப்படி குறைந்தபட்ச ஆதரவு விலையினை தீர்மானிப்பது என்பது விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதாக உள்ளது (Sukhapl Singh et al 2021). தற்போது 2021-22ல் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.1940 (2010-11ல் ரூ.1000), கோதுமைக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.2015 (2010-11ல் ரூ.1120) (https://farmer.gov.in/) ஆக உள்ளது. இந்திய அளவில் 6 விழுக்காடு விவசாயிகள் மட்டுமே இக்குறைந்தபட்ச ஆதரவு விலையினைப் பெற்று பயன் அடைகின்றனர் குறிப்பாகப் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் அதிக அளவில் பயன்பெறுகின்றனர். மேலும் இந்த பயனை பெரிய மற்றும் நடுத்தர விவசாயிகள் மற்ற விவசாயிகளைவிட அதிக அளவில் பயன் பெறுகின்றனர். தனியார் சந்தைகளில் பெருமளவிற்கான விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை விற்பதால் குறைந்தபட்ச ஆதரவு விலையைவிடக் குறைவாக விற்று இழப்பினைச் சந்திக்கின்றனர். எனவே வேளாண்மை செய்வது சாத்தியமில்லா தொழிலாக மாறுவதால் அதிக அளவில் விவசாயிகள் பயிர் தொழிலை விட்டு வெளியேறுகின்றனர். எனவே குறைந்தபட்ச ஆதரவு விலையினை அனைத்து விவசாயிகளும் பெரும் நிலையினை உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலையினை ஏன் சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற குரல் தற்போது ஓங்கி ஒலிக்கிறது என்பதற்கு பல பின்புலங்களைச் சுட்டிக்காட்டலாம். 77வது தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி (NSS) 2018-19ல் கிராமப்புறங்களில் வசிக்கும் மொத்த குடும்பங்களில் 55 விழுக்காடு வேளாண்மையினைச் சார்ந்து வாழ்கின்றனர் இதில் 80 விழுகாட்டினர் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளனர். 86 விழுக்காடு விவசாயிகள் 2 ஹெக்டேருக்கு கீழ் நிலம் வைத்திருக்கிறார்கள், மொத்த வேளாண்மையில் ஈடுபடுபவர்களில் 55 விழுக்காடு வேளாண் கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். 50.2 விழுக்காடு விவசாய குடும்பங்கள் கடனாளிகளாக உள்ளனர் (சராசரி குடும்ப கடன் அளவு ரூ.74121), இக்கடனில் மூன்றில் ஒரு பங்கு நிறுவனமல்லாக் கடனாக உள்ளது. கிராமப்புற விவசாயிகளின் குடும்ப சராசரி வருமானத்தில் 92.3 விழுக்காடு வருமானம் வேளாண்மை வழியாகப் பெறப்படுகிறது. உலகில் உள்ள குறை-ஊட்டச்சத்து உடையவர்கள் அதிகமாக (28 விழுக்காடு மக்கள்) இந்தியாவில் வாழ்கின்றனர், இந்தியாவில் நான்கில் மூன்று பங்கு மக்கள் ஊட்டமான உணவினைப் பெறமுடியாத நிலையில் உள்ளனர், 6.2 கோடி மக்கள் உணவு பாதுகாப்பின்றி வாழ்கின்றனர் (ORF 2021). மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வேளாண்மைத் துறையின் பங்களிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது, வேளாண் துறையின் வளர்ச்சி குறைவாக கடந்த 70 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 2-3 விழுக்காடு மட்டுமே அதிகரிக்கிறது. வேளாண் துறையிலிருந்து அதிக அளவில் விவசாயிகள் வெளியேறி வேளாண் சாராத் தொழிலுக்குச் செல்வது அதிகரித்துள்ளது (2004-05 மற்றும் 2017-18ஆம் ஆண்டுகளுக்கிடையே 64 மில்லியன் விவசாயிகள் வெளியேறியுள்ளனர்) மற்றும் வேளாண் துறையில் வேலைவாய்ப்பு பெருக்கம் குறைந்துள்ளது. இத்துடன் ஒன்றிய அரசினால் அசோக் தல்வாய் குழுவானது விவசாயக் குடும்பங்களின் வருமானத்தை 2015-16ல் மாதத்திற்கு ரூ.8059 ஆக இருந்ததை 2022-23ல் ரூ.16118 என இருமடங்காக (பணவீக்கத்தைக் கணக்கில் கொண்டு, உண்மை நிலையில்) அதிகரிக்கவேண்டும் என்ற திட்டத்தை செப்டம்பர் 2018ல் முன்வைத்தது. ஆனால் இந்த இலக்கினை அடையமுடியவில்லை. இவற்றை அடைய வேளாண் துறை ஆண்டுக்கு 10.4 விழுக்காடு வளர்ச்சியினை அடைய வேண்டும் (Ashok Gulati et al 2020). எனவே இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு குறைந்தபட்ச ஆதரவு விலையினைச் சட்டப்பூர்வமாக்க வேண்டும். வேளாண் விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையினை அனைத்து விவசாயிகளுக்கும், அனைத்து வேளாண் உற்பத்திக்கும் அளித்து உள்ளடக்கிய பொருளாதார வளர்சியனை அடைய முற்படவேண்டும். அரசு இதற்கான பொது சந்தைக் கட்டமைப்பை வலுப்படுத்துவது, வேளாண் உற்பத்தி செலவினைக் குறைப்பது, திரனுடைய சந்தையினை உருவாக்குதல், கிராமப்புற பொது நலனை உறுதிப்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்தவேண்டும்.

