Thaipal Enum Jeevanathi WebSeries 7 By Dr Idangar Pavalan தாய்ப்பால் எனும் ஜீவநதி 7 – டாக்டர் இடங்கர் பாவலன்

பிரசவ நேரமும் தாய்ப்பாலூட்டும் காலமும்

கருவேலங்காட்டுக்குள் விறகெடுக்க புள்ளத்தாச்சியாகப் போய் அங்கேயே பிரசவ வலியெடுத்து தலைமாட்டில் ஒரு கட்டு விறகையும், கையிலே கவிச்சை வாசத்தோடு பச்சைப் பிள்ளையும் தூக்கிச் சுமந்தவாறு பேறுகாலத்தைக் கடந்து வந்த பெண்களின் காலமெல்லாம் ஏதோ அதிசயக்கத்தக்க நிகழ்வாகிவிட்டன. மகப்பேறுக்கென்று தனித்த மருத்துவம் வளராத அன்றைய காலகட்டத்தில் பிரசவம் பற்றிய நுட்பமான விசயங்கள் பிடிபடாத போதும்கூட அவர்கள் மிக இயல்பாகவே பேறுகாலத்தை எதிர்கொண்டு வந்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் சுகப்பேறுக்கென்று தனியே அவர்கள் எதையும் மெனக்கெட்டுச் செய்ததாகவும் தெரியவில்லை.

ஆனால் இன்றைய சூழலில் கர்ப்பவதியாக உறுதி செய்யப்பட்ட தருணத்திலிருந்து பிரசவிக்கிற காலம் வரைக்குமாக பெண்கள் பேறுகாலத்தைப் பற்றிய அச்சத்தோடும் குழப்பத்தோடும் தான் இருக்கிறார்கள். இப்போதாவது கர்ப்பகாலம், பேறுகாலத்தைப் பற்றிய விசயங்களை மருத்துவரிடமோ புத்தகங்கள் மற்றும் காணொளிகள் வாயிலாகவோ பார்த்து விளங்கிக் கொள்ள முடிகிறது. அப்படியிருந்தும் பிரசவத்தைப் பற்றிய பயம் பெண்களைத் தொற்றிக் கொள்கிறதென்றால் இன்றைய மருத்துவம், மகப்பேற்றை ஒரு நோயைப் போல அணுகவும், பிரசவத்தை ஏதோ சிகிச்சை எடுத்துக் கொள்வதைப் போலப் பார்க்கவும் தானே அவர்களைப் பழக்கியிருக்கிறது.

இதற்கெல்லாம் தீர்வாக பேறுகாலம் பற்றிய பயத்தைப் போக்க வேண்டுமென்றால் மருத்துவத்தோடு கூடவே மக்கள் பண்பாட்டையும் நாம் இணைத்தே பார்க்க வேண்டியிருக்கிறது. அதாவது தாய்வீட்டு பிரசவம், வளைகாப்பு உள்ளிட்ட மனதளவில் பக்குவப்படுத்துகிற கொண்டாட்டங்களை இன்றைய மருத்துவத்துடன் ஒன்றிணைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. கூடுதலாக மகப்பேறு பற்றிய விசயங்களை சகலருக்கும் புரிகின்ற வகையில் அறிவியல் பார்வையோடு பொதுச்சமூகத்திற்கு விளக்கவும் வேண்டியிருக்கிறது.

ஆனால் மகப்பேறுக்கென்று மருத்துவமும் மக்கள் பண்பாடும் முக்கியத்துவம் கொடுத்த அளவிற்கு தாய்ப்பாலுக்கென்று இப்படி ஏதேனும் தனியே மெனக்கெட்டதாகத் தெரியவில்லை. இங்கே பிள்ளைப்பேற்றைப் பற்றிய தெளிவோடு கர்ப்பவதிகள் பிரசவ அறைக்குள் நுழைவதென்பது எவ்வளவு முக்கியமானதோ அதைப் போலவே தாய்ப்பாலைப் பற்றிய புரிதலோடு குழந்தையைப் பெற்றுக் கொள்வதும் மிக முக்கியமாகிறது. ஏனென்றால் பிரசவித்துக் கொண்டிருக்கும் போதே ஒரு பிள்ளைக்குத் தாய்ப்பாலூட்டும் நிகழ்வானது ஆரம்பமாகிவிடுகிறதே!

அடடா, பிள்ளை பிறந்த பின்னால் தானே தாய்பாலூட்ட முடியும்? அப்படியிருக்க பிரசவித்துக் கொண்டிருக்கும் போதே எப்படி அவர்களுக்கு நாங்கள் தாய்ப்பாலூட்ட முடியுமென்று குழப்பமாக இருக்கிறதல்லவா! சரி, இதையெல்லாம் புரிந்து கொள்வதற்கு முன்னால் பிரசவத்தைப் பற்றி கொஞ்சம் விளக்கமாகப் பார்த்துவிடுவோம். பிரசவம் பற்றிய தெளிவிற்குப் பின்பாக தாய்ப்பால் பற்றிய உலகத்திற்குள் செல்கிற போதுதான், பிரசவத்திற்கும் தாய்ப்பால் சுரத்தலிற்குமான தொடர்பினை நம்மால் விளங்கிக் கொள்ளவே முடியும்.

உங்களின் பிரசவ தேதி நெருங்கி வந்து அடிவயிற்றிலும் இடுப்பிலுமாக வலியெடுக்கத் துவங்குகிற சமயத்தில் தான் குழந்தையின் தலையானது கர்ப்பப்பை வாயிலிருந்து நகர்ந்து இடுப்புக் கூட்டின் எலும்பிற்குள்ளாக நுழையவே ஆரம்பித்திருக்கும். கர்ப்பகாலம் முழுவதுமே கருப்பையிலிருந்து நழுவி குழந்தை கீழே இறங்கிவிடாமலிருக்க பாதுகாப்பாய் கர்ப்பப்பை வாயினை அடைத்து வைத்திருந்த இரத்தமும் சளியுமாகிய மூடியானது, அப்போது பிரசவ ஹார்மோன்களால் கரைந்து வெளியேறத் துவங்கியிருக்கும். இப்படி பிரசவத்தின் முதல் அறிகுறியாக கர்ப்பப்பையானது ஆரம்பத்தில் இரத்தத்தையும், சளி போன்ற திரவத்தையும் வெளியேற்றுகிறது. அதன் தொடர்ச்சியாக பனிக்குடமும் உடைந்து நாம் படுத்திருக்கிற பிரசவ மேசையின் மீது நீரோட்டம் போல அது வழிந்தோட ஆரம்பிக்கிறது.

அடுத்ததாக குழந்தையின் தலையிலிருந்து கால் வரை நுழைந்து வெளியேறுகிற அளவிற்கு கர்ப்பப்பையின் வாசல் பெரிதாக இளகிக் கொடுக்க வேண்டுமல்லவா! குழந்தை இறங்கி வரவர அவர்களின் தலையானது இடுப்பெலும்பில் போய் முட்டி முட்டி அதனை நெட்டித் தள்ள ஆரம்பிக்கிறது. குழந்தையின் வருகையால் கர்ப்பப்பையின் வாசல் பகுதியும் ஒரு மலைப்பாம்பின் வாயினைப் போல பெரிதாக விரிந்து கொடுக்கிறது. அந்த சமயத்தில் ஒரு ஆட்டோக்காரர் ஹார்னை அமுக்கியும் தணித்தும் பெரும் சப்தத்தை எழுப்ப முயற்சிப்பது போல கர்ப்பப்பை மற்றும் வயிற்றுப் பகுதியின் தசைகளெல்லாம் ஒரே சீராக சுருங்கியும் தளர்ந்துமாக குழந்தையை வெளித் தள்ள முயற்சித்துக் கொண்டிருக்கும். அத்தகைய சந்தர்ப்பத்தில் இடுப்பெலும்பின் ஒடுங்கிய சுரங்கப் பாதையின் வழியே குழந்தை வழுக்கிக் கொண்டே வந்து பிறப்புறுப்பின் வாசல் வெளியே பிறந்து விடுகிறது.

சரி, இப்போதுதான் குழந்தை பிறந்துவிட்டதே! அடுத்ததாக பிரசவத்திற்கும் தாய்ப்பாலூட்டுவதற்கும் இடையிலான மிக முக்கியமான விசயத்திற்கு வருவோமா? நாம் இன்றுவரையிலும் தாய்ப்பாலூட்டுகிற நிகழ்வை வெறுமனே பிரவசத்திற்குப் பின்பான ஒரு விசயமாகத் தானே புரிந்து வைத்திருக்கிறோம்! அதைப் போல குழந்தை பிறந்து அம்மாவையும் பிள்ளையையும் பிரசவ அறையிலிருந்து வார்டுக்கு மாற்றிய பின்பாகத் தானே குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டவே போகிறோம்! என்று ஏனைய தாய்மார்களும் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் நிஜத்தில் என்னவோ, பிரசவிக்கிற போதே பிள்ளைக்குத் தாய்ப்பாலூட்டும் நிகழ்வானது துவங்கிவிடுகிறது. மேலும் அம்மாவையும், குழந்தையையும் வார்டு பகுதிக்கு மாற்றுவதற்கு முன்பாகவே பிரசவ அறையில் வைத்து மருத்துவர்களும் செவிலியர்களும் தாய்ப்பால் பற்றிய எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை எடுத்துவிடுகிறார்கள். அதனால் தான் பிரசவத்தோடு சேர்த்தே தாய்ப்பால் புகட்டுகிற விசயங்களையும் நாம் யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

அதாவது பிரசவ மேடையில் முக்கி முணங்கியபடி பிள்ளையைப் பெற்றெடுத்த அடுத்த கணமே தொடையை அழுந்தப் பிடித்து குழந்தையை வெளித்தள்ள முயற்சித்துக் கொண்டிருந்த உங்களின் கைகளை நீட்டச் சொல்லி இரத்தமும் சதையுமான குழந்தையை அப்படியே உள்ளங்கைகள் நிறைய மருத்துவர்கள் கொடுத்துவிடுவார்கள். இரத்தமும் பனிக்குட நீருமாக குழைத்துச் செய்த சுதைமண் குழந்தை சிற்பமொன்று உயிர்பெற்றெழுந்து வந்ததைப் போல கைகளில் துள்ளுகிற கெளுத்தி மீனாகிய அவர்களைப் பார்க்கையில் சட்டென்று உருக்கொள்கிற பரவசத்துடன் கூடிய பதட்டத்தில் நமக்குச் சிரிப்பதா அழுவதா என்கிற குழப்பமும் கூடவே தொற்றிக் கொள்ளும். ஆனாலும் ஒருபிடிக்குள் அடங்கிவிடுகிற தன் பிள்ளையை முதல் முறையாகத் தரிசிக்கிற அம்மாக்களின் உணர்வுகளை எப்படித்தான் வர்ணிப்பது? ஒருவேளை தாய்மையின் ஊற்றுக்கண் பிறக்கிற இடம்கூட இதுதானா? தோல்கள் மினுங்குகிற வார்ப்பில் செவிலியர் நன்றாக குழந்தையைத் துடைத்தெடுத்து புதுத்துணியில் பூவாய் அவர்களைச் சுற்றியபடி நீட்ட, உறவினர்கள் அவர்களை பதனமாக வாங்கி பூரித்துப் போய் உச்சி முகருகிற உணர்வைவிட தாயின் இந்த முதல் உணர்ச்சியென்பது நிச்சயமாக பெரும் உற்சவம் கூடிய அரிய தருணமாகத் தான் இருக்க முடியும்.

ஒடுங்கிய கண்ணிலிருந்து ஊற்றுநீர் கசியக் கசிய, விம்மித் துடிக்கிற தாயின் வெடிப்புற்ற உதடுகளிலிருந்து வார்த்தைகளின்றி தங்கள் குழந்தையைப் பார்த்து விசும்புகிற அந்த நிமிடங்கள் யாவும் அவள் கடந்து வந்த பத்து மாதக் கனவுகளின் நிஜம் தானே! குழந்தையின் முகத்தைப் பார்த்துக் கொண்டே நீண்ட மௌனத்தோடு உரையாடுகிற அவளின் வார்த்தைகளில் தான் எத்தனை எத்தனை கனமிருக்கும்? எவ்வளவு வலியிருக்கும்? எத்தகைய காத்திருப்பு மிகுந்திருக்கும்? அத்தகைய தருணத்தில் அம்மாவிற்கும் பிள்ளைக்குமிடையில் பார்வையிலே பரிமாறிக் கொள்கிற அன்பும், அழுகையொன்றே மொழியாகிய அவர்களின் எல்லையற்ற பாசமும் பூக்கள் சொரிந்த நந்தவனத்தில் நிறைந்த நறுமணத்தைப் போல பிரசவ அறையெங்கும் கமழ்ந்தபடியே தான் இருக்கும். அப்படியென்றால் பிரசவ அறையே குழந்தைகள் பூத்த ஒரு நந்தவனம் தானா?

இத்தகைய பேரன்பும், குழந்தையின் மீதான எல்லையற்ற நேசமும் தான் மார்பிலே தாய்ப்பால் ஊற்றாய் சுரப்பதற்கான மந்திரச்சாவி என்பதைப் பற்றி நாம் இதுவரையுமே புரிந்து கொள்ளவில்லை. குழந்தை பிறந்தவுடன் இயல்பாகவே தாயிடமிருந்து உருக்கொள்கிற இத்தகைய உணர்ச்சிப் பெருக்குதான் தாய்ப்பாலையும் மார்பிலே பெருக்குகிறது என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதையல்ல தாய்மார்களே, அறிவியல் நிரூபனமான உண்மை.

பெண்களுக்குப் பிரசவச் சிக்கலாகி குழந்தை ஒருபக்கம் அவசரப்பிரிவிலிருக்க, அம்மா மட்டும் வார்டில் தனித்திருக்கையில் அதுவே மனஅழுத்தமாகி அதனாலேயே தாய்ப்பாலின்றி அவர்கள் சிரமப்படுவதைப் பார்த்திருக்கிறீர்களா? அதோடு குறைவான அளவிலே சுரக்கிற சீம்பாலைப் புகட்டியவுடன் மீண்டும் மீண்டும் பசித்து அழுகிற பிள்ளையைப் பார்த்து தாய்ப்பால் போதவில்லையோ என்கிற தவறான புரிதலில் உறவினர்கள் பெற்றவளைக் குறைகூறுகிற போது தாயின் இயல்பான மகிழ்ச்சிக்குரிய உணர்ச்சிகளெல்லாம் மட்டுப்பட்டு தாய்ப்பால் சுரத்தலை அது தாமதப்படுத்துவதையுமே ஒருவேளை நீங்கள் பார்த்திருக்கக் கூடும்! ஆக, இத்தகைய இயல்பாகிய உணர்ச்சிகளையெல்லாம் அதிகரிக்கச் செய்வதற்குத் தான் பிரசவித்தவுடனேயே குழந்தையை அம்மாவிடம் கொடுத்து தொப்புள்கொடியுடன் பிணைந்த பிள்ளையின் பிரசவித்த குருதியைப் பூசிச் சிவந்து பொழிவுற்ற முகத்தைப் பார்க்கச் செய்கிறார்கள்.

