கற்பி, ஒன்றுசேர், கிளர்ச்சி செய் என்று தன் வாழ்நாளின் இறுதிநாள் வரை தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக முழங்கியவர் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் அவர்கள். இன்று நாடு முழுவதும் அவரின் 125வது பிறந்தநாள் நிகழ்வை கொண்டாடிய இந்த வேளையில் அவரின் சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் அறிந்து கொள்வது மிக அவசியம். மகாராஸ்டிராவில் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பிறந்த 19-ம் நூற்றாண்டானது மிகவும் பழமைவாத சிந்தனைகளை கொண்ட கொடுங்கோன்மை அரசான பேஷ்வா மன்னராட்சி வீழ்த்தப்பட்டு ஆங்கிலேய ஆட்சி இந்தியா முழவதும் ஏற்பட்ட காலமிது.
ராம்ஜி சக்பால் – பீமாபார் தம்பதியனருக்கு 1891 ஏப்ரல் 14-ம் தேதி இந்தூருக்கு அருகில் உள்ள மோ என்ற நகரில் பிறந்த கடைசி குழந்தைதான் பீம்ராவ் அம்பேத்கர் அவர்கள். தனது குழந்தை மகாபாரதத்தில் வரும் பீமனைப் போன்று பலசாலியாக இருக்க வேண்டுமென்று விரும்பிய தந்தை குழந்தைக்கு பீம்ராவ் ராம்ஜி சக்பால் என்று பெயரிட்டார்.
மஹர் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தாலும் இராணுவத்தில் சாதாரண சிப்பாயாகச் சேர்ந்து ராம்ஜி சக்பால் கல்வி வேக்கையின் காரணமாக ஆங்கில மொழியை கற்றுக் கொள்கிறார். தன் பிள்ளைகளுக்கும் எழுத படிக்க கற்றுக் கொடுக்கிறார். மாலை நேரங்களில் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும் சொல்லிக் கொடுக்கிறார். ஏனெனில் கல்வியின் மூலமே மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைய முடியும் என்று அவரது தந்தை மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.
அவரது தந்தை விருப்பப்படியே தன் குடும்பத்தில் வருமானம் இல்லாமல் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதனை பொறுத்துக் கொண்டு அம்பேத்கர் அவர்கள் கண்ணும் கருத்துமாக படித்தார். இந்நிலையில் ஆரம்ப படிப்பை முடித்த பீம்ராவும் அவரது அண்ணன் ஆனந்தும் உயர்நிலை பள்ளியில் சேர்க்கப்பட்ட பொழுது அங்கே சாதிய கொடுமைகளை அனுபவிக்கும் நுழைவு வாயிலாக இருந்தது. வகுப்பறையில் மற்ற மாணவர்களுடன் சேர்ந்து உட்கார கூடாது. அங்கே இருக்கும் பானையில் தண்ணீர் குடிக்கக் கூடாது.
அதே போல இவர்களிடம் ஆசிரியர் கேள்வி கேட்க மாட்டார். ஏனெனில் கேள்விக்கு பதில் சொல்லும் பொழுது அவர்களது எச்சில் தெறித்து தங்களின் மேல் பட்டால் அது தீட்டாகி விடுமாம். இவையெல்லாம் இளவயது அம்பேத்கரை மனக் குமுறச் செய்தன. இவற்றையெல்லாம் கண்ட அவர்களது தந்தைதான் அவர்களுக்கு ஆறதல் கூறித் தேற்றுவார்.
இந்த சூழ்நிலையிலும் கூட தாழ்த்தப்பட்ட மாணவர்களிடம் எவ்வித வேறுபாடு இல்லாமலும் பழகும் அம்பேத்கர் என்ற பெயரைக் கொண்ட ஆசிரியர் பீம்ராவ் மீது அன்பு செலுத்தினார். இவர் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இதனால்தான் பீம்ராவ் அவர்கள் தனது பெயருடன் தன் அன்பு ஆசிரியரின் பெயரை இணைத்து கொண்டார்.
தொடர்ச்சியாக படித்த அம்பேத்கர் உயர்நிலை பள்ளியில் மெட்ரிகுலேஷன் வகுப்பில் தேறிய மஹர் சாதியை சேர்ந்த முதல் மாணவர். அதனால் அவருக்கு ஏராளமான பாராட்டுகள் குவிந்தன.
அம்பேத்கரின் இளம் வயதில் பள்ளிக்கு வெளியே நடந்த இரண்டு நிகழ்வுகள் மனக்காயத்தை உருவாக்கியது. ஓன்று, ஒருநாள் அவருக்கு பகலில் பொறுக்க முடியாத தண்ணர் தாகம் ஏற்பட்டது. இதனால் மேல்சாதிகாரர்களுக்கான குளத்தில் இறங்கி தண்ணீர் குடித்தார். இதனை பார்த்த மேல்சாதிகாரர்கள் இவரை பிடித்து அடிஅடியென்று அடித்தார்கள். இவர் கதறி அழுதபோதும் விடவில்லை. அவர் மயங்கி விழும் அளவிற்கு அடித்துப் போட்டார்கள்.
மற்றொரு நாள் வெளியுரில் வேலை செய்த தன் தந்தையை காண அண்ணணுடன் சென்றார். அந்த இரயில் நிலையத்திற்கு தந்தை வரவில்லை. எனவே இவர்கள் இருவரும் இன்னொருவர் வண்டி மீது அமர்ந்து கொண்டு பின்னர் கிளம்புகின்றனர். முதலில் வண்டிகாரருக்கு இவர்கள் யார் என்று தெரியவில்லை. பின்னர் தெரிந்தவுடன் வண்டியை விட்டு இறங்கி மாடுகளை அவிழ்த்துவிட்டு வண்டியை பின்புறமாக சாய்த்தார். இருவரும் கீழே விழுந்தனர். மேலும் இவர்களை திட்டிக் கொண்டே வண்டி தீட்டாகிவிட்டது என்று கூறினார். அவர்களை வண்டி ஓட்ட சொல்லி ஊர் வரும் வரை வண்டிக்காரர் நடந்தே வந்தார். இந்நிகழ்வே இவருக்குள் சாதிய முறையை ஒழித்தே தீருவது என்று வைராக்கியத்தை உருவாக்கின.
அம்பேத்கர் அவர்களுக்கு இப்படி ஏராளமான கஷ்டங்கள் வந்தாலும் தொடர்ச்சியாக படித்துக் கொண்டே இருந்தார். உயர்நிலை படிப்பை முடித்தவுடன் திருமணம் செய்து கொண்டு கல்லூரியில் படித்தப் பின்பு 1913-ல் உதவித்தொகை பெற்று நியூயார்க் நகருக்கு சென்று 1915 முதுகலை பட்டமும் பின்னர் கொலம்பியா பல்கலைகழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுரையை சமர்பித்தார். அதனை தொடர்ந்து லண்டன் சென்று லண்டன பொருளாதார மற்றும்இ அரசியல் விஞ்ஞானக் கழகத்தில் சேர்ந்தார். மேலும் பார் அட் லா பட்டம் பெறுவதற்காக கிரே இன் என்ற அமைப்பிடம் பதிவு செய்து கொண்டார்.
வழக்கறிஞராக டாக்டர் அம்பேத்கர்
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சட்டத்தை முடித்துவிட்டு வழக்கறிஞராக பணியாற்றிக் கொண்டே தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக சட்டமன்ற உறுப்பினராக தொழிலாளர் உரிமைக்காக வேலை நிறுத்த போராட்டம், ஆலய நுழைவுப் போராட்டமான நாசிப் போராட்டம் என எண்ணற்ற போராட்டங்களை நடத்திக் கொண்டேயிருந்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக எவ்வாரெல்லாம் போராட முடியுமோ அவ்வளவு போராடனார்.
காந்தி தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக போரடினாலும் அம்பேத்கர் அவரின் சிந்தனைகளில் இருந்து மாறுபட்டே இருந்தார். மிகவும் துல்லியமாக தாழத்தப்பட்ட மக்களின் உரிமைக்காக தொடர்ச்சியாக குரல் கொடுப்பவராக இருந்தார். காந்தியின் மீது இவருக்கு மரியாதை இருந்தாலும் தொடர்ச்சியாக அவரின் கருத்தில் முரண்பட்டார். தொடர்ந்து நடைபெற்ற வட்டமேசை மாநாடுகள் தோல்வியில் முடிந்ததால் வருத்தம் அடைந்தார். இருப்பினும் தொடர்ச்சியாக செயல்பட்டார். அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக அரசியல் அமைப்பு சட்டத்தை இரவு பகலாக பாரமல் உழைத்து உருவாக்கினார்.
அம்பேத்கர் புத்த மதத்தை தழுவிய போது
ஏற்கனவே மதம் மாற வேண்டும் என்று இருந்த நிலையில் புத்தரிடம் அவர் கொண்டிருந்த ஈடுபாடு அவரை புத்த மதத்தில் 1956 அக்டோபர் 14 தேதி சேருவதற்கு இட்டுச் சென்றது. அம்பேத்கர் கூறுகிறார். “புத்தர் சமூகச் சுதந்திரத்திற்காகவும், அறிவு சுதந்திரத்திற்காகவும்,
பொருளாதார சுதந்திரத்திற்காவும்,அரசியல் சுதந்திரத்திற்காகவும் பாடுபட்டார். அவர் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையில் சமத்துவம் வேண்டாமென்று கூறவில்லை. ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையில் சமத்துவம் வேண்டுமென்று கோரினார். புத்தருடைய போதனைகள் மக்களுடைய சமூக வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் உள்ளடக்கியதாயிருந்து. அவருடைய கோட்பாடுகள் நவீனமானவை. அவருடைய முக்கிய நோக்கமானது மனிதன் இறந்தபின் அவனுக்கு முக்தி தருவது குறித்தல்ல் புமி மீது வாழும் பொழுதே மனிதனுக்கு முக்தி என்பதாகும்.”
புத்த மதத்தில் சேர்ந்த தினத்தன்று அம்பேத்கர் பின்வருமாறு கூறினார். சமத்துவம் என்பதுதான் புத்த மதத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். அதற்கு பின்னர் அவரது உடல்நிலை பாதிப்படைந்து சட்டமேதை அம்பேத்கர் அவர்கள் தூக்கத்திலேயே மாரடைப்பால் டிசம்பர் 6 அன்று உயிர் நீத்தார்.
“…தாழ்த்தப்பட்ட மக்கள் கண்ணியமான வாழ்விற்காகவும் வறுமையிலிருந்து தப்புவதற்காகவும் நெடுங்காலமாய்க் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். “டாக்டர் அம்பேத்கர் ஏற்றி வைத்த போராட்டத் தீபமானது. ஏழை எளிய மக்களுக்குச் சமூக நீதி என்ற இலக்கை நாம் அடையும் வரை தொடர்ந்து எரியச் செய்யப்பட வேண்டும்…” அதற்காக போராடுவோம்… வெற்றி பெறுவோம்.
நூல்: அம்பேத்கர் வாழ்வும் – பணியும்
ஆசிரியர்: என். ராமகிருஷ்ணன்
வெளியீடு: பாரதி புத்தாகலயம், சென்னை – 18
பக்கங்கள் – 185
விலை – ரூ.150.
ம.கண்ணன்
முனைவர் பட்ட ஆய்வாளர்,
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.