References:

Ashok Gulti, Devesh Kapoor and Marshall M Bouton (2020): “Reforming Indian Agriculture,” Economic and Political Weekly, Vol 55 (11), pp 35-42.
Biswajit Dhar and Roshan Kishore (2021): “Indian Agriculture Needs a Holistic Policy Framework< Not Pro-market Reforms,” Economic Political Weekly, Vol 56 (16), pp 27-35.
Gopi Sankar Gopikuttan and Gopal Naik (2022): “Markets for Farmers- Revisiting the Role of Mandis in the Context of Farm Law’s Repeal,” Economic and Political Weekly, Vol 57 (8), pp 33-38.
Kadasiddappa Malamasuri, Soumya B, Prasanth P and Sachin Himmatrao Malve (2013):”A Historical Perspective for Minimum Support Price of A griculture Crops,” Kisan World , Vol40 (12) pp 46-48.
National Sample Organization (2022): “Situation Assessment of Agricultural Households and Land and Holdings of Households in Rural India, 2019,” Ministry of Statistics and Programme Implementation, Government of India.
NITI Aayog (2018): “Doubling Farmer’s Income,”| National Institution for Transforming India, Government of India.
Nitya Nanda (2021): “Agricultural Reforms in India- Need for a Unique Model,” Economic and Political Weekly, Vol 56 (8), pp 25-29.
ORF (2021): “Global Nutrition Report 2021 – India’s Nutrition Profile and How to meet Global Nutrition Target,” Observer Research Foundarion, 2.12.2021.
Sukhpal Singh and Shruti Bhogal (2021): “MSP in a Changing Agricultural Policy Environment,” Economic and Political Weekly, Vol 56 (3), pp 12-15.
Udit Misra (2022): “Explained: What are MSPs, and how are they decided?,” The Indian Express, 03.03.2022.

நூல் மதிப்புரை: ஜோசப் ராஜாவின் ‘முற்றுகை’ – பெரணமல்லூர் சேகரன்

நூல் மதிப்புரை: ஜோசப் ராஜாவின் ‘முற்றுகை’ – பெரணமல்லூர் சேகரன்




காற்றைப் போலக் கடத்திச் செல்லவேண்டிய கவிதைகள்
இடதுசாரி எழுத்தாளர்களின் படைப்புக்களைப் படித்துக்கொண்டிருப்பதில் இயல்பாகவே திருப்தி தழுவிக்கொள்கிறது. ஏனெனில் கவிதையாகட்டும்,
சிறுகதையாகட்டும், நாவலாகட்டும், கட்டுரையாகட்டும் அப்படைப்பில் மனிதநேயம் இழைந்தோடுவதைக் காணமுடியும். வாசிக்கையில் நம்பிக்கை
ஊற்றெடுத்து உள்ளத்தைக் குளிர்விக்கும். அவ்வகையில் தான் இடதுசாரி எழுத்தாளரான  ஜோசப் ராஜாவின் நூல்களையும் படைப்புகளையும் வாசிப்பதில்  அலாதியான திருப்தி இயல்பாய் ஏற்படுகிறது.

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் நாள் இந்தியாவின் தலைநகரான தில்லியில்  துவங்கி விவசாயிகள் போர் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்றது. உலகம்
முழுவதும் பேசப்பட்ட இப்போராட்டம் குறித்து போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த தில்லியில் கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு உலகம் சுற்றாமல்
உள்நாட்டில் முடங்கிக் கிடந்தபோதிலும் போராடும் விவசாயிகளைக் கண்டு உரையாடவோ போர்க்களத்தில் பலியான விவசாயிகளுக்காகத் தமது கட்டுரையில்
ஒருவார்த்தைகூட இரங்கல் தெரிவிக்கவோ விரும்பாத பிரதமர்தான், ரோம் பற்றி எரிந்தபோதே பிடில் வாசித்துக்கொண்டிருந்த நீரோ மன்னன் போன்ற நரேந்திர
மோடி. இவரோ மயிலுக்கு இரைகொடுத்து இறகைவருடிக் கொண்டிருந்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் நிறைந்த அவையில்
விவசாயத்தைப் பெரு நிறுவனங்களுக்குப் பலி கொடுக்காமலிருக்க விவசாயிகள் போராடி வருவது குறித்து எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை. மாறாக
‘மனதின் குரல்’ என்ற பெயரில் வளர்ந்த தாடியுடன் ‘உலகமகா நடிப்பை’ நடித்துக்கொண்டிருந்தார் நரேந்திர மோடி. விவசாயிகள் மழையில், குளிரில், பனியில்,
வெயிலில் எனப் பருவ நிலை மாறிக்கொண்டிருந்த போதிலும் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தனர். ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளும், உலக
நாடுகளின் குரலும், அரசியல் கட்சிகளின் குரலும், பஞ்சாபைச் சேர்ந்த ஒன்றிய பெண் அமைச்சரின் ராஜினாமாவும் பிரதமராலும் அமித்ஷாவாலும் அலட்சியம்
செய்யப்பட்டன.

‘அந்தோலன்ஜீவி’ என்விவசாயிகள் கேவலப்படுத்தப்பட்டதோடுஒன்றிய அரசின் புதிய வேளாண் சட்டங்களில் எந்த மாற்றத்தையும் செய்யமாட்டோம், ரத்து
செய்யும் பேச்சுக்கே இடமில்லை எனகர்ஜித்தனர் மோடி அமித்ஷா இரட்டையர். வர்க்கப் போராட்டமாகப் பரிணாம வளர்ச்சி அடைந்த விவசாயிகளின்
போராட்டத்துக்குத் தொழிலாளி வர்க்கம் நாடு முழுவதும் கிளர்ச்சிப்பிரச்சாரம் செய்து தில்லியிலும் போர்க்களத்தில் உடனிருந்தது நம்பிக்கையை விதைத்தது.

இந்நிலையில் அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என எழுத்தாலும் பேச்சாலும் வரலாற்றுக் கடமையாற்றினார். அதன் ஒரு பகுதியாக எழுத்தாளர் ஜோசப் ராஜாவின்  கவிதைகள் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 முதல் 2021 டிசம்பர் 14 வரை ஓராண்டாக வலம்வந்தன. இவரது எழுத்துக்கள் களத்தில் நின்று விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டி போர்த்தீயைவளர்த்தன.

