மொழியின் தூரிகை கொண்டு
மனதை வரையத் தொடங்குகிறாய்…
ஒப்பனைகளை ஒவ்வொன்றாய்
இடத்தொடங்குகிறாய்…
ரணங்களின் வரிசைகள்;
வலிகளின் வியாக்கியானங்கள்;
கீறல்களின் எதிரொலிகள்…
எல்லாவற்றையும்
அரிதாரத்தில் மறைத்துக்கொள்கிறாய்….
ஏன் இந்த அவலம்?
உள்ளது உள்ளபடியே கூற;
உள்ளது உள்ளபடியே வரைய
ஏன் கூச்சம்?
ஒப்பனை கலைத்து
உன் முகம் காட்ட
ஏன் உன்னால் முடியாது?
வரட்டு சமூகத்தின்
குருட்டு நம்பிக்கைகளில்
பயந்து நிற்கிறாய்…
கவிதைகளில் உள்மனதைக்
காணாமல் செய்கிறாய்;
காயங்களை மறைக்கிறாய்…
காற்றில் அசையும் தீபம் போல விழுந்தும் மடிந்தும்
உன் வீரத்தை இழக்கிறாய்…
கூர்வாளை நேராகப் பிடிக்க
வலிமை உண்டாயினும்
உறைக்குள்ளே பாதுகாப்பாய் வைத்திருக்கிறாய்…
நீயும் முடிவில்
சாதாரணமாய்
வாழவே ஆசைப்படுகிறாய்!
ரோஜாக்களை மட்டுமே நீ கருத்தில் கொண்டால்
முட்களை ஏந்திக்கொண்ட தண்டுகள்
என்ன செய்வது?
Dr ஜலீலா முஸம்மில்
ஏறாவூர்
இலங்கை