1.சாதிகளின் தேசம்
என் பாட்டன் கடைசிவரையிலும் காலுக்கு செருப்பு போடவேயில்லை
கக்கத்தில் தொங்கும் துண்டை உதறி தோளுக்குப் போர்த்தாமலேயே
செத்துப்போனான்
இன்று பிளாட்டுகளாக மாறியிருக்கும்
முன்னாள் வயல்களின் உடலெங்கும்
வடு வடுவாக பதிந்து கிடக்கும்
உழவு மாடுகளின்
கால் தடங்களுக்கு ஈடாக
என் பாட்டனின் கால் தடங்களும்
பதிந்து கிடக்கின்றன
மல்லு வேட்டி கல்லு ஜிப்பா சகிதம்
ஒரு முறை ஊருக்குள் வலம் வர வேண்டும் என்ற
அவனின் கனவு
கலப்பை கொழுவில் கிழிபட்ட
மண்புழுக்கள் போல
கடைசி வரையிலும் துடி துடித்தே
அடங்கிப் போனது
என் தந்தை ஹெச்எம்டி வாட்ச் கட்டி
பட்டுச் சட்டை வேட்டி வீதம்
ராலே சைக்கிளில்
தெருவழி போன போது
மலம் அவர் தலைமீது வீசப்பட்டது
ஊர்ச் சாவடியில்
புறங்கைகள் கட்டப்பட்டு
மண்மீது தெண்டனிட்டு
அபராதம் செலுத்தி
வந்த நாளில்
தூக்கிட்டு செத்துப் போனார்
நான் ஒரு பைக் வாங்க வேண்டுமென்று நினைத்தேன்
என் பாட்டனும் அப்பனும்
கனவில் வந்து
தடுத்துப்பார்த்தார்கள்
ஒரு நாள்
என் பைக் வாசலிலேயே தீப்பற்றி எரிந்தது
என் பையன் ஒரு கார் வாங்கவேண்டுமென்று ஆசைப்பட்டபோது
மகனே நீ வேறு தேசம்
சென்று விடு என்றேன்
ஏன் இது நமது தேசம் இல்லையா?
என்றான்
இது சாதிகளின் தேசம் என்றேன்
நான்
புரியாமல் நின்றான் அவன்
இந்த நாட்டில் தான்
நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம்
என ஐம்பூதங்களும்
சாதி பார்த்து பற்றிக் கொள்கின்றன
இரயில் தண்டவாளங்களில் ஒடுவதைவிட
தலைமீது ஒடுகின்றன
சீலைப் பேன்கள் போல
குடுகுடுவென ஒடும் சாதிப்பேன்களை வைத்துக்கொண்டு
கூந்தலழகி போட்டிக்கு குதிக்கிறார்கள்
தேசத்தின் இதயம் கிராமமாய் இருக்கிறது
கிராமத்தின் இதயம்
சாதியாய் இருக்கிறது
இங்கு எல்லாவிடத்திலும் சாதி இருக்கிறதா?
