ஆற்று ஆள்காட்டி
இது நம்ம பகுதியில் உள்ள ஆள்காட்டி போலவே உருவ அமைப்புக் கொண்டது. ஆனால் நிறத்தில் வேறுபாட்டுடன் காணப்படும். தலையில் தொப்பி போன்று கருப்பாகவும், கால்களும் கருப்பாக இருக்கும். இந்த ஆள்காட்டி பறவை தமிழ்நாட்டில் இல்லை. ஆதலால் நமக்கும் இந்த பறவைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று யாரும் நினைக்க வேண்டியதில்லை.
இயற்கையில் மனிதர்களைத் தவிர மற்ற அனைத்திற்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் தான். பூமியில் அன்றாடம் நிகழும் எல்லா பிரச்சனைகளையும் சேர்த்து யாரோ எங்கேயோ இந்த பூமியில் செய்யும் தவறுகளுக்கு மற்றொரு இடத்தில் உள்ள மனிதனுக்குப் பிரச்சனைகள் நேர்கின்றன. அதிலும் குறிப்பாக காற்று, நீர் ஆகியவை நிலத்தின் போக்கிற்குத் தகுந்தவாறு அனைத்து இடங்களுக்கும் செல்வதால் தான் நதி நீர் இணைப்பு பற்றி நாம் பேச முடிகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி உலக ஆறுகள் தினம். ஆற்றுப் பகுதியில் ஆற்றை நம்பி வாழும் ஒருவகை ஆள்காட்டி பறவையைப் பற்றி தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
ஆற்று ஆள்காட்டி பறவை இந்தியா, நேபாளம், பூட்டான், பங்களாதேஷ், மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம் மற்றும் தெற்கு சீனாவில் (யுன்னான்) நாடுகளிலும், இந்தியாவில் தெலுங்கானா, ஆந்திரா, ஒடிசா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஹரியானா, உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம், பீகார், அசாம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா, மணிப்பூர், திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களிலும் பரவி காணப்படுகின்றன. இந்தியா, நேபாளம், பூட்டான் மற்றும் பங்களாதேஷில் மார்ச் முதல் ஜூன் வரை இனப்பெருக்க செய்கின்றன. முட்டைகளைத் தரையில் வைத்து அடைகாக்கும்.
ஈரமான புல்வெளிகள், ஏரிகளின் விளிம்புகள், மணல் நிலப்பரப்பு, கூழாங்கற்கள் நிறைந்த ஆற்றங்கரைகள், புல்வெளிகள், விளைநிலங்கள் மற்றும் வறண்ட புல்வெளிகள் போன்ற பல்வேறு வாழ்விடங்களில். பெரும்பாலும் நீர் சூழலில் ஒன்றான ஆறுகளில் வாழ்வதால் இதன் ஆங்கில பெயர் River Lapwing
ஆற்றுப் பகுதிகளில் உள்ள புழுக்கள், மெல்லுடலிகள், கணுக்காலிகள், தேனீ,வண்டு, எறும்பு போன்ற பூச்சி வகைகளை உண்டு வாழ்கின்றன.
இதன் அறிவியல் பெயர் Vanellus duvaucelii
duvaucelii – Alfred Duvaucel ஆல்பிரட் துவாசெல் ஒரு பிரெஞ்சு இயற்கை ஆர்வலர் மற்றும் ஆய்வாளர். டிசம்பர் 1817 இல், துவாசெல் பிரான்சிலிருந்து பிரிட்டிஷ் இந்தியாவிற்குப் புறப்பட்டு மே-1818 இல் கல்கத்தாவுக்கு வந்தார், அங்கு அவர் பியர்-மடார்ட் டயர்டை சந்தித்தார். பின்னர் இருவரும் ஒன்றாக, இணைந்து பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தக நிலையமான சந்தர் நகருக்குச் சென்று, பாரிஸ் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்காக விலங்குகள் மற்றும் தாவரங்களைச் சேகரிக்கத் தொடங்கினர். அவர்கள் தினசரி உயிருள்ள மற்றும் இறந்த மாதிரிகளைச் சேகரிக்க வேட்டைக்காரர்களை வேலைக்கு அமர்த்தினர். வேட்டையாடத் தேவையான பொருட்களை உள்ளூர் ராஜாக்களிடமிருந்து பெற்றனர். அவர்களின் வளாகத்தின் தோட்டத்தில் உள்ளூர் தாவரங்கள் மற்றும் நீர் பறவைகளை வளர்த்தனர்.
ஜூன் 1818 இல், அவர்கள் பாரிஸுக்கு முதல் சரக்குகளை அனுப்பினர், அதில் கங்கை நதி டால்பின் எலும்புக்கூடு, திபெத்திய எருவின் தலை, சிறிய வகை பறவைகள், சில கனிம மாதிரிகள் மற்றும் சுமத்ராவிலிருந்து ஒரு தும்பிக்கை பன்றி, இரண்டாவதாக அனுப்பியதில் ஒரு உயிருள்ள காஷ்மீர் ஆடு, க்ரெஸ்டட் ஃபெசண்ட்ஸ் மற்றும் பல்வேறு பறவைகள் ஆகியவை அடங்கும்.
தாமஸ் ஸ்டாம்போர்ட் ராஃபிள்ஸை அவர்களை 1818ஆம் ஆண்டின் இறுதியில் சந்தித்தார், அவர்கள் இருவரும் மலாய் தீபகற்பம், சிங்கப்பூர் மற்றும் சுமத்ரா ஆகிய பகுதிகளுக்குச் சென்று அந்தப் பிராந்தியத்தின் இயற்கை வரலாற்றைப் படித்தனர்.
இந்தோனேசியாவில் உள்ள பாடாங் பகுதிக்குப் பயணம் செய்து மலையன் தபீர், சுமத்ரன் காண்டாமிருகம், பல குரங்குகள், ஊர்வன, மான் மற்றும் அச்சின் மாதிரிகளை சேகரித்தார். மேலும் அவர் பல சூழ்நிலைகளில் பாடம் செய்யப்பட்ட விலங்குகள், எலும்புக்கூடுகள், தோல்கள் மற்றும் சில குரங்குகளுடன் கல்கத்தா திரும்பினார்.
இந்தியாவின் வடக்கில் உள்ள கங்கையை நோக்கி பயணம் செய்தார். அப்பொழுது பாட்னாவின் கிழக்கே ராஜமஹால் மலைகளில் சிறிது நேரம் செலவழித்தபோது ஒரு காண்டாமிருகம் அவரை தாக்கியது. அதில் கடுமையாகக் காயமடைந்தார், அதிலிருந்து குணமடைய வில்லை. முதலில் பாகல்பூரில் மருத்துவ உதவி வழங்கப்பட்ட போதிலும் பின்பு கல்கத்தாவிலும் இறுதியாக மெட்ராஸிலும் சிகிச்சை அளித்த நிலையிலும் அதிலிருந்து அவர் மீள முடியாமல் 1824 ஆம் ஆண்டு இறந்தார்.
இந்த பயணங்களுக்குப் பிறகு அவர் நேபாளம் அல்லது திபெத், பாட்னா, கோரக்பூர் மற்றும் காத்மாண்டு ஆகிய பகுதிகளுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார் ஆனால் காண்டாமிருகம் தாக்கப்பட்டதிலிருந்து மீள முடியாமலேயே போனது நமக்கும் பேரிழப்பே. ஏனென்றால் ஒரு வருடத்திற்கும் மேலாகத் தங்கி சுமார் 2000 விலங்குகளைச் சேகரித்து பாரிஸ் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். காண்டாமிருகம் தாக்கப்படாமல் இருந்திருந்தால் நமக்கு இன்னும் பல விலங்குகளைப் பற்றிய தகவல்கள் கிடைத்திருக்கும்.
இவருடைய இந்த அர்ப்பணிப்புக்காக இவருடைய பெயரை ஆள்காட்டி பறவைக்கு வைத்திருப்பது பெருமையும் மகிழ்ச்சியும் நிறைந்ததாகும். ஆனால் தற்போது இந்த குறிப்பிட்ட ஆள்காட்டி பறவை அருகி வரும் நிலையில் உள்ளன. அழிந்து வருவதற்கான காரணம் மனிதர்களால் அதன் வாழ்விடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அழிக்கப்படுவது தான். மேலும் அதன் வரம்பில் உள்ள பெரிய ஆறுகளில் ஏராளமான நீர்மின் திட்டங்கள் இருப்பதால் இதனையும் மிகப்பெரிய ஆபத்தாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கொரானாவிற்கு முன்பே புனித கங்கை நீரை மாசுக்கள் நிறைந்ததாகவும் குடிக்க தகுதியற்றதாகவும் அறிவித்துள்ள நிலையில் கொரோன இரண்டாம் அலையில் யமுனை ஆற்றில் மிதக்கவிட்ட மனித உடல்களினால் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை நாம் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை.
நமக்கு இன்றைக்குக் கிடைத்திருக்கும் பல பலன்களுக்கு யாரோ ஒருவர் வாழ்க்கையைத் தியாகம் செய்திருப்பதை உணராமல், மறந்து அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் அழித்துக் கொண்டிருப்பதன் விளைவு, எங்களது எதிர்காலமும் அடுத்த தலைமுறையின் எதிர்காலமும் இயற்கை சீற்றங்களுக்கு நடுவில் தினசரி போராட்டமாகத் தான் வாழ்க்கை இருக்கப்போவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஆபத்தை உணர்ந்து இனிமேலாவது ஆள்காட்டிப் பறவை போன்று அழிந்து வரும் நிலையில் உள்ள பறவைகளையும் வாழ்விடங்களையும் காப்பாற்றுவோம் .
தரவுகள்
- https://www.researchgate.net/publication/334344374_Mauled_by_a_rhinoceros_the_final_years_of_Alfred_Duvaucel_1793-1824_in_India.
- https://www.researchgate.net/publication/325844182_Population_Structure_Behavior_and_Distribution_Pattern_of_River_lapwing_Vanellus_duvaucelii_Lesson_1826.
- http://www.birds.iitk.ac.in
- https://www.wii.gov.in/nmcg/priority-species/birds/river-lapwing
முந்தைய தொடரை வாசிக்க:
பெயர் சொல்லும் பறவைகள் – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 2: ரிச்சார்டு நெட்டைக்காலி – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 3: பச்சைக்கிளி – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 4 (Green Cheeked Parakeet) – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 5 – லோட்டன் தேன்சிட்டு (Loten’s Sunbird) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 6 – செட்டிகதிர்க்குருவி | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 7 – Yellow-eyed Pigeon | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 8 – Jerdon’s Nghtjar (பக்கி) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 9 – நீலகிரி காட்டுப்புறா | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 10 – காட்டுக்கோழி | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 11 – பல்லாஸ் மீன் கழுகு | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 12 – காட்டுப் புள்ளிச் சிறு ஆந்தை (Forest owlet) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 13 – பூனைப் பருந்து (Harrier) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 14 – பழனி சிலம்பன் (Montecincla fairbanki) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 15 – நாரை (Ardeola grayii) | முனைவர். வெ. கிருபாநந்தினி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.