“எழுந்து நிற்பது எவ்வளவு அழகு
அதிலும் எதிர்த்து நிற்பது எவ்வளவு அழகு
சேர்ந்திருப்பது எவ்வளவு அழகு
அதிலும் ஒன்றாய்ப் பத்தாய் நூறாய் ஆயிரமாய்
லட்சமாய்க் கோடியாய் சேர்ந்திருப்பதெல்லாம்
உண்மையிலேயே பேரழகல்லவா”
என வர்ணிக்கும் நூலாசிரியர்..

“ஏ புரட்சிக்காரர்களே
ஒவ்வொரு புரட்சியின்
ஒவ்வொரு வெற்றியிலும்
உங்களுடைய ஆன்மா
எப்படியெல்லாம் மகிழ்ந்திருக்கும்
அந்த மகிழ்ச்சியைக்
கொஞ்சமாக உணரத்தாருங்களேன்”

என புரட்சி ருசிக்காண விழைகிறார் ஜோசப் ராஜா.

இந்தியாவின் சுதந்திரப் போரில் பங்குபெறாத ஆளும் வர்க்கம் தங்களைமட்டுமே ‘தேசபக்தர்கள்’ எனவும் தங்களை விமர்சிப் போரை ‘தேச  விரோதிகள்’ எனவும்
கதைத்துவரும் காலத்தில் போராடும் விவசாயிகளை ..

“இந்த தேசத்தின்
உறுதியான தேசபக்தர்கள்
இந்த தேசத்தின் உண்மையான தேசபக்தர்கள்”
என்கிறார்.

வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு மட்டும் விரோதமானவையல்ல. மாறாக ஒட்டுமொத்த இந்தியர்களுக்கே விரோதமானவை. இதைப் புரிந்து கொள்ளாதவர்களைக் கேள்விக்குட்படுத்துகிறார் நூலாசிரியர்.

சரியான கேள்விதானே.”உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்” என்னும் மகத்தான குறளை மனதின் குரலில் கொச்சைப்படுத்தும் பிரதமர் போலவே தமிழ் மக்கள். பிரதமர் மோடியின் கட்சியைப் பாராளுமன்றத் தேர்தலில் மாற்றாக நிராகரித்தவர்கள் அல்லவா தமிழக வாக்காளர்கள்! எனின் விவசாயிகள் போராட்டத்தை வேடிக்கைபார்ப்பதைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல் கேள்விக்கலகளை காளால்துளைக்கிறார் கவிஞர்.
போராட்டக் காரர்கள் அழகானவர்களாகத் தெரிகிறார்கள் நூலாசிரியருக்கு‌. போராட்டக்காரர்கள் மட்டுமல்ல. போராட்டத்திற்குத் துணைநிற்பவர்கள் கூடத்தான்.

“மனிதகுல வரலாறு நெடுகிலும்
போராடும் மானுடமே பேரழகாய்
ஒளிவீசிக் கொண்டிருக்கிறது”
எனக் கவிதைக்கு அழகுசேர்க்கிறார் கவிஞர்.

“அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும்
போராடிக்கொண்டிருக்கும்
விவசாயப் பிரதிநிதிகளுக்கும்
நடக்கும் பேச்சுவார்த்தையில்
நம்பிக்கைக்குப் பதிலாக
நல்ல பதிலுக்குப் பதிலாகக்
கொடுக்கப்பட்ட உணவை
வேண்டாமென்று ஒதுக்கி
தாங்கள் கொண்டுவந்த
எளிய உணவிலும்
தங்கள் எதிர்ப்பை
பதிவு செய்கிறார்கள்”

ஊடகங்கள் மறைத்ததை வெளிச்சம்போட்டுக் காட்டி விவசாயிகள் சங்கத்தின் மேன்மைக்கு மெருகு சேர்க்கிறார் நூலாசிரியர்.
ஒரு பானைச் சோற்றுக் குஒருசோறு பதம் போலப் பெண் விவசாய போராளியைத் தத்ரூபமாகப் படம்பிடித்துக் காட்டுகிறார் ஜோசப் ராஜா.

ஒரு வயதான பெண்மணி சொல்கிறார்:
“எல்லாவற்றையும் இழந்துவிட்ட நாங்கள்
கடைசியாக எங்கள் கைகளில் இருக்கும்
நிலத்தையும் இழந்துவிட விரும்பவில்லை
எங்கள் நிலத்திற்காக எங்கள் சந்ததிகளுக்காக
இந்த உயிரே போனாலும்  பரவாயில்லை” யென்று
கம்பீரமாகக்
காளியைப் போலக் கம்பீரமாக
எல்லையை நோக்கி நடந்து செல்கிறாள்.

“விவசாயிகளின் வளர்ச்சிக்காகத்தான்
இந்தச் சட்டங்கள்
என்ற ஆட்சியாளர்களின் வாக்குறுதிகளை
இதற்கு முன்னால் கேட்ட
எண்ணிலடங்கா வாக்குறுதிகளைப் போலவே
அர்த்தமற்ற ஒன்றாகத்தான்
புரிந்துகொள்கிறார்கள்”

என ஆட்சியாளர்களின் பொய் முகத்தைக் கிழித்துத் தொங்கவிடுகிறார் ஜோசப் ராஜா.
குடியரசு தினம் வழக்கமாக உழைக்கும் வர்க்கத்தின் பங்கேற்பில்லாமல் களையின்றி காட்சிப்படுத்தப்படும். ஆனால் 2021 குடியரசு தினத்தன்று

“முதல் முறையாகக்
குடியரசு தின அணிவகுப்பைச்
சீருடை அணியாத
எளிய மனிதர்கள் சிறப்பிக்கிறார்கள்”
எனப் போராளிகளுக்கு மகுடம் சூட்டுவது சிறப்பு.

ஆனால் அதிகார வர்க்கமோ..

“வாழ்விற்காகப் போராடும்
உழைப்பாளிகளை
இந்த உலகத்தின் கண்களுக்குக்
கெட்டவர்களாகவும் மோசமானவர்களாகவும்
காட்டுவதற்காக எடுத்த முயற்சிகள்
தோல்வியடைந்து போகின்றன”
எனும் நூலாசிரியர்…
“எல்லைகளுக்குத் திரும்பி
நங்கூரத்தை இன்னும் ஆழமாகப்
பாய்ச்சிக் கொள்கிறார்கள்
இப்போது
அவர்களின் மேலே
இன்னும் பிரகாசமாக
ஒளிரத் தொடங்குகிறது சூரியன்”

எனும் கவிதை சிறப்பு.

தில்லி விவசாயிகள் போராட்டத்தில் செங்குருதி சிந்தி இன்னுயிர் நீத்த விவசாயிகள் ஏராளம். அவர்களுள் ஒருவருடன் தமது கவிதையால் உரையாடுகிறார் நூலாசிரியர்.

“என்னால் மறக்கமுடியாத
ஒருசில முகங்களில்
இரத்தம் சொட்டச் சொட்டக் காட்சிதரும்
உன்னுடைய முகமும்
நிலைத்திருக்கும் என்றென்றும்
எனக்குத் தெரியும் தோழா
உனக்குள் ஒளித்துவைத்திருந்த புயலை
எனக்கு நன்றாகத் தெரியும் தோழனே
இன்னும் அடங்கியிருக்கும் நெருப்பை
நான் நன்றாக அறிவேன் தோழனே
உண்மையைச் சொன்னால்
நான் காத்திருப்பதுகூட
புயலைப் பற்றிய கவிதைகளையும்
நெருப்பைப்பற்றிய கவிதைகளையும்
எழுதிக் கொடுப்பதற்காகத்தான்”

சர்வாதிகார மோடி அரசு விவசாயிகள் போராட்டத்தை நசுக்க மேற்கொண்ட அரக்கத்தனமான முயற்சிகளை முறியடித்து முன்னேறிய விவசாயிகளின் வீரத்தை வர்ணிக்கும் நூலாசிரியர் அதேநேரத்தில்..

“அதிகாரத்தின் கரங்களால்
அழுத்தி அறையப்பட்ட
ஆணிகளுக்கு முன்னால்
அன்பின் மலர்ச் செடியை
நட்டுக்கொண்டிருக்கிறார்
வயதான ஒரு விவசாயி
எண்ணிலடங்கா விதைகளை
தன் வாழ்நாளெல்லாம் விதைத்திருந்த
அந்த வயதான கைகளின் பக்குவம்
ஒற்றைச் செடி நடுகையிலும் கூட
ஒளிர்ந்துகொண்டிருப்பதை
வாஞ்சையோடு பார்த்துக்கொண்டிருக்கிறேன்”
எனப் புகழ்மாலை சூட்டுகிறார் கவிஞர்.

முதலாளிகள் ஆட்சியாளர்களையும், ஆட்சியாளர்கள் காவல்துறையையும் நம்பினாலும் மக்கள் தங்களைத் தாங்களே நம்பத் தொடங்கிவிட்டார்கள் என்பதைக் கிராமங்களின் மகாபஞ்சாயத்துகள் நிரூபிக்கின்றன. இத்தகைய மகாபஞ்சாயத்துகள் இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் தீயாய்ப்பரவி விவசாயிகளின் ஒற்றுமையைப் பறைசாற்றினால் ஆயிரம் மோடி அமித்ஷா அதிகாரத்துக்கு வந்தாலும் துடைத்தெறியப்படுவார்கள்.

விவசாயிகளின் போராட்டத்துக்கு அடிபணிந்த பா.ஜ.க. அரசு விவசாயச் சங்கங்களின் தலைவர்களை அழைத்துப் பேசாமல் தாமாகவே வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்தது. வெறும் அறிவிப்பை மட்டுமே நம்பத்தயாராக இல்லை விவசாயிகள். எனவேதான் நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற சட்ட மசோதா நிறைவேறும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்தது.

“கோரிக்கைகள் நிறைவேறியபின்னும்
இந்தப் போராட்டம் தொடரவேண்டும்
மிகப்பெரிய மாற்றத்திற்காகவும்
புத்தம் புதிய வாழ்விற்காகவும்
புத்தம் புதிய விடியலுக்காகவும்
போராடும் தேவையிருக்கிறது என்பதை
எப்போதும் மறந்து விடாதீர்கள்”

என்னும் ஜோசப் ராஜாவின் விழைவுதானே நம் விழைவும். இந்திய விவசாயிகளின் புரட்சியாக இப்போர் இந்திய வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் நிலையில் அடுத்தகட்ட நகர்வுக்கு இட்டுச்செல்லும் வண்ணம் இலக்கியங்கள் பல பூக்கவேண்டியது போர்க்கள தட்ப வெப்பநிலையின் கட்டாயம். அத்தகைய இலக்கியங்களுள் ‘முற்றுகை’ எனும் ஜோசப் ராஜாவின் கவிதைத் தொகுப்பு நன்முத்தாய் மிளிர்கிறது எனின் மிகையன்று.

கவிதைகளுக்கு இணையாக ‘போராட்டமும் கவிதையும்’ என்னும் முன்னுரை அமைந்துள்ளது. அதன் உள்ளடக்கத்தை, கவித்துவத்தை, உணர்வுப் பொழிவைத் தவறவிடாமல் இந்நூலை வாங்கிப்படிக்கப் பரிந்துரை செய்கிறேன். ஏனெனில் முன்னுரையும் முத்தான கவிதைகளும் வாசிக்க  வாசிக்கத்தான் மானுடத்தை இன்னும் இன்னும் நேசிக்கவைக்கும்.

நூல்: முற்றுகை
பக்கங்கள் 72
விலை ₹ 75
வெளியீடு: தமிழ்அலை
3 சொக்கலிங்கம் காலனி
தேனாம்பேட்டை
சென்னை 600 086
தொடர்புக்கு:044-24340200
                              7708597419

– பெரணமல்லூர்சேகரன்

Interview with Sitaram Yechury on the victory of democracy over the abolition of agricultural laws in tamil Translated by S Veeramani. வேளாண் சட்டங்கள் ரத்து ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி சீத்தாராம் யெச்சூரியுடன் நேர்காணல் - தமிழில்: ச.வீரமணி

வேளாண் சட்டங்கள் ரத்து ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி சீத்தாராம் யெச்சூரியுடன் நேர்காணல் – தமிழில்: ச.வீரமணி




[இடதுசாரிக் கட்சிகள், அதிலும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக உறுதியுடனும் உரக்கவும் விமர்சனம் செய்து வந்தன. இடதுசாரிக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் மீதான விவாதம் நடைபெற்ற சமயத்தில் திருத்தங்கள் கொண்டு வந்தனர். அதேபோன்று, இவ்வாறான இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்தின் விளைவாகத்தான், 2013 நிலம் கையகப்படுத்தல் சட்டத்தில் மக்கள் ஆதரவு சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டன. இடதுசாரிக் கட்சிகள், நவீன தாராளமய சீர்திருத்தங்களின் தாக்கம் குறித்து, குறிப்பாக விவசாயத்தின்மீது அது ஏற்படுத்திக்கொண்டிருக்கும் விளைவுகள் குறித்து, மக்களின் கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கின்றனர்.

ஃப்ரண்ட்லைன் இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர், சீத்தாராம் யெச்சூரி, வேளாண் சட்டங்கள் தொடர்பாக அரசாங்கம் தலைகீழ் மாற்றத்திற்கான காரணம் என்ன என்பது குறித்தும், அது ஓர் அரசியல் சந்தர்ப்பவாதமே என்றும் விவரித்திருக்கிறார். அவரது நேர்காணலின் சாராம்சம் வருமாறு:]

கேள்வி: வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது சம்பந்தமாக பிரதமரின் அறிவிப்பை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

சீத்தாராம் யெச்சூரி: தொடர்ந்து ஓராண்டு காலமாக வரலாறு படைத்திடும் விதத்தில் அமைதியாகப் போராடிவந்த நம் விவசாயிகளுக்கு இது ஒரு மகத்தான வெற்றியாகும். மிகவும் வீறாப்புடன் இருந்து வந்த மோடி அரசாங்கம் தன் வீறாப்புத்தனத்தை விட்டுக்கொடுத்து இறங்கிவரக் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் போராட்டம் ஒன்றிய அரசாங்கத்தாலும், மாநிலங்களில் உள்ள பாஜக-வின் அரசாங்கங்களாலும், விவசாயிகள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அனைத்துவிதமான அடக்குமுறைகளையும், ஒடுக்குமுறைகளையும், தடைகளையும் தகர்த்தெறிந்து வெற்றி பெற்றிருக்கிறது. தில்லியின் கடுங்குளிரிலும் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளுக்கு எதிராக ஆட்சியாளர்கள் “வாட்டர் கேனன்கள்” மூலமாகத் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். விவசாயிகள் போராடுவதற்காக தில்லியை நோக்கி வருவதைத் தடுப்பதற்காக, தேசிய நெடுஞ்சாலைகளில் பள்ளங்களை ஏற்படுத்தினார்கள். பல இடங்களில் போராடும் விவசாயிகள் குண்டாந்தடிகளால் அடித்து நொறுக்கப்பட்டனர். அவர்களைத் தில்லிக்குள் வரவிடாதவாறு கைது செய்தனர். போராடும் விவசாயிகளை, காலிஸ்தானிகள் என்றும், தேச விரோத பயங்கரவாதிகள் என்றும், பிரிவினை வாதிகள் கும்பல் என்று பொருள்படும் துக்டே துக்டே கும்பல் என்றும் முத்திரை குத்தினர். மோடி மிகவும் கீழ்த்தரமான முறையில் “போராட்டத்தால் ஜீவிப்பவர்கள்” (“Andolan Jeevis”) என்று கிண்டலடித்தார். இவ்வாறு இவர்கள் எடுத்த நடவடிக்கைள் அனைத்தையும் முறியடித்து, தில்லியின் எல்லையில் போராடிய விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அனைத்துத்தரப்பு மக்களின் ஆதரவும் நாளுக்குநாள் அதிகரித்தது. இவ்வாறான மக்களின் ஆதரவு நாடு முழுதும் எதிரொலித்தது. மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் நடைபெற்ற கிளர்ச்சிப் போராட்டங்களிலும் இது எதிரொலித்தது.

பாஜக-வினர் வரவிருக்கும் தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டாயமும் இவ்வாறு வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற்றதற்கான ஒரு காரணிதான். உண்மையில், அரசாங்கத்தின் இந்நடவடிக்கையை நேர்மையற்ற ஒன்றாகவும், முழுமையான தேர்தல் சந்தர்ப்பவாதம் என்றும்தான் பார்க்க வேண்டும். ஆயினும், இவ்வாறு பாஜக மேற்கொண்ட முடிவானது அக்கட்சிக்கு ஆதாயம் அளிக்குமா என்பது சந்தேகமே. விவசாயிகளின் அமைதியான போராட்டம் நாளுக்கு நாள் வீர்யம் அடைந்துகொண்டிருந்ததும், விவசாயிகளின் உறுதியும்தான் அரசாங்கத்தைப் பணிய வைத்து, வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற ஒப்புக்கொள்ள நிர்ப்பந்தித்திருக்கிறது. இந்த வெற்றி, ஜனநாயகத்திற்கான வெற்றி, ஜனநாயக உரிமைகளுக்கான வெற்றி, குடிமை உரிமைகளுக்கான வெற்றியாகும். அமைதியாகப் போராடுபவர்கள் மீது ஆட்சியாளர்களின் எதேச்சாதிகாரத் தாக்குதல்களும், பாசிஸ்ட் தாக்குதல்களும் அதிவேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கக்கூடிய நிலையிலும், அரசமைப்புச்சட்டத்தில் உத்தரவாதமளிக்கப்பட்ட ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ள நிலையிலும் இது நடந்திருக்கிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

