யாருடைய கனவுகளுக்கோ
உழவனின் கண்ணீரைக் குழைத்தா
வர்ணம் பூசுவீர்கள்?
நிலத்தை மட்டுமே
கீறத் தெரிந்தவர்களிடமா
அவர்கள் நெஞ்சைப்பிளந்து
விஷம் விதைக்கிறீர்கள்?
விதைகளை வெந்நீரில் மூழ்கவைத்தா
விதையிடச் சொல்கிறீர்கள்?
விதைகளுக்கே
முட்டி முளைக்கவா
தன்னம்பிக்கை
கொடுக்கிறீர்கள்?
பச்சை இலைகளைக்கா
பச்சையம் தயாரிக்க
பயிற்சி அளிக்கிறீர்கள்?
வேளாண் சட்டமெனும்
வியாபார விதைகளை
வீசுகிறீர்கள்
கண்ணீரைத்தான்
அறுவடை செய்வீர்கள்
கார்பரேட் எசமானர்களுக்கு
பதர்களைத் தான்
பரிசளிக்கப்போகிறீர்கள்
பன்னாட்டு முதலாளிகளுக்கு
நீங்கள் விளையாடுவதற்கு
ஏற்றது அல்ல
விளைநிலம்
களைகளை
பிடுங்குவதும்
தீவைப்பதும்தான்
உழவனின்
முதல் வேலை
பார்த்து
பதனமாக
கையாளுங்கள்
உங்கள்
சட்டங்களையும்
திட்டங்களையும்
–ஜான் பாத்திமா ராஜ்