என்றான்
இங்கு திதி எடுக்கும் காக்கையிடம் மட்டும் சாதியில்லை என்றேன்
2. உதிரும் சருகுகள் உதிராத சருகுகள்
உதிராத சருகுகள்
ஒட்டிக்கொண்டிருக்கின்றன கிளைகளில்
இன்றைய காற்றின் மென்மையில்
ஆடுகின்றன இறுதி பந்தங்கள் யாவும்
மாலைச்சூரியன் பாய்ச்சும்
அடர் ரசவாதத்தில்
பொன்னொளிர்கிறது
இந்த மஞ்சள் அரளியில்
சட்டென ஒரு தலை முளைக்கிறது
மாயாஜாலமென
நடுக்கிளைக்கும் மேலிருந்து
பறந்து போகும் இந்த
தேன் சிட்டும்
நினைவைக்குடித்த
உன்மத்தத்தில்
கூடு போய் அடையப்போவதில்லை
விவஸ்தையில்லாமல் தற்கொலைப்பிராணியைப்போல்
ஒவ்வொரு தாவலுக்கும்
கொத்துக் கொத்தாய்
மலர்களை உதிர்க்கும்
இந்த இளஅணிலின் முதுகில்
மூன்று கோடுகள்
உன் நெற்றிச் சுருக்கத்தை ஞாபகப்படுத்துகின்றன
இந்த கணம்
மஞ்சள் நிற சிறு வண்டுகளும்
கட்டைவிரல் கருப்பு வண்டுகளும்
இந்த மஞ்சள் அரளிப் பூஒன்றிற்குள்
அத்து மீறி நுழைந்து
திரும்பும்போது
போதைமீறி பிணாத்துகின்றன
உன் ரீங்காரத்தில்
இந்த ஜோடி மைனாக்கள்
இத்தனைக் குதூகலமாய்
சரசமாடிப் பறப்பதும்.
உன்னைச் சிறிது நேரம்
மறப்பபதற்குத்தான்
நினைப்பதற்கும் தான்
3.
பாலியல் வன்முறை
சாதி மதம் குருதி
இந்த உலகிலேயே அதிகம்
கவலை கொண்ட மனிதராக
கடவுளை மாற்றி விட்டீர்கள்
என்ன தான் நீங்களே படைத்தவரென்றாலும்
அவருக்கும் இதயமென்று ஒன்று இருக்குமில்லையா?
ஹிட்லர்களும் நாஜிக்களும்
சுல்தான்களும் செங்கிஸ்கான்களும்
காதைக்கொடுங்கள் அவர்களும் இவர்களும்
வாட்களும் வேட்களும் கொடியும் தோரணங்களும்
இராமபானம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா
ஏழேழு கடலைத்தாண்டி
ஏழேழு பனையைத்துளைத்து
பிறகு குறிபார்த்து
வாலிக்களை சாய்த்து
ஆனால் கூனிக்களிடம் தோற்று
அட சம்புகா உன்னைப்பற்றி
பிறிதொருமுறை பேசுகிறேன்
இப்பொழுது நம் தேவை
நம் கடவுளை கவலையற்ற மனிதராக்குவது தான்
குறைந்த பட்சம் ஒரு தலைபட்ச சார்பற்றவராக
என்ன தான் நாம் படைத்தவரென்றாலும்
வெளியே அனுப்பிய பிறகு
வீடு வந்து சேரும் வரை அவர் உலகம்
அவருடையது தானே?
4.
பரிச்சயமற்ற பிறிதொரு நிலவு
தேவாலய மணிச்சத்தத்தின் ஊடாக
உதித்துக்கொண்டிருக்கிறது
இந்த முன்னிரவு
புன்மைகள் சிதறும் மனதை
நீ கழுவிப் போ
ஒளியின் தீர்த்தமே!
தாரகை கூட்டத்தில் நானொரு தாரகையாகி ஒளிந்து கொள்கிறேன்
சிறிது நேரம்
முதுமைகள் சுமந்துவரும் காலம்
திரும்பி போகட்டும் சூன்யத்திற்கே
விரல்களாடு விரல்களை
கோர்த்துக்கொள்வோம் சகியே
இன்னும் சற்று நேரத்தில் இவைகள்
மழை மேகமாக பொழியப் போகின்றன
இருந்திருந்தார் போல் வீசும்
இந்த தென்றலும் கூட
நம்மை கனிய வைப்பதற்கு வந்ததுதான்
வா இரணங்களின் திடமாய் உருக்கொண்டுவிட்ட வாழ்வை
இயற்கையின்முன்னிலையில்
உள்ங்கையில் ஏந்துவோம்
ஈரக்காற்று பட்டு
அது கற்பூரம் போல்
கரைந்து போகட்டும்
எழுதியவர்
தங்கேஸ்
தமுஎகச
தேனி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.