கேள்வி: வேளாண் சட்டங்கள், கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காகவும், கார்ப்பரேட்டுகளின் ஏகபோகங்களுக்காகவும் கொண்டுவரப்பட்டன என்று நம்பப்படுகிறது. நாட்டின் சொத்துக்கள் தனியார் கார்ப்பரேட்டுகளிடமும், தனியார் ஏகபோகங்களிடமும் தாரைவார்ப்பதற்கு எதிராக இடதுசாரிக்கட்சிகள் எண்ணற்ற போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள். அவை எதற்கும் அசைந்துகொடுக்காத அரசாங்கம், இப்போது விவசாயிகளின் நீண்ட நெடிய போராட்டத்தினை அடுத்து, வளைந்து கொடுத்திருக்கிறது. விவசாயிகளின் நீண்ட நெடிய போராட்டம், ஜனநாயக இயக்கங்களுக்கு நம்பிக்கையை அளித்திருப்பதாக நீங்கள் பார்க்கிறீர்களா?

சீத்தாராம் யெச்சூரி: நிச்சயமாக. மோடி அரசாங்கம் பின்வாங்கியிருப்பது, ஜனநாயக இயக்கங்களை மேலும் வலுப்படுத்திட வேண்டும் என்பதற்கான சமிக்ஞையேயாகும். இது, இதர ஜனநாயகப் போராட்டங்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்திடும்.

இந்த வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட்டுகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காகவும், உலக அளவில் வேளாண் வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் நபர்களுக்காகவும் கொண்டுவரப்பட்டதுதான். இந்தியாவின் பொருளாதார இறையாண்மையை சரண் செய்யும் விதத்தில் மோடி அரக்கத்தனமாகப் பின்பற்றும் நவீன தாராளமய சீர்திருத்தக் கொள்கைகளின் ஒரு பகுதியேயாகும். இந்தச் சட்டங்களின் நோக்கம், வேளாண் விளைபொருள்களை சந்தைப்படுத்துதலும், கார்ப்பரேட்மயப்படுத்துதலுமேயாகும். அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தை ஒழித்துக்கட்டியதற்குக் காரணம், வேளாண் விளைபொருள்களை பதுக்கல் பேர்வழிகள் பதுக்கிவைத்து, செயற்கைமுறையில் பற்றாக்குறை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவேயாகும். பணவீக்கத்தை ஏற்படுத்தி, கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வகை செய்வதென்பது, நிச்சயமாக மக்களைப் பட்டினிக் கொடுமைக்குத் தள்ளிவிடும் சூழ்நிலைக்குக் கொண்டுசெல்லும். இவற்றின் விளைவாக இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் மக்களைக் பட்டினிச் சாவுகளிலிருந்து பாதுகாப்பது போன்ற நிலைமைகள் ஆபத்திற்கு உள்ளாகும். ஏற்கனவே, இந்தியா, உலக பசி-பட்டினி அட்டவணையில் தொடர்ந்து சரிந்துகொண்டிருக்கிறது. நிச்சயமாக இந்நிலைமை மேலும் மோசமாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் பொதுத்துறை நிறுவனங்களையும், கனிம வளங்களையும், நாட்டின் செல்வாதாரங்களையும் தனியாரிடம் தாரை வார்ப்பதற்கு எதிராக எண்ணற்றப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்குவது தொடர்கின்றன. துறைவாரியாக பெரிய அளவிலான வேலை நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திட மத்தியத் தொழிற்சங்கங்களின் மகாசம்மேளனம் அறைகூவல்கள் விடுத்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இதர இடதுசாரிக் கட்சிகளும் இத்தகைய தொழிற்சங்களின் நடவடிக்கைகளுக்கு எப்போதும் ஆதரவும் ஒருமைப்பாடும் அளித்து வருகின்றன. இத்தகைய போராட்டங்கள், இனிவருங் காலங்களில் மேலும் மேலும் வலுப்பெறும்.

விவசாயிகள் போராட்டத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவெனில், இப்போராட்டங்களில் தொழிலாளர் வர்க்கமும், விவசாயத் தொழிலாளர்களும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தி யமையாகும். போராட்டங்களின்போது விவசாயிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் காட்டிய ஒற்றுமை, மதச்சார்பின்மை ஜனநாயகம் மற்றும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களை வலுப்படுத்துவதற்கு ஒரு நெம்புகோளாகவும் திகழும்.

கேள்வி: வேளாண் சட்டங்களை ரத்து செய்ததற்கான காரணம், பஞ்சாப் மற்றும் ஹர்யானா மாநிலங்களில் உள்ள பணக்கார விவசாயிகளின் கோபத்தைத் தணிப்பதற்காகத்தான் என்று நாட்டில் ஒரு பிரிவினர் நம்புகிறார்களே. இது தொடர்பாக உங்கள் புரிதல் என்ன?

சீத்தாராம் யெச்சூரி: இது ஒரு கற்பனையான நம்பிக்கை. உண்மையில் வேண்டுமென்றே கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள துஷ்பிரச்சாரம். சந்தைப்படுத்தலும், கார்ப்பரேட்மயப்படுத்தலும் ஒட்டுமொத்த விவசாயிகளையும், விவசாயத்தையும் கடுமையாகப் பாதித்திருக்கின்றன. நாட்டிலுள்ள விவசாயிகளில் 85 சதவீதத்தினர், இரண்டு ஏக்கர் நிலத்திற்கும் கீழே உள்ள விவசாயிகள்தான். இவர்கள் சிறுகுறு விவசாயிகளாவர். மோடி அரசாங்கம் கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் இவர்களின் நிலங்களைக் கார்ப்பரேட்டுகள் விழுங்குவதற்கு வகை செய்தது. விளைவாக சிறுகுறு விவசாயிகள் தங்கள் நிலங்களை இழந்து, தாங்கள் இதுகாறும் அனுபவித்துவந்த தங்கள் சொந்த நிலங்களிலேயே விவசாயத் தொழிலாளர்களாக வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள்.

இன்றைய தினம் குறைந்தபட்ச ஆதார விலை ஒருசில மாநிலங்களில் மட்டுமே வலுவாக அமல்படுத்தப்படுகிறது. அதுவும் ஒருசில விளைபொருள்களுக்கு மட்டுமேயாகும். குறைந்தபட்ச ஆதார விலையில் அனைத்து விளைபொருள்களையும் விற்பதற்கு சட்ட உத்தரவாதம் வேண்டும் என்கிற கோரிக்கை அனைத்து விவசாயிகளுக்கும் பயனளிக்கக்கூடியதாகும். அதனால்தான் இந்தக்கோரிக்கையை பணக்கார விவசாயிகள், சிறுகுறு விவசாயிகள், தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், உயர்சாதி விவசாயிகள், இந்து-முஸ்லீம் விவசாயிகள் என அனைவரும் ஒன்றுபட்டு ஆதரித்து, வரலாறு படைத்திட்ட போராட்டத்தை நடத்தினார்கள். கார்ப்பரேட்டுகள் இந்திய விவசாயத்தையும் அதன் உற்பத்தியையும் கையகப்படுத்திட மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக இவ்வாறு விவசாயிகள் வர்க்கத்தின் அனைத்துப் பிரிவினரும் ஒன்றுபட்டு நின்று, போராடி, வெற்றிபெற்றுள்ளார்கள்.

கேள்வி: வேளாண் சட்டங்களை ரத்து செய்தது, பொருளாதார வளர்ச்சிக்குப் பின்னடைவு என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறதே, இந்த வாதத்தில் ஏதேனும் தகுநிலை (merit) இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

சீத்தாராம் யெச்சூரி: இந்த வாதத்தில் நிச்சயமாக எவ்விதமான தகுநிலை(merit)யும் கிடையாது. இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி அடைந்திருப்பதற்கு முக்கிய காரணம், பெரும்பான்மையான மக்களின் கைகளில் வாங்கும் சக்தி வீழ்ச்சி அடைந்திருப்பதேயாகும். இது பொருளாதாரத்தின் உள்நாட்டுத் தேவையை மந்தமாக்குகிறது. இதன் காரணமாக பல தொழிற்சாலைகள் தங்கள் உற்பத்தியைக் குறைத்துள்ளன, பல மூடப்பட்டும் விட்டன. ஏனெனில் இவை உற்பத்தி செய்த பொருள்களை வாங்குபவர்கள் இல்லை.

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தின்போது, இந்தப் பிரச்சனை, மேலும் மோசமாகியது. இந்த நிலையில் ஒன்றிய அரசாங்கம், பணக்காரர்களுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் வரிச் சலுகைகளை வாரி வழங்கிய அதே சமயத்தில், சாமானிய மக்களை விலைவாசி உயர்வின் மூலமாகவும், குறிப்பாக பெட்ரோலியப் பொருட்களை நாள்தோறும் உயர்த்துவதன் மூலமாகவும், ஒட்டுமொத்த பணவீக்கத்தை ஏற்படுத்தியது. இது, மக்களின் வாங்கும் சக்தியை மேலும் மோசமாக்கியது. தாங்கள் ஜீவித்திருப்பதற்குத் தேவையான பொருள்களைத் தவிர வேறெதையும் வாங்கிட அவர்களால் இயலவில்லை.

ஆட்சியாளர்கள் கொண்டுவந்த வேளாண் சட்டங்கள் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை மேலும் மோசமாக்கின. ஏனெனில், நாம் முன்பே விவாதித்ததுபோன்று, விவசாயிகளின் வருமானம் மேலும் மோசமாகி, அவர்கள் நுகர்பொருள்கள் வாங்குவதற்கான சக்தியற்று இருந்திடுவார்கள். நாட்டில் பெரிய அளவிற்கு சந்தை என்பது கிராமப்புற இந்தியாவில்தான் இருக்கிறது. அங்கே வாழும் மக்கள், பணக்கார விவசாயியிலிருந்து சிறுகுறு விவசாயிகள் வரை, பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பரிதவித்துக்கொண்டிருக்கும் நிலையில், நம் பொருளாதாரத்தில் மக்களின் தேவை என்பது மேலும் சுருங்கிவிடும். இது நடப்பு பொருளாதார மந்தத்தை மேலும் ஆழப்படுத்திடும்.

ஏதேனும் நடக்கும் என்றால் அது, வேளாண் சட்டங்களை ரத்து செய்ததன் மூலம், மக்களின் வாங்கும் சக்தி மேலும் வீழ்ச்சியடைவது தடுத்து நிறுத்தப்பட்டு, அதன்மூலம் உள்நாட்டுத் தேவை வீழ்ச்சியடைவது ஒரு குறிப்பிட்ட அளவிற்குக் கட்டுப்படுத்தப்படும் என்பதேயாகும்.

கேள்வி: விவசாயிகள் இயக்கத்தில் எண்ணற்ற விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து வந்துகொண்டிருப்பதைப் பார்த்தோம். இத்தகைய ஒருமைப்பாடு நீடிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இது மேலும் ஒன்றுபடுவதற்கும் நீடிப்பதற்கும் இடதுசாரிகளின் பங்கு எவ்விதத்தில் இருக்க வேண்டும் என்று நீங்கள் பார்க்கிறீர்கள்?

சீத்தாராம் யெச்சூரி: வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் மேலும் பல பொதுவான மற்றும் நியாயமான கோரிக்கைகளின் அடிப்படையில் போராட்டங்களில் பல்வேறு விவசாய சங்கங்களின் ஒற்றுமையும், ஒருமைப்பாடும் ஏற்பட்டன. நவம்பர் 22 அன்று லக்னோவில் நடைபெற்ற விவசாயிகள் மகா பஞ்சாயத்தைப் பார்க்கும்போது, விவசாயிகளின் மத்தியில் இத்தகைய ஒற்றுமை மேலும் மேலும் வலுப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றே தெரிகிறது.

நான் முன்பே கூறியதுபோல, விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களுக்கிடையே போராட்டங்களில் காட்டிய ஒற்றுமையின் பலம், எதிர்வருங்காலங்களில் தொழிலாளர் சட்டங்கள் (Labour Codes) என்ற பெயரில் தொழிலாளர் நலச்சட்டங்கள் தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றப்பட்டிருப்பதை எதிர்த்தும், நாட்டின் சொத்துக்கள் தனியார்மயம் மூலமாகச் சூறையாடப்படுவதை எதிர்த்தும் நடைபெறும் போராட்டங்களுடன் ஒரு பொதுவான போராட்டத்திற்கு இட்டுச்செல்லும். நடைபெற்ற போராட்டத்தில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் தியாகிகளாகியிருக்கிறார்கள் என்பதே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் வலுவினை உயர்த்திப்பிடிக்கிறது.

விவசாயிகள் இறந்ததற்கு வருத்தம்கூட தெரிவிக்க மோடி முன்வராத நிலையில், அவர்களுக்காக எவ்விதமான இழப்பீடும் வழங்குவார் என நாம் எதிர்பார்க்க முடியாது. இந்த அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளின் குணாம்சம் வரவிருக்கும் காலங்களில் போராடும் மக்கள் மத்தியில் மேலும் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்திடும்.

நேர்காணல் கண்டவர்: டி.கே.ராஜலக்ஷ்மி,
தமிழில்: ச.வீரமணி
நன்றி: ஃப்ரண்ட்லைன்

எப்படிப் பார்த்தாலும் வேளாண் சட்டங்களை மோடி முதலிலிருந்து குழப்பத்துடனே கையாண்டிருக்கிறார்  – ரோஹன் வெங்கடராமகிருஷ்ணன் | தமிழில்: தா.சந்திரகுரு

எப்படிப் பார்த்தாலும் வேளாண் சட்டங்களை மோடி முதலிலிருந்து குழப்பத்துடனே கையாண்டிருக்கிறார்  – ரோஹன் வெங்கடராமகிருஷ்ணன் | தமிழில்: தா.சந்திரகுரு

தில்லியில் செவ்வாய்க்கிழமையன்று செங்கோட்டைக் கோபுரங்களிலிருந்த தடுப்புகளை அகற்றி சீக்கியக் கொடியைப் பறக்க விட்ட விவசாயிகளுக்கு எதிராக காவல்துறையினர் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட போது நடந்த நிகழ்வுகள் பற்றி வெளியாகும் கருத்துகள் ஒரு​​பக்கச் சார்பாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளன. விவசாயிகளின் போராட்டத்திற்கான…
வேளாண் சட்டங்களை ரத்து செய்திடுக – சீத்தாராம் யெச்சூரி (தமிழில்: ச. வீரமணி)

வேளாண் சட்டங்களை ரத்து செய்திடுக – சீத்தாராம் யெச்சூரி (தமிழில்: ச. வீரமணி)

மத்திய அரசாங்கத்திற்கும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே டிசம்பர் 30 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைகள், எந்தப் பிரச்சனைகளுக்காக விவசாய அமைப்புகள் அனைத்தும் சேர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்களோ அந்தப் பிரதான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் மீண்டும் ஒருமுறை தோல்வி அடைந்திருக்கிறது. அரசாங்கம்…
வேளாண் அவசரச் சட்டங்கள் யாருக்கு லாபம்? – பாமயன்

வேளாண் அவசரச் சட்டங்கள் யாருக்கு லாபம்? – பாமயன்

இந்திய ஒன்றிய அரசு, மூன்று சட்ட முன்வரைவுகளை முன்வைத்து கடும் எதிர்ப்புகளையும் மீறி அதைச் சட்டமாக நிறைவேற்றியும் உள்ளது. ஒன்று உழவர் உற்பத்தி பரிமாறல் மற்றும் வணிக (ஊக்கப்பாடு, வழிகாட்டு) முன்வரைவு 2020 என்ற சட்டத் திருத்தம், அடுத்தது, விலை உறுதிப்பாட்டில்…
வேளாண்சட்டங்களும் உணவுப் பாதுகாப்பும் – பத்திரிகையாளர் பி.சாய்நாத் அவர்களின் உரை (தமிழாக்கம்-கமலாலயன்)

வேளாண்சட்டங்களும் உணவுப் பாதுகாப்பும் – பத்திரிகையாளர் பி.சாய்நாத் அவர்களின் உரை (தமிழாக்கம்-கமலாலயன்)

”அசமத்துவத்துக்கு எதிரான போரட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்” பத்திரிகையாளர் பி.சாய்நாத் அவர்களின் உரை:  மத்திய அரசு தற்போது நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் மசோதாக்களையும்,அவை இந்திய மக்களின் உணவுப் பாதுகாப்பில் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தையும் பற்றி உரை நிகழ்த்துமாறு என்னை அழைத்துள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள்…