பிறந்தவுடன் இரத்தக் கவிச்சி வாசத்துடன் கூடிய பிள்ளையின் முகத்தைப் பார்த்தும், அழுகின்ற அவர்களின் பூனைக்குரலைக் கேட்டும், மெல்ல மெல்லக் கூடுகிற பச்சை உடலின் பால் வாசம் நுகர்ந்தும், இறுக மார்பைப் பற்றியபடி குழந்தைகள் கவ்விச் சுவைக்கிற தொடுதலை உணர்ந்துமாக, ஒவ்வொன்றின் வழியாகத் தூண்டப்படுகிற நரம்புகள் தான் மூளைக்குச் சென்று தாய்ப்பாலைச் சுரப்பதற்கான வேலையைச் செய்கின்றன. ஆக, இத்தகைய உணர்ச்சித் தூண்டலின்றி தாய்ப்பாலைச் சுரக்கச் செய்வதற்கான மருத்துவமோ மருந்துகளோ எதுவுமேயில்லை என்பதை நாம் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தையைத் தொட்டுப் பார்த்து, யாரைப் போலிருக்கிறார்கள் எனக் கற்பனை செய்து, உச்சிமுகர்வதின் வழியே அவர்களின் பச்சை வாசம் அறிந்து, அந்தப் பிஞ்சு உதடுகளிலிருந்து அவ்வப்போது வெளிப்படுகிற ம்ம்ம்.. ம்ம்ம்.. னுடைய குரலிசைக் கேட்டு, அவர்களை முற்றிலுமாகப் புரிந்து கொள்கிற பட்சத்தில் இத்தகைய மென்மையான உணர்வுகளெல்லாம் மூளையிலே சென்று பதிவாகி தாய்ப்பால் சுரப்பதற்கான புரோலாக்டின் ஹார்மோன்களை அதிகளவில் உற்பத்தி செய்யத் தூண்டுகிறது. இச்சமயத்தில் குழந்தையை மார்பில் போட்டு பாலூட்டுகிற போது அதன் காம்பைச் சுற்றிய ஏரியோலாவின் நரம்புகளெல்லாம் உணர்ச்சித் தூண்டலாகி அது தாய்ப்பால் சுரத்தலை அதிகப்படுத்துகிறது.

பிரசவித்த குழந்தையானது அடிவயிற்றை முட்டி வெளிவந்த கணமே அவர்களைத் தூக்கி அம்மாவின் கையில் கொடுத்துவிடுகிறார்கள் அல்லவா! அச்சமயத்தில் குழந்தையும் தாயுமாக இன்னும் வெட்டப்படாத தொப்புள்கொடியின் தொடர்பிலேயே தான் இருப்பார்கள். அத்தகைய பிணைப்பில் இருந்தபடியே பிள்ளைக்குப் பாலூட்டுகையில் அடிவயிற்றை முட்டி வெளிவந்த அவர்களோ இப்போது மார்பினை முட்டி பாலருந்தத் தயாராகிவிடுகிறார்கள். ஆக, ஒரு தாயின் முதல் தாய்ப்பாலூட்டும் நிகழ்வானது தொப்புள்கொடியை வெட்டுவதற்கு முன்பாகவே நடந்துவிடுகிறது என்கிற உண்மையை நாம் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

தொப்புள்கொடி என்பது பல செப்புக் கம்பிகளை ஒன்றாகச் சேர்த்து வைத்து மின்சாரத்தை எடுத்துச் செல்கிற வயரினைப் போலவே, அது அம்மாவுக்கும் குழந்தைக்கும் இடையேயான இரத்தத்தை மூன்று இரத்தக்குழாய்களின் வழியே எடுத்துச் செல்கின்ற ஒரு கொடி வயருதான். பொதுவாக குழந்தை பிறந்து தொப்புள்கொடியில் செல்கின்ற ரத்தக்குழாயினுடைய துடிப்புகள் நின்ற பிறகு தான் மருத்துவர்கள் அதை துண்டிக்கவே செய்வார்கள். அதுவரையிலும் தொப்புள்கொடியின் உதவியால் அம்மாவும் குழந்தையும் ஒருசேர இணைந்தே தான் இருப்பார்கள். இப்படித் தாமதமாக தொப்புள்கொடி வெட்டுகிற செயலினால் தான் மெல்ல துடித்தோடிக் கொண்டிருக்கிற இரத்தக்குழாயின் வழியே கூடுதலான இரத்தமானது குழந்தைக்குச் செல்கிறது. இதனால் குழந்தைகளின் எதிர்காலத்தில் இரத்தச்சோகை போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளும் குறைந்துவிடுகின்றன.

முலைக்கம்பின் கயிற்றில் பிணைக்கப்பட்ட தாய்ப்பசுவானது அதன் கன்றுக்குட்டிக்குப் பாலூட்டுவதைப் போலவே, அம்மாவும் தனது குழந்தையின் தொப்புள்கொடி துண்டிக்கப்படாத நிலையிலேயே மார்பில் போட்டு பாலுட்டிக் கொண்டிருப்பாள். குழந்தை பிறப்பதற்கும் தொப்புள்கொடியின் துடிப்பு நின்று அதனைத் துண்டிப்பதற்கும் இடையிலான குறுகிய நேரம் தான், தாய் தன் பிள்ளைக்கு முதல் தாய்ப்பாலான சீம்பாலைப் புகட்டுவதற்கான மிகச் சரியான நேரமே! இச்சமயத்தில் குழந்தையை மார்பிலே போட்டு சுவைக்கச் செய்வதன் மூலமாக அவர்கள் மிக நீண்ட ஆயுள் வாழ்வதற்கான முதல் அடியினை தாய்மார்கள் எடுத்து வைக்கிறார்கள். மேலும் பிறக்கிற ஒவ்வொரு குழந்தைகளுக்குமாக தாய்மார்கள் செய்ய வேண்டிய முதல் சடங்கும் கடமையுமாக இத்தகைய சீம்பால் புகட்டும் நிகழ்வு தான் பாரம்பரியமாய் இருக்கிறது.

கர்ப்பகாலத்திலேயே மார்பகத்தை சுத்தமாக பராமரிப்பதன் அவசியத்தைப் பற்றி சென்ற அத்தியாயத்திலேயே பார்த்தோம் அல்லவா! இதன் மூலமாக பிரசவித்தவுடனே பாலூட்டுதற்காக மார்பகத்தை அவசர அவசரமாக தயார்படுத்துவதைப் பற்றி தாய்மார்கள் யோசிக்க வேண்டிய அவசியமில்லை. பொதுவாக பிரசவித்த மறுகணமே தாய்ப்பாலைப் புகட்டச் சொல்லி தாய்மார்களுக்கு அறிவுறுத்தப்படுவதால் மார்பகத்தை சுத்தம் செய்து கொண்டிருப்பதற்கெல்லாம் அவர்களுக்கு நேரமிருக்காது. பிரசவத்திற்கு முன்பாகக் கிடைக்கிற நேரத்தில் வேண்டுமானால் வெந்நீரில் துணியை நனைத்து மார்பகத்தை சுத்தமாக்கிக் கொள்ளலாம். இப்படிச் செய்வதன் மூலமாக மார்புக்காம்பை கவ்விச் சுவைக்கிற குழந்தைகளுக்கு ஆரோக்கியமில்லாத மார்பகத்தால் ஏதேனும் தொற்றாகிவிடுமோ என்று தாய்மார்களும் அச்சப்பட வேண்டியதில்லை.

பிரசவ அறையிலே தாய் சேயினுடைய முழு உடல் பரிசோதனையும் செய்துவிட்டு அவர்களை தாய்ப்பால் புகட்டுவதற்காக எல்லா வகையிலும் தயார் செய்த பின்னரே வார்டு பகுதிக்கு மாற்றுவார்கள். அதேசமயம் சிசேரியன் செய்து கொண்ட தாய்மார்களை அறுவை அரங்கிலிருந்து அவசரப்பிரிவிற்கு மாற்றிய பின்பு கொஞ்சம் தாமதமாகத் தான் வார்டுக்கு அனுப்புவார்கள். இதனால், தங்கள் குழந்தைக்கு இயல்பாகவே தாய்ப்பால் புகட்ட முடியாத நிலையில் சிசேரியன் தாய்மார்கள் சிக்கிக் கொள்கிறார்கள். ஆனாலும்கூட பெண் உறவினர்கள் யாரேனும் சிசேரியனாகிய தாயின் மார்பிலிருந்து தாய்ப்பாலைப் பிளிந்தெடுத்து பாலாடையில் கொண்டு போய் குழந்தைக்கு ஊட்டிவிட முடியும்.

  ஆனாலும் தாய்ப்பாலைப் பீய்ச்சி எடுப்பதை ஒருசிலர் அசூசையாக நினைத்துக் கொண்டு விலகியே இருந்துவிடுகிறார்கள். ஒருவேளை அச்சமயத்தில் பசிக்காக அழுது குழந்தைகள் துவண்டு போக ஆரம்பித்தால் சட்டென்று உறவினர்களெல்லாம் பதட்டமாகி புட்டிப்பால் கொடுப்பதற்காக தயாராகிவிடுகிறார்கள். இப்படி, இரத்த உறவாகிய பெண்ணின் மார்பைத் தொட்டு பாலாடையில் பாலெடுத்துக் கொண்டு போய் பிள்ளைக்குப் புகட்டுவதையெல்லாம் அசூசையாக நினைத்துக் கொள்பவர்களுக்கு, மாட்டின் பாலையோ நிறுவனங்கள் அடைத்துக் கொடுக்கிற பால்பவுடரையோ புட்டியில் நிரப்பி கொடுப்பதற்கு எந்தக் கூச்சமும் படுவதில்லை. ஆகவே தான் உடனிருக்கிற உறவினர்களும் சீம்பால் மற்றும் தாய்ப்பால் புகட்டுதல் பற்றிய விழிப்புணர்வுடனே இருப்பது அவசியமாகிறது.

எல்லாவற்றையும்விட தாய்மார்களுடைய முக்கியப் பிரச்சனையே பிரசவித்த வேதனையும் கடந்து இலேசாக உடலை இசைந்து கொடுத்தபடி பிள்ளையின் பசிக்கு ஏற்ப தாய்ப்பாலூட்ட வேண்டுமென்பது தான். ஆனாலும்கூட தாயினுடைய வலியும் வேதனையும் தீர, குழந்தைகள் மார்பிலே தாய்ப்பாலைச் சவைத்துக் குடிப்பது ஒன்றுதான் தீர்வு என்பதைப் பற்றி நாம் முக்கியமாகப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. மார்புக் காம்பை சவைத்துக் குடிக்கையில் அத்தகைய தொடு உணர்வினால் தூண்டப்பட்ட நரம்புகளெல்லாம் மூளைக்குச் சென்று தாய்ப்பால் ஹார்மோனான புரோலாக்டினைச் சுரக்கச் செய்கிற அதேசமயத்தில் கூடுதலாக ஆக்ஸிடோசின் ஹார்மோன்களையும் இரத்தத்தில் சுரக்கச் செய்கிறது. இந்த ஆக்ஸிடோசின் ஹார்மோன்கள் தான் தாய்மார்களினுடைய தாய்மைக்கான உணர்வுகளையும், மகிழ்ச்சியுடன்கூடிய ஆனந்தப் பெருநிலையையும் கூடிப் பெருகச் செய்கிறது. தாய்மார்களெல்லாம் இன்றும் பிரசவித்த அத்தனை உடல் வாதையும் கடந்து மகிழ்ச்சியோடு பாலூட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு இத்தகைய ஆக்ஸிடோசின் ஹார்மோன்கள் விடாமல் உடலில் சுரப்பதுதான் காரணமே!

அதேசமயம் தாய்ப்பாலூட்டத் துவங்குகிற போது நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு விசயமும் இருக்கிறது. பிரசவித்தவுடனே அயர்ந்து போய் படுத்திருக்கிற அம்மாவின் உடலில் பாசி போல் படிந்த பனிக்குடத் தண்ணீரின் கறையும், வழிந்தோடிய இரத்தத்தின் உறைந்த திட்டுகளுமாக அங்குமிங்கும் சேர்ந்திருக்கும். இதன் கூடவே பிரசவித்துக் களைத்த உடலின் வியர்வையும், மருந்தின் வாசமுமாக சேர்ந்து குழந்தைக்கு ஒருவித ஒவ்வாமையை உண்டாக்கி தாய்ப்பால் குடிப்பதற்கான ஆசையே சுத்தமாக எழவிடாமல் செய்துவிடும்.

குழந்தைக்குப் பால் புகட்டியதும் மார்பிலிருந்து வழிகிற மிஞ்சிய தாய்ப்பாலானது சட்டையில் திட்டாகப் படிந்தாலோ, வேலை நிமித்தமாக வெளியே செல்கிற போது மார்பில் பால் கெட்டித்து உள்ளாடையில் மெல்லக் கசிந்தாலோ, பிள்ளையை நினைத்தபடியே துயில் கொள்கிற தாயின் கனவுகள் வழியே தன்னியல்பில் தாய்ப்பால் சுரந்து ஆடைகள் நனைந்து போனாலோ அவை வெளிப்படுத்துகிற வாசனைகள்கூட குழந்தைக்குப் பிடிப்பதில்லை. இதனால் சில குழந்தைகள் தாய்ப்பாலைக் குடிக்காமல் அடத்துடன் மூக்கை விடைத்தபடி அழுவார்கள். பாலைக் குடிக்காமல் வெறுமனே மார்புக் காம்பில் வாய் வைத்துக் கொண்டு முரண்டு பிடிப்பார்கள். ஆகவே தான் கர்ப்பகாலத்தில் பேணுகிற உடல் சுத்தத்தைப் போலவே குழந்தை பிறந்த பின்னாலும் அதை நாம் பேண வேண்டியிருக்கிறது.

தாய்மார்களும் அடிக்கடி வெந்நீர் வைத்துக் குளித்து வெளியேறுகிற வியர்வையும், இரத்தக் கவிச்சை வாடையும் இல்லாதவாறு உடலை பார்த்துக் கொள்ள வேண்டும். பிறப்புறுப்பிலிருந்து இரத்தம் கசிவது நிற்கிற வரையிலும் நாப்கின் மற்றும் போர்வையின் விரிப்பை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். தாய்ப்பால் புகட்டிய ஆடைகளையும் உள்ளாடைகளையும் அடிக்கடி மாற்றியணிய வேண்டும். ஆடைகளின் வாசம் போகிற வரையில் அழுக்காய் படிந்த திட்டுகள் போக நன்றாகத் துவைத்து அதை வெயிலில் நன்கு உலர வைத்த பின்பே அணிந்து கொள்ள வேண்டும். ஆக, நம்மிடம் சரியான அளவிலும் எண்ணிக்கையிலும் மாற்று உடைகள் இருக்கிறதா என்பதைப் பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கர்ப்பகாலத்தைப் போல பிரசவித்த பின்னாலும்கூட ஆடைகள் மற்றும் உள்ளாடைகளைத் தேர்வு செய்வதில் நாம் மிக கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. கர்ப்பமாக இருக்கையில் துருத்திய வயிற்றுக்கு ஏற்ப சேலையும், வீட்டளவில் நைட்டி அணிவதைப் பற்றியும் ஏற்கனவே பார்த்தோம் அல்லவா! அதேசமயம் சுடிதார் அணிவதன் சிரமத்தையும், அதைத் தவிர்க்க வேண்டிய விசயங்களைப் பற்றியும் பார்த்தோம். அதையே தான் நாம் தாய்ப்பால் புகட்டுகிற காலம் முழுமைக்குமே கடைபிடிக்க வேண்டியிருக்கும்.

வீட்டிற்கு வெளியே செல்கையில் நம் பிள்ளைக்குத் திடீரென்று பசியெடுத்து அழும் போது, அவர்களுக்குப் பிறகு புகட்டிக் கொள்ளலாம் என்றெல்லாம் சும்மா இருந்துவிட முடியாதல்லவா? உடனே ஒதுக்குப்புறமாகப் போய் குழந்தையை அமர்த்திவிட்டுத் தானே வேறு வேலைக்கு நகரவே முடியும். ஆக, தாய்ப்பால் புகட்டுவதற்கு வசதியாகவும், பொது இடங்களில் கூச்சமின்றி பிள்ளையை மார்பில் போட்டு அமர்த்துவதற்கு ஏதுவாகவும் தக்க ஆடைகளை வாங்கி அணிவது தானே சரியாக இருக்கும்.

எப்போதாவது சுடிதார் அணிந்தபடி வெளியே செல்கிற அம்மாக்களை யாரேனும் கவனித்திருக்கிறீர்களா? அழுத பிள்ளையை அமர்த்துவதற்கு மேலாடையை மார்புக்கு மேல்வரை உயர்த்த வேண்டி ஒருவித சிரமத்தோடே பாலூட்டிக் கொண்டிருப்பார்கள். பொது இடங்களில் சுற்றிலும் அலைபாய்கிற கண்களின் தவிப்போடு அவசர அவசரமாக பிள்ளைக்குத் தாய்ப்பாலை அவர்கள் புகட்டி வேண்டியிருக்கும். ஒருசிலர் இதற்கெல்லாம் அஞ்சியபடி வீட்டைவிட்டு வெளியேறும் போதெல்லாம் புட்டிப்பாலும் கையுமாகவே கிளம்பி விடுகிறார்கள்.

அதுவே சேலையில் செல்கையில் அவர்கள் எந்தப் பொதுவெளியிலும் சாவகாசமாய் அமர்ந்து நிம்மதியாகப் புகட்ட முடிகிறது. இன்னும்கூட சொல்லப்போனால் சேலையில் பாலூட்டுவதற்காக மார்பை முன்பக்கபாக கையாளுவதும்கூட எளிதானதுதான். ஆனால் இவையெல்லாம் சுடிதார் அணிவதில் சாத்தியப்படுவதில்லையே! அதேசமயம் வீடுகளில் நாம் எப்போதும் போல நைட்டியை தாராளமாக அணிந்தபடியே தாய்ப்பாலூட்டிக் கொள்ளலாம். இப்போதெல்லாம் தாய்ப்பால் கொடுப்பதற்கென்ற வசதியோடு முன்பக்கமோ, பக்கவாட்டிலோ ஜிப் வைத்த மாடல்களில் நைட்டிகள் நிறையவே வந்துவிட்டன. ஆகவே தான் கர்ப்பகாலத்திலும் சரி, தாய்ப்பாலூட்டும் காலத்திலும் சரி, வெளியே சேலைக்கும் வீட்டினுள்ளே நைட்டிக்குமாக பழகிக் கொள்ள வேண்டுமென்று மருத்துவர்களும் அறிவுறுத்துகிறார்கள்.

அடுத்ததாக உள்ளாடைகளைப் பற்றிய கவனம்தான் மிக முக்கியமானது. ஏனென்றால் இப்போதுதான் குழந்தை பிறந்து விட்டார்களே! மார்பகத்தைப் பாதுகாப்பதற்காக மட்டுமே இதுவரை நாம் அணிந்து வந்த உள்ளாடைகளுக்குப் பதிலாக இப்போது கூடுதலாக தாய்ப்பால் ஊட்டுவதற்கென்று சேர்த்தே தயாரிக்கப்படுகிற உள்ளாடைகளாகப் பார்த்து அணிய வேண்டியிருக்கும். அட, எல்லாமே உள்ளாடைகள் தானே! இதில் கூடவா நாங்கள் கவனம் செலுத்த வேண்டும்? என்று நினைத்துக் கொண்டிருந்தால் அதுவும்கூட தவறுதான்.

நாம் வயதிற்கு வந்த பின்னால் மார்பகம் மாற்றமடைவதன் காரணமாக அணிகின்ற உள்ளாடைகளெல்லாம் வெறுமனே மார்பகத்தை பாதுகாக்கக் கூடியவை மட்டுமே! ஆனால் தாய்ப்பால் புகட்டுவதற்கென்று தயாரிக்கப்படுகிற உள்ளாடைகள் என்பதோ பாலூட்டுகிற சமயத்தில் ஏற்படுகிற அசௌகரியத்தைக் குறைப்பதற்காகவென்று தனித்த ஏற்பாட்டோடே தயாரிக்கப்படுகின்றன.

இத்தகைய உள்ளாடைகளின் வழியே சிரமமின்றி ஆடையை விலக்கி சீக்கிரத்தில் தாய்ப்பால் புகட்டவும், பொது இடத்தில் தயக்கமின்றி பிள்ளையை அமர்த்துவதற்கும் இவை தனித்தே வடிவமைக்கப்படுகின்றன. தாய்ப்பால் சுரந்து கனத்துப் போகிற மார்பிற்கு ஏற்ப மென்மையாகவும் இவை இருக்கின்றன. இத்தகைய உள்ளாடைகளை முழுவதுமாக கழற்றத் தேவையின்றி, ஒரு கையில் குழந்தையைத் தாங்கியபடியே மறு கையினால் தாய்ப்பாலூட்டுவதற்கென்று மார்பினைத் தயார் செய்துவிட முடியும். இதனால் ஒரே சமயத்தில் இரண்டு மார்பையும் வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லாமலே தாய்ப்பாலைப் புகட்டிவிட முடிகிறது. இப்படி எத்தனையோ மாடல்களில் உள்ளடைகள் விதவிதமாக வந்தபடியே தான் இருக்கின்றன. ஆகவே, நாம் தான் நமக்குப் பொருந்தமான வகையில் உள்ளாடைகளைத் தேர்வு செய்து பிள்ளைக்குப் புகட்டுவது பற்றிய விழிப்புடனே இருக்க வேண்டியிருக்கிறது.

பொதுவாக உள்ளாடைகளை வாங்கும் போது தற்போதைய அளவை விட கூடுதலான அளவில் வாங்குவதே நல்லது. தாய்ப்பால் சுரக்கச் சுரக்கப் பெரியதாகிற மார்பிற்குப் ஏற்ப பொருத்தமில்லாத உள்ளாடைகளை அணிகிற போது அவை ஒருவித இறுக்கத்தை மார்பகத்தின் மேல் ஏற்படுத்துகிறது. இதனால் உள்ளிருக்கிற பால்சுரப்பிக் குழாய்களிலிருந்து காம்பிற்குச் செல்கிற தாய்ப்பாலின் வழித்தடத்தில் சிக்கலாகி அவ்விடத்திலேயே தாய்ப்பால் கட்டிக் கொண்டு புண்கள் வைப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. மேலும் மிருதுவான, காட்டன் துணியாலான உள்ளாடைகளைத் தேர்வு செய்கிற போது உராய்வினால் ஏற்படுகிற எரிச்சலோ, அலர்ஜியோ இதனால் ஏற்படுவதில்லை. கூடுதலாக இவை தாய்ப்பால் கசிவதையும், வியர்வையும்கூட நன்றாக உறிஞ்சிக் கொள்கின்றதே!

அதுமட்டுமல்லாமல் வெளியே செல்கையில் மெல்லக் கசிந்து வருகிற தாய்ப்பாலால் உள்ளாடையும், சேலையும் ஈரமாகி ஒருவித சங்கடத்தையே அது ஏற்படுத்திவிடுகிறது அல்லவா! ஆனாலும் இத்தகைய அசௌகரியங்களுக்கென்றே தயாரிக்கப்படுகிற சிறிய அளவிலான பஞ்சுத் துணியினை (BREAST PAD) உள்ளாடைக்குள் வைத்து தாய்ப்பாலை உறிஞ்சுவதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் அலுவலகங்கள் போன்ற வெளியிடங்களுக்குச் செல்கையில் தாய்ப்பால் சுரந்து சட்டைகள் நனைவதைப் பற்றியோ, அதனது வாசனையைல் பொது இடங்களில் ஏற்படுகிற அசௌகரியங்களைப் பற்றியோ எந்தக் கவலையுமின்றி நாம் நிம்மதியாகவும் இருக்க முடியும்.

ஆகவேதான் தாய்மார்களே பிரசவித்த பின்னாலும்கூட தாய்ப்பாலூட்டுவதற்கென்றே தனித்த வகையில் ஆடைகள், உள்ளாடைகள், தாய்ப்பாலூட்டத் தேவையான உபரி தேவைகளென நாம் முன்கூட்டியே கர்ப்பகாலத்தில் வாங்கி பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்த வேண்டியிருக்கிறது. இப்படியெல்லாம் தயாராகிற போது தான் தாய்மார்களே, நம் தாய்ப்பாலூட்டும் காலத்தை ஒரு வசந்த காலத் துவக்கத்தின் கொண்டாட்டத்தைப் போல முழுமகிழ்ச்சியோடு அனுபவிக்கவே முடியும்.

முந்தைய தொடர்களை வாசிக்க:

தாய்ப்பால் எனும் ஜீவநதி 4 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி 5 – டாக்டர் இடங்கர் பாவலன்

தாய்ப்பால் எனும் ஜீவநதி 6 – டாக்டர் இடங்கர் பாவலன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *