உலகத்தையே புரட்டி போட்டுக் கொண்டிருக்கின்ற கொரனா ஊரடங்கில் சாகீத்திய அகடாமி விருது பெற்ற தோல் நாவலை மீண்டும் வாசிக்க வாய்ப்பாக அமைந்தது.

தோல் தொழிற்சாலைகளில் தங்களின் உடல் உழைப்பை வெளிப்படுத்தி அயராது உழைத்த ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் விதமாக இந்த நாவல் அமைந்துள்ளது. இதில் 117 கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு 695 பக்கங்களில் வடிவமைப்பட்ட ஒரு அற்புதமான நாவல் ஆகும். ஓவ்வொரு கதாபாத்திரத்தையும் தோழர்.செல்வராஜ் அவர்கள் உயிரோட்டமாக படைத்திருக்கின்றார். கதாபாத்திரங்கள் வாயிலாக அன்றைய சமூக நிலமையை நம் கண்முன் கொண்டு வந்திருக்கின்ற ஒரு அற்புதமான நாவலாக இதை நாம் பார்க்க முடிகிறது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பெண்களிடம் நாம் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்கிற தவறான கண்ணோட்டத்தை அன்றைய காலகட்டத்தில் முதலாளிகள் நினைத்திருந்த வேளையில் பெண்களும் மீண்டெழுவார்கள் என்ற தத்துவத்தை இந்த நாவல் பதிவு செய்திருக்கிறது. தொழிலாளிகளை முதலாளிகள் தங்களின் அடிமைகளாக நடத்துவதையும் அதனின்று விடுபடநினைக்கும் இளைஞர்களை அடியாட்கள் கொண்டு மிரட்டுவதையும் இருவருக்கும் நடந்து கொண்டிருந்த வர்க்க போரட்டத்தை இந்த நாவலின் வாயிலாக எழுத்தாளர் பதிவு செய்திருக்கிறார்.

ஆசீர் என்கின்ற தொழிலாளி தன் மனைவியின் இறுதிச்சடங்கிற்கு பணம் இல்லாமல் அவனின் முதலாளி அஸான் ராவுத்தாரிடம் கேட்கின்றபொழுது ஆசீர்வாதமும், ஒசேப்பும் தோல் சாப்பில் அடிமைகளாக வேலை செய்ய ஒப்பந்தம் செய்ததை அடுத்து பணம் அஸான் ராவுத்தரால் வழங்கப்படுகிறது.. ஒடுக்கப்பட்ட மக்களின் பொருளாதார நிலமையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு முதலாளிகள் தொழிலாளிகளை அடிமையாக்கி கொள்ளை இலாபம் சம்பாதித்ததை நாவலை வாசிக்கும்போது புரிந்துகொள்ளமுடிகிறது.

ஒடுக்கப்பட்ட மக்கள் தொழிற்சங்கங்கள் அமைத்து அதன் கீழ் இயங்கத்தொடங்கியவுடன் முதலாளிகள் அதனை தடை செய்யவும் சங்கத்தின் தலைவர்களை ஒழித்துக்கட்டுவதற்கு சதித்திட்டத்தை முதலாளிகள் தீட்டினார்கள் என்பதை இந்த நாவல் விளக்குவதுடன் முதலாளிகளை எதிர்த்து போராட துணிந்து விட்டால் தனது அதிகார எல்லை வரைக்கும் சென்று அதனை முடக்குவதற்கு முதலாளிகள் ஒன்று சேர்வார்கள் என்கின்ற கருத்தை நம்மால் உணர முடிகின்றது. தொழிற்சங்கங்கள் வளர்ச்சியடைந்து தேர்தலில் போட்டியிடுகின்றபொழுது அதனை எதிர்கொள்ள முதலாளிகள் மதவாதத்தையும் ஜாதியையும் பயன்படுத்துவதை அன்றிலிருந்து இன்று வரை தொடர்கதையாக உள்ளதைநாம் பார்க்க முடிகிறது.

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக தொழிற்சங்கங்கள் அமைக்க ஆசிரியர் இருதயசாமியுடன் தத்துவார்த்த ரீதியில் பிரபல வியாபாரியின் மகன் வேலாயுதம் கைகோர்த்துக்கொண்டு செங்ககொடியை மேலே பறக்க காரணமாக இருக்கிறார். இவர்களுடன் இன்னும் சில முற்போக்கு வாதிகள் இணைந்து கொள்கிறார்கள். எந்த ஒரு தத்துவம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நிற்கின்றதோ அந்த தத்துவத்தின் கீழ் பகுத்தறிவாளர்கள் ஜாதி, மத பேதமின்றி இணைவார்கள் என்பதை இன்றைய பொதுவுடமை அரசியலோடு இணைத்து பார்க்க முடிகின்றது.

யுகாந்திர வலியும் செங்கொடி ...

சங்கத்தின் மூலமாக தொழிலாளர் நலச் சட்டங்கள் படிப்படியாக தோல் தொழிற்சாலைகளின் உள்ளே நுழைகின்றது. இதனை எதிர்ப்பதற்கு முதலாளிகள் ஒன்றினையும் போது அதனை முறியடிக்க தொழிற்சங்க தலைவர்கள் இருதயசாமி, வேலாயுதம், சங்கரன் போன்றவர்கள் தங்களின் அன்றாட வேலைகளையும், சொந்த தொழிலையும் விட்டுவிட்டு மக்களுக்காக களம் இறங்கியதையும் ஒரு தலைவன் என்பவன் எப்படி தன்னலமற்றவனாக திகழ வேண்டும் என்பதையும் இந்த நாவலை வாசிக்கும் போது நம்மால் உணர்ந்துகொள்ள முடிகின்றது..

ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக போராட வேண்டும் என்கின்ற எண்ணம் கொண்ட தலைவர்கள் மக்களோடு மக்களாக இருக்க வேண்டும் என்கின்ற தத்துவத்தை எடுத்துச் சொல்வதாக ஒரு காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

“சங்கரன் உனக்குள் ஏற்படும் மனம் போராட்டம் இயற்கையானது. நியாயமானது கூட ஆனால் உனக்கும் அம்மக்களுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் இடைவெளி நிரப்பப்படாவிட்டால் அம்மக்கள் உன்னை அவர்களின் ஒருவனாக ஏற்றுக் கொள்ளாதவரையில் நீ அம்மக்களை வழி நடத்த முடியாது. வெறும் போலித்தனமான உறவாக மட்டுமே இருக்க முடியும். உனது அத்தனை முயற்சியும் வீணாகிப் போய்விடும் அவர்களில் ஒருவனாக நீ மாற வேண்டும்.” (தோல் பக்கம் 168)

சங்கரன், வேலாயுதம், ஒசேப்பு இருதயசாமி இவர்களுடன் சகோதரர் தங்கசாமியும் இணைந்து கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அவர்களின் பிரச்சனைக்கு விடுதலை வாங்கித் தருவதை விட அவர்களை சரியான தத்துவங்களை உள் வாங்கச் செய்து அவர்களை அரசியல் படுத்திவிட்டால் அவர்களின் எழுச்சியை யாராலும் தடுக்க முடியாது என்கின்ற கருத்தை உணர்ந்து கொண்டு தத்துவார்த்த அரசியல் வகுப்புகள் எடுப்பதோடும் சங்கத்தலைவர்கள் வாசிக்க வேண்டிய அவசியத்தை இந்த நாவலில் பார்க்கமுடிகிறது.

பல்வேறு இன்னல்களுக்கு ஆட்பட்ட ஓசேப்பு எந்த தெரு வீதிகளில் நடமாட முடியாதோ அதே நகர மன்றத்தில் அவனை நகர்மன்ற தலைவராக முன்மொழிந்தது சங்கங்களின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்ட தொழிற்சங்க தலைவர்கள் உள்வாங்கிக் கொண்ட தத்துவந்தான் என்பதை நம்மால் உணர முடிகின்றது. எந்த ஒரு மதமானாலும் தாழ்த்தப்பட்ட மக்களை தனியே வைத்துதான் பார்கிறது என்பதை நாவலில் பதிவு செய்திருக்கிறார்;.

“நகரத்திலும், சுற்று வட்டாரத்திலும் உள்ள அத்தனை கத்தோலிக்க தேவாலயங்களிலும் தாழ்த்தப்பட்ட கிறஸ்தவர்கள், தீண்டப்படாதவர்கள் என்ற வகையில் பிராத்தணையின்போது அழியாய்சிப் பிரிக்கப்பட்டு தனியிடம் ஒதுக்கப்படும்” (தோல் பக்கம் 75) முதலாளிகளுக்கும், தொழிலாளிகளுக்கும் இடையே பேச்சவார்த்தை நடத்த முத்தரப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்த கலெக்டரிடம் “நாங்க இந்த பறப்பயல்களோட சரி சமமா ஒக்கார முடியாது சாமி” என்று கூறியதிலிருந்து அன்றைய காலகட்டத்தில் மக்களின் சமூக வாழ்க்கை எவ்வாறு அமைந்திருந்தது என்பதை நாம் உணருகின்ற பொழுது அதே சூழ்நிலையின் விளைவாக 1957-ல் தென் மாவட்டஙகளில் நடந்த படுகொலையும் கலவரங்களும் நினைவுக்கு வந்து செல்கிறது..

Skin deep – The Hindu

பெண் ஒரு மோகப் பொருளாக பார்க்கப்படுவதை அன்றைய சூழலிருந்து இன்று வரைக்கும் கூட நம்மால் காண முடிகின்றது. ஆனால் குட்ட குட்ட குனியமாட்டார்கள், தட்ட தட்ட மேல்எழும்பும் ரப்பர் பந்தினைப்போல ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பெண்கள் சீறி எழுவார்கள் என்பதை இந்த நாவலின் சிட்டம்மாள் கதாப்பாத்திரம் நமக்கு உணர்த்துகிறது. மக்களுக்காக வாழ்கின்ற இயக்கங்களை மக்கள் புரிந்துகொண்டு விட்டால் எந்த சூழலிலும் அந்த இயக்கத்தின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வார்கள் என்பதை ஒசேப்பின் காதலி அருக்காணி மூலம் இந்த நாவலில் கீழ்கண்டவாறு பதிவு செய்திருக்கிறார்.

“நீ சாதாரண ஓசேப்பு கிடையாது அம்ம சங்கத்திலே ஒரு முக்கியமான ஆளு ஒனக்கும் எனக்கும் வர்ர அவப்பேரு ஒனக்கு மட்டுமில்லே சங்கத்துக்கும் வரும் தலைவர்களுக்கும் வரும் என்று அருக்காணி கதாபாத்திரம் மூலம் உழைக்கும் பெண்களின் மன நிலையை படம்பிடித்து காட்டிருக்கிறார்,

தாழ்த்தப்பட்டவரின் சடலத்தை மேல்ஜாதி தெருக்களின் வழியாக எடுத்துச்செல்லக்கூடாது என்று தடுக்கின்ற பொழுது மாவட்ட ஆட்சித்தலைவரே நேரடியாக நின்று சங்கரன் என்பவரோடு இணைந்து சடலத்தை துhக்கிச் செல்வதை இந்நாவலில் பதிவு செய்திருப்பது சமூக நீதியை நிலை நாட்டக்கூடிய அரசு அதிகாரிகள் அன்று முதல் இன்றுவரை ஒருசிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை பார்க்க முடிகிறது.

இந்த நாவலில் பல்வேறு விசயங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பினும் சந்தனத்தேவன் கதா பாத்திரம் நம்மை ஒரு நிமிடம் சிந்திக்க வைக்கின்றது. அவன் தன்னுடைய ஜாதிய அதிகார பலத்தால் ஒடுக்கப்பட்ட மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆட்படுத்தும் போது அதை தொழிற்சங்க தலைவர்கள் எதிர்கொண்டு அவனை மார்க்சிய தத்துவத்தை உள்வாங்கச் செய்து சமூக விஞ்ஞானத்தை அவன் தன் வாழ்க்கையாக ஏற்றுக்கொள்ளச் செய்கிறார்கள்.

அவனுக்குள் இந்த மாற்றத்தை ஏற்படுத்திய தத்துவத்தை மக்கள் உள்வாங்கிகொள்வார்கள் எனில் அரசியல் அமைப்பில் சொல்லப்பட்ட சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை கட்டமைக்க முடியும் என்பதற்கு இந்த நாவலின் சந்தனத்தேவன் ஒரு சாட்சியாக விளங்குகின்றான். அனைவரும் வாசிக்க வேண்டி அற்புதமான நாவல் கடந்தகாலத்தில் சமூக மேன்மைக்காக தொழிற் சங்கங்கள் ஆற்றிய பெரும் பங்களிப்பை நாவலை வாசிக்கும்போது உணர்ந்து கொள்ளமுடியும்.

மதிப்புரை
கு.காந்தி
அரசநகரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *