1. அம்மா
என் சிந்தனையை மூழ்கடித்து விட்டாய்
உன்னைப் பற்றிய சிந்தனையால்…
சிறகடிக்கக் கற்றுக்கொடுத்தாய்
என் சிறகாய் நீயே இருக்கிறாய்
நீயின்றி வானில் நான் பறக்க இயலாது…
2. அப்பா
பாதை முடிந்ததென்று பயணத்தை நிறுத்திக் கொண்டார்…
உருண்டோடும் இந்த உலகில்
உறங்கிக் கொண்டிருக்கிறார் ஏதோ ஒரு மூலையில்…
பாதங்கள் வைத்து நடக்க கற்றுக் கொடுத்தார்… பாதைகள் கடினம் என்று சொல்லாமல் சென்று விட்டார்….
“‘தூணாய் தாங்க மாட்டேன் தூரமாய் நின்று பார்ப்பேன் நீ விழுகிறாயா? எழுகிறாயா? என்று”
கேட்காமல் கேட்கிறார்
அரூப வார்த்தைகளால் என் அப்பா
3. மனித வாழ்க்கை சமூக வாழ்க்கை
மனித வாழ்க்கை குற்றத்திற்கு குற்றம் கண்டுபிடிக்கும்…. உண்மையை உதறி பொய்க்கு உருவம் கொடுக்கும்….
இது தான் நாகரிகம்…
இது அநாகரிகம்….
இங்கே உரக்க பேசக்கூடாது…
இங்கே அமைதியாய் இருக்கக் கூடாது…
இப்படி நடக்காதே…
இப்படி பேசாதே இங்கே இருக்காதே….
அங்கே ஏன் இல்லை….
இங்கே நீ ஏன் இருந்தாய்…
அங்கிருந்து ஏன் போனாய்….
இதற்கு ஏன் இப்படி பதில் சொன்னாய்…
இப்படி தான் என கணித்து சொன்னால் தவறு…
அப்படி தான் என் உறுதியாய் சொன்னாலும் தவறு…
நீ நீயாய் இரு என்று சொல்லும்… நீ இதை மாற்று என்றும் சொல்லும்…
குற்றம் சொல்பவன் அவனே…. குற்றம் தீர்ப்பதும் அவனே…குறையை கண்டுபிடிப்பது…குறையை நிவர்த்தி செய்வது…
உடலிலும் குற்றம் காணும்… உள்ளத்திலும் குறைக் கண்டுபிடிக்கும்…
எவருக்கும் அடிமையாகதே தனியாய் நில் என்றும் கற்றுக்கொடுக்கும்… தனியாய் நிற்க எவர் காலிலும் அடிமையாய் இரு தவறில்லை என்றும் கற்றுக் கொடுக்கும்…
எந்திர வாழ்க்கையும் அல்ல இயல்பான வாழ்க்கையும் அல்ல …
நெருப்பாற்றில் மேல் நெடுங்கயிற்றில் நடப்பதைவிட கடினமானது மனித வாழ்க்கையும் சமூக வாழ்க்கையும்….
கடினமான கணித சமன்பாடுகளைக்கூட தீர்த்து விடும் மூளைக்கு மனிதனுடைய மனங்களை என்றும் தீர்க்க முடியவில்லை….
எழுதியவர்
சங்கீதா கந